ஆச்சாரியார்களின் அணிவரிசை தொடர்ச்சி ......

கொடிய சூரிய கிரணங்களால் தகிக்கின்ற சர்வ ஜீவராசிகளுக்கும், மிகுந்த குளிர்ந்த நிழலைக் கொடுப்பவனவாகவும், சரணம் அடைந்தவர்களைக் காத்து ரட்சிப்பதான முக்கிய நோக்கத்துடன் கூடியவையுமான ஸ்ரீஆசார்யாளின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்.

- குருபாதுகா பஞ்சகத்தில் ஜகத்குரு ஆதிசங்கரர்

68. ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
(அருளாட்சி 1907-1994)

1894 மே மாதம் 20-ம் தேதி, ஜய வருடம் வைகாசி மாதம் எட்டாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, அனுஷ நட்சத்திரம் கூடிய புண்ணிய தினத்தில் தென்னார்க்காடு மாவட்டம், விழுப்புரம் நகரத்தில், நவாப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரத்தில் அவதரித்தார்.

தந்தை சுப்ரமணிய சாஸ்திரிகள், விழுப்புரம் கல்விச்சாலைகளில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார். தாய் மகாலக்ஷ்மி, கர்நாடக ஸ்மார்த்த பிராமண வகுப்பினர். தஞ்சையை ஆண்டு வந்த மகாராஷ்டிர மன்னனான அமரசிம்மனின் அரசவையில் கௌரவமான பதவிகளை, சுவாமிகளின் தந்தைவழி முன்னோர் வகித்து வந்தனர்.

தஞ்சையை ஆண்ட முதல் நாயக்க மன்னரான சேவப்ப நாயக்கரின் அமைச்சரான ராஜா கோவிந்த தீட்சிதர், சுவாமிகளின் தாய்வழி மரபினர். கோவிந்த தீட்சிதர் மகாவித்வான். அவருக்கு `ஐயன்' என்ற பட்டப் பெயர் உண்டு. (ஐயன்குளம், ஐயன் வாய்க்கால் போன்ற பல இடங்களெல்லாம் இவர் பெயராலேயே ஏற்பட்டன.)

சுவாமிநாதன்

தன் மூத்த மகனுக்கு கணபதி என்று பெயரிட்டிருந்த சுப்ரமணிய சாஸ்திரிகள், இரண்டாவதாகப் பிறந்த மகனுக்கு முருகப்பெருமானின் திருநாமமான சுவாமிநாதன் என்று பெயர் வைத்தார். சாஸ்திரிகளுக்கு சுவாமிமலை சுவாமிநாதனே குலதெய்வம் என்பதாலும் அந்தப் பெயரை வைத்திருக்கலாம்.

திண்டிவனம், அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் படித்த சுவாமிநாதன், பள்ளிப் படிப்பில் மிகுந்த புத்திசாலியான மாணவராகத் திகழ்ந்தார். எல்லாப் பாடங்களிலும் முதல் மதிப்பெண்களைப் பெற்று, பரிசளிப்பு விழாக்களில் எல்லா முதல் பரிசுகளையும் வாங்குவது இவரது வழக்கமாக இருந்தது. கிறிஸ்துவ மதநூலான பைபிளைப் படித்து, பரீட்சை எழுதி அதிலும் முதல் பரிசை வாங்கினார்.

சுவாமிநாதன், 1906-ம் ஆண்டில் நான்காவது ஃபாரம் படித்தபோது, ஷேக்ஸ்பியர் எழுதிய `ஜான்மன்னர்' என்ற நாடகத்தை மாணவர்கள் எல்லாம் சேர்ந்து போட்டார்கள்.

அதிலே ஆர்தர் இளவரசன் வேடத்தில் அற்புதமாக நடித்தது யார் தெரியுமா? சுவாமிநாதன்தான்! அப்போது வயது 12.

நாடகத்திலும் முதல் பரிசு சுவாமிநாதனுக்குத்தான். அவரது நடிப்பைக் கண்டு மகிழ்ந்த பள்ளி ஆசிரியர்களெல்லாம் மறுநாள் சாஸ்திரிகளின் வீடுதேடி வந்து, சுவாமிநாதனைப் பாராட்டினார்கள்.

