சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 4-வதாக திகழ்வது சுவாமிமலை. கும்பகோணம்- திருவையாறு பேருந்து தடத்தில் கும்பகோணத்துக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலை அமைந்துள்ளது. கும்பகோணம்- தஞ்சாவூர் பேருந்து வழியில் திருவலஞ்சுழியில் இறங்கி, வடக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவு பயணித்தால், சுவாமிமலையை அடையலாம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரயில்பாதையில் சுவாமிமலை ரயில் நிலையத்தில் இறங்கி வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

சுவாமிமலையை புராணங்களும் இலக்கியங்களும் திருவேரகம் என்று குறிப்பிடுகின்றன. 'ஏர்' என்றால் அழகு; 'அகம்' என்றால் வீடு என்பர். அழகு மிக்க படைவீடு ஆதலால் இதற்கு திருவேரகம் (திரு+ ஏர் + அகம்) என்று பெயர் வந்ததாம். ஏர்த் தொழிலான விவசாயம் சிறக்கும் பகுதியில் உள்ள படைவீடு ஆதலால் திருவேரகம் ஆனது என்பாரும் உண்டு. அடியவர்களின் மனதை 'அருள்' எனும் ஏர் கொண்டு உழுது, 'அன்பு' எனும் பயிரை வளர்ப்பவர் முருகப் பெருமான். இவர் அருள் பாலிக்கும் தலம் ஆதலால் இந்தப் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.



தவிர... சிரகிரி, சிவகிரி, முருகப் பெருமான் இங்கு குரு அம்சமாக அருள் பாலிப்பதால் குருமலை, குரு கிரி, ஸ்வாமிநாத ஸ்வாமியின் கோயில் கட்டுமலை அமைப்புடன் அழகுற காட்சி தருவதால் சுந்தராசலம், நெல்லி (தாத்ரி) மரத்தைத் தல மரமாகப் பெற்றதால் தாத்ரிகிரி ஆகிய பெயர்களும் இந்தத் தலத்துக்கு வழங்கப்படுகிறது.

முருகப் பெருமான், குரு அம்சமாகத் திகழும் இரண்டு தலங்களில் ஒன்று சுவாமிமலை. மற்றொன்று திருச்செந்தூர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளும் ஆறு ஆதார மையங்களைக் குறிப்பன என்பர். அதாவது, திருப்பரங்குன்றம்- மூலாதாரம்; திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம், திருவாவினன்குடி (பழநி)- மணிபூரகம், திருத்தணி- விசுத்தி, பழமுதிர்ச்சோலை- ஆக்ஞை. இந்த வரிசையில் சுவாமிமலை- அனாகதம் என்பர்.



'குரோசம்' என்பது, கூப்பிடு தூரத்தில் உள்ள அளவு. இப்படி, கும்பகோணத்தில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள ஐந்து தலங்களை பஞ்ச குரோசத் தலங்கள் என்பர். அவற்றில் சுவாமிமலையும் ஒன்று. மற்றவை: திருவிடைமருதூர், திருப்பாடலவனம், தாராசுரம், திருநாகேஸ்வரம்.

சுவாமிமலைக்குத் தெற்கே காவிரியும், அதன் கிளை நதியான அரசலாறும் ஓடுகின்றன.

மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில், சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி கட்டு மலை (செயற்கையான குன்று) கோயிலைக் கொண்டிருப்பது, இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும்.

சோழ நாட்டை சிவாலயமாக பாவித்து, வழிபடும் ஒருமுறை உண்டு. அதில், திருவலஞ்சுழி மற்றும் சுவாமிமலை திருத்தலங்களை முறையே விநாயகர் மற்றும் முருகன் சந்நிதிகளாகக் கொள்வர்.

திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் திருவிடைமருதூர் தல புராணம், திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானை மையமாக வைத்து திருவலஞ்சுழி (விநாயகர் தலம்), சுவாமிமலை (முருகன் தலம்), திருச்சேய்ஞலூர் (சண்டேசர் தலம்), சீர்காழி (சட்டநாதர் தலம்), சிதம்பரம் (நட ராஜர் தலம்), திருவாவடுதுறை (நந்தி தேவர் தலம்), சூரியனார்கோயில் (நவக்கிரக தலம்), ஆலங்குடி (தட்சிணாமூர்த்தி தலம்) என்று வரிசைப்படுத்துகிறது.

சிற்ப வல்லுனர்களை தன்னகத்தே கொண்ட தலம் என்பது சுவாமிமலையின் தனிச் சிறப்பு. இங்கு வடிக்கப்படும் இறை மூர்த்தங்கள் (பஞ்சலோகம்) உலகெங்கும் உள்ள ஆலயங்களை அடைகின்றன.

செய்குன்று (செயற்கை மலை) ஆகிய சுவாமிமலையை கயிலைமலையின் கொடுமுடி என்கிறார் அருணகிரிநாதர். இதை, 'கொடுமுடியாய் வளர்ந்து புயல் நிலையாய் உயர்ந்த திருமலை' என்ற அவரது பாடல் வரிகளால் அறியலாம்.

அருணகிரிநாதரின் 38 திருப்புகழ்ப் பாடல்கள் பெற்ற தலம் சுவாமிமலை. அவரால், 'திருவேரகம்' என்றும், 'சுவாமிமலை' என்றும் தனித்தனியே குறிப்பிடப்பட்டு, திருப்புகழ் பாடல்கள் பாடப் பெற்றிருந்தாலும் இரண்டும் ஒன்றே என்பதைக் குறிக்கும் பாடல்களும் திருப்புகழில் உண்டு. உதாரணமாக, 'ஏரக வெற்பெனும் அற்புதம் மிக்க சுவாமிமலைப் பதி' என்ற பாடல் வரிகளைச் சொல்லலாம்.



