அல்லல் போக்கும் அங்காளம்மன்

அங்காளம்மன் என்ற பெயரோடு அம்பிகை அருளும் தலங்கள் அநேகம் உண்டு. அந்த வகையில் ஈரோடு மாவட்டம், அய்யம்பாளையத்திலும் ஓர் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இங்கே கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அங்காளம்மன், தன்னை நாடிவரும் அன்பர்களின் அல்லல்கள் போக்கி நலங்கள் பல சேர்ப்பவள்.

வெளிப்பிராகாரத்தை அடுத்து அம்பாளை நோக்கியவாறு நந்தி இருக்கிறது. அதற்கு முன்பாக, கருடகம்பம் காணப்படுகிறது.

அங்காளம்மன் வடதிசை நோக்கி அமர்ந்துள்ளாள். கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் விநாயகப் பெருமானும், உற்சவர் திருமேனியும் உள்ளன.

சிவபெருமானைப் பிடித்திருந்த பிரம்ம கபாலத்தை அழிக்க அங்காளம்மன் விஸ்வரூபம் எடுக்கிறாள். கபாலத்தை அடக்கிய பிறகும் அவளது கோபம் தணியவில்லை.

அம்மனின் கோபத்தைத் தணிப்பதற்காக திருமால் யோசனைப்படி தேர்த்திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. தேவர்களும், முனிவர்களும் அந்த ரதத்திற்குச் சக்கரமாகவும், அச்சாணியாகவும், மாடங்களாகவும், பீடமாகவும் மாறுகின்றனர். கோபம் தணிந்து, அந்தத் தேரில் அமர்ந்து வீதிவலம் வந்தாள் அன்னை. தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று தேவியை வழிபட்டு மறைந்தார்கள். இந்த ஐதிகத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் இங்கு தேரோட்டம் முடிந்த பிறகு தேரினைப் பிரித்து விடுவார்கள். அடுத்த ஆண்டு தேரோட்டத்துக்குப் புதிய தேர் செய்யப்படுகிறது.

விநாயகர், இருளாயி, பேச்சியம்மன், வீரபத்திரர், சிவதுர்க்கா, கௌமாரி, வைஷ்ணவி, நந்தீஸ்வரர் ஆகியோரை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.

இங்குள்ள சிவதுர்க்கைக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை மணி பத்து முதல் பன்னிரண்டு வரை சிறப்பு ராகு கால பூஜை நடத்தப்படுகிறது.

மாசி மாதம் மகா சிவராத்திரியைத் தொடர்ந்து பத்து நாட்கள் பிரம்மோற்சவ விழா இங்கே மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது. சித்திரை மாதத்தில் அக்னித் திருவிழாவும், ஆடி மாதத்தில் பொங்கல் விழாவும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபவிழா தனிச் சிறப்புமிக்கது.

ஈரோடு மாவட்டம் கோபியிலிருந்தும், கவுந்தப்பாடியிலிருந்தும் அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. `அய்யம்பாளையம் ஸ்டாப்பிங்' என்று கேட்டு இறங்க வேண்டும். பேருந்துப் பாதை அருகிலேயே கோயில் உள்ளது.

Comments