திருவேற்காடு

மனதால் பணிந்து வணங்கினால், வணங்கு பவரின் பாவத்தையெல்லாம் போக்குகிற தலம் எங்கே இருக்கிறது? மலரும் சந்தன மும் இட்டு வழிபட, வழிபடுபவர்க்கு எல்லா வகை செல்வத்தையும் தருகிற தலம் எது?

சென்னி பணிந்தவரது புகழை, திக்கெட்டும் பரவச் செய்யும் தலம் எது?

தீவினைகளைப் போக்கும் தலம் எது?

வளங்களை வாரித் தரும் தலம் எது?

எல்லா நன்மையும் தருகிற அந்தத் திருத்தலம், பாலி நதிக்கரையில் உள்ள பெருந்தலமான திருவேற்காடு.

'மன்னிப் பெருகும் பெருந்தொண்டை
வளநாடு அதனில் வயல்பரப்பும்
நன் நித்தில வெண்திரைப் பாலி
நதியின் வடபால் நலங்கொள் பதி
அன்னப் பெடைகள் குடைவாவி
அலர்புக்காட அரங்கினிடை
மின்னுக் கொடிகள் துகில் கொடிகள்
விழவில் காடு வேற்காடு'

என்று சேக்கிழாரால் பெரிய புராணத்தில் திருவேற்காடு போற்றப் படுகிறது. திருவேற்காடு அமர்ந்த வேற்காட்டீசரைத் தொழுவதற்குச் செல்வோம், வாருங்கள்!



சென்னைக்கு மிக அருகில் உள்ளஇந்தத் தலத்துக்கு சென்னையின் முக்கியப் பகுதிகள் மற்றும் பூவிருந்தவல்லி, ஆவடிஆகிய இடங்களில் இருந்து நிறைய பேருந்துகள் உண்டு.

பூவிருந்தவல்லி - ஆவடி சாலையில் சென்றால், காடுவெட்டி ஊராட்சியை அடுத்து, காடுவெட்டி ஆற்றைக் கடந்து திருக்கோயிலை அடையலாம். சமீப காலங்களாக, இங்குள்ள கருமாரியம்மன் கோயில் வெகு பிரசித்தம். கருமாரியம்மன் கோயில் மற்றும் வேற்காடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து நேர் மேற்காக, சுமார் 1 கி.மீ சென்றால், சிவன் கோயில். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தலம் இது!

வேதங்களே வேல மரங்களாக உருமாறி இறைவனை வழிபட்ட வேலங்காடு...

வேதபுரீசராக இறைவன் எழுந்தருளிய வட வேதாரண்யம்...

அகத்தியருக்குத் திருமணக் காட்சி வழங்கிய தலம்...

முருகப் பெருமான், சிவனாரை வழிபட்ட பதி...

மந்தாகினியும் வேலாயுத தீர்த்தமும் புனிதம் கூட்டும் புகழூர்...

திருஞானசம்பந்தர் பதிகம் பெற்றது; மூர்க்க நாயனார் அவதரித்தது; அருணகிரிநாதரும் வள்ளல் பெருமானும் வழிபட்டது என்று பெருமைகள் பெருகும் அருள் பிரதேசம்; தொண்டை மண்டலத் திருத்தலங்களுள் ஒன்றாகத் திகழும் திருவேற்காடு!



எப்போதும் கூட்டம் நெரிக்கும் கரு மாரியம்மன் ஆலயத்தையும் பேருந்து நிலையத்தையும் தாண்டிச் செல்ல, அமளிதுமளியெல்லாம் அடங்கி, ஊர் அமைதியாக இருக்கிறது. அமைதிக்கு நடுவே, நெடிதோங்கி நிற்கும் வேற்காட்டீசர் திருக்கோயில்.

கிழக்கு ராஜகோபுரம். பார்வதி பரமேஸ்வரர் திருக்கல்யாணம், தகப்பன் சுவாமியாக முருகன் உபதேசிக்கும் சிறப்பு, தவம் இயற்றும் முனிவர்கள், கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த தட்சிணாமூர்த்தி என்று அருள் வடிவங்கள் பலவற்றைத் தாங்கி நிற்கும் ஐந்து நிலை கோபுரம். நன்கு அமைக்கப்பட்ட சுற்று மதில்களோடு கம்பீரமாக ஓங்கி நிற்கும் கோயில்.

ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழை கிறோம். செப்புக் கவசமிட்ட கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம். விசாலமான பிராகாரம். கோபுரத்துக்குள் நுழைந்து கிழக்கு பார்த்தபடி நின்றால், நமக்கு வலப்புறம் இரண்டு சந்நிதிகள். இடப்புறம் ஒரு சந்நிதி. பிராகாரத்தை வலம் வருவோமா?

கிழக்குச் சுற்றில் தொடங்குவோம். கோபுர இடப் புறச் சந்நிதியில் அருணகிரிநாதர். தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி. கிழக்குச் சுற்றில், நந்தவனத்துக்கு நடுவே, வில்வ மரம். அதனடியில், சிவலிங்கமும் நந்தியும்.

தனியான சந்நிதி எதுவும் இந்தப் பிராகாரத்தில் இல்லை என்றாலும், நந்தவனம் நன்கு அமைக்கப் பட்டுள்ளது. பிராகார வலம் வருவதற்கு ஏதுவாகப் பாதையும் போடப்பட்டுள்ளது. நந்தவனத்தில் அமர்வதற்கு வசதியாக ஆங்காங்கே இருக்கைகள். முதியோர் சிலர் அவற்றில் அமர்ந்திருக்க, இன்னும் சிலர் புல்வெளிகளில் அமர்ந்து கோபுரத்தையே நிலைகுத்தி நோக்கி யவாறு தியானம் செய்கின்றனர். புலன்களையும் மனதையும் அமைதிப் படுத்துகிற இந்தக் காட்சியில் ஈடுபட்டவாறே, மேற்குச் சுற்றைத் தாண்டி, வடக்குச் சுற்றை அடைகிறோம்.

மதில் ஓரமாக பெரிய புற்று. பற்பல நாகர்கள். சற்று நகர்ந்தால், பிராகார மையத்தில் பெரிய வெள் வேலமரம். தலமரமான இதன் கீழ், சிவலிங்கமும், நந்தியும். மரக்கிளைகளில் தொட்டில்கள், வண்ண வண்ணத் துணிகள், பிள்ளை பொம்மைகள், மஞ்சள் கயிறுகள்- விதவிதமான பிரார்த்தனைகளின் அடையாளங்கள்!



பார்வதிதேவிக்கும் பரமேஸ்வரனுக்கும் ஒரு முறை திருக்கயிலாயத்தில் நடைபெற்ற உரையாடலைப் பற்றித் 'திருவேற்காட்டு மகாத்மியம்' குறிப்பிடுகிறது. சர்வ வியாபியாக எல்லா இடங்களிலும் இறைவன் இருந்தாலும், சில இடங்கள் அதிக சாந்நித்யம் பெற்றவை; அத்தகைய இடங்களில், ஒரு பொழுது தங்கியிருந்தால், புழு- பூச்சிகள்கூட முக்தியடையும்; அவற்றிலும் மிகுந்த பெருமைக்குரியதாகவும், பானு நகர், வல்லி நகர், முத்தி நகர், மணிவண்ண நகர், சோதி நகர், ஞான நகர், வேலவன நகர், விடம் தீண்டாப் பதி, காந்த பதி ஆகிய பெயர்களோடு கூடியதாகவும், இதன் ஒரு பெயரை ஒரு முறை சொன்னாலும் புவியாளும் மன்னராகப் பிறப்பர் எனும் நிறைவுக்கு உரியதாகவும் சிவபெருமானே குறிப்பிடுகிற தலமாகத் திருவேற்காடு திகழ்கிறது.

காஞ்சி மாநகருக்கு ஈசான (வடகிழக்கு) திசை யிலும், கடலுக்கு வருண (மேற்கு) திசையிலும், திருப்பாசூருக்கு அக்னி (தென்மேற்கு) திசையிலும், மயிலைக்கு வாயு (வடமேற்கு) திசை யிலும், திருவலிதாயத்துக்கு நிருதி (தென்மேற்கு) திசையிலும் உள்ள தலம். இந்தத் தலத்தில் வேதங்களே, வெள்வேல மரங்களாக எழுந்து நின்றன. வேதங்களே நின்றதால் பரமாகாசம், பிரமமூதூர் என்று போற்றப் பட்ட இங்கு, வேல மரத்தினடியில் சிவலிங்க வடிவம் தாங்கி எழுந்தருளினார் சாட்சாத் எம்பெருமான். இத்தகைய சிறப்பால், வடவாக்னியும் பிரளயமும்கூட இந்தத் தலத்தைத் தொட முடியாதாம்.