சிலப்பதிகாரத்தில், 'சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்' என்று ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போற்றுகிறார் இளங்கோவடிகள்.

நக்கீரரது 'திருமுருகாற்றுப் படை'யில் 177 முதல் 190-வரையுள்ள பாடல் வரிகள் சுவாமி மலையைக் குறிப்பன.

சுவாமிமலையில் வாழ்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர், 'திருஏரக நவரத்தின மாலை' என்ற நூலை இயற்றியுள்ளார். 'ஒரு தரம் சரவணபவா...' எனத் துவங்கும் நவரத்தின மாலையின் 3-வது பாடல் பிரபலமானது.

டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர் நூலகத்தில் கிடைக்கப்பட்ட சுவாமிமலை புராணச் சுவடி, உ.வே. சாமிநாத ஐயர் இயற்றிய திருஏரக முருகன் பாமாலை, திருவேரக சண்முகர் மாலை ஆகிய நூல்கள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளது திருவேரக வெண்பா அந்தாதி, திருவேரக முருகப் பெருமான் பதிகம், திருவேரக வெற்புரை சிவகுருபரன் வகுப்பு ஆகிய நூல்கள், புலவர் அழகுமணியின் சுவாமிநாதன் வெண்பாக்கள், மற்றும் வழி நடைச் சிந்து (பக்தர் ஒருவர் எழுதியது) ஆகியவையும் இந்தத் தலம் பற்றிச் சொல்லும் நூல்கள். இவை விரைவில் அச்சிடப்பட உள்ளனவாம்.



ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போற்றும் சுவாமிநாத ஷட்பதீ ஸ்தோத்ரம் மகிமை வாய்ந்ததாகும். இதை இயற்றியவர் ராம கிருஷ்ணானந்தர் என்ற யதீந்த்ரரின் சீடரான ராமச் சந்திரன் என்ற முருக பக்தர் ஆவார். இதைப் பாராயணம் செய்து, முருகப் பெருமானை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும்.

முத்துசுவாமி தீட்சிதரும் சுவாமி மலை முருகனை போற்றியுள்ளார். இவரது, 'சுவாமிநாத பரிபாலயதுமாம்' என்ற நாட்டை ராகக் கீர்த்தனை பிரபலமானது.

இந்தத் தலத்தையும், ஸ்வாமிநாதனை யும் போற்றும் இன்னும் பல நூல்களும் உண்டு. அவை: திரிசிரபுரம் சுப்பராய பிள்ளையின் திருஏரக நான் மணிமாலை, கபிஸ்தலம் வேலையரின் திருஏரக யமக அந்தாதி, மற்றும் திருஏரக மாலை, எவ்வளூர் ராமசாமி செட்டியாரின் துதி மஞ்சரி, வித்துவான் நடேசக் கவுண்டரின் சுவாமிமலை பிள்ளைத்தமிழ், சுவாமிமலை அப்பாவு சிவாச்சார்யாரின் சுவாமிமலை தலபுராணம், சாம்பமூர்த்தி பாகவதரின் சுவாமிமலை மகாத்மியம் (வடமொழி நூல்) ஆகியன.

ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போற்றும் வேறு சில வடமொழி நூல்களும் உண்டு. அவை: ஸ்வாமிநாத புஜங்கம், ஸ்வாமிநாத பஞ்சரத்னம், ஸ்வாமிநாத கரா வலம்ப ஸ்தோத்திரம், ஸ்வாமிநாத ஸ்வாமி சுப்ரபாதம், ஸ்வாமிநாத அஷ்டோத்திரம்.

பிரம்மன், பூமாதேவி, இந்திரன், சுகபிரம்ம மகரிஷி, பிரகதீஸ்வரர் என்ற அந்தணர், யக்ஞமித்திரன், ரவிமித்திரன், கார்த்தவீரியன், வசு, சரவணன், சுமதி, சோழ மன்னன் ஒருவன் மற்றும் வரகுணபாண்டியன் ஆகியோர் இங்கு வந்து ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர்.

அருணகிரிநாதருக்கு, முருகப் பெருமான் பாத தரிசனம் தந்த திருத்தலம் இது என்பதை,

முதுமறைக்கு ளரு மா பொருட்டுள்
மொழியே யுரைத்த
தகையா தெனக்குனடி காணவைத்த
தனியேரகத்தின் முருகோனே! என்ற

பாடல் வரிகளால் அறியலாம்.

இங்கே வழிபட்ட கேகய நாட்டு மன்னன் ஒருவன் தனது பிணி நீங்கப் பெற்றதுடன், கார்த்தவீரியார்ச்சுனனை மகனாகப் பெற்றான். கார்த்தவீர்யார்ச்சுனன் இந்தக் கோயிலுக்கு ஆபர ணங்கள் பல அளித்ததுடன், திருப்பணிகளும் செய்துள்ளான்.



ஜய வருடம் வைகாசி மாதம் 8-ஆம் தேதியன்று, (20.5.1894) விழுப்புரம் நகரில் மான் சுப்ரமண்ய சாஸ்திரிகள் - மகாலட்சுமி தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக உதித்த காஞ்சி மகா பெரியவாளுக்கு தங்கள் குலதெய்வமான சுவாமிமலையில் குடிகொண்ட சுவாமிநாதனின் திருநாமத்தையே சூட்டினர் பெற்றோர்.

ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயிலின் தல புராணம்:

'படைப்புக்கு தானே காரணகர்த்தா!' என்ற கர்வத்துடன் திரிந்தார் பிரம்மன். ஒரு முறை அவர், திருக்கயிலைக்கு வந்தார். அங்கிருந்த முருகப் பெரு மானை, ஆணவம் மிகுந்த பிரம்மன் கவனிக்காது சென்றார்.

