சூரியனும் சனியும் ஏன் பகைவர்கள்?

நவக்கிரகங்களில் சூரிய பகவானுக்குச் சமமான பலமும் முக்கியத்துவமும் வாய்ந்த மற்றொரு கிரக மூர்த்தி, சனி பகவான். சூரியன்- சாயாதேவி தம்பதியின் புத்திரனான சனி பகவான், ஈஸ்வர பட்டம் பெற்றவர் ஆதலால், சனீஸ்வரன் எனப் போற்றப்படுகிறார்.

சனீஸ்வரன், சூரியனின் புத்திரனான போதிலும் இருவருக்கும் பகை. சூரியனின் உச்ச வீடான மேஷத்தில் , சனி, நீசம்; சனியின் உச்ச வீடான துலாத்தில் சூரியன் நீசம். இப்படி தந்தை- மகன் இருவரும் முரண்பாட்டுடன் இருப்பதற்கான காரணத்தை புராணங்கள் விளக்குகின்றன.



காஸ்யப முனிவருக்கும், தட்ச ப்ரஜாபதியின் புதல்வி ஒருத்திக்கும் மகனாகப் பிறந்தவர் விவசுவான் எனப்படும் சூரியன். இவர், துவஷ்டா எனும் முனிவரின் மகளான சஞ்சிகையை மணந்தார். இவர்களுக்கு மனு மற்றும் எமதர்மன் ஆகிய மகன்கள் இருவரும், யமுனை என்ற மகளும் பிறந்தனர். மனு- ஞான வடிவினன்; எமதர்மன்- தர்ம வடிவினன்; யமுனை- நதி (நீர்) வடிவினள்.

தொடர்ந்து, சூரிய வெப்பத்தின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்த சஞ்சிகை, தனது தவ வலிமையால் தன்னைப் போலவே பெண் ஒருத்தியைத் தோற்றுவித்தாள். அவளுக்கு 'சாயா' என்று பெயரிட்டு, தன் கணவருக்குப் பணிவிடை புரியுமாறு கூறிய சஞ்சிகை, தன் தந்தை துவஷ்டாவின் ஆசிரமத்துக்குச் சென்று விட்டாள். சூரியனுக்கும் சாயாவுக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தனர். சாவர்னி மனு, பத்திரை என்று மகள்களுக்கும், சனி என்று மகனுக்கும் பெயரிட்டனர். குழந்தை களைப் பெற்றெடுத்த போதிலும், 'தான் உண்மையான மனைவி அல்ல என்பது சூரியனுக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ!' என்ற பயத்துடனேயே வாழ்ந்தாள் சாயா.

அங்கு, துவஷ்டா முனிவரின் ஆசிரமத்தில்... கணவனைப் பிரிந்து வந்த சஞ்சிகையைக் கடிந்து கொண்ட தந்தை, குதிரையாகும்படி அவளை சபித்தார். தனது தவறுக்காக வருந்தி தந்தையிடம் விமோசனம் வேண்டினாள் சஞ்சிகை. அதற்கு, ''உத்திரகுரு எனும் மலையில் 41 வருடங்கள் சூரியனை தியானித்து தவம் இருந்தால் விமோசனம் பெறுவாய்!'' என்றார் துவஷ்டா முனிவர். அதன்படி குதிரையாக மாறிய சஞ்சிகை, உத்திர குரு என்ற இடத்தை அடைந்து கடும் தவத்தைத் துவங்கினாள்.

ஆனால் சாயாதேவியோ தனக்குக் குழந்தைகள் பிறந்ததும் சஞ்சிகையின் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தத் துவங்கினாள். இதைப் பொறுத்துக் கொள்ளாத எமதர்மன், தந்தை சூரியனி டம் சென்று முறையிட்டான். 'பெற்ற குழந்தைகளிடமே ஏன் பேதம் காட்ட வேண்டும்?' என்று யோசித்த சூரிய பகவான், மனைவியை அழைத்து விளக்கம் கேட்க... அவள் சஞ்சிகை அல்ல, சாயாதேவி என்பதை அறிந்தார்.

இதனால் கோபம் கொண்ட சூரிய பகவான், ''என்னிடம் உண்மையை மறைத்ததால், உனக்கு இனி நிழருவே நிரந்தரம்!'' என்று சபித்தார்.

பிறகு, உத்திர குரு மலைப்பகுதியில் தன் மனைவி சஞ்சிகை, குதிரை உருவில் தன்னைக் குறித்து தவம் இருப்பதை அறிந்தார் சூரியன். தானும் குதிரை உருவம் ஏற்று அங்கு சென்று, சஞ்சிகைக்கு உண்மையை உணர்த்தி, அவளைத் தன்னுடன் அழைத்து வந்தார். அதன் பிறகு அவர்களுக்குப் பிறந்தவர்களே அசுவனி தேவர்கள் என்ற தேவ மருத்துவர்கள்.

