வாழ்க்கையில் நேர் வழியிலேயே ஒன்றை அடைய வேண்டும்'

'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!' என்பதற்கு ஏற்ப, வியாபாரி ஒருவர், தனது வாழ்நாள் முழுவ தும் உழைத்து பெரும் பொருள் ஈட்டினார். தான் ஈட்டிய பொருளைக் கொண்டு மாளிகை போன்ற வீடு, பலவிதமான கார்கள், நவீன வசதிகள், அடிக்கடி வெளிநாடுகளுக்கு உல்லாசப் பயணம் என்று வசதியாக வாழ்ந்து வந்தார்.

நாம் இப்படியெல்லாம் வாழ ஆசைப்படுவதே, பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தானே! உணவை நமக்காக உட்கொள்கிறோம்; உடையை பிறருக்காக உடுத்துகிறோம். இன்னும் சிலர், உணவைக்கூட பிறருக்காக உண்பார்களாம்! வீட்டில் இலையில் பழைய அமுதைச் சாப்பிட்டு விட்டு, அந்த இலையில் எண்ணெயைத் தடவி வீதியில் எறிபவர்களும் உண்டாம். ஏன் இப்படி?

'தினமும் ஏதோ நெய்யினால் ஆன பதார்த்தங்களைச் சாப்பிடுகிறோம்!' என்று தன்னை பிறர் நினைப்பதற்காக, இப்படிச் செய்கிற மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். என்ன செய்வது?

இந்த வியாபாரியும் அப்படித்தான்! எவரைப் பார்த்தாலும் தான் ஈட்டிய செல்வத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்.



சிலர், தங்களிடம் உள்ள வசதிகளையும் செல்வத்தையும் மறைத்து வைத்து, எப்போதும் அழுமூஞ்சியாகவே இருப்பார்கள். ஏன் தெரியுமா? தன்னிடம் உள்ளதையெல்லாம் பிறர் தெரிந்து கொண்டால் திருஷ்டி பட்டு விடுமாம். இது ஒரு ரகம். மற்றொரு ரகத்தினர் உண்டு... இவர்கள், தங்களிடம் பத்து ரூபாய் இருந்தாலும்கூட, அதைப் பிறர் பார்க்கும்படி, பகட்டாக வைத்துக் கொள்வார்கள்.

இதில், வியாபாரி எந்த ரகத்தைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்!

அந்த வியாபாரி எவரைப் பார்த்தாலும் அலட்டிக் கொள்வார். அப்படி அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் போதுதான், ஒரு நாள் அந்தச் சம்பவம் நடந்தது. இவர் பெரிய தனவந்தர் அல்லவா? இவரைச் சுற்றி எப்போதும் ஒரே கூட்டம். அந்த ஊரில் எந்த நிகழ்ச்சி என்றாலும் தலைமை தாங்க இவரையே கூப்பிடுவார்கள். இதைத்தான் அந்த பகட்டு ஆசாமியும் விரும்பினார்.

ஒரு நாள், ஊரில் நடந்த பாகவத புராணச் சொற்பொழிவுக்குத் தலைமை தாங்கினார் வியாபாரி. தலைமை தாங்கிவிட்டு உடனே கிளம்ப முடியுமா? தன்னை எல்லோரும் கவனிப்பதையும் தன்னை சுற்றிச் சுற்றி வந்து பலரும் நெளிவதையும் பார்ப்பதில் தனவந்தருக்கு ஓர் அல்ப திருப்தி.

பாகவத புராணம் சொல்பவர் தனது சொற்பொழிவைத் தொடங்கினார். அதில், மனிதனின் மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை உண்டு என்றும், மறுபிறவி உண்டு என்றும் அடித்துப் பேசினார்.

மேலும், 28 நரகங்களின் பெயர் களையும், என்னென்ன பாவம் செய்தால், எந்தெந்த நரகம் கிடைக்கும் என்பதையும் விரிவாக விளக்கினார் அவர். அதுமட்டுமா...? நரகத்தில் ஒரு ஜீவன் எத்தகைய வேதனைகளையெல்லாம் அனுபவிப்பான் என்பதையும் நேரில் பார்ப்பது போல் வர்ணித்தார்!