உடனே பிரம்மனை அழைத்த முருகப் பெருமான், பிரணவத்தின் பொருளைக் கூறுமாறு பிரம்மனிடம் கேட்டார். பொருள் தெரியாத பிரம்மன் திகைக்க... அவருடைய தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகன். அத்துடன் படைப்புத் தொழிலையும் தானே ஏற்றார். இறுதியில் சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரம்மனை விடுவித்ததுடன் தந்தைக்கும் பிரவணப் பொருளை உபதேசித்தார்.

முருகப் பெருமானின் உபதேசத்தைக் கேட்ட சிவனார், தம் உள்ளத்தில் உவகை பொங்கிட... தன் மகனை 'நீயே சுவாமி!' என்று கூறினாராம். இதனால் இந்தத் தலம் சுவாமிமலை எனும் பெயர் பெற்றது. முருகப் பெருமான் ஸ்வாமிநாத ஸ்வாமி மற்றும் தகப்பன் ஸ்வாமி ஆகிய திருநாமங்களுடன் இங்கு கோயில் கொண்டார்.

ஒரு முறை 'பிருகு' மகரிஷி தீவிர தவத்தில் ஆழ்ந்தார். தனது தவத்துக்குத் தடை ஏற்படுத்து பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தம் சிறப்பை இழப்பார்கள் என்று ஆணையிட்டிருந்தார்.

அவரது தவ வலிமையால் அகில உலகமும் தகித்தது. தேவர்கள் அனைவரும் சிவனாரை வேண்ட... அவர் பிருகு முனிவரின் தலையில் கை வைத்து தகிப்பை கட்டுப்படுத்தினார். இதனால் தவம் கலைந்தது. முனிவரது ஆணைப்படி சிவனார் பிரணவ மந்திரத்தை மறந்தார்.

இதன் பிறகு, பிரம்மனுடன் முருகப் பெருமான் நிகழ்த்திய அருளாடலின்போது, அவரிடமே பிரண வப் பொருள் உபதேசம் பெற்றார் ஈசன். இந்தப் பெருமை சுவாமிமலை திருத்தலத்தையே சாரும். தந்தைக்கு வலக் காதில் பிரணவப் பொருள் உப தேசித்த வேலவன், தன் தாயாகிய பராசக்தியும் அதன் அர்த்தத்தை அறிய வேண்டும் என்பதற்காக சிவனாரின் இடக் காதிலும் உபதேசம் செய்தார் என்கிறது புராணம்.

இந்தத் தலத்தின் தல விருட்சம் நெல்லி மரம். இதன் பின்னணியை சுவாரஸ்யமாக விளக்குகிறது தல புராணம். 'சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து தீப்பொறிகளாக அவதரித்த ஆறுமுகன் தன் மடியில் தவழாமல் பூமாதேவியின் மடியில் (சரவணக் காட்டில்) தவழ நேர்ந்ததே!' என்று கோபம் கொண்ட பார்வதிதேவி, பூமா தேவியை சபித்து விட்டாள். சாப விமோசனம் தேடி அலைந்த பூமாதேவி, இறுதியில் சுவாமிமலை தலத்தை அடைந்து, ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றாள். பிறகு, இங்கிருந்து பிரிய மனமின்றி நெல்லி (தாத்ரி) மரமாகி நின்று, இன்றும் தன் வழிபாட்டைத் தொடர்கிறாள் என்கிறது தல புராணம்.



தல விருட்சத்துக்கு மட்டுமின்றி இங் குள்ள தீர்த்தங்களுக்கும் தனித் தனி சிறப் புகள் உண்டு.

வஜ்ர தீர்த்தம்: கீழக் கோயிலான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் கிணறாகக் காணப்படுகிறது இந்தத் தீர்த்தம். இதில் இருந்தே ஸ்வாமி அபிஷேகத்துக்கு நீர் எடுக்கிறார்கள். இதை சுவாமி கூபம், «க்ஷத்திர கூபம் என்றும் அழைப்பர். இந்த நீரை தெளித்துக் கொண்டால் எல்லா வித நோய்களும் பிரம்மஹத்தி தோஷமும் அகலும்;

குமாரதாரை: இங்கு பாயும் காவிரியின் கிளை நதியையே குமாரதாரை என்பர். எல்லோரும் தன்னிடம் வந்து பாவத்தைக் கழுவிச் செல்ல... அதை, தான் எங்கு போய் போக்குவது என்று கலங்கிய கங்காதேவி, ஈசன் அறிவுரைப்படி இங்கு வந்து, காவிரியுடன் கலந்து குமாரக் கடவுளை வழிபட்டு புனிதம் பெற்றாளாம். இப்படி கங்கை, தாரையாக (நீர்ப் பெருக்காக) வந்து காவிரியில் கலந்ததால், இங்குள்ள காவிரிக்கு குமாரதாரை என்று பெயர்.



சரவண தீர்த்தம்: திருக்கோயிலின் வடகிழக்கில் உள்ள தீர்த்தம். ஜமதக்னி முனிவரது சாபத்தால் கரடி உருப் பெற்ற தன் தந்தை உய்வடையும் பொருட்டு... சரவணன் என்ற சிறுவனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் இது. அவன் தந்தை இதில் நீராடி, ஸ்வாமி நாதரை வழிபட்டு சுயரூபம் பெற்றாராம்.

நேத்திர தீர்த்தம் (சுவாமி தீர்த்தம்): இது, திருக்கோயிலின் கிழக்கே உள்ளது. கந்தவேளின் வேலாயுதத்தால் உருவாக்கப்பட்டது. இதன் மகிமையை 'சப்த ரிஷி வாக்கியம்' என்ற சோதிட நூல் விவரிக்கிறது.

