மித மிஞ்சிய ஆசை, வாழ்க்கையை விழுங்கி விடும்

அமுது உண்டால் அழிவு இல்லை. அதைப் பெறுவதற்காக... மந்நாராயணனின் மேற்பார்வையில், இந்திரனின் முன்னிலையில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது, அதில் இருந்து தோன்றிய ஐராவதம் (யானை), உச்சை ச்ரவஸ் (குதிரை), கற்பக விருட்சம் (மரம்), காம தேனு (பசு) முதலானவற்றை இந்திரன் எடுத்துக் கொண்டான். கௌஸ்துபம் என்ற ரத்தினத்தையும் மகாலட்சுமியையும் தனதாக்கிக் கொண்டார் மந் நாராயணன்.

மகாலட்சுமியின் அழகில் தேவர்களும் அசுரர்களும் மெய்ம்மறந்தனர். 'கூட்டு முயற்சியில் தோன்றியவை, குறிப்பிட்ட இருவருக்கு மட்டுமே உரிமையாவது சரியல்ல!' என்பது அவர்களது எண்ணம். ஆனால், இது பற்றிக் கேட்க அவர்களுக்கு தைரியம் இல்லை.

அனைவரின் இதயங்களிலும் குடிகொண்ட மந்நாராயணனுக்கு, அவர்களது எண்ணம் புரியாமல் இருக்குமா? புரிந்தது! ஆனால், மகாலட்சுமியை பொதுவாக்கவோ, தனது உடைமையை இழக்கவோ அவர் விரும்பவில்லை. அதே நேரம், தனது உரிமையை நிலை நாட்டவும் அவருக்கு ஆதாரம் இல்லை.

'அசகாய சூரர்களான அசுரர்கள், லட்சுமியை கவர்ந்து செல்ல முயற்சிப்பர். ஆனாலும் அவர்களுடன் மோதுவது, பயன் அளிக்காது!' என எண்ணினார் நாராயணன். லட்சுமியைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது அவர் மனம். லட்சுமியுடன் அங்கிருந்து வெளியேறினார். அப்போது, அனைவரது பார்வையும் லட்சுமியின் மீது லயிக்க... எல்லோரும் பொறாமையுடன் பார்ப்பதாகவே நாராயணனுக்கு தோன்றியது.



'லட்சுமியை அபகரிக்க அசுரர்கள் பின்தொடரலாம்!' என்று எண்ணியவர், தனது இருப்பிடத்தைக் கடலுக்கு நடுவில் மாற்றினார். ஆதிசேஷனைத் தனது படுக்கை ஆக்கிக் கொண்டார். அவன், மெய்க்காப்பாளனாகச் செயல்படுவான் என்பதால் இந்த ஏற்பாடு! இதிலும் அவருக்கு திருப்தி இல்லை. 'ஆதிசேஷனையும் மீறி, லட்சுமியைக் கவர்ந்து சென்றால், என்ன செய்வது?' என்ற சந்தேகம் அவருக்கு. எனவே, தன் கால் அருகே பூமாதேவியை அமரச் செய்தவர், ''உறங்காமல் இரு. எவரேனும் தென்பட்டால், உடனே தெரியப்படுத்து!'' என்று அவளிடம் பணித்தார். பிறகு, 'அசுரர்கள், வான் வழியாகவும் வரலாம்!' என்று எண்ணியவர் தனது நாபிக் கமலத்தில் அமர்ந்திருக்கும் நான்முகனான பிரம்மனை அழைத்து, நான்கு திசைகளையும் கண்காணிக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும்... சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் ஆகியோரை ஒரு பக்கத்திலும் தேவர்கள் மற்றும் முனிவர்களை மறு பக்கத்திலும் நிற்க வைத்து தன்னை மறைத்துக் கொண்டார் மந் நாராயணன். இப்படி, தன்னைச் சுற்றிலும் ஓர் அரண் அமைத்தும், திருப்தி அடையாதவர், தானும் உறங்காமல் லட்சுமியைக் கண்காணித்தார். தனது தாழ்வு மனப்பான்மையை மறைக்க, யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பதாகப் பறைசாற்றினார். எனினும், அவர் மனம் தத்தளித்துக் கொண்டே இருந்தது.

எனவே, பரமேஸ்வரனை அருகில் துணைக்கு வைத்துக் கொண்டவர், லிங்கத்தைத் தொட்டபடி... ஈஸ்வரனையும் விழித்திருக்கச் செய்தார். உலகைக் காப்பவனுக்கே காப்பாளர்கள் தேவைப்பட்டது; தானும் உறங்காமல், பிறரையும் உறங்க விடாமல் செய்தார் மந் நாராயணன்.

-இது, கற்பனைதான் எனினும் கருத்தாழம் மிக்கது. லட்சுமி... அதாவது, செல்வம் அவரை அணுகாத வரையில் நிம்மதி இருந்தது. அவள் வந்ததும் நிம்மதியும் உறக்கமும் பறிபோயின. 'பொன்னாசை (பெண்ணாசை) அளவுக்கு மீறினால், நிம்மதி பறிபோகும்!' என்பதை எடுத்துரைக்கிறது மந் நாராயணனது அனந்த சயனம்!