தந்தைக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தாய்க்கும் ரொம்ப சந்தோஷம். என்றாலும், தன் மகனுக்கு திருஷ்டி பட்டுவிடுமே என்று பயந்து அன்றிரவு சுவாமிநாதனுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டார்!நாட்டையே திருஷ்டியிலிருந்து காக்க வந்த ஜகத்குரு இவர்தான் என்பது, அப்போது அந்தத் தாய்க்குத் தெரியவில்லை.

காஞ்சி காமகோடி மடத்தின் 66வது பீடாதிபதியாக இருந்தவர், சந்திரசேகரர். அவர் திண்டிவனம் தாலுகாவிலுள்ள பெருமுக்கல் என்ற கிராமத்தில் 1906ம் வருடம் தங்கி, சாதுர்மாஸ சங்கல்பம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது சுவாமிநாதனின் தந்தை, குடும்பத்துடன் சென்று சுவாமிகளை தரிசனம் செய்தார்.

பூஜை செய்து கொண்டிருந்த சுவாமிகளின் பார்வை, சிறுவன் சுவாமிநாதனின் மேலே விழுந்தது.

கூப்பிட்டுப் பேசினார் சுவாமிகள். பல கேள்விகளையும் கேட்டார். எல்லாவற்றிற்கும் சிறப்பாக பதில் சொன்னான் சுவாமிநாதன். தனக்குப் பின்னால் காஞ்சி மடத்தை அலங்கரிக்கும் ஒரு மகாபுருஷனாக, சுவாமிநாதன் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

கலவை

1907-ம் வருடம், காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள கலவை என்ற ஊரில் சுவாமிகள் முகாமிட்டிருந்தார்கள். அப்போது, உடனே திண்டிவனத்திலிருந்து சுவாமிநாதனை அழைத்துக் கொண்டு கலவை வருமாறு சுவாமிகளிடமிருந்து சாஸ்திரிகளுக்குத் தந்தி வந்தது.

அந்த சமயம், சுவாமிகளுக்கு அம்மை போட்டிருந்தது. தான் அதிக நாட்கள் ஜீவித்திருக்க முடியாது என்பதை உணர்ந்து, தனக்குப் பின் சுவாமிநாதனையே பீடாதிபதியாக ஆக்கலாம் என்று அவர் நினைத்திருந்தார்.

ஆனால், சுவாமிநாதன் திண்டிவனத்திலிருந்து புறப்பட்டு, கலவை வரும் முன்னரே அவர் சித்தியடைந்துவிட்டார். தான் சித்தியடைவதற்கு முன்னால், தன் சீடராக இருந்தவரும், ரிக்வேதத்தை நன்கு கற்றவருமான லட்சுமிகாந்தன் என்னும் 18 வயது இளைஞருக்கு உபதேசம் செய்து வைத்தார்.

ஆனால், லட்சுமிகாந்தன் அவர்கள் எட்டு தினங்கள் மட்டுமே பீடாதிபதியாக இருந்து, சித்தியடைந்துவிட்டார். அதற்கு முன்பு முந்தைய குருவின் எண்ணத்தை நிறைவேற்றும்படியாக, சுவாமிநாதனையே தனக்கு அடுத்த பீடாதிபதியாக மனத்திற்குள் சங்கல்பம் செய்து கொண்டார்.

மடாதிபதி

பின்னர் சுவாமிநாதன், முறைப்படி 13.2.1907 பராபவ வருடம் மாசி மாதம் 2ம் தேதி புதன்கிழமை பீடாதிபதியானார். அப்போது அவருக்கு வயது 13. அன்று முதல் அவரது திருநாமம் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி என்று ஆனது.

ஆதிசங்கரரைப் போல முண்டனம், தண்டம், கமண்டலம், காஷாயம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு சன்னியாசியானார் ஸ்ரீசந்திரசேகரர்.

மகாமகம்

பின்னர் கலவையிலிருந்து கும்பகோணத்திற்குப் புறப்பட்டார்.

இவர் பல இடங்களுக்கு யாத்திரைகளைப் புரிந்தார்.

