நீயும் ஓர் அர்ஜுனன்தான்! ........

அர்ஜுனன் வேண்டிக் கொண்ட தற்கு இணங்க, இயற்கை முதலான தனது படைப்புகள் மற்றும் அவற்றை இயக்கும் ஆத்மாவா கிய ஆதார சக்தி ஆகியவை குறித்து தொடர்ந்து விளக்கினார் கிருஷ்ண பரமாத்மா.

உபத்ரஷ்டானுமந்தா ச பர்த்தா போக்தாமஹேச்வர:
பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹே(அ)ஸ்மின்புருஷ: ப்ர:



''நமக்குள், தெய்வீகமான- நமது அனுபவங்களுக்கு ஆதாரமான வேறு ஒருவரும் வசிக்கிறார். அவரே இறைவன்; நம் உடல் மற்றும் உயிருக்கு உரிமையாளன். நம் உடலின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுபவராகவும், அனுமதிப்பவராகவும் திகழும் அவரே, பரமாத்மாவாக அறியப்படுகிறார். புரிந்ததா அர்ஜுனா?'' என்கிறார் கிருஷ்ணர்.

ஆம், உலகில் நாம் காணும் அசையும்- அசையாத பொருட்கள் அனைத்தும் இயற்கையே! இந்த இயற்கையால் விளையும் செயல்கள் யாவற்றுக்கும் ஆதார சக்தியே காரணம். உயிருள்ளவை- உயிர் அற்றவை எதுவாக இருப்பினும் ஆதார சக்தி இல்லாமல், தன்னிச்சையாக இயங்க முடியாது. படைப்புகளும் அவற்றின் செயல்பாடுகளும் அவனாலேயே உருவாக்கப்படுகின்றன.

மண்ணில் ஊன்றப்பட்ட தாவரங்களில் இருந்து எத்தனை விதமான சுவைகள் வெளிவருகின்றன! தர்ப்பூசணி மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் இனிப்பு; பாகற்காயின் கசப்பு; எலுமிச்சையின் புளிப்பு; மல்லிகையின் நறுமணம்... இவையெல்லாம் எங்கே ஒளிந் திருந்தன, மண்ணுக்குள்ளா? அப்படியெனில், சிறிது மண்ணைச் சுவைத்துப் பார்ப்போம். சுவைக்கிறதா? இல்லை! மண்ணுக்கு சுவை ஏதும் கிடையாது!

சரி, இளநீரை எடுத்துக் கொள்ளுங்கள்... அதன் தித்திப்புக்குக் காரணம் என்ன? தென்னையின் வேரில் ஊற்றப்படும் தண்ணீரா? இல்லை, தண்ணீருக்கும் சுவை ஏதும் கிடையாது!

பிறகெப்படி, இந்த அற்புதங்கள் நிகழ்கின்றன? விதை, முளைத்து செடி-கொடி- விருட்சங் களாகக் கிளைப்பதும்; பல்சுவை கனிகளாக காய்ப்பதும்... இவையெல்லாம் யார் செய்த மாயாஜாலம்?!

இயக்குபவன் ஒருவன் இல்லாவிட்டால், இவையெல்லாம் சாத்தியமா? இறைவனே, ஒவ்வொரு உயிராகவும் தோன்றுகிறான். அவனே, நமக்குள் இருந்து நம்மை இயக்கு கிறான். ஆகவே, 'உலகில் எதுவும் நம்மால் நடைபெற்றதில்லை. இனியும் நடைபெறப் போவதில்லை!' என்ற உண்மையை புரிந்து கொண்டால், நமக்கு கர்வம் வராது.

நாம் அழகாக இருக்கிறோம்... அதிகம் படித்திருக் கிறோம்... நிறைய சொத்துகள் வைத்திருக்கிறோம்... என்றால், இவை யாவும் நமக்குரியவை அல்ல; நம் ஆத்மாவைச் சுற்றி அணிவிக்கப்பட்ட மாலைகளே! இவை, சில தினங்களுக்குள் வாடி-வதங்கி- உதிர்ந்து போகலாம். ஆனால், இவற்றைச் சூடிக் கொண்டிருக் கும் ஆத்மா மட்டும் அழிவில்லாதது.

மாவு அரைக்கும் கிரைண்டர், வாஷிங் மெஷின், ஃபிரிஜ்... என இயந்திரங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு அழகாக இயங்கி, தனக்குரிய வேலைகளைச் செவ் வனே செய்கின்றன? ஆனால், அதற்காக அவை பெருமை பீற்றிக் கொள்வதில்லை; அவற்றை வைத்திருக்கும் நாம்தான் பிதற்றிக் கொள்கிறோம்!

