சம்சார விருட்சம்

அர்ஜுனனுக்குத் தனது அளப்பரிய ஆற்றல் குறித்து, 'புருஷோத்தம யோகம்' என்ற அத்தியாயத்தில் விளக்கிய கிருஷ்ணர், 'சம்சார விருட்சம்' எனப்படும் பரந்து விரிந்த ஆலமரம் குறித்தும் அவனுக்கு விளக்கினார்:

ஊர்த்வமூலமத: சாகமச்வத்தம் ப்ராஹ§ ரவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத ஸ வேதவித்

''வேத ஒலிகளை இலைகளாகக் கொண்ட ஓர் ஆல மரம்; மேல் நோக்கிய வேர்களையும் கீழ் நோக்கிய கிளைகளையும் கொண்டது. இந்த மரத்தை அறிபவன் வேதங்களை அறிபவன் ஆகிறான்!'' என்கிறார் பகவான்.

சாதாரண மரங்களைப் போல் அல்லாமல், ஆகாயத்தில் வேர்களையும் பூமியில் கிளைகளையும் பரப்பி நிற்கிறது இந்த மரம். இதன் உண்மையான உருவம், நம்மால் உணரக் கூடியது அல்ல. அது, பிரமாண்டமானது. பிரம்மமே இதன் வேர். இதன் கிளைகள் எல்லா திசைகளிலும் பரந்து விரிந்துள்ளது. இதன் மேற் பகுதிகளில் தேவர்கள் மற்றும் கந்தர்வர்கள் உள்ளனர். அடுத்து... சற்று கீழே மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள். அனைவரது வாழ்வும் இந்த மரத்தைச் சார்ந்தே உள்ளது. இந்த மரம் குறித்து அறிவதே, தன்னை அறிதல் ஆகும்.

இதன் ஓர் அங்கமாகிய நாம், சந்ததியைப் பெருக்கி, மரத்தை மேலும் பெரிதாக்குகிறோம். ஆனால், வேரைத் தேடிச் செல்ல முயற்சிப்பதில்லை. 'நம் சந்ததியே முக்கியம். குழந்தைகள் இல்லாவிட்டால் நம் குடும்ப மரம் பட்டுப் போய் விடும்!' என்றே எண்ணுகிறோம். இது தவறு. உண்மையில் கிளைகள் முக்கியம் அல்ல; வேர்களே முக்கியம். நம் முன்னோர் இல்லாவிட்டால், நாம் தோன்றியிருக்க மாட்டோம். அவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்; எங்கே சென்றனர் என்பதை அறியும் ஆர்வம் வேண்டும்.



நான், என் தந்தையின் மகன். அவர், இன்னாரின் மகன். என் அப்பா மற்றும் தாத்தாவுக்கும் முன்பு இவர் இருந்தார்... என்று நீளும் ஆய்வு, இறுதியில் பிரம்மம் எனும் தீர்வைக் காணும். தன்னிடம் இருந்து தொடங்கும் இந்த ஆராய்ச்சி மெள்ள நீண்டு, இந்த உலகத்தை நோக்கித் தாவும். இந்த ஆய்வுக்கும் அதன் தீர்வைக் காண்பதற்கும்... பகட்டு, மயக்கம் அல்லது துக்கம், ஆணவம் ஆகியவையே தடைகளாக இருக்கின்றன.

பகட்டு என்றதும், 'லேப்டாப், செல்போன், எல்.சி.டி. போன்றன எல்லாம் பகட்டானவை; அவற்றைப் பயன் படுத்தக் கூடாது!' என்று பொருள் கொள்ளக் கூடாது. இவை, மனிதனின் கண்டுபிடிப்பில் விளைந்த கனிகள். தாராளமாக வாங்கிப் பயன்படுத்தலாம்.

