நர்மதா நதியில் அமைந்துள்ள கோவில்கள் தொடர்ச்சி .......

ஓம்காரேஸ்வர், மண்டலேஸ்வர், மஹேஸ்வர் என வரிசையாக அமைந்த தீர்த்தங்களுக்குப் பின் மத்திய பிரதேச எல்லையில் மேலும் இரண்டு முக்கிய தீர்த்தங்களை தன் கரையில் நர்மதா தேவி அருளியிருக்கிறாள்.

ராஜ்காட், மஹேஸ்வரிலிருந்து சுமார் நூற்றுஇருபது கி.மீ. தொலைவில் உள்ள தலம். சந்திரனின் பாரியாள் ரோகிணியுடன் தொடர்புள்ள தீர்த்தம்.

முன்னொரு காலம் நிஷாத் குலத்தைச் சேர்ந்த பெண்மணி நீண்டகாலம் நர்மதையின் கரையில் தவமிருந்தாள். தவத்தின் இறுதியில் தன் தேகத்தையும் தியாகம் செய்கிறாள். அவளது விருப்பத்திற்கு ஏற்ப, கௌரி தேவியின் தோழியாகிறாள். பின்னர் கௌரியின் அருள் பெற்று தட்ச பிரஜாபதியின் மகளாகவும் உருவெடுக்கிறாள். ரோகிணி என்ற பெயர் பெற்ற அவள் தட்ச பிரஜாபதியின் இருபத்தேழு பெண் குழந்தைகளில் ஒருத்தி. தட்ச பிரஜாபதி தனது இருபத்தேழு கன்னிகைகளை அத்ரி புதல்வன் சந்திரமாவிற்கு மணம் முடித்து வைக்கிறான். ரோகிணி சந்திரமாவின் (சந்திரனின்) அதிகப் பிரியத்தைப் பெற்றவள்.

ரோகிணி மீண்டும் அரிய தவத்தால் `ரோகிணி தீர்த்தத்தை' இங்கு ஸ்தாபிக்கிறாள். பாவன்கங்கா காட், பட்வானி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்நகரில் வாணி வினாயகர், காளிகா மாதா, அகஸ்திய முனி என பன்னிரண்டு ஆலயங்களைத் தன்னகத்தே கொண்டு ஆன்மிக நாட்டத்தை வெளிப்படுத்துகிறது. நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள தத்தாத்ரேயரின் கோயில் கார்த்தவீர்யார்ஜுனன் காலத்துத் தாக்கத்தை நினைவூட்டுகிறது.

ராஜ்காட் அருகிலேயே பத்து கி.மீ தொலைவில் உள்ள மேக்நாத் தீர்த்தத்தைப் பற்றிய விவரங்கள் நர்மதா புராணத்தின் ரேவா காண்டப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.

திரேதா யுகத்தில் புலஸ்திய மகரிஷியின் பேரன் ராவணன்...! இவன் சிறந்த சிவ பக்தன். ராவணேஸ்வரன் என்று சிவ நாமத்துடன் போற்றப்பட்டவன். விந்தியமலைக்கு அதிபதி மாயாசூரன். அவன் புத்திரி மண்டோதரியுடன் ராவணன் விவாகம் முடிகிறது. அவர்கள் இருவருக்கும் பிறந்தவன் மேக்நாத். பின்னால் இந்திரஜித் என சிறப்பிக்கப்பட்டவன். தந்தையைப் போன்றே சிவ பக்தனான மேக்நாத் விந்திய பர்வதத்தின் மேல் அமர்ந்து சிவனை நினைந்து கடுந்தவம் புரிந்தான். மேக்நாத்தின் கோர தவத்தால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி வேண்டிய வரத்தைக் கேட்குமாறு பணிக்கிறார்.

`தங்கள் சேவையிலேயே எப்போதும் லயித்திருக்க வேண்டுகிறேன்! வேறெதுவும் எனக்கு அவசியமில்லை!' என பணிவுடன் மேக்நாத் பதிலளிக்கிறான். அவனிடம் இரண்டு சிவலிங்கங்களை இறைவன் அளிக்கிறார். அந்த இரண்டு லிங்கங்களை சிரத்தையுடன் கையில் ஏந்தியபடி லங்காபுரிக்கு பயணிக்கிறான். ஆகாய மார்க்கத்தில் செல்லும்போது கையில் இருந்த சிவலிங்கங்களில் ஒன்று மேக்நாத்தின் கையிலிருந்து நழுவி நர்மதையின் பிரவாகத்தில் விழுகிறது. மேக்நாத் அந்த சிவலிங்கத்தை நர்மதையின் இக்கரையில் ஸ்தாபனம் செய்கிறான். அந்நாளிலிருந்து இத்தீர்த்தம் மேக்நாத் தீர்த்தம் என அழைக்கப்படலாயிற்று!

அந்தக் எனப்படும் அசுரன் நான்கு ஆயிரம் வருடங்கள் கோர தவத்தில் ஈடுபடுகிறான். தன்னை வருத்திக் கொண்ட அந்தக் அசுரனை புகை மூட்டம் சூழ்ந்துகொள்கிறது. அந்தப் புகை உலகெங்கும் பரவி கைலாசத்தையும் அடைகிறது.