இந்த நிலையில்... சூரிய பகவான், தன் தாயை சபித்ததால் கோபம் கொண்ட சனி, ''இனி, சூரியன் எனக்குப் பகை. நான், அவருக்குச் சமமான அந்தஸ்தைப் பெற்று என் தாய்க்கு உயர்வு தருவேன்!'' என்று சபதமேற்றான். அதை நிறைவேற்ற ஸ்ரீபரமேஸ்வரனை தியானித்து கோர தவம் புரியலானான். அவன் தவத்துக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. சூரியன் வெப்பமாக தகித்தான். சாயா நிழலாகக் காத்தாள். சூரிய வெப்பத்தால், அந்தக் காட்டில் வளர்ந்த எள் செடிகள் எரிந்து, பெரும் அக்னி சூழ்ந்தது. அப்போதும் தவம் கலையாத சனி, அக்னி ஜுவாலையின் சக்தியையும் தனதாக்கிக் கொண்டான் (இதையட்டியே சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுகிறோம்). 'சனி, இந்திர பதவிக்கு ஆசைப்படுகிறானோ!' என்று கருதிய இந்திரன், காக உருவில் வந்து, சனியின் கண்களைக் கொத்த முயற்சித்தான். சனி, தன் தவ வலிமையால் காகத்தை அடக்கி, அதைத் தனது வாகனமாக ஏற்றான்.

தவத்தின் முடிவில் அவன் முன் தோன்றிய ஸ்ரீபரமேஸ்வரன், வேண்டும் வரத்தைக் கேட்குமாறு அருளினார். ''கிரகங்களுள் ஒருவனாகத் திகழும் பெருமையையும், ஈஸ்வர பட்டம் பெறும் பாக்கியத்தையும் அருள வேண்டும்!'' என வேண்டினான் சனி. அதன்படியே வரம் தந்து மறைந்தார் ஈஸ்வரன். அன்று முதல், சனி பகவான் சனீஸ்வரராக, நவக்கிரகக் கோள்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

தசரதர் இயற்றிய சனி பகவான் ஸ்லோகம்

'ரோஹிணி நட்சத்திரத்தில் 12 வருட காலம் சனி பகவான் வாசம் செய்து வெளியேறினால் ரோஹிணி சகட பேதம் எனும் கடும் பஞ்சம் ஏற்படும். அதை எவராலும் தடுக்க முடியாது!' என்பதை வசிஷ்ட மகரிஷி மூலம் அறிந்த தசரத சக்ரவர்த்தி, ரோஹிணியை விட்டு சனி பகவான் வெளியேறுவதைத் தடுக்க முயன்றார்; முடியவில்லை. இறுதியில் அவர், கீழ்க்கண்ட ஸ்லோகத்தைத் தானே இயற்றி வழிபட்டு சனி பகவானின் அருளைப் பெற்று, கடும் பஞ்சம் ஏற்படுவதைத் தடுத்தாராம்.

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால் சனி தோஷம் மட்டுமல்ல; இதர கோள்களினால் ஏற்படும் கெடு பலன்களும் நீங்கி நலம் பெறலாம்.

ப்ரீதோஸ்மி தவராஜேந்திர ஸ்தோத்ரேணாநேந ஸம்ப்ரதி
அதேயம் வாவரம் துப்யம் ப்ரீதோஹம் ப்ரததாமிச
த்வயா க்ருதம் து யத் ஸ்தோத்ரம் ய:படேன் நிஹ மாநவ:
ஏகவாரம் த்விவாரம் வா பீடாம் முஞ்சாமி தஸ்யவை
ம்ருத்யுஸ்தான கதேவாபி ஜன்மஸ்தான கதேபிவா
ய: பு மான் ஸ்ரத்தயா யுக்த: சுசி: ஸ்தாத்வா ஸமாஹித:
சமீபத்ரை: சமர்ப்யர்ச்ச ப்ரதிமாம் லோஹஜாம் மம
மாஷோ தனம் தினலர் மிஸ்ரம் தத்யால்லோஹம் து தக்ஷிணாம்
க்ருஷ்ணாம் காம் மஹீஷீம் வஸ்த்ரே மாமுத்திஸ்ய த்விஜாதயே
மதிது நேது விசேஷேண ஸ்தோத்திரரேணா நேநபூஜயேத்

Comments

  1. அன்பார்ந்த ஐயா,
    வணக்கம்.
    கட்டுரை நன்றாக உள்ளது.
    சிறு திருத்தம் வேண்டுகிறேன்.
    //..சூரியனின் உச்ச வீடான சிம்மத்தில்,..///
    என்ற இடத்தில் சிம்மம் என்பதற்கு பதில் மேஷம் வரவேண்டும்.
    உடன் திருத்தம் செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    உங்களின் ஒவ்வொரு பதிவையும் நான் தவறாமல் படித்து வருகின்றேன்.
    அன்புடன்,
    பா. முருகையன், வடலூர்.

    ReplyDelete

Post a Comment