65வது பீடாதிபதியான மகாதேவரின் அதிஷ்டானம் இளையாற்றங்குடியில் இருந்தது. அங்கு சென்று தரிசித்தார். அப்படியே திருச்சி, தஞ்சை யாத்திரை புரிந்துகொண்டு, 1909-ம் வருடம் கும்பகோணத்திற்குத் திரும்பினார்.

அந்த வருஷம், மகாமக வருஷம்.

மகாமக தினத்தன்று சந்திரசேகரர், யானையின் மீது அம்பாரியில் அமர்ந்து, தஞ்சை அரசர் குடும்பத்தினர் முன் செல்ல மகாமகக் குளத்திற்குச் சென்று ஸ்நானம் செய்தார்.

1909, 10 ஆகிய ஆண்டுகளில் கும்பகோணத்திலேயே ஆசார்யாளுக்கு சமஸ்கிருத காவியங்கள், நாடகங்கள் ஆகியவற்றில் பயிற்சியும், வேதப் பயிற்சிகளும் செய்து வைக்கப்பட்டன. அந்த இரண்டு வருடங்களிலேயே சந்திரசேகரரின் அறிவுத் திறமையைக் கண்டு, அனைவரும் வியந்தார்கள்.

பக்தர்களும், சீடர்களும் ஸ்வாமிகளை தரிசிக்க கும்பகோணத்திற்கு வந்த வண்ணம் இருந்தார்கள்.

மகேந்திர மங்கலம்

அது ஸ்வாமிகளின் சாஸ்திரப் பயிற்சிக்கு இடையூறாக இருந்ததால், தனிமையான, அமைதியான ஓர் இடம் இருந்தால் தேவலை என்று முடிவு செய்யப்பட்டது!

முசிறிக்கு மேற்கே அகண்ட காவேரியின் வடகரையில், இயற்கை அழகுடன் அமைந்த மகேந்திர மங்கலம் கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அந்தக் காலத்தில் அங்கே செல்ல போக்குவரத்து வசதி கிடையாது. லாலாபேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, அகலமான காவிரியைப் பரிசலில் கடக்க வேண்டும். இவ்வளவு சிரமப்பட்டு, நிறையப் பேர் வரமாட்டார்கள் என்பதால், அந்த இடத்தில் சந்திரசேகரேந்திர சுவாமிகளுக்காக ஒரு பர்ணசாலை அமைக்கப்பட்டது.

மந்திரங்கள், ஸ்லோகங்கள், தமிழ் இலக்கண இலக்கியங்கள் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்த சந்திரசேகரர், இத்தனையோடு ஆங்கிலம், பிரஞ்சுமொழி ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார் என்பது வியப்பான செய்தியாகும். கலைகளையும் அவர் ஒதுக்கவில்லை. ஓய்வு நேரங்களில் கலைஞர்களிடமும் பேசினார். அவற்றில் சங்கீதக் கலை, சுவாமிகளின் மனத்தை மிகவும் கவர்ந்தது.

அடிக்கடி தன் பர்ணசாலையை விட்டு, அகண்ட காவிரியின் நடுவில் அமைந்த திட்டுகளுக்குச் சென்று அங்கே நெடுநேரம் தங்கி, தனிமையாக தியானத்திலும் அமர்ந்து விடுவதோடு இயற்கைக் காட்சிகளையும் ரசிப்பார்.

இயற்கைக் காட்சிகளைப் புகைப்படமெடுப்பதிலும் சந்திரசேகரருக்கு மிகுந்த விருப்பம் உண்டு. காமிராவில் உள்ள நுட்பங்களெல்லாம் அவருக்கு அத்துப்படி என்பதால், புகைப்படம் எடுப்பவர்களுக்கு, படம் நன்றாக வரும்படியான ஆலோசனைகளைக் கூறுவார். மேலும் மாற்றுக் கண்ணாடியைக் கழுவுதல், பிரதிகள் எடுத்தல் போன்றவற்றிலும்கூட தன் யோசனைகளைக் கூறுவார்.

கணிதம், ஜோதிடம், வானசாஸ்திரம் ஆகியவற்றிலும் சுவாமிகள் விற்பன்னராக ஆனார்.

பின்னர் 1914-ல் மீண்டும் கும்பகோணத்திற்குத் திரும்பினார். பின்னர் 1919-ல் தன் விஜய யாத்திரையைத் துவங்கினார்.