வியாபாரிக்கு முகம் வெளிறிப் போனது. உடல் வியர்த்தது. உடனே கிளம்பிச் சென்றார். அன்று இரவு அவருக்கு தூக்கம் வரவில்லை. தனது வாழ்நாளில், இதுவரை செய்த பாவங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன. பேய்ப் படம் பார்த்து விட்டு வந்து படுத்த குழந்தையின் நிலையில், மனிதர் தூக்கமின்றி நடுங்கிக் கிடந்தார். தூக்க மாத்திரை சாப்பிட்டும் தூக்கம் வராததால் தவித்தார். தன்னை நரகத்தில் போட்டு வாட்டி எடுப்பதாக கற்பனை செய்து கொண்டார். அவரது இந்த நிலை, அனைவருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. எவரிடமும் எதுவும் பேசவில்லை.

காலையில் எழுந்ததும், எவருக்கும் தெரியாமல் அந்தச் சொற்பொழிவாளரை தனிமையில் சந்தித்தார். தான் செய்த பாவங்களில் இருந்து தப்பிப்பது எப்படி என்று கேட்டார். இதைக் கேட்ட சொற்பொழிவாளர் விவரிக்கத் துவங்கினார்: ''அஜாமிளன் என்று ஒரு கொடிய பாவி இருந்தான். உயிர் பிரியும் நேரத்தில் தன் பிள்ளையை, 'நாராயணா' என்று உரக்க அழைத்தான். அதனால் அந்தக் கொடியவனுக்கு மோட்சம் கிடைத்தது. ஆகவே, உயிர் பிரியும் நேரத்தில், நாம் எதை நினைக்கிறோமோ, அது வாகவே ஆகிவிடுவோம்!'' என்றார்.

இதைக் கேட்ட வியாபாரிக்கு உடனே ஒரு வழி புலப் பட்டது. நிம்மதி அடைந்தார். வீட்டுக்கு வந்தவர், தன் கடைசிப் பிள்ளைக்கு 'நாராயணன்' என்று பெயரை மாற்றி வைத்தார். தனது வீட்டில் உள்ளவர்கள் எல்லோரையும் அழைத்து, ஒரு கூட்டம் போட் டார்.

''உயிர் பிரியக்கூடிய தருணத் தில் நான் இருக்கும்போது, என் எட்டு குழந்தைகளையும், வரிசை யாக எனக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரையும் காட்டி, குழந்தைகளின் பெயர்களைக் கேட்க வேண்டும். கயல்விழி, பொற்கொடி, சித்திரலேகா, பூவரசன் என்று நான் சொல்லிக் கொண்டே வருவேன். இறுதியாக, கடைசிப் பிள்ளையின் பெயரைக் கேட்க வேண்டும். நான் 'நாராயணன்' என்பேன். அவ்வளவுதான்! உடனே என் மூச்சு பிரியும். பிறகு, எனக்குக் கவலையே இல்லை. வைகுண்டத்தில் இருந்து என்னை அழைத்துச் செல்ல விமானம் வரும்; விஷ்ணு தூதர்கள் வருவர்; நேராக என்னை வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்வர்!'' என்று கூறி சந்தோஷப்பட்டார்.

சொர்க்கத்துக்குச் செல்லும் எளிய வழி ஒன்றை கண்டுபிடித்ததாக நினைத்து, தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு சற்றே நிம்மதி அடைந்தார். மேற்படி விஷயத்தை வீட்டாரிடம் அடிக்கடி கூறி, அவர்களை உஷார்படுத்திக் கொண்டே இருந்தார்.

அவர் எதிர்பார்த்த நாளும் வந்தது. படுக்கையில் கிடந்த அவர் முன்பு, அவரது திட்டத்தின்படி அவரின் எட்டு குழந்தைகளும் வந்து நின்றனர். குழந்தைகளின் பெயர் களைக் குடும்பத்தினர் கேட்க, அவரும் சொல்லிக் கொண்டே வந்தார். அவர் எதிர்பார்த்திருந்த இறுதிக் கட்டம் வந்தது. கடைசி பிள்ளையைக் காட்டி, ''இவன் பெயர் என்ன?'' என்று கேட்டனர்.

உடனே அவரோ ''இவனா? இவன்தான் என் கடைக்குட்டியாச்சே...!'' என்று கண்களை மூடினார். உயிர் பிரிந்தது.

குறுக்கு வழியில் எதையும் அடைந்து விடலாம் என்று நினைத்தால், இந்த வியாபாரி போலவே ஏமாற நேரிடும்.

'வாழ்க்கையில் நேர் வழியிலேயே ஒன்றை அடைய வேண்டும்' என்று செயல்பட்டால் நமக்கு தினம் தினம் திருநாளே!

Comments