தெய்வம் இருப்பது எங்கே?

மூன்று காவலர்கள்

``நம் வாய்க்குள் மூன்று காவலர்கள் இருப்பதாக நினைத்துக் கொள்ளவேண்டும். நாம் எதையாவது பேச நினைத்தால் அவர்களின் அனுமதி பெற்றே பேச வேண்டும்'' என்றார் குரு. ``அந்த மூன்று காவலர்கள் யார்? அவர்களிடம் நாங்கள் எதைக் கேட்க வேண்டும்?'' என்று கேட்டான் ஒரு சீடன். அதற்கு குருநாதர் ஒரு விளக்கம் சொன்னார். ``முதல் காவலன் `நீ பேசுவது உண்மையா? அப்படியென்றால் பேசு' என்பான். இதிலே நாம் பேசுவதில் பெரும்பங்கு அடைபட்டுவிடும். அடுத்த காவலன், `நீ பேசுவது இனிமையானதுதானா?' என்று கேட்பான் மூன்றாவது காவலன், `நீ பேசுவது தேவைதானா? இதனால் பிறருக்கு நன்மை விளையுமா?' என்று கேட்பான்'' என்றார்.




பாடம்

``குருவே... ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் செய்வது பக்தியில் கூடாது என்று ஏன் சொல்கிறீர்கள்?'' கேட்ட சீடனை, கோயில் ஒன்றிற்கு அழைத்துப் போனார் ஞானி. தீபாராதனை முடித்து, வந்திருந்த பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் கொடுத்தார் அர்ச்சகர். பக்தர்கள் அதைப் பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு, அவரவர் விருப்பப்படி காணிக்கை போட்டனர். பலர் சில்லறைக் காசுகளாகவும் சிலர் ரூபாய் நோட்டுகளாகவும் போட்டனர். மதிப்பு குறைவான நாணயங்களைப் போட்ட சமயம் ஓசை எழுப்பியது. அதைவிட மதிப்பு அதிகமான ரூபாய் நோட்டுகளைப் போட்டபோது ஓசை எழும்பாது, அமைதி நிலவியது. தகுதி குறைவானதே ஆடம்பர ஆர்ப்பாட்ட ஓசை எழுப்பும்; தகுதி மிக்கது அப்படிச் செய்யாது என்பது புரிந்தது, சீடனுக்கு.




உண்மையான மனிதர்

மன்னன் ஒருவன், விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தான். அந்த விழாவிற்கு எத்தனை மனிதர்கள் வந்தனர் என்று கணக்கிட்டுச் சொல்லும்படி அமைச்சரிடம் ஆணையிட்டான். அமைச்சர் ஒரு மரக்கட்டையை விழா நடக்கும் இடத்தின் நுழைவாயிலில் போட்டுவிட்டு, சற்றுத் தள்ளி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். விழாவுக்கு வந்திருந்தோர் அனைவரும் அந்தக் மரக்கட்டையில் இடறி விழுந்து தடுமாறிச் சென்றனர். முதியவர் ஒருவர் அந்த மரக்கட்டையை மிகவும் சிரமப்பட்டு ஓரமாக நகர்த்திவிட்டுச் சென்றார்.

மறுநாள், ``எத்தனை நபர்கள் வந்திருந்தனர்?'' என்று மன்னன் கேட்டான். ``ஒரே ஒரு முதியவர்'' என்று சொன்னார் அமைச்சர். ``என்ன?'' என்று மன்னன் வியப்பும் கோபமுமாகக் கேட்க, நடந்த அனைத்தையும் சொல்லி, ``மற்றவர்கள் நலன் கருதி கட்டையை எடுத்து ஓரமாக வைத்த அந்த முதியவர் மட்டுமே உண்மையான மனிதர்'' என்று விளக்கினார் அமைச்சர்.




எது தானம்?

மன்னன் ஒருவனைக் காண, துறவி ஒருவர் சென்றிருந்தார். அவர் சென்ற சமயத்தில் கண்களைக் கறுப்புத்துணியால் கட்டிக் கொண்டு, தன்னை நாடி வந்தோர்க்கு தானம் அளித்துக் கொண்டிருந்தான் அரசன்.