நிறைய சம்பாதித்து, இஷ்டம் போல் செலவு செய்யலாம். விலை உயர்ந்த கார் வாங்கலாம். பளபளவென உடைகள் அணியலாம். பிரமாண்ட பங்களாக்கள் கட்டலாம், தவறில்லை! கடவுளின் அருகில் செல்வதற்கு இந்த சௌகரியங்கள் எதுவும் தடையாக இருக்காது. நாம் பயன்படுத்துபவை- உருவாக்கியவை எல்லாம் அவனிடம் இருந்து எடுத்துக் கொண்டவைதானே?! எனவே, வீண் குழப்பங்களைத் தவிர்த்து ஆத்ம சாதனைக்கு முயல வேண்டும்.

ஐயாயிரம் ரூபாய் செலவு செய்ய இயலும் ஒருவர், ஐம்பதாயிரம் செலவு செய்தால், அதுவே ஆடம்பரம்! வெறும் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர் எம்.ஏ. பட்டம் பெற்றவருக்கு நிகராக தம்பட்டம் அடிப்பதே, அலட்டல்! எது நம்மிடம் உள்ளதோ அதைக் கொண்டு சந்தோஷத்துடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

வேடிக்கையான கதை ஒன்று:

அந்த மனிதன் மிகுந்த செலவாளி. ஆனால், படு சோம்பேறி. எந்த வேலைக்கும் செல்வது கிடையாது. ஒரு நாள் அவன், பக்கத்து ஊருக்குச் சென்றான். அங்கு ஒருவனிடம் நூறு ரூபாய் கடன் கேட்டான்.

அவனோ, ''உன்னை எனக்குத் தெரியாதே. உன்னை நம்பி எப்படி கடன் தருவது?'' என்றான்.

அதற்கு சோம்பேறி மனிதன், ''அட போங்க சார்... எங்க ஊர்ல யாரிடம் கேட்டாலும், 'உன்னைப் பற்றி நல்லா தெரியும். பிறகு, எப்படிடா கடன் தருவோம்'னு கேப்பாங்க. அதனால, என்னைப் பற்றி எதுவுமே தெரியாத உங்ககிட்டே வந்து கேட்டேன். நீங்க என்னடான்னா இப்படிச் சொல்றீங்க!'' என்று அலுத்துக் கொண்டானாம்!

இவனைப் போன்றவர்கள், தன்னைப் பற்றி அறியாமல், எல்லாவற்றுக்கும் ஆசைப்படு பவர்கள். இவர்கள் நிச்சயம் பரிதாபத்துக்கு உரியவர்களே!

எது நம்மிடம் உள்ளதோ அதை அனுபவித்து சந்தோஷமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். அப்படி சந்தோஷமாக இருப்ப வனே வாழ்க்கையைப் புரிந்து கொண்டவன்.

சிலர், தாங்கள் துக்கப்படுவதற்கா கவே பிறந்ததாக எண்ணிக் கொள் கின்றனர். இது தவறு. இன்பமும் துன்பமும் உலக இயல்பு. எதற்காகவும் துக்கப்படக் கூடாது. துக்கம்- கவலைகள்... நம் ஆத்மாவை அசைத்துப் பார்க்கும். ஆசைகளைத் தூண்டி விட்டு பாவம் செய்யவும் துணை நிற்கும். மதி மயக்கத்தில் ஆழ்த்தும்.எனவே, இன்ப- துன்பங்கள் குறித்து சலனப்படாத அளவுக்கு நம் மனதைப் பக்குவப்படுத்திப் பழக்க வேண்டும். புற விஷயங்களால் சலனப்படாத மனம், தானே பிரம்மத்தை நாட ஆரம்பிக்கும்.

தன்னை அறிவதற்கு- பிரம்மத்தை அடைவதற்கு பெரும் தடையாக இருக்கும் காரணிகளில் ஆணவமும் ஒன்று. சிலரிடம், 'எல்லாம் எனக்குத் தெரியும்' என்ற அலட்டல் இருக்கும். எப்போதும் அதுகுறித்து பேசிப் பேசியே அவர்கள் கழுத்தறுப்பார்கள். இந்த அலட்டல்- ஆணவம் தங்களது அழிவின் அறிகுறி என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அந்த மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒருபோதும் ஆகாது. மருமகள் பரம சாது. மாமியார் நேர் எதிர். மருமகள் என்ன சொன்னாலும், செய்தாலும் மட்டம் தட்டுவதே வழக்கம்.

மாலையில், தேநீர் பருக அழைப்பாள் மருமகள். 'எனக்குத் தெரியாதா... நீ சொல்லிதான் வர வேண்டுமா?'' என்பார் மாமியார்.

''வெந்நீர் ஆறப்போகிறது, குளியுங்கள்!'' என்றால், ''வெந்நீர் எப்போ ஆறும், எப்போ குளிக்கணும்னு எனக்குத் தெரியும்!'' என்பார் மாமியார். இப்படி, எதற் கெடுத்தாலும் 'எனக்குத் தெரியும்!' என்ற ஆணவ பதிலே மாமியாரிடம் இருந்து வரும்.

ஒரு நாள், குளியல் அறையில் பசு மாடு ஒன்றைக் கட்டி வைத்தாள் மருமகள். இதை அறியாத மாமியார் குளிப்பதற்காக உள்ளே செல்ல... வெளியே தாழிட்டு விட்டாள் மருமகள். சற்று நேரத்தில் மாமியாரின் கூக்குரல் கேட்டது.

''அடியே... உள்ளே மாடு இருக்கிறது!''

இப்போது மருமகள் சொன்னாள்:

''எனக்குத் தெரியும் அம்மா!''

''கதவு வெளியே பூட்டியிருக்கிறது!'

''தெரியும் அம்மா!''

''மாடு என்னை முட்டிக் கொன்று விடும்!''

''அது தெரியாமலா, கதவை வெளியில் பூட்டி வைத்தேன்!''

- மாமியாருக்கு எல்லாம் புரிந்தது. அவர், ''அம்மாடி... என்னை மன்னிச்சுடும்மா. இனிமே, அப்படி நடந்துக்க மாட்டேன்!'' என்று அலறினார்.

''அதுவும் தெரியும் அம்மா!'' என்ற மருமகள் கதவைத் திறந்து விட்டாள். அதன் பிறகு அந்த மாமியார் வாயே திறப்பதில்லையாம்!

நாமும், நம் மனதில் கர்வம் லேசாக எட்டிப் பார்க்கும்போதே... முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். இல்லையெனில் அது, பூதாகரமாக வளர்ந்து நம்மையே அழித்து விடும். ஆணவமும் மதிமயக்கமும் இல்லாதவர்களும் ஆன்மாவில் எப்போதும் நிலைபெற்று இருப்பவர்களும் அழியாத நிலையை அடைவர்.எல்லாம் அறிந்தவன் இறைவன் மட்டுமே. எனவே, 'எல்லாம் தெரிந்தவன் நான்!' என்ற அகந்தையை விடுத்து, கண்ணனை சரணடைய வேண்டும்.

யோ மாமேவமஸம்மூடோ ஜானாதி புருஷோத்தமம்
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேன பாரத

''எவராக இருப்பினும் எந்தச் சந்தேகமும் இல்லாமல், என்னை முழுமுதற் கடவுளாக எவனொருவன் தெரிந்து கொள்கிறானோ, அவனே சகலத்தையும் அறிந்தவனாக அறியப்படுகிறான்!'' என்கிறார் பகவான்.

ஆம்! சூரிய- சந்திரராகவும், உயிர்களை வாழ வைக்கும் பிராண வாயுவாகவும், நெருப் பாகவும், மக்கள் மனதில் நினைவாகவும் அறிவாகவும் வேதமும் வேதாந்தமுமாகவும் இருப்பவன் கண்ணனே என்று உணர்ந்து, 'கண்ணனே புருஷோத்தமன்!' என்று அறிபவன் ஞானியாகிறான்.

நாமும், இதயத்தின் பலவீனங்களை ஒழித்து, புருஷோத்தமனாம் கண்ணனிடம் நம்மை ஒப்படைப்போம்!

Comments