கனகமும் (செல்வம்), காமினியும் (பெண்) மன அமைதியை அழிப்பன. 'கல்வியில் நாட்டம் கொண்டவன், சிந்தனையில் ஆழ்ந்தவன், அளவுக்கு மீறிய செல்வம் உடையவன், ஆபத்தை நெருங்கியவன் ஆகியோருக்கு உறக்கம் வராது!' என்று உறங்காதவர்களை வரிசைப்படுத்துகிறார் சாணக்கியன்.

'மிதமிஞ்சிய அழகியே மனைவி ஆனாலும், அவள் சத்ருவாக மாறலாம்!' எனச் சொல்வது உண்டு (பார்யா ரூபவதீ சத்ரு:). அழகு, அனைவரையும் பார்க்கத் தூண்டும். தன் மனைவியின் மீது பிறரது பார்வை விழும்போது, கணவனின் மனம் சஞ்சலம் அடையும். அவனுக்கு, மனைவி மேல் சந்தேகம் பிறக்கும். நிம்மதி இழக்க, இதுவே காரணம் என்பது மனோவியல் அறிஞர்களது கருத்து. சந்தேகம் கொண்ட மனம், நிலை இல்லாமல் தவிக்கும்.

அழகும் செல்வமும் தோன்றி மறையும் இயல்பு உடையன. பண்பாடு, அக மகிழ்ச்சியை அளிக்க வல்லது. திருமணத்தில் அகமகிழ்ச்சி தரும் பண்பாட்டுக்கே முன்னுரிமை தர வேண்டும். அழகு- செல்வம் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் 'போதும்!' என்ற எண்ணம் வராது. நூறு ரூபாய் சம்பாதிப்பவன், ஆயிரத்தையும்... ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவன், லட்சத்தையும்... லட்சம் சம்பாதிப்பவன் கோடியையும் எதிர்பார்ப்பான். இதற்கு முற்றுப் புள்ளியே கிடையாது. 'அழகு' விஷயத்திலும் அப்படித்தான்! முதல் சந்திப்பில் தென்படாத அழகு, பல சந்திப்புகளுக்குப் பின் தென்படும். அதுபோல... முதலில் அழகாகத் தோன்றுவது, காலப் போக்கில் அழகற்றதாகத் தோன்றுவதும் உண்டு. பிரியம்தான் அழகை வரையறுக்கிறது.

அம்பாள்- கருப்பு; சுந்தரேசர் சிவப்பு. கண்ணன் கருப்பு; ருக்மிணி சிவப்பு. தவிர, ஸித்தி- புத்திதேவியருடன் வீற்றிருக்கும் விக்னேஸ்வரர், லட்சுமிவராக பெருமாள், லட்சுமி நரசிம்மர்- இவர்களை அழகாகவே பார்ப்பர். அகத்தின் அழகை முகத்தில் பார்த்தவர்கள் இவர்கள். அழகிய சிங்கரையும், ஆலால சுந்தரத்தையும் பிடிக்காதவர்கள் யார்?

'மித மிஞ்சிய ஆசை, வாழ்க்கையை விழுங்கி விடும்!' என்பதற்கு திருதராஷ்டிரன், துரியோதனன் மற்றும் கைகேயி ஆகியோரையும், 'மகிழ்ச்சிக்கு செல்வம் ஒரு பொருட்டல்ல; மனமே முக்கியம்!' என்பதற்கு ரிஷி பரம்பரையையும் உதாரணம் காட்டி விளக்குகிறது புராணம்.

தியானம், பக்தி, வழிபாடு, உபாசனை ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். இவை, மனதைப் பக்குவப்படுத்தி, தங்களை உயர்த்திக் கொள்ளப் பயன்படும். ஆன்மிகத்தில் திளைத்த மனம், ஆன்மிக அறிவை வியாபாரமாக்க விரும்பாது.

திருமணத் தேர்வுக்கு தர்ம சாஸ்திரமும் பண்பும் அவசியம். எனவே, சிந்தனை வளம் கொண்ட இளைஞர்கள், நமது பண்பாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஸனாதன மதத்தின் பெருமையை அறிந்து கொள்ள வேண்டும். செல்வம்- அழகு ஆகியவற்றின் மீதுள்ள நாட்டத்தால், பண்பான சிந்தனைகள் பாதிக்கப்படக் கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக இருவரும், திறந்த மன துடன் அலசி ஆராய்ந்து, சிந்தனையைப் பகிர்ந்து கொண்டு, 'இணைந்தால் விடுபடக்கூடாது' என்ற முடிவுக்கு வரவேண்டும். வாழ்க்கையின் செழிப்பு இதில்தான் அடங்கி உள்ளது.

Comments