இப்படி, சாதாரண மெஷின்கள் வைத்திருந்தாலே பெருமைப்படும் நாம், 'உடல்' கிடைத்தால், சும்மா இருப்போமா? 'ஊனுடம்பு ஆலயம்' என்பதை உணர்ந்து செயல்படாமல், வீணாக அலட்டிக் கொள்கிறோம். உடல் மட்டுமின்றி, உள்ளத்திலும் தேவையில்லாத விஷயங்களைப் போட்டுக் குழப்பி, அதை அமைதி இழக்கச் செய்கிறோம்!

இதைத் தவிர்த்து, மனதில் உள்ள விஷயங்களை ஒட்டடை அடித்து வெளியேற்றிவிட வேண்டும். மனித வாழ்வில்- சிறு சிறு சறுக்கல்கள்- தோல்விகள், அவமானம், இழப்புகள்... எல்லாமும் வரும்தான். இவற்றை யதார்த்தமாக ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்.

வங்கிகள் அனுப்பும் ஜப்தி கடிதம், தேர்வில் தோல்வி, எதிர்பாராத டிரான்ஸ்ஃபர்- இவற்றுள் ஏதாவது ஒன்று நமது சந்தோஷத்தைக் குலைக்கப் போதுமானது. ஆனால், அதற்காக நாம் கலங்கக் கூடாது. பிரச்னையாகக் கருதும் ஒரு விஷயம், நம் மனதுக்குள் அமர்ந்து நம்மை அசைக்கத் துவங்கும்போதே நாம் உஷாராகி அவற்றை வெளியேற்றி விடவேண்டும். சாப்பிடும்போது உணவில் தென்படும் சிறு கற்களைப் போல, மனக் குப்பைகளையும் எடுத்துப் போட்டு விட்டு, கடமையைத் தொடர வேண்டும்.

நம்மில் பலரும் ஆசைகளைச் சுமந்து கொண்டு திரிகிறோம். அதனால் பிரச்னைகள் நம்மைத் துரத்துகின்றன. ஆசைகளை விட்டொழியுங்கள்; பிரச்னைகளும் விலகும். ஆசையைப் போன்றதே பந்த- பாசங்களும்!

ஒரு முறை, கங்கையில் பெரும் வெள்ளப்பெருக்கு. அதன் கரையில் இருந்த கட்டடத்தில் குரங்கு ஒன்று தன் குட்டியுடன் வசித்து வந்தது. வெள்ளம், அந்தக் கட்டடத்தையும் சூழ்ந்தது. இதைக் கண்ட குரங்கு, தன் குட்டியை சுமந்தபடி மேல் தளத்துக்கு சென்றது. வெள்ளத்தின் நீர் மட்டம் உயர உயர... குரங்கும் குட்டியுடன் கட்டடத்தின் ஒவ்வொரு தளமாக ஏறி, கட்டடத்தின் உச்சிக்கே சென்று விட்டது. அங்கு பயத்துடன் நடுங்கியபடி இருந்த குரங்கு, இடை

யிடையே தன் குட்டியை வருடிக் கொடுத்து முத்தம் கொடுக்கவும் செய்தது. இறுதியில் கட்டடத்தின் மேல் விளிம்பு வரை நீர் சூழ்ந்து கொள்ள... குட்டியை அந்தத் தளத்திலேயே விட்டு விட்ட குரங்கு, அங்கிருந்த இன்னும் உயரமான ஒரு மேடையில் ஏறி, தான் மட்டும் தப்பிக்க முயற்சித்தது!

நாமும் இப்படித்தான். பந்தம்- பாசம் என்று நமக்குள் தடைகளைப் போட்டுக் கொண்டு அதிலேயே உழல்வோம்; மிக நெருக்கடியான வேளையில், 'நானே- எனது நலனே முக்கியம்!' என்று அனைத்தையும் ஒதுக்கி விடுவோம். நமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும்போதும், வாழ்வா- சாவா போராட்டத்தின்போதும் தன்னலமே பெரிது என எண்ணுகிறோம். இதைத் தவிர்த்து, சகல உயிர்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும். 'சகலமும் அவனே!' என்றுணர்ந்து சஞ்சலமில்லாத பக்தியை சமர்ப்பிக்க வேண்டும்.

''அர்ஜுனா, என்னில் கொஞ்சமும் குறையாத பக்தி உனக்குத் தேவை. மனதை அலைபாய விடாது, 'நீயே சரணம்!' என்று என்னை இறுகப் பற்றிக் கொள்ளும் பக்தி வேண்டும்!'' என்கிறார் கிருஷ்ணர்.

நாம், காலையில் கண் விழித்தது முதல் இரவு தூங் கச் செல்வது வரை, இறைவனின் துதியைப் பாட வேண்டும். உண்ணும்போதும் உறங்கும் போதும், எப்போதும் அவன் நம்மோடு இருப்பதாக நினைக்க வேண்டும். இறைவன் நம்முடன் இருக்கும்போது பயமோ, கோபமோ, வெறுப்போ வராது.