'பார்க்கக் கூடாததை பார்க்கக் கூடாது!' என்ற பெரியோரது ஆணையை மீறிய சுமதி என்பவன் பார்வை இழந்தான். பிறகு, பரத்வாஜ முனிவரது அறிவுரைப்படி இதில் நீராடி, கண்பார்வை பெற்றான். இதனால் இதற்கு நேத்திர (கண்) தீர்த்தம் என்று பெயர். கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், ஸ்வாமிநாத ஸ்வாமி இதில் தீர்த்தவாரி கொண்டருள்கிறார்.

சுக்லபட்ச அஷ்டமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாளில் இதில் நீராடி, ஸ்வாமி நாதரை வழிபட்டால் பிரம்ம ஹத்தி பாபம் நீங்கும்.

சுக்லபட்ச அஷ்டமியும் பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் நீராடி சுவாமி தரிசனம் செய்பவர்களுக்கு கோ தோஷம் நீங்கும்.

ஆடி மாதம் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் நீராடி வழிபட்டால், பிறரது பொருளைக் கவர்ந்ததால் ஏற்படும் பாவங்கள் நீங்கும்.

ஆவணி மாதம் பூரட்டாதி, உத்திரட்டாதி கூடிய ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி, வழிபடுபவர்கள் உயர் பதவியை அடைவார்கள்.

புரட்டாசி மாதம் அஷ்டமியில் நீராடி வழிபடு பவர்கள், அன்னத்தை வீண் செய்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கப் பெறுவர்.

ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் கூடிய ஞாயிற்றுக் கிழமை அன்று இதில் நீராடி, கோயிலை(கிரி) வலம் வந்து அன்னதானம் செய்தால், தீவினைகள் நீங்கப் பெறுவர்.

கார்த்திகை மாதம் நீராடி வழிபட்டால், ஏழு பிறவி களில் செய்த பாவங்கள் அகலும்.

மார்கழி மாதம் மிருகசீரிஷ நட்சத்திரம் கூடிய நாளில் நீராடி வழிபட்டால் பெரிய பதவிகள் கிடைக்கும்.

தை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் நீராடி இறை வனை வழிபட்டால் யாகங்கள் செய்த பலன் கிடைக்கும்.

மாசி மாதம் மக நட்சத்திர நாளில் நீராடி இறைவனை வழிபடுவோருக்கு வீடுபேறு கிடைக்கும்.

பங்குனி மாதம் உத்திர நாளில் நீராடி வழிபடுபவர்களுக்கு எல்லா இன்பங்களும் கிடைக்கும்.



பிரம்ம தீர்த்தம்: பிரணவப் பொருளை அறிய விரும்பிய பிரம்மன், முருக வழிபாட்டுக்காக ஏற்படுத்திய தீர்த்தம் இது. புராணங்களில் இந்தத் தீர்த்தம் பற்றிய தகவல்கள் உள்ளன. தற்காலத்தில் இது எங்குள்ளது என்பது தெரியவில்லை. சிலர், சுவாமிமலையின் ஈசான திக்கில் உள்ள பெரமட்டான் குளத்தை, 'பிரம்ம தீர்த்தம்' என்கிறார்கள். ஆனால், இதற்கு ஆதாரங்கள் இல்லை.

சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியின் திருக்கோயில் நில மட்டத்தில் இருந்து, சுமார் 60 அடி உயரத்துடன் திகழும் கட்டுமலை (செயற்கைக் குன்று) மீது அமைந்துள்ளது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் மேலும் விஸ்தாரமாக்கப்பட்டது என்கிறார்கள்.

கட்டுமலை மீது எழுந்தருளி உள்ள ஸ்வாமி நாத ஸ்வாமியின் கோயிலை மேலக் கோயில் என்றும், மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்தை கீழக் கோயில் என்றும் அழைப்பர். ஸ்வாமிநாத ஸ்வாமி குருவாக அமர்ந்து தந்தைக்கு உபதேசித்த தலம் ஆதலால் இங்கு, முருகப் பெருமான் கட்டுமலையின் மேலும், ஈசன் அடிவாரத்திலும் குடிகொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம்.

இந்தக் கோயிலுக்கு ஏழு கோபுரங்கள் இருந்த தாகச் சொல்கிறது தலபுராணம். யாத்ரீகர்கள் சுவாமி மலையை அடைந்ததும் கோபுர வாசல் நடுவில் இருக்கும் தெய்வ பெண்கள் இருவரை வணங்கி வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.

கட்டுமலையில் ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதானத்தை அடைய 60 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 60 அதிதேவதைகள் இந்தப் படிகளில் உறைவதாக திருக்குடந்தை புராணம் குறிப்பிடுகிறது. இந்தப் படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தேங்காய் உடைத்து வழிபட்ட பிறகே படியேற வேண்டும்.

இந்தக் கோயிலுக்கு மூன்று திருவாயில்கள் உண்டு. கிழக்கு மற்றும் மேற்கு வாயில்களில் மொட் டைக் கோபுரங்கள் அணி செய்கின்றன. பிரதான ராஜ கோபுரம் தெற்கு வாயிலில் அமைந்துள்ளது. 5 நிலைகளுடன் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது இது.

மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது கோயில். கட்டுமலையின் அடிவாரத்தில் உள்ள 3-ஆம் பிராகாரத்தை வலம் வந்து 28 படிகள் ஏறிச் சென்றால் 2-ஆம் பிராகாரத்தை அடையலாம். அங்கிருந்து 32 படிகள் ஏறிச் சென்று கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரத்தை அடையலாம்.

