மகா சிவராத்திரி

சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் வந்தாலும், மாசிமாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினமே மகா சிவராத்திரி எனப்படுகிறது.

சிவராத்திரி பற்றி எத்தனையோ கதைகள் இருந்தாலும், முதன்முதலாக ஓர் பிரளயம் ஏற்பட்டு உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே சிவராத்திரி என்கின்றன புராணங்கள்.

உலகமே இருண்டு கிடந்த சமயத்தில் உலக உயிர்களை மீண்டெழச் செய்திட அம்பிகை இறைவனை வேண்டினாள். இரவு முழுதும் விழித்திருந்து மறுநாள் பொழுது விடிந்து சிவபெருமானை வணங்கிய அம்பிகை, உலகம் மீண்டும் தழைக்கும் என்ற வரத்தைப் பெற்றாள். அதோடு, தான் சிவ வழிபாடு செய்ததை நினைவு கூரும் விதமாக அந்த இரவை ‘சிவராத்திரி’யாக அழைத்து முறைப்படி விரதமிருந்து இரவில் நான்கு கால சிவபூஜை செய்வோர்க்கு மங்களங்கள் யாவும் தந்து நிறைவில் மேலான பதமும் தரவேண்டும் எனவும் வேண்டினாள். ஈசன் அவ்வாறே அருளினார்.

சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தனையுடன் இருக்கவேண்டும். இரவு முழுதும் கண் விழித்திருந்து நான்கு காலங்களிலும் சிவதரிசனம் அல்லது வழிபாடு செய்ய வேண்டும். கோயில்களில் தரிசிப்போர் விழித்திருந்து திருமுறைகளை ஓதுதல் மிகவும் நல்லது. மறுநாள் காலை உரிய வழிபாடுகளைச் செய்து முடித்தபின் இயன்ற அளவில் அன்னதானம் செய்துவிட்டு, அதன்பிறகே உணவு உண்ணவேண்டும்.

சூரிய உதயத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்துக்குள் இவ்வாறு சிவபூஜையை நிறைவு செய்யவேண்டும் என்பர்.

சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை முறையாக வழிபட முடியாதவர்கள், லிங்கோற்பவ காலத்தில் மட்டுமாவது விழித்திருந்து சிவதரிசனம் செய்வது நற்பலன் தரும்.

ஈசன் திருவடி, திருமுடி காண இயலாத ஜோதிவடிவாக மால், அயன் முன் தோன்றிய நேரமே லிங்கோற்பவ காலம் என்பர். இது அநேகமாக இரவு 11.30 மணிமுதல் 1 மணி வரையான காலமாகும்.

விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும். ஆனால், ‘மகா சிவராத்திரி விரதத்தைப் பற்றிப் பேசினாலோ, படித்தாலோ, கேட்டாலோ கூட போதும், அவர்களை மரணபயம் அண்டாது. அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிறையும். யாகங்கள் பல செய்வதைக் காட்டிலும் மகா சிவராத்திரி விரதம் அதிக பலன் தரும். கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் கிடைப்பதைவிட அதிகமான புண்ணிய பலன் சிவராத்திரி விரதத்தால் கிடைக்கும். இவ்வளவு ஏன், ‘‘சிவராத்திரிக்கு நிகரான விரதம் வேறு எதுவும் இல்லை..!’’ என்று பரமசிவனே பார்வதிக்குச் சொன்னதாகப் புராணங்கள் சொல்கின்றன.

தொடர்ந்து இருபத்தினான்கு வருடங்கள் இவ்விரதம் இருப்போர் மகேஸ்வர ரூபம் பெறுவர். பன்னிரண்டு வருடங்கள் கடைப்பிடிப்போர் சகல சம்பத்தும் பெறுவர். ஆறு ஆண்டுகள் தொடர்ந்து கடைப்பிடிப்பவர், எல்லா மங்களங்களையும் பெறுவர்.

மகா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டியுங்கள்..உங்கள் வாழ்வில் மகத்தான நன்மைகள் கிட்ட அந்த மகேசன் அருள்வார்.


Comments