தவிட்டிர்க்கு குழந்தை வாங்கும் நேர்ச்சை

மழை பொய்யாது பெய்யக் காரணம், மாரியன்னையின் கருணை என்பார்கள்.

அதே மழை விடாது பெய்து வருத்தினால், அதை நிறுத்தி ஆறுதல் அளிப்பவளும் அவளே.

இதை நிரூபிக்கும் விதமாக மழை பெய்யவும், நிற்கவும் விசேஷ வழிபாடுகள் நடத்தப்படும் மாரியம்மன் கோயில் புத்தமங்கலம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் அன்னை மகாமாரியம்மன், சுற்று வட்டார மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறாள்.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பெரிய விசாலமான மகாமண்டபம். நடுவே கொடிமரம், பலிபீடம் இருக்க இடது புறம் பேச்சியம்மனின் திருமேனி உள்ளது. அடுத்து உள்ள அர்த்தமண்டப நுழைவாயிலின் இடதுபுறம் பிள்ளையாரும் வலதுபுறம் முருகப் பெருமானும் உள்ளனர். மகாமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவகிரகங்களும் சன்னதி கொண்டுள்ளனர்.

கருவறையில் மகாமாரியம்மன் அமர்ந்த நிலையில், நான்கு திருக்கரங்களுடன் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள்.

இந்தக் கோயிலில் வித்தியாசமான ஒரு வழக்கம் இருக்கிறது. அது, ஜாதகத்தின்படி யாருடைய குழந்தைக்காவது கடுமையான தோஷம் இருந்தால், மாரியம்மன் முன்பாக அதை உறவினர் யாருக்காவது தத்து கொடுத்துவிடுகின்றனர். இப்படிச் செய்ததும், அக்குழந்தை பிறர் வீட்டுக் குழந்தையாகிவிடுகிறது.

அதன்பின்னர், மரக்காலில் தவிட்டை அளந்து எடுத்து வந்து, குழந்தையை தத்து எடுத்தவர்களிடம் குழந்தைக்கு விலையாக அதைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு குழந்தையை தாங்களே வாங்கிக் கொள்கின்றனர் பெற்றவர்கள்.

அதன்பின், அந்தக் குழந்தை தோஷம் எதுவும் இன்றி வளர்வதும், நல்ல நிலையை அடைவதும் நிதர்சனமான உண்மை என்கின்றனர் பக்தர்கள்.

குழந்தைகளுக்கு முடியிறக்குதல், காது குத்துதல் போன்ற சுப காரியங்கள் இந்த ஆலயத்தில் தினசரி நடக்கும் சம்பவங்கள். இவை தவிர, அம்மை நோயின் கடுமை குறைய, உடல் உபாதைகள் நீங்க, பில்லி சூனியம் போன்ற தீவினைகள் அகல என்று பலவிதமான கோரிக்கைகளுடன் பலவிதமான நேர்ச்சைகளைச் செய்து பலன் காணும் பக்தர்கள் ஏராளம்.

இந்த ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவின்போது சுற்று வட்டார கிராமங்களும் களைகட்டி நிற்கும். வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த ஐந்தாம் நாள் அன்னைக்கு காப்புக் கட்டி பத்து நாட்கள் திருவிழா மிகவும் அமர்க்களமாக நடைபெறுகிறது.

வெள்ளிக் கிழமை தோறும் காலை 10.30 முதல் 12 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.30 முதல் 6 மணிவரையிலும் அன்னைக்கு நடைபெறும் ராகு கால விசேஷ பூஜையில் திருமணம் தடைபடுவோர், மகப்பேறு வேண்டுவோர் எனப் பலரும் கலந்து கொள்கின்றனர்.

திருப்பனந்தாள் - சீர்காழி பேருந்து தடத்தில் உள்ள மணல்மேட்டிற்குத் தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது, புத்தமங்கலம் என்ற இந்தத் தலம்.

Comments