தல புராணம் கூறும் இவற்றையெல்லாம் நினைவு படுத்தும்படியாகக் காணப்படும் வெள் வேலத்தையும் சிவலிங்கத்தையும் போற்றித் துதிக் கிறோம். வலம் தொடர்கிறோம். கிழக்குச் சுற்றில் திரும்ப, நாம் உள்ளே நுழைந்தபோது, கோபுரத்துக்கு வலப்புறத்தில் பார்த்த இரண்டு சந்நிதிகள். ஒன்றில், காக்கை வாகனம் மற்றும் நான்கு கரங்களுடன் காணப்பெறும் சனீஸ்வரன். நான்கு கரங்களிலும் பாசம், அங்குசம், திரிசூலம் ஆகியவற்றோடு வர முத்திரை. மற்றொன்றில், அறுபத்துமூவரில் ஒருவரான மூர்க்க நாயனார். பெயருக்குப் பொருத்தமில்லாமல், சாதுவாகத் தோற்றம் தரும் மூர்க்கரை வணங்கிவிட்டு, கொடி மரத்தடியில் நிற்கிறோம். கொடிமர விநாயகரையும், ரிஷப வாகனரையும் வணங்கி கோயிலுக்குள் நுழைகிறோம்.

முருகப் பெருமான், ஈசனை வழிபட்டு தமது தவறுக்குப் பரிகாரம் தேடிய தலமாக திருவேற் காடு சிறப்பிக்கப்படுகிறது. அதென்ன கதை?

கந்தக் கடவுள் பாலமுருகனாகத் திருவிளை யாடிய போது, திருக்கயிலாயத்துக்குச்சென்ற பிரம்மாவிடம், பிரணவப் பொருள் கேட்டதும், பிரம்மா பொருள் தெரியாது தவறு செய்ய, அவரைச் சிறையில் இட்டதும், பின்னர் இறையருளால் பிரம்மா சிறை மீண்டதும் நமக்குத் தெரிந்த சங்கதிகள். என்னதான் பிரம்மா தவறு செய்தாலும், அவரைச் சிறையிலிட்ட குற்றத்துக்காக முருகப் பெருமான் சிவனாரை வழிபட முடிவு செய்தார். இறைவன் ஆணைப்படியே, பூலோகத்திலுள்ள வேதவனத்தில் தவம் செய்து வழிபடப் புறப்பட்ட கந்தக் கடவுளை வழியில் சந்தித்த வியாக்ரபாத முனிவர், வேதவனத் திருத்தலத்தின் பெருமைகளை முருகனுக்கு உணர்த்தி, வழிபடும் முறையையும் கூறினார்.



முன்னொரு முறை, பிரளயம் முடிந்து, படைப்பு தொடங்கு முன், பிரளய வெள்ளத்தை வற்றச் செய்த சிவனார், வேதங்களை பூமிக்கு அனுப்பினார். பூமிக்கு வந்த வேதங்கள், அழகான ஆற்றங் கரையைத் தேர்ந்தெடுத்து, அங்கு வேல மரங்களாகத் தழைத்தன. சிவபெருமான், அங்கு லிங்க வடிவில் எழுந்தருள, அருகில் தோன்றிய உமையம்மை, தமது பணி என்ன என்று வினவினார். அடங்கிப் போன அனைத்து ஜீவன்களையும் மீண்டும் தோற்றுவிக்கும்படி இறைவன் கூற, அன்னை யும் அப்படியே செய்தார். ஐயனின் ஞானத்தில் இருந்து பாலாகப் பெருகிய அந்த நதி, பாலி ஆறு எனப்பட்டது. வேதங்கள் வழிபட்டதால், வேதங்களுக் கும் ஆசான் ஆன இறைவன், வேதபுரீசன் என பெயர் பூண்டார். உமையம்மையால் உயிர் கொண்ட தேவர்களும் முனிவர்களும் பிறரும், இறைவனையும் இறைவியையும் வணங்குவதற்காகக் குளம் தோண்டி நீராடினர். அதுவே வேத தீர்த்தம் என்றும் தேவர் கண்ட மடு என்றும் பெயர் பெற்றது.