மனம் இரங்கிய சிவன், தேவி சகிதம் இறைவர் அந்தகாசுரன் இருக்குமிடத்தை அடைந்து, அவன் விரும்பும் வரத்தைக் கேட்குமாறு பணிக்கிறார். களிப்படைந்த அந்தகாசுரன் சிவனை ஆராதிக்கிறான். பின்னர் அவன் முன் எவர் வரினும் அவர் அனைவரையும் வெற்றி கொள்ளும் ஆற்றலை அளிக்குமாறு சிவபெருமானை வேண்டுகிறான்.

அத்தகைய வரத்தை தன்னால் அளிக்க இயலாது என சிவபெருமான் அந்தகாசுரனிடம் கூறுகிறார்.

அதனால் துக்கம் அடைந்த அந்தகாசுரன், தன் முயற்சி வெற்றி பெறாததால் அதிர்ச்சிகொண்டு மூர்ச்சை அடைகிறான். இம்முறை பார்வதி அந்தகாசுரன் சார்பாக சிவபெருமானிடம், அசுரன் கோரும் வரத்தை அளிக்க வேண்டுகிறாள். தேவி காட்டிய கருணையால் மனமிரங்கிய இறைவர், விஷ்ணுவைத் தவிர ஏனைய யாவரையும் வெற்றி கொள்ளமுடியும் என்ற வரத்தை அந்தகாசுரனுக்கு அளிக்கிறார்.

களிப்படைந்த அந்தகாசுரன் தனது தலைநகருக்குத் திரும்புகிறான். நாளடைவில் அவனது அசுர குணமும் வரம் கிடைத்த கர்வமும் தலை தூக்கத் தொடங்குகிறது. இந்திரனை வென்று தேவலோகத்தை, கவர்வதோடு மூவுலகையும் அந்தகாசுரன் தன் கீழ் கொண்டு வருகிறான். துயரம் அடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று முறையிடுகின்றனர்.

`மகாதேவன் வரம் அருளியதால் அவர்தான் இதற்கு வழிகாட்டவேண்டும்! நீங்கள் அவரைச் சரணடையுங்கள்!' என திருமால் அவர்களுக்கு உரைக்கிறார். காக்கும் கடவுளின் அறிவுரைக்கேற்ப தேவர்கள் ஈஸ்வரனைச் சரண் அடைந்து துதிக்கிறார்கள். இம்முறையும் சிவபெருமான் பார்வதியை நோக்குகிறார். `பகவான்! தாங்கள் செய்யப்போவது மூவுலகிற்கும் மட்டுமல்லாது உங்கள் அடியவன் அந்தகாசுரனுக்கும் பயனளிப்பதாக இருக்கட்டும்!' என்கிறாள்.

இதனிடையில் அந்தகாசுரனின் கர்வம் தலைக்கு மீற, தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று தஞ்சமடைந்ததையும் மனதிற்கொண்டு அவன் சிவபெருமானையே யுத்தத்திற்கு அழைக்கிறான். கோர யுத்தம் நடைபெறுகிறது. இறுதியில் மகாதேவர் தனது திரிசூலத்தை அந்தகாசுரனின் உடலில் சொருகி வதம் செய்கிறார். சுக்கு நூறாகிய உடலிலிருந்து அந்தகாசுரன் மறுபடியும் சிவபெருமானைத் துதி செய்கிறான். தன்னுடைய சிவகணங்களில் அந்தகாசுரனை ஒருவனாக்கி, அவனுக்கு முக்தி அளிக்கிறார். அவனது முடிவால் மூவுலகத்திற்கும் அமைதி கிட்டுகிறது.

ஆனால் திரிசூலத்தில் குருதியின் கறை படிகிறது. அக்கறையை நீக்க இறைவர் அனைத்து தீர்த்தங்களுக்கும் சென்று வருகிறார். ஆனால் அந்தக் கறை எந்தத் தீர்த்தத்தின் புனித நீராலும் மறைவதில்லை! நர்மதையின் நீரும் அக்கறையை நீக்குவதில்லை. இறுதியில் சிவபெருமான் பிருகு பர்வதம் சென்றடைந்து குன்றின் உச்சியில் தனது திரிசூலத்தைச் சொருகுகிறார். வெளியே எடுக்கும் தருவாயில் திரிசூலத்திலிருந்து கறை மறைந்து விடுகிறது. திரிசூலம் நடப்பட்ட இடத்திலிருந்து சரஸ்வதி கங்கா என்ற நதி உற்பத்தியாகிறது. சரஸ்வதி கங்காவும் நர்மதையும் இணையும் இத்தீர்த்தம் சக்கர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மாவால் ஸ்தாபிக்கப்பட்ட பிரம்மேஸ்வர் என்ற சிவலிங்கம் இங்கு அமைந்துள்ளது. நூற்றியெட்டு கே்ஷத்திர பாலர்கள் இங்கு எப்போதும் உறைகிறார்கள்.

ஷூல்பாணி காட் என்று அழைக்கப்படும் நீண்ட மலைப் பாதையின் முடிவில் அமைந்துள்ள இந்த திவ்ய நதியின் மத்தியில்தான் புராணகாலத்தில் சூலபாணேஷ்வர் ஆலயம் அமைந்திருந்தது. நீர்த் தேக்கத்தின் காரணமாக அது மூழ்கி மறைந்துவிட சற்று உயரத்தில் மற்றொரு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

Comments