தெற்குக் கோபுர வாயில் முகப்பு மண்டபத்தின் மேற்கே திருக்கோயில் அலுவலகம். கோபுர வாயிலில் நுழைந்தால் இடப் புறம் விசாலமான திருமண மண்டபம். இதன் மேற்புறம் திருக்கோயில் அலுவலகம் உள்ளது. திருமண மண்டபத்தைக் கடந்து சென்றால் பெரிய சுற்று மண்டபம். அதில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் சந்நிதி (கீழக் கோயில்) தனிக் கோயிலாக திகழ்கிறது.

மதுரையை ஆட்சி செய்த வரகுண பாண்டியன், பிரம்மஹத்தி தோஷத்தால் அல்லலுற்றான். நிவர்த்தி வேண்டி அவன், திருவிடைமருதூருக்குச் செல்லும் வழியில் இந்தத் தலத்தில் தங்கி இளைப்பாறினான். தினமும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடாமல் உண்பதில்லை என்று விரதம் கடைப் பிடித்த வரகுண பாண்டியன், இங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஸ்தாபித்து வழிபட்டானாம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வரும்போது, தட்சிணாமூர்த்தி, விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியர், துர்கை, சண்டீகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்களை தரிசிக்கலாம்.

இந்தக் கோயிலை தரிசித்த பிறகு (28) படிகள் ஏறி 2-ஆம் பிராகாரத்தை அடைய வேண்டும். இதன் கிழக்குச் சுற்றில் முருகப் பெருமான், சிவபெருமானுக்குப் பிரணவ உபதேசம் செய்வதை விளக்கும் அழகிய சுதைச் சிற்பம் உள்ளது. சிவ பெருமானின் மடி மீது சுவாமிநாதன் எழுந்தருளி யிருக்க... இடப் பக்கத்தில் அகத்தியர், பிரம்மன், வீர பாகு ஆகியோரும், வலப் பக்கத்தில் திருமால், நாரதர் ஆகியோரும் சிவபெருமானின் திருவடியருகில் நந்தியம் பெருமானும் உள்ளனர்.

2-ஆம் பிராகாரத்தின் தெற்கு சுற்றுச் சுவரில், கந்தரனுபூதி இடம்பெற்றுள்ளது. மேலும் அருணகிரி நாதரது 'திருஎழு கூற்றிருக்கை' பாடலையும் தேர் வடிவ சித்திரகவியாக சலவைக்கல்லில் பொறித்து வைத்துள்ளனர். இதை ரதபந்தம் என்றும் கூறுவர்.

2-ஆம் பிராகாரத்தில் இருந்து 32 படிகள் ஏறிச் சென்றால் உச்சி (முதல்) பிராகாரம். இங்கு முதலில் தல விநாயகர் தெற்கு நோக்கி அமைந்துள்ளார். கொங்கு நாட்டில் இருந்து இங்கு வந்த பிறவிக் குருடன் ஒருவன், உணவில்லாமல் பட்டினி கிடந்து இந்த விநாயகரை வழிபட்டு, பார்வை பெற்றானாம். இதனால், இவருக்கு நேத்திர விநாயகர் என்று பெயர் (நேத்திரம்- கண்).

கருவறை மூலவர் தரிசனத்துக்கு முன் மகா மண்டபம். இதன் வாயிலின் வலப் புறத்தில் இடும்பனின் உருவமிருக்க, இடப்புறத்தில் அகத்தியர், அருணகிரியார் ஆகியோர் வடிவங்கள் உள்ளன.

இந்த மண்டபத்தில் உள்ள கருங்கல் தூண் மற்றும் சிற்ப வேலைப்பாடுகளும், வளைவான கொடுங்கைகளும், கல்லால் ஆன தொங்கும் தாமரை மொட்டும், யாளி உருவங்களும் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. மகா மண்டபத்தில் தங்கக் கொடி மரத்தையும் தரிசிக்கலாம்.

மற்ற படைவீடுகளில் இல்லாத, சுவாமி மலையின் தனி சிறப்பம்சம்... இங்குள்ள பாகுலேய சுப்பிரமணியர் திருமேனி! மகா மண்டபத்தின் வடக்குச் சுவர் பக்கம் தெற்கு நோக்கி காட்சி தருகிறார் இவர். இரண்டு திருக்கரங்களை நீட்டியாவாறும், மேலும் இரு கரங்களை மேல் நோக்கி திகழ... நடராஜப் பெருமானைப் போன்று காட்சி தரும் இவரை சபாபதி என்றும் அழைப்பர். தெய்வானை யுடன் திகழும் இவர், மார்கழி மாதம் திருவாதிரை உற்சவத்தின்போது மட்டுமே வீதியுலா வருகிறார்.

உச்சி பிராகாரமாகிய முதல் பிராகாரத்தில் மகா மண்டபம் தவிர... வலத்தின்போது, பாலசுப்பிரமணியர், திருமகள், கலைமகள், அருணகிரிநாதர், ஸ்கந்த சண்டீசர், விசாலாட்சி- விஸ்வநாதர், நடராஜர், சண்முகர், பைரவர், சாஸ்தா, சூரியன், நவவீரர்கள், அகத்தியர், இடும்பன், கார்த்தவீரியன் முதலானோரையும் உற்சவ விக்கிரகங்களையும் தரிசிக்கலாம். இந்த ஆலயத்தில் வள்ளி- தெய்வானை தேவியருக்கு தனிச் சந்நிதிகள் இல்லை.