வியாக்ரபாதரிடம் இந்தத் தகவல்களைப் பெற்றுக் கொண்ட கந்த பெருமான், திருவேற்காடு அடைந்து வேதவன நாதரை வழிபட்டார். பின்னர், அவருக்கு அருகில், சற்றே வடக்கில் மரகதலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, அதற்குக் கிழக்கில் மந்தாகினி தீர்த்தத்தையும், மேற்கில் தமது கூர்வேலால் வேலாயுத கூபத்தையும் (கிணறு) ஏற்படுத்தினார். மரகதலிங்கம், கந்தன் ஸ்தாபித்தது என்பதால் காந்தலிங்கம் (காந்த நாயகர்) ஆனது. திங்கட்கிழமைகளில் வேலாயுத கூபத்தில் நீராடி, முருகரையும் வேதவனநாதரையும் வழிபட்டால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்று தலபுராணம் விவரிக்க... கோயிலுக்குள் நுழைகிறோம் என்ற எண்ணமே பெருமிதத்தைத் தர... மெள்ளப் புகுகிறோம். தூய்மையாகவும் அமைதியாகவும் காணப்படுகிற உள் பிராகாரத்தில் வலம் தொடங்குகிறோம்.



முதலில் அகத்தியர், அடுத்து சூரியன். அகத்தியருக்கு அருள் காட்சி வழங்கிய தலமல்லவா இது! ஆமாம். இறைவனுடைய திருமண காலத்தில், வட திசை உயர்ந்து, தென்திசை தாழ்ந்ததல்லவா? அப்போது தென்திசையைச் சமன் செய்ய அகத்தியர் வந்தார். இதுதான் தெரியுமே. எல்லோரும் திருமணக் காட்சியைக் காணும்போது, தான் மட்டும் அந்தப் பேற்றைப் பெறவில்லையே என்ற அகத்தியரின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, திருமணக் காட்சி யைத் தெற்கில் இருந்தே காணும்படி இறைவனார் அருள் வழங்கிய இடம் திருவேற்காடு. தினமும் பொதிய மலையில் இருந்து திருவேற்காட்டுக்கு வந்து, ஒரு முகூர்த்த நேரம் திருமணத்தை அகத்தியர் கண்டு களிப்பதாக ஐதீகம்.

உண்மைதான் போலும்! அகமெல்லாம் கூத்தாடும் அருள்வெள்ளம் முகத்தில் பொங்கி வழிய, மோனத்தில் நிற்கும் அகத்தியரைப் பார்த்தால், அவர் திருமணக் காட்சியில் லயித்திருப்பதாகத்தான் தோன்றுகிறது.



தெற்குச் சுற்றுக்குள் திரும்பினால், பக்கவாட்டு வாயில். அடுத்து, சைவ நால்வர். பின்னர், அறுபத்து மூவர். தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி. மேற்குச் சுற்றில், காசி விஸ்வநாதர் மற்றும் விசா லாட்சி. வடமேற்கு மூலையில், முருகன் சந்நிதி. பால சுப்பிரமணியர் வேலோடு நிற்கிறார்; எதிரில், அவர் ஸ்தாபித்த சிவலிங்கம். கந்தனையும் காந்தநாயகரையும் சேர்த்து தரிசிப்பது எத்தகைய பெரும் பேறு! அருணகிரிநாதர் இந்த முருகப் பெருமானை இரண்டு திருப்புகழ்ப் பாடல்களால் போற்றுகிறார். 'வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு வேலங்காடுறை சீல பெருமாளே' என்று பாடுகிறார். கடவுளே ஆனாலும் சில முறைமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைக் காட்டும் விதமாகச் 'சீல பெரு மாளே' என்று குறிப்பிடுகிறார். சீலத்தைப் பேணும் பெருமான் முருகனை வணங்கி, வடக்குச் சுற்றில் தொடர்கிறோம். சண்டேஸ்வரர் சந்நிதிக்கு நேராக, பிராகாரச் சுவரை ஒட்டி, திருவுருவமொன்று; இவரும் சண்டேஸ்வரரே. அந்த இடத்தில், ஒரு பள்ளம். இங்கு சுரங்கம் இருக்கிறதாம்; சிவன் கோயில்களில், எல்லாவற்றுக்கும் சண்டேசர்தானே அதிகாரி. எனவே, சுரங்கத்துக்குக் காவலாகவும் இருக்கிறார்.

சுரங்கம் எங்கு செல்கிறது? சிலர் திருவொற்றியூர் என்கிறார்கள்; சிலர் பாலாற்றங்கரை என்கிறார்கள். எனினும் சரியாகத் தெரியவில்லை. வடக்குச் சுற்றிலேயே, திருக்கயிலாயக் காட்சி மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. நவீன கால சிற்பக் கட்டு மானம். அம்மையும் அப்பனும், கூடவே பால விநாய கