ஆயிரம் பலன்கள் தரும் கண்ணாயிரநாதர்

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயிலுக்குச் சென்று இறைவனையும் தேவியையும் தரிசனம் செய்தால் என்னென்ன பலன்கள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

ீ எல்லாவிதமான கண் சம்பந்தமான பிரச்னைகளும் தீரும்.

ீதிருமணமும் தொடர்ந்து குழந்தை பாக்கியமும் கிட்டும்.

ீவசதி, வாய்ப்புகள் பெருகும்.

ீஉங்கள் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழிகள் நீங்கும்.

ீஅதீதமான காம உணர்வுகள் கட்டுப்படும்.

1000 கண்கள் உடைய இத்தலத்து ஈசனை வணங்கினால் இதுபோல் 1000 பலன்கள் உண்டு!

திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட பெருமைமிக்க இக்கோயிலில் ஏராளமான ஆச்சர்யங்களும் காத்திருக்கின்றன.

கோயிலுள் நுழையும்போதே இடதுபுறம் காட்சி தரும் வில்வ மரத்திலிருந்தே அதிசயம் ஆரம்பம்.

ஆமாம், ஒற்றை, இரட்டை வில்வ இலைகளைத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.


ஆனால் இங்கே மட்டும் ஐந்து வில்வ இலைகளாக ஆரம்பித்து மேலே செல்லச் செல்ல 7,9 என்று ஒரே கொத்தில் அத்தனை இலைகள் அதிசயமாக அமைந்து, இந்தத் திருக்காரவாசல் ஆலயமும் அதிசயமானதுதான், அபூர்வமானதுதான் என்பதை பறைசாற்றுகிறது.

இந்தக் கோயிலுக்கு வந்தாலே உங்களுக்கு நல்லகாலம் ஆரம்பம்தான் என்பதைச் சொல்வது போல காலை, மதியம், இரவு என்று மூன்று காலங்களிலும் வணங்க வேண்டிய மூன்று பைரவர்கள் அருகருகே இங்கே தரிசனம் செய்வதைக் காண மறந்துவிடாதீர்கள்.

காலையில் வணங்கவேண்டிய கா(ை)ல பைரவர், மதியம் வணங்க வேண்டிய உச்சிக்கால பைரவர், அர்த்த ஜாமத்தில் வணங்க வேண்டிய சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி விசேஷமானது. அதுவும் மூன்று பைரவர்களுக்கு நேரெதிரில் மகாலட்சுமி பார்த்துக் கொண்டே இருப்பதால், இவர்களை வணங்கினால் செல்வம் உங்களைச் சேரும் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா?

கைலாசநாதர் என்ற பெயரில் சிவபெருமானை பல கோயில்களில் நீங்கள் தரிசனம் செய்திருப்பீர்கள். ஆனால் திருக்காரவாசலில் காட்சி தரும் தேவியின் பெயர் என்ன தெரியுமா? கைலாச நாயகி. ஆமாம். பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக கைலாயத்திலிருந்து இங்கே பறந்து வந்தவள் இந்த நாயகி. அம்மன் சன்னதிக்கு எதிரில் உள்ள தூணில், இறக்கைகளுடன் கைலாசநாயகி பூமியின் மேல் நிற்கும் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும்.

அதுபோல் இங்கே காட்சி தரும் குருபகவான், ஞான மகாகுரு. அவர், தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிப்பது அபூர்வமான ஒன்று. ஞானமகாகுருவின் எதிரில் அகத்தியர் சுவடி படிக்கும் காட்சி அமைந்திருக்கிறது. அதனால் நாடிஜோதிடம் துவங்கிய கோயில் இதுதானோ என்று தோன்றுகிறது.

பொதுவாக சிவன் கோயில்களில் மாரியம்மன் இருக்க மாட்டார். ஆனால் இங்கே மாரியம்மன் அழகுற காட்சி தருகிறாள். இவளுக்கு அபிஷேகம் செய்தால் அம்மை போன்ற நோய்கள் வராது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதுபோல் கல்லில் செதுக்கப்பட்ட நடராஜர் சிலையும் இந்தக் கோயிலின் பழமையைப் பறைசாற்றுகிறது.

கண் சம்பந்தமான நோய்கள் உங்களில் யாருக்காவது இருக்கிறதா? முதலில் கண் டாக்டரிடம் செல்லுங்கள். அப்புறம் டாக்டர்களின் டாக்டரான திருக்காரவாசல் கண்ணாயிரநாதரைப் போய் வழிபடுங்கள்.

ஆயிரம் கண்கள் உடைய அந்த ஈசன், நிச்சயம் உங்கள் கண்களை குணப்படுத்துவார் என்கிறார் திருப்பணியாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.கருப்பஞ் செட்டியார்.

பிரம்மாவிற்கு, `தான்தான் எல்லாம்' என்று ஒருமுறை கர்வம் வந்தது. சிவபெருமானைக்கூட வழிபடாமல் இருந்தார். அவ்வளவுதான். அவரது பதவி பறிபோய், நட்டாற்றில் நின்றார். பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால், காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காராயில் (திருக்காரவாசல்) வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார்.

`பிறையானே பேணிய

பாடலொடின்னிசை

மறையானே மாலொடு நான்

முகன் காணாத

இறையானே யெழில் திகழும்

திருக்காராயில்

உறைவானே யென்பவர் மேல்

வினையோடுமே'

என்று இந்த இறைவனைப் பற்றிப் பாடுகிறார் திருஞான சம்பந்தர்.

கண்ணாயிரநாதருக்குச் சமமாக, பக்கத்திலேயே ஆதிவிடங்க தியாகராஜரின் சன்னதி அமைந்திருக்கிறது. தேவேந்திரனால் உருவாக்கப்பட்டவர் இந்த தியாகராஜர்.

இந்த திருக்காரவாசலில் தியாகராஜர் வீர சிங்காதனத்தில் குக்குட நடனக் காட்சியுடன் அருள்புரிகிறார். திருவாரூரில் வீதிவிடங்க தியாகேசரின் அஜபா நடனத்தைக் கண்டுகளித்த பதஞ்சலி முனிவர், எல்லா வகை நடனங்களையும் தனக்குக் காட்டியருள வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினார். ``திருக்காராயில் வந்தால் காணலாம்'' என்று தியாகராஜர் ஆணையிட்டு, ஆடிக் காட்டிய தலம்தான் இந்த ஊர்.

இதே தியாகராஜர் சன்னதியில் விலை மதிப்பற்ற மரகத லிங்கம் ஒன்று இருந்தது. அது திருடுபோய்விட்டதாகவும், இன்னும் கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். யாரிடம் எங்கு இருக்கிறதோ, அந்த இறைவனுக்கே வெளிச்சம்! தற்போது காஞ்சிப் பெரியவர் அருளாசி செய்த சிறிய மரகத லிங்கத்தை வைத்து வழிபாடு சிறப்புற நடைபெறுகிறது.

அடுத்து நாம் தரிசிப்பது கைலாசநாயகி அம்பாள். நின்ற கோலத்தில் ஒரு கையில் அக்கமாலையுடனும், மற்றதில் தாமரையுடனும் தரிசனம் தருகிறாள் தாய்.

பிராகாரத்தில் பிரமோத விநாயகர் பிரமாதமாய்க் காட்சியளிக்கிறார். பிரமோதம் என்றால் பெருமகிழ்ச்சி என்று அர்த்தம். வணங்கும் பக்தர்களுக்குப் பெரு மகிழ்ச்சியை அள்ளித் தருகிறார் போலும்!

மகாவிஷ்ணு, பிட்சாடனர், அகஸ்தீஸ்வரர், கைலாசமேஸ்வரர், இந்திரபுரீஸ்வரர், விஸ்வநாதர், எல்லையம்மன், சுப்ரமண்யர், கஜலட்சுமி, நாகர், சரஸ்வதி, துர்க்கை, பைரவர், நால்வர் ஆகியோரும் இந்த ஆலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.

முதலாம் ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட இந்தக் கோயிலில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட `சேஷ தீர்த்தம்' என்னும் கிணற்று நீர், மருத்துவ குணம் மிக்கது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு அந்த



நீர் அபிஷேகம் செய்யப்பட்டு, வேண்டுவோர்க்கு அளிக்கப்படுகிறது என்கிறார்கள் சந்திரசேகர சிவாசாரியாரும், கணேச சிவாசாரியாரும்.

இன்னொரு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்னும் திருக்குளம். இதன் கரையில் கடுக்காய் விநாயகர் சன்னதி இருக்கிறது.

அது என்ன கடுக்காய் விநாயகர்?

ஒரு வணிகன், ஜாதிக்காய் மூட்டைகளுடன் வண்டியில் இந்தப் பக்கம் வந்தான். இரவு இந்தக் குளக்கரையில் தங்கினான். அப்போது ஒரு சிறுவன், ``வண்டியில் என்ன?'' என்று கேட்க, ``கடுக்காய்'' என்று பொய் சொன்னான் வணிகன்.

மறுநாள் காலையில் பார்த்தால் ஜாதிக்காய்கள் எல்லாம் கடுக்காய்களாக மாறியிருந்தன. சிறுவனாக வந்தவர் விநாயகர்தான் என்பதை உணர்ந்த வியாபாரி, தன் தவறுக்கு வருந்த, மீண்டும் ஜாதிக்காய்களாக மாறின. ஆனால், பிள்ளையார் மட்டும் `கடுக்காய் விநாயகர்' ஆகிவிட்டார்!

சரி, இப்போது தியாகராஜர் இந்தத் தலத்திற்கு வந்த கதையைப் பார்க்கலாமா?

திருமாலின் மூச்சில் கலந்த சிவன்

தவம் செய்து கொண்டிருந்தார் மகாவிஷ்ணு.

வெயிலிலும் மழையிலும் அசையாது பெரிய நீலமலை போல் ஆழ்ந்த நெடுந்தவம். குறை எல்லாம் நிவர்த்திக்கும் சிவபெருமானை நோக்கிக் கடும் தவமிருந்தார் விஷ்ணு.

ஒருநாள், வெளிச்சமாக வெளிப்பட்டார் சிவபெருமான்.

கைகூப்பினார் திருமால். ``வேண்டுவோர்க்கு வேண்டுவன தரும் ஈசனே, எல்லாம் இருந்தும் புத்திர பாக்கியம் இல்லாமையால் நான் வருத்தத்தில் இருக்கிறேன். அக்குறை நீங்க, எனக்குப் புத்திர பாக்கியம் நிகழ ஆசி வழங்க வேண்டும்'' என்றார்.

பின்னால் நடக்கப் போகும் இனிய நிகழ்வுகளை உணர்ந்து, திருமாலை அணைத்துக் கொண்டார் சிவபெருமான்.

பின்னர் திருமால், தன் நெஞ்சக் கோயிலில் அந்த சிவனை நிறுவி, ஆனந்தத்தில் ஆழ்ந்தார்.

திருமாலின் மூச்சுக்காற்றால், உள்ளிழுத்தலும், வெளிவிடுதலும் ஆன நிகழ்வால், சிவபெருமானும் அசைந்தாடினார்.

உச்சுவாசம், நிச்சுவாசம் எனப்படும் அந்த ஆட்டத்தால், சிவன் மகிழ்ச்சியெய்தினார்.

இடம் பெயர்ந்த இடபவாகனர்

மகாவிஷ்ணுவின் மூச்சுக் காற்றால் நடனமாடிய தியாகராஜரின் மேல், தேவர் உலகத் தலைவன் தேவேந்திரனுக்கு ஆசை வந்தது. அவனுக்குப் பல கஷ்டங்கள் இருந்ததால், மகாவிஷ்ணுவால் பாதுகாக்கப்படும் சிவபெருமான் தன் வசம் இருந்தால், தனக்கு நல்லது விளையும் என்று நம்பினான்.

திருமாலின் திருப்பாதங்களில் விழுந்து யாசித்தான், தேவேந்திரன்.

கடைசியில், தியாகராஜரைப் பெற்று பெருமகிழ்வுடன் தேவருலகம் திரும்பினான்.

உதவி! உதவி!

தியாகராஜரின் வரவால் பழைய பிரச்னைகள் தீர்ந்தாலும் புதிய பிரச்னை ஒன்று தேவேந்திரனுக்கு வந்தது. வலன் என்னும் அசுரன், தேவர்களை ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தான்.

தனக்கும் ஆபத்து வரும் என்று தேவேந்திரன் பயந்த போதே, ஆபத்தும் வந்தது.

ஒரே நொடியில் தேவேந்திரனைத் தோற்கடித்தான் வலாசுரன். தேவேந்திரப் பதவியை அபகரித்ததோடு, தேவேந்திரனையும் ஓட ஓட விரட்டினான்.

பூலோகத்திற்கு ஓடி ஒளிந்தான் தேவேந்திரன்.


பூலோகத்தில், சோழ நாட்டின் தலைநகரமான திருவாரூரில் சீரும் சிறப்புடன் ஆட்சி செய்துகொண்டிருந்தான் மன்னன் முசுகுந்தன்.

இந்த முசுகுந்தன், தேவேந்திரனின் நண்பன்.

தோற்று ஓடிவந்த தேவேந்திரன், உதவி தேடி நேராய் முசுகுந்தனிடம் வந்தான்.

விஷயம் சொன்னான்.

கொதித்தெழுந்தான் சோழன். உடனே தோழனுடன் தேவருலகம் சென்றான். போர்... போர்...! வலாசுரனுடன் போர்!

அசுரனை வீழ்த்தி, தேவருலகத்தை மீண்டும் தோழன் தேவேந்திரனுக்கே மீட்டுத் தந்தான் சோழன் முசுகுந்தன்.

திருக்காரவாசல்

முசுகுந்தன் விடைபெறும் நேரம் வந்தது.

தேவேந்திரன் கேட்டான். ``நண்பனே, உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்'' என்றான்.

முசுகுந்தன் வாய் திறந்தான். ``நீ தினம் பூஜித்து வரும் தியாகராஜரை எனக்குத் தந்துவிடு!''

இந்திரன் அதை எதிர்பார்க்கவில்லை. ``இது, மகாவிஷ்ணு வழிபட்ட பெருமான். அவருடையது'' என்றான்.

``விஷ்ணுவிடம் அனுமதி வாங்கியாவது என்னிடம் கொடு'' பிடிவாதமாக இருந்தான் முசுகுந்தன்.

திருமாலே அனுமதி தந்தும், தியாகராஜரைப் பிரிய மனமில்லாத தேவேந்திரன், அதேபோல் ஆறு தியாகராஜர் உருவங்களைச் செய்து, முசுகுந்தன் முன் காண்பித்தான்.

எல்லாவற்றையும் பார்த்தான் மன்னன்.

அவைகளில் ஒரே ஒரு தியாகராஜர் மட்டும், ``என்னைத் திருவாரூருக்கு அழைத்துச் செல்...!'' என்று மெல்ல திருவாய் மலர்ந்தருளினார்.

இந்திரன் செய்வதறியாமல் நிற்க, சரியாய் அந்த தியாகராஜரை மட்டும் எடுத்துக் கொண்டான் முசுகுந்தன்.

ஆச்சரியப்பட்ட இந்திரன், `எல்லாம் இறைவனின் அருள்' என்பதை உணர்ந்து, தான் உருவாக்கிய ஆறு தியாகராஜ மூர்த்திகளையும் சேர்த்து மன்னனிடமே கொடுத்தான்.

மகாவிஷ்ணு கொடுத்த தியாகராஜரை திருவாரூரில் ஸ்தாபித்த முசுகுந்தன், மற்ற ஆறையும் ஆறு புனிதமான ஆலயங்களில் பிரதிஷ்டை செய்தான்.

அவற்றுள் ஒன்றுதான், இந்த திருக்காரவாசல். (மற்ற ஊர்கள் திருக்குவளை, திருவாய்மூர், திருமறைக்காடு (வேதாரண்யம்), நாகப்பட்டினம், திருநள்ளாறு ஆகியவை)

சரி, சரி... ஸ்கூலெல்லாம் லீவ் விட்டாச்சுதானே? திருக்காரவாசல் போய்ட்டு வாங்களேன்!

படங்கள்: சித்ராமணி

திருக்காரவாசல்

ற திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ீ கோயில் நேரம் 7-12, 4-8

ீ கண் சம்பந்தமான நோய்களைத் தீர்த்து வைக்கும் தலம் இது. சோமவாரம், பௌர்ணமி தினங்களில் கரிசலாங்கண்ணி தைலம், பொன்னாங்கண்ணி தைலம், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிஜேகம் செய்து, அதையே கண் நோய்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.

ீசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இது. சென்னையிலிருந்து ஒருவர் சென்று வர ரூ.600 செலவாகும்.

Comments