கதர்

கதர் ஆடைகள் விற்பனைக்கு வந்தது முதல், சுவாமிகள் கதர் வஸ்திரங்களையே உடுத்தி வந்தார். எவ்வளவு முரட்டுத் துணியாக இருந்தாலும், அவர் அதையே அணிந்து வந்தார்.

ஒருமுறை, தனுஷ்கோடியில் ஸ்வாமிகள் நீராடியபோது, மடத்தின் சிப்பந்திகள் அனைவருக்கும் இரண்டு ஜோடி கதர் ஆடைகளைக் கொடுத்து இதுவரை அவர்கள் அணிந்து வந்த மில் துணிகளைக் கடலில் வீசச் சொன்னார். அவ்வளவு தேசபக்தி!

தமிழ்நாடு முழுக்க யாத்திரை புரிந்த சுவாமிகள், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழில் உள்ள சங்கநூல்கள், காப்பியங்கள், தேவாரம், திருவாசகம், திருக்குறள், திவ்யப்பிரபந்தம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் இவற்றில் எல்லாம் ஆராய்ச்சி செய்து வந்தார்.

மகாத்மா காந்தி

1927-ம் வருடம் மகாத்மா காந்தி தென்னார்க்காடு வந்தார். 15.10.1927-ல் பாலக்காட்டைச் சேர்ந்த நல்லிச்சேரியில், சந்திரசேகர சுவாமிகள் தங்கியிருந்த ஜாகையின் பின்புறம் அமைந்திருந்த மாட்டுக் கொட்டிலில் காந்தியடிகளுக்கும், சுவாமிகளுக்கும் சந்திப்பு ஏற்பட்டது.

கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே ராஜ்யங்கள் அமைய வேண்டும் என்றும், ஆத்ம சிந்தனையைப் புறக்கணித்து, மனித சக்தியை மாத்திரம் பயன்படுத்தி அமையும் எந்த ராஜ்யமும் சீக்கிரத்தில் அழிவைத்தான் அடையுமென்றும், இதன் உண்மையை காந்தியடிகள் உலகிற்கு எடுத்துக் கூறுவதை, தான் மிகவும் பாராட்டுவதாகவும் சுவாமிகள், காந்தியிடம் தெரிவித்தார்.

அவர்களது சந்திப்பு ஒருமணி நேரம் நீடித்தது.

ஆங்கிலேயருக்குப் பேட்டி

1931-ம் வருடம் ஜனவரி மாதம் சுவாமிகள் செங்கல்பட்டுக்கு விஜயம் செய்தார்.

அச்சமயம், பால்பிரண்டன் என்ற ஆங்கிலேயர், நம் பாரத நாட்டில் உள்ள யோகிகள் பலரைச் சந்தித்து, அவர்களது ஆசிகளைப் பெறும் எண்ணத்துடன் இங்கிலாந்திலிருந்து வந்து சுற்றுப்பயணம் செய்து வந்தார்.

அவர், நம் ஸ்வாமிகளைச் சந்தித்து, உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றிச் சில கேள்விகளைக் கேட்டார்.

அந்த அற்புதமான பேட்டியை, அடுத்த இதழில் பார்க்கலாம்.

Comments

  1. ஸார்
    நன்றி
    நன்றி
    நமஸ்காரம்.
    மிகவும் ரசித்துப் படித்தேன் இந்த தொகுப்பை.
    இதுலே குறிப்பிட்ட பெட்டியை உங்கள் பதிவுகளிலே காண முடியவில்லை.
    படிக்க ஆவல்.
    மேலும், நடுவிலே சில ஆசார்யர்களைப் பற்றிய சில பதிவுகள் கொப்பிலே இல்லை.
    முடிந்தால், எனக்கு அனுப்பி வைக்கவும்.
    நன்றியோடு இருப்பேன்.
    நமஸ்காரங்கள்.
    ஸ்ரீநிவாசன்.
    ( சிமிழி - கொடவாசல் - Now at Perth, Australia, srinaren17@gmail.com.
    Thank you,
    anbudan,
    Srinivasan.

    ReplyDelete

Post a Comment