கொஞ்சம் யோசித்தால், நாம் எவ்வளவு தவறுகள் செய்கிறோம் என்பது புரியும்.

மரம், செடி- கொடி, மலர்கள் என எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான். அவன் வடிவமே இல்லாதவன். ஆனால், இதை உணர்ந்து கொள்ளாமல் நாம் என்னவெல்லாம் செய்கிறோம்!

பட்டப்பெயரிட்டு ஒருவரை கேலி செய்வது போல, பெயரே இல்லாத இறைவனை, எத்தனையோ பெயர்களால் அழைக்கிறோம்... மலரென்றும் கனியென்றும் அவனையே பறித்து அவனுக்கே சமர்ப்பிக்கிறோம்... சிறு பிள்ளைகள் படம் வரை வதைப் போல, உருவமே இல்லாத இறைவனுக்கு எண்ணற்ற உருவங்கள் அமைக்கிறோம்... அவன், நம்முள் இருப்பதை அறியாமல், அவனைத் தேடி கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறோம்... இப்போது சொல்லுங்கள்! நாம் செய்தவை, செய்து கொண்டிருப் பவை எல்லாம் எவ்வளவு பெரிய தவறுகள்?

அதற்காக பூஜை- புனஸ்காரம், கோயில்... இதெல்லாம் தவறு என்று சொல்லவில்லை. இவை, கடவுளை நாம் கண்டு அடைவதற்கான வழிகாட்டிகள். வழிகாட்டி கிடைத்ததும் பயணத்தை விட்டுவிட முடியுமா? நாம், கடவுளை அடைவதற்கான பயணத்தில் இன்னும் இன்னும் முன்னேற வேண்டும் என்கிறேன்.

அவன் யாதுமாகி நிற்பவன். 'இது முதல்... இது வரை...' என்ற வரையறைக்கு அப்பாற்பட்டது பிரம் மம். அறிவும் அந்த அறிவைக் கொண்டு நாம் தேடிக் கண்டடைய வேண்டிய அறிவும் இறைவனே!

அந்த பள்ளியில் சிறுவர்கள் இருவர் நண்பர்களாக இருந்தனர். அவர் களுக்கு, கோலி விளையாடுவதில் விருப்பம் அதிகம். எப்போதும் சேர்ந்தே விளையாடுவார்கள்.

திடீரென ஒரு நாள், ஒருவனின் குடும்பம் வெளியூரில் குடியேற நேர்ந்தது. 'பெரியவன் ஆனதும் திரு மணத்தின்போது அவசியம் கலந்து கொள்ள வேண்டும்!' என்று கூறி நண்பர்கள் இருவரும் பிரிந்தனர்.

காலங்கள் கடந்தன. உள்ளூர்க்கார னுக்கு நண்பனிடம் இருந்து திருமண அழைப்பிதழ் வந்தது. மிகவும் மகிழ்ந்தான். மணமகனான தன் நண்பனுக்கு எதை பரிசளிக்கலாம் என்று யோசித் தவன், 'நண்பனுக்கு மிகவும் இஷ்டமானது கோலிக் குண்டுதான்!' என்று முடிவு செய்து, ஒரு பெட்டி நிறைய கோலி குண்டுகளை வாங்கிச் சென்று திருமணப் பரிசளித்தானாம்! என்ன வேடிக்கை பாருங்கள்... சிறு வயது விஷயங்களும் விளையாட்டுகளும் அந்த வயதில் சரி. வளர்ந்த பிறகும் அதே மனநிலையில்- உணர்வில் இருப்பது சரியா? வயது ஏற ஏற நமது விருப்பங்களும் தேவைகளும் மாறிக்கொண்டே வருகின்றன. அதுபோல வயதுக்கேற்ற பக்குவத்தையும் நாம் வளர்த்துக் கொள்வதே நல்லது.

இதைப் போன்றே பக்தி நிலையும். அதில், நமது முன் னேற்றத்துக்குத் தகுந்த மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். யாதுமாகி நிற்பவன் இறைவன் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நாம், பகலில் சூரிய ஒளி மூலம் பொருட்களைக் காண்கிறோம். இரவில், சந்திரன் மற்றும் மின் னொளி வாயிலாகக் காண்கிறோம். எதுவுமே இல்லாவிட்டாலும் மனதுக்குள் கற்பனை செய்து காண்கிறோம். ஆம், உள்ளுணர்வு மற்றும் புத்தியைக் கொண்டு நம்மால் அனைத்து விஷயங்களையும் உணர முடியும். அப்படி, கடவுளையும் நமக்குள்ளே தேடினால், நிச்சயம் அவர் நமக்கு அகப்படுவார்!

Comments