அவனது செயலுக்குக் காரணம் கேட்டார் துறவி.

``தானம் யாருக்குத் தருகிறோம் என்பது தெரிந்துவிட்டால், மற்றொரு சமயம் தானம் பெற்றவரைப் பார்க்கும்போது தாழ்வாக மதிக்கத் தோன்றும். அதுமட்டுமல்லாமல் ஏதோ காரணத்தால் அதே நபர் மறுபடியும் தானம் பெற வந்தால், நாம் ஏற்கெனவே தானம் அளித்தது நினைவுக்கு வரக்கூடும்! தருகிறோம் என்ற தலைக்கனம் இல்லாமல் தருவதுதான் சிறந்த தானம். அதனால் தான் இப்படிச் செய்கிறேன்!'' சொன்ன மன்னனை ஆசிர்வதித்தார் துறவி.




சமயோசிதபுத்தி

ராவணேச்வரனின் தம்பியாக இருந்தாலும் விபீஷணன் சிறந்த ராம பக்தன். அவன் தன் மாளிகைச் சுவர் முழுதும் ராம நாமத்தினை எழுதி வைத்தான். தம்பி வீட்டிற்கு வந்த ராவணன், சுவரில் `ராம ராம' என எழுதியிருந்ததைப் பார்த்து கோபமடைந்தான். ``நம் எதிரியின் பெயரை எழுதி வைத்திருக்கிறாயே?'' எனக் கோபத்தோடு கேட்டான். உடனே விபீஷணன், ``இல்லையண்ணா! அது எதிரியின் பெயரல்ல. உங்கள் பெயரைத்தான் எழுதியிருக்கிறேன்!'' என்றான். ``என் பெயர் ராமனா?'' என்று ஆத்திரத்துடன் கேட்டான் ராவணன். ``ராவணன் என்ற உன் பெயரில் முதலெழுத்தான `ரா'வையும், அண்ணி `மந்தோதரி' பெயரின் முதலெழுத்தான `ம'வையும் எடுத்துதான் இப்படி `ராம' என எழுதினேன்'' என விபீஷணன் கூற, மகிழ்ந்துபோன ராவணன் மாளிகை முழுவதும் `ராம ராம' என எழுதும்படி ஆணையிட்டான். சமயோசிதபுத்தியிருந்தால் எத்தகைய சங்கடத்தையும் சமாளித்துவிடலாம் அல்லவா!




தெய்வம் இருப்பது எங்கே?

``கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை?'' சீடன் கேட்டான்.

குரு ஒரு கதை சொன்னார்: ``கடவுள் இருக்கிறார் என்று நம்பிய ஒரு மனிதன் மெல்ல சொன்னான், `கடவுளே! என்னோடு பேசுங்களேன்!'

அப்போது குயில் ஒன்று பாடியது. அதைக் காதில் வாங்காத அவன், உரத்த குரலில் கத்தினான்: `கடவுளே, என்னோடு பேசுங்களேன்!' உடனே உரத்த இடியோசை, எழுந்தது. அதையும் பொருட்படுத்தாத அவன், `பேசாவிட்டாலும், உன் தரிசனமாவது தரக்கூடாதா?' என்று இறைவனிடம் கேட்டான்.

சுடர்விட்டுப் பிரகாசித்தபடி, வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது. அதைக் கவனிக்காமல் அவன் கேட்டான்: `ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்த்த மாட்டாயா?' கடவுள் மெல்ல கீழே இறங்கி, பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார். அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளால் தட்டிவிட்டு, நடந்தபடி சொன்னான்.

`கடவுள் இல்லை! இருந்திருந்தால் என்னோடு பேசி இருக்கலாம். பார்க்க முடிந்திருக்கும். அற்புதமாவது நிகழ்ந்திருக்கும் எதுவுமே நடக்க-வில்லையே!''

கதையைக் கேட்ட சீடன் சொன்னான். ``புரிந்தது குருவே! கடவுள், தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். நாம் தான் புரிந்து கொள்வதில்லை!''


Comments