இந்த பிராகாரத்தில், தண்டபாணி மூர்த்தியின் விக்கிரகம் ஒன்றையும் தரிசிக்கலாம். இவரின் மேனியில் இடது பாகம் பின்னம் அடைந்துள்ளது. அந்நியர்கள் படையெடுப்பின்போது, ஸ்வாமிநாத ஸ்வாமி கோயிலைப் பாதுகாக்கும் பொருட்டு, கோயிலை மறைத்து பெரும் சுவர் ஒன்று எழுப்பி சிறிய சந்நிதி ஒன்றில், மயில் வாகனத்துடன் கூடிய இந்த தண்டபாணியை பிரதிஷ்டை செய்தார்கள்.

படையெடுத்து வந்த அந்நியர்கள் இதுதான் கோயில் என்று எண்ணி இதை மட்டுமே தாக்கினர். இதனால் தண்டபாணியின் திருமேனி பின்னம் அடைந்தது. பின்னம் அடைந்த உருவத்தை கோயிலில் வைக்கக் கூடாது என்றாலும், அழகான இந்த மூர்த்தியை அகற்ற விருப்பமில்லாமல் இந்தக் கோயிலிலேயே இடம்பெறச் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.



ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. கருவறையில், அகரம்- உகரம்- மகரம்- நாதம்- பிந்து... என ஐவகையான ஓங்காரத்தின் உருவினனாக, மெய்ஞான குருவாக அருள்பாலிக்கிறார் ஸ்வாமிநாத ஸ்வாமி. இவர், தம் இடது திருக்கரத்தை இடுப்பில் அமர்த்தி, வலக் கரத்தில்- திருத்தண்டம் (தண்டாயுதம்), தலையில்- ஊர்த்துவ சிகாமுடி (கிரீடம்), திருமார்பில்- முப்புரி நூல் மற்றும் ருத்திராட்சம் ஆகியன திகழ (சுமார் 6 அடி உயரத்துடன்) காட்சி தருகிறார்.

ஸ்வாமிநாத ஸ்வாமியை உன்னிப்பாகக் கவனித்தால், அவர் எழுந்தருளியுள்ள பீடம், சிவ லிங்கத்தின் ஆவுடையாராகவும் ஸ்வாமிநாதர், லிங்கத்தின் பாணமாகவும் காட்சியளிப்பதைக் காணலாம். இது, 'ஈசனே முருகன்; முருகனே ஈசன்!' என்ற தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

செவ்வாய்க் கிழமைகளில் மாலை வேளையில், நான்கு சரங்கள் கொண்ட சகஸ்ரார மாலை, வைரத்தா லான ஷட்கோணப் பதக்கம் முதலியனவும், வியாழக் கிழமைகளில் தங்கக் கவசம், வைர வேல் மற்றும் பல அணிகலன்களும் அணிவிக்கப் பெற்று காட்சி தரும் ஸ்வாமியைக் காண கண்கோடி வேண்டும்!

ஆபரண அலங்காரத்தின் போது, ராஜ கோலத் தினராகவும், சந்தன அபிஷேகத்தின்போது பால குமாரனாகவும், விபூதி அபிஷேகத்தின்போது முதியவர் கோலத்திலும் காட்சி தருகிறார் ஸ்வாமிநாதர்.

பழநியில் பால பருவத்தினனாகக் காட்சி தரும் முருகப் பெருமான் இந்தத் தலத்தில் இளங்காளை (வாலிப) பருவத்தினனாகக் காட்சி தருவதாக ஐதீகம்.

இவருக்கு ஸ்வாமிநாதன், தகப்பன்சாமி, சுவாமி, குருநாதன், புத்ரக குருக்கள் ஆகிய திருநாமங்களும் உண்டு. வடமொழியில் ஞானஸ்கந்தன் என்பர். இவரின் கொடி- சேவற்கொடி; ஆயுதம்- வேல்; மாலை- நீபம்; வாகனம் யானை!

அரிகேசன் எனும் அரக்கனை அழிக்க எண்ணிய இந்திரன், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்வாமிநாதரை வழிபட்டு வல்லமை பெற்று அசுரனை அழித்தான். இதற்கு நன்றிக்கடனாக ஐராவதம் எனும் வெள்ளை யானையை ஸ்வாமிநாதருக்கு வாகனமாக அளித் தான். எனவே, இந்தத் தலத்தில், கருவறைக்கு முன் மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் காட்சி தருகிறது.



மூலவரை பூஜிக்கும்போது, 'நமோ குமாராய நம' என்று மந்திரம் உச்சாடனம் செய்யப்படுகிறது. இந்த மந்திரத்தை முதன் முதலில் ஓதி, முருகனை குருவாக ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான். இதை

'நாதாகுமரா நம' என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா! குறமின் பதசேகரனே' என்ற

அருணகிரி நாதரது கந்தரனுபூதி பாடல், விளக்குகிறது.

உற்சவர் திருநாமம் சந்திரசேகரர். இவரின் மற்றொரு பெயர் சேனாபதி. திருவிழாவின்போது 10-ஆம் நாளன்று தெய்வானையுடன் தீர்த்தம் தர எழுந்தருள்கிறார். இந்த மூர்த்தியை 'சேனாபதி' என்றும் அழைப்பர். இங்குள்ள ஆறுமுகப் பெருமான் தேவியர் இருவருடன் காட்சி தருகிறார்.

வடக்குப் பிராகாரத்தில் உள்ள பத்தி மண்டபத்தில் மாரியம்மன், பிடாரி ஐயனார், வள்ளி நாயகி, வேடன் ரூபத்தில் முருகன், நம்பிராஜன், அவன் மனைவி நங்கை, நாரதன், விநாயகர், வீரபாகு முதலிய உற்சவ மூர்த்திகள் உள்ளனர். வேடன் ரூப முருகன், வள்ளி, நம்பிராஜன் மற்றும் நாரதர் ஆகிய மூர்த்திகள் வள்ளித் திருமண விழாவின்போது மட்டுமே எழுந்தருளுவர்.

