பஞ்சம் போக்கும் பர்வதம்மா

இந்தியாவிலுள்ள சிவகே்ஷத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு.




இந்த வரிசையில் கர்நாடகாவில், மைசூருக்கு அருகிலுள்ள நஞ்சன்கூடு என்கிற இடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகண்டேஸ்வரரையும் குறிப்பிடலாம். நஞ்சுண்டேஸ்வரர் என்றும் இவரைச் சொல்வதுண்டு. தட்சிணகாசி என்று பக்தர்களால் கொண்டாடப்படும் இவ்வூர் முதலில் `கரளபுரி' என்ற பெயரால் அறியப்பட்டது.

உலகை உய்விக்க ஆலகால விஷத்தை உட்கொண்டு தன் கண்டத்திலேயே அதைத் தேக்கிக் கொண்ட ஈஸ்வரனே, இங்கே நஞ்சுண்டேஸ்வரர் என்றும் ஸ்ரீகண்டேஸ்வரர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.

கரளபுரி தோன்றிய வரலாறு பின்வருமாறு: பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட நஞ்சினை ஈசன் அருந்துகையில் ஒரு துளி விஷம் பூமியில் விழுந்து சிதறியது. பின்னர் தேவர்கள் அமுதத்தை உண்டபோது அதே இடத்தில் ஒரு துளி தெறித்து விழுந்தது. அந்த இடமே கரளபுரி எனும் நஞ்சன்கூடு. அந்த இரண்டு துளிகளையும் கண்டகேசி என்கிற அசுரன் திரட்டி உண்டுவிட்டு சிவபெருமானைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தான். அவனது தவத்தை மெச்சிய ஈசன் அருள்பாலிக்க, அவன் தன் வலிமை கூடிவிட்ட செருக்கில் மூவுலகினரையும் துன்புறுத்த ஆரம்பித்தான். அவனுடைய தொல்லை தாங்காமல் யாவரும் கரளபுரியிலேயே (நஞ்சன்கூடு) மகாயக்ஞத்தைத் துவங்கினார்கள்.

ஈசன் அவர்களது வேண்டுகோளுக்கு இரங்கி கண்டகேசியை அழித்து, இந்த இடத்திலேயே எழுந்தருளினார்.


கோயிலை நெருங்குகையிலேயே அது மிகப்பழமையானது என்பது புரிகிறது. கம்பீரமான வெளிக் கோபுரம். விஸ்தாரமான பிராகாரம்.

மிகப் பெரிய நந்திகேஸ்வரர் வெளிநோக்கிப் பார்த்த வண்ணம் மண்டபத்தில் அமர்ந்த கோலத்தில் வித்தியாசமான காட்சி தருகிறார். அவருக்கும் பூ அலங்காரங்களும், ஆராதனையும் உண்டு.

மூலவர் ஸ்ரீகண்டேஸ்வரர், லிங்க வடிவில் தரிசனம் தருகிறார். வெள்ளிக் கவசத்துடன் அருளும் அழகும் இணைந்த அருட்காட்சி தரும் ஸ்ரீகண்டேஸ்வரரைத் தொழுதால், தீராத நோய்களெல்லாம் தீரும். நியாயமான, நல்ல கோரிக்கைகள் கைகூடும்.

அம்பிகைக்கு இங்கே தனிச் சன்னதி. பர்வதராஜன் மகள் என்பதால் பர்வதம்மா என்று அழைக்கிறார்கள். ஆடை ஆபரண அலங்காரங்களில் இளம் பெண்ணைப்போல் பர்வதம்மா ஜொலிக்கிறார். அகிலத்துக்கே அன்னை இவள் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. பர்வதம்மாவை வழிபட்டால் வாழ்வில் எந்தவிதப் பஞ்சமும் வராது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கணபதி, கார்த்திகேயன், நாராயணன், நரசிம்மர் சன்னதிகளும் உண்டு. சரபேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர், திகம்பரேஸ்வரர் என்று ஈஸ்வரரின் பல வடிவங்களைக் காண முடிகிறது.