பள்ளியறையில் இச்சை, கிரியை சக்திகள் தேவியர்களாக உள்ளனர்.

சிவபெருமான் 'ஞானோபதேசம்' பெற்ற திருத் தலம் ஆதலால் இங்கு 'யக்ஞோபவீதம்' நடத்துவது சிறப்பு என்கிறார்கள்.

ஸ்வாமிநாத ஸ்வாமி புத்திர பாக்கியம் அருள்பவர் ஆதலால், இங்கு வந்து திருமணம் செய்து கொள்ளும் பக்தர்கள் ஏராளம்!

திருவலஞ்சுழி பிள்ளையாரை வழிபட்ட பிறகே சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட வேண்டும் என்பது மரபு.

தமிழகத்தின் சுவாமிமலை திருத்தலத்தைப் போற்றும் விதம் புதுடில்லியில் உத்தர சுவாமிமலையும், அமெரிக்காவில் ஒரு ஸ்வாமிநாதன் ஆலயமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்தில் பிரம்மா வழிபட்ட சிவலிங்கம் முன்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரணவப் பொருள் உபதேசம் பெற வேண்டி இங்கு வந்த பிரம்மன் ஸ்தாபித்த லிங்கம் அது என்கிறார்கள்.

இங்கு காரணாகமம் முறைப்படி யும் குமாரதந்திர முறைப்படியும் பூஜைகள் நடைபெறுகின்றன. ஆதி சைவ மரபினரே பூஜைகள் செய்து வருகிறார்கள்.

பூஜைகள் விவரம்: பால் நிவேதனம்; விசுவரூப தரிசனம்- காலை 5:30 மணி; உஷத் காலம் - காலை 7:00 மணி; கால சந்தி- 9:00 மணி; உச்சிக் காலம் - நண்பகல் 12:00 மணி; சந்தியா காலம்- மாலை 5:30 மணி; 2-ஆம் கால பூஜை- இரவு 7:00 மணி; அர்த்த ஜாம பூஜை- இரவு 9:00 மணி

ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயிலின் திருவிழாக்கள்: சித்திரை மாதம் - பிரம்மோற்சவம் (10 நாட்கள்), வைகாசி - வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி- பவித்ரோற்சவம் (10 நாட்கள்), புரட்டாசி- நவராத்திரி விழா (10 நாட்கள்), ஐப்பசி - கந்த சஷ்டிப் பெருவிழா (10 நாட்கள்), கார்த்திகை- திருக்கார்த்திகைப் பெருவிழா (10 நாட்கள்), மார்கழி- திருவாதிரைத் திருநாள்; தனுர்மாத பூஜை (10 நாட்கள்) தை- தைப்பூசப் பெருவிழா, பங்குனி- வள்ளிதேவி திருக்கல்யாண திருவிழா.

இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் துவஜாரோஹணத்துடன் (கொடியேற்றத்துடன்) நடைபெறுகின்றன.

இங்கு, வருடம்தோறும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) நடைபெறும் திருப்படி திருவிழாவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவின்போது, ஆன்மிக அடியார்கள் இங்கு ஆன்மிகக் கூட்டங்கள் நிகழ்த்தி விழாவை சிறப்பிக்கிறார்கள்.

பிரார்த்தனையாக நாள்தோறும் காவடி கள், பாற்குடங்கள் எடுத்து வந்து ஸ்வாமிநாத ஸ்வாமியை அபிஷேகித்து வழிபடுகிறார்கள். நேர்த்திக் கடன் செய்தவர்கள் உரிய கட்டணம் கட்டி தங்கத் தேர் இழுப்பதும் உண்டு.

இந்தக் கோயிலில், அரசு ஆணைப்படி 'அன்பு இல்லம்' ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கு உணவு- உடை- இருப்பிட வசதிகள் இலவசமாகத் தருவதுடன், அவர்கள் கல்வி பயிலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவிர, சுவாமி மலையின் தெருக்களைப் பராமரித்தல், மின் வசதி செய்தல் ஆகிய பணிகளிலும் திருக்கோயிலின் பங்கு, போற்றுதலுக்கு உரியதாகும்.

ஸ்வாமிநாத ஸ்வாமியின் திருவருள் பெற்ற அடியார்கள் ஏராளம். யக்ஞமித்திரன் என்பவன் தன் மகன் பேச்சுத் திறன் பெறும் பொருட்டு, சிவனாரின் ஆணைப்படி இங்கு வந்து, தினமும் குமாரதாரையில் நீராடி (தொடர்ந்து 12 ஆண்டுகள்) முருகப் பெருமானை வழிபட்டானாம். இதன் பலனாக அவனின் மகன் பேச்சாற்றலுடன் ஞானமும் கைவரப் பெற்று சிறந்த கல்விமானாகத் திகழ்ந்தானாம்.

பிரகதகலர் (பிரகத்கலர் என்றும் கூறுவர்) என்பவர் பெரும் ஞானி. ஒரு முறை இவர், இறைவனை நேரில் கண்டு தரிசிக்கப் போவதாகக் கூறினார். 'இது இயலாத காரியம்' என்று எல்லோரும் பரிகாசம் செய்தனர். ஆனால், பிரகதகலர் கலங்கவில்லை.

தனது நோக்கம் நிறைவேறும் பொருட்டு, தல யாத்திரை புறப்பட்டார். பல தலங்களுக்குச் சென்று தரிசித்தும் எண்ணம் ஈடேறாமல் போகவே, சுவாமிமலை திருத்தலத்துக்குப் போய்ப் பார்ப்போம் எனப் புறப்பட்டார். இந்த ஊரின் எல்லைக்குள் வந்ததும் அவருக்கு ஒரு புது உணர்வு ஏற்பட்டு முருகப் பெருமான் மயில் வாகனத்தில் புறக்கண்களுக்குக் காட்சியளிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். அதனால், அவர் இங்கு வஜ்ர தீர்த்தக் கரையிலேயே மடம் அமைத்து தங்கி விட்டார்.

ஒரு நாள் இவரைச் சந்தித்த அந்தணர் ஒருவர், தன்னைப் பற்றியுள்ள பிரமஹத்தி தோஷம் நீங்க வழி கூறுமாறு வேண்டினார். அவரிடம், ''முற்பிறவி களில் செய்த புண்ணியத்தால், இந்தத் தலத்துக்கு வந்துள்ளீர். இங்கே உமக்கு நன்மையே ஏற்படும்!'' என்ற பிரகதகலர், இந்தத் தலம் பற்றிய புராணச் சம்பவம் ஒன்றையும் விளக்கினார்: ''ஆடைகளைத் திருடி விற்றுப் பிழைக்கும் கொடியவன் ஒருவன், தனது பாவத்தின் காரணமாக வெண்குஷ்ட நோயால் அவதியுற்றான். ஒரு நாள் உணவு கிடைக்காமல் அலைந்து வருந்தியவன் சுவாமி மலையை அடைந்தான். இரவில் ஒரு வீட்டுக்குள் புகுந்தவன், அங்கிருந்த ஆடை- ஆபரணங்களைத் திருட ஆரம்பித்தான். ஆனால், சத்தம் கேட்டு விழித்த அந்த வீட்டுக்காரர்கள் அவனை விரட்ட ஆரம்பித்தனர். தப்பியோடிய திருடன், இங்குள்ள வஜ்ர தீர்த்தம் அருகில் வரும்போது கால்தவறி உள்ளே விழுந்து விட்டான். இரவு முழுவதும் அந்தக் கிணற்றுக்குள்ளேயே இருக்க நேரிட்டது.

விடிந்ததும் ஊர்க்காரர்கள் அவனை வெளியே எடுத்தனர். அப்போது, வெண் குஷ்டம் நீங்கி அவன் உடல் பொலிவுடன் திகழ்ந்தது. அவன் மகிழ்ந்தான். வஜ்ர தீர்த்தத்தின் பெருமையைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினர். தாங்களும் வஜ்ர தீர்த்தத்தில் மூழ்கி ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நலம் பெறலாம்!'' என்றார்.

அதன்படி வஜ்ர தீர்த்தத்தில் நீராடி ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றார் அந்தணர்.

மிகச் சிறந்த சங்கீத மேதை துரைமாரியப்ப சுவாமிகள். இவர் ஒரு முறை, தனக்கு பாட்டுப் புலமை வாய்க்கவில்லையே என்று வருந்தி, ஸ்வாமிநாத ஸ்வாமிடம் முறையிட்டதுடன், சந்நிதியிலேயே தனது நாவை அறுத்துக் கொண்டாராம். பிறகு, முருகப் பெருமானின் அருளால் துரை மாரியப்ப சுவாமிகளின் அறுபட்ட நாக்கு வளர்ந்ததுடன், அவர் கவிபாடும் திறனும் பெற்றாராம்!

இந்த ஆலய ஓதுவராக இருந்தவர் ஏ.என். பஞ்சநாத தேசிகர். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே நேரத்தில் ப்ளு, நிமோனியா ஜுரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார் இவர்.

மருத்துவர்கள் கைவிட்டு விட்ட நிலையில், ஓர் இரவில் கோயிலில் தங்கி நிந்தா ஸ்துதி செய்ய ஆரம்பித்ததார். சற்று நேரத்தில் தூக்கம் மேலிட உறக்கத்தில் ஆழ்ந்தார் ஓதுவார்.

அதிகாலையில், எவரோ ஒருவர் தன் முதுகில் மூன்று முறை தடவுவதாக உணர்ந்த ஓதுவார் கண் விழித்தார். அப்போது அழகிய குழந்தை ஒன்று அங்கிருந்து விலகி ஓடுவதைக் கண்டு மெய்சிலிர்த்தார்!

அத்துடன் அவரது நோய் முற்றிலும் நீங்கி நலம் அடைந்தாராம். (இந்தத் தகவலை சுவாமிமலை தேவஸ்தானம் வெளியிட்டிருக்கும் தல வரலாறு புத்த கத்தில் இருந்து அறிய முடிகிறது)

வள்ளிமலை சுவாமிகள் ஒரு முறை, 'அருணகிரிநாதர் முக்தி பெற்ற நாள் எது?' என்று ஸ்வாமிநாத ஸ்வாமியை வேண்ட... 'கார்த்திகை மாதம் மூல நட்சத்திரம்!' என்று அசரீரியாக பதிலளித்தாராம் ஸ்வாமிநாத ஸ்வாமி!

ஸ்வாமிநாத ஸ்வாமியை வணிகச் செட்டியாராக பாவித்து, இரு பொருள்படும்படி பாடல் ஒன்றை இயற்றியுள்ளார் சொக்கநாதப் புலவர். அது:

வெங்காயம் சுக்கானால், வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே!

இதற்கு, 'அஜீரணத்தைப் போக்க ரசம் சாப்பிட்டு குணம் அடையலாம்!' என்றும், 'உடம்பு தளரும்போது நம் ஆன்மாவுக்கு மோட்சத்தைத் தரவல்லது, ஸ்வாமிநாதரின் பேரருள் மட்டுமே!' என்றும் இரு வேறு பொருள் கொள்ளலாம்!

Comments

Post a Comment