மைசூர் அரச பரம்பரையினர் பல தலைமுறைகளாய் வழிபடும் தெய்வம் ஸ்ரீகண்டேஸ்வரர். அரசர் மும்முடி கிருஷ்ணராஜ உடையார் பிரார்த்தித்துக் கொண்டு, ராணியாரின் ஆபரணங்கள் அனைத்தையும் ஈஸ்வரார்ப்பணம் செய்தாராம்.

மரகதலிங்கேஸ்வரர் சன்னதிக்கு சரித்திரப் பின்னணி உண்டு. மைசூரை மன்னர் திப்பு சுல்தான் ஆண்டபோது அவரது பட்டத்து யானைக்கு திடீரென்று பார்வை மங்கிப் போய் தடுமாறியதாம். எந்த வைத்தியமும் பலனில்லாமல் போகவே, அர்ச்சகர் சொன்னபடி யானை தினமும் ஸ்ரீகண்டேஸ்வரருக்கான அபிஷேக நீரை கபினி நதியிலிருந்து கலச செம்பில் கொண்டு வந்து கொடுக்கச் சொன்னாராம். ஒரு மண்டலம் முடிவதற்குள் யானையின் பார்வை சரியாகிவிட, திப்புசுல்தான் தன் அன்பளிப்பாக மரகத லிங்கத்தை கோயிலுக்கு அளித்தாராம்.

நவகிரகங்களை வலம் வந்தபின் ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு வெளியே வரும்போது, மனதில் சொல்லொணாத ஆனந்தம் பிறக்கிறது.

இத்தலத்தில் கபினி நதியுடன் கௌண்டின்ய நதியும் அந்தர்வாஹினியாகப் பாய்வதாக ஐதிகம். இதற்கும் ஒரு புராணக் கதை உண்டு. கௌண்டின்ய முனிவரின் மனைவி சுசீலா, பத்மநாதப ஸ்வாமிக்கான அனந்த விரத பூஜையை மேற்கொண்டு கையில் சரடைக் கட்டிக் கொண்டாள். அதை அறியாத கௌண்டின்ய ரிஷி, தன்னை வசியப்படுத்தவே அவள் அதைக் கட்டியிருப்பதாக நினைத்து ஆத்திரம் கொண்டு சரடைப் பிடுங்கி தீயில் எறிந்தார்.

கலங்கிப் போன சுசீலா தீயை அணைத்து, சரடைப் பாலில் முக்கி எடுத்து மீண்டும் கையில் கட்டிக் கொண்டாள். அதன் தாத்பர்யத்தை அவருக்கு விளக்கிச் சொன்னார். விஷ்ணுவுக்கு தான் இழைத்துவிட்ட அபச்சாரத்தால் பாவம் சூழ்ந்து கொண்டு விட்டதை முனிவர் உணர்ந்தார். தொடர்ந்து ஆசிரமத்திலிருந்த அனைத்து பசுக்களும் திருடுபோயின. தன் தவறை உணர்ந்த முனிவர், பரமனையும் பார்வதியையும் மனமுருகி பிரார்த்தனை செய்தார். கயிலைநாதன் பிராயச்சித்தம் செய்யும் வகையில் அனந்த விரதத்தை அவரும் கடைப்பிடித்தார். அப்போது அந்த கௌண்டின்யர் தியானத்திலாழ்ந்து அந்த இடத்திலிருந்து பெருகியது நதி. பிறகு கௌண்டின்யநதி என்று அழைக்கப்பட்டது.

மைசூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும் நஞ்சன் கூடு வந்து ஸ்ரீகண்டேஸ்வரரை தரிசிக்கத் தவறுவதில்லை. சிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை மாதத்து சோமவாரங்கள், பௌர்ணமி, சனி, ஞாயிறு என்று எல்லா நாட்களிலுமே கோயிலில் கூட்டம் அலை பாய்கிறது.

கலியுகத்தில் அடியவர் மீது அருளைப் பொழியும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார் என்று சொன்னால் அது பொய்யில்லை.


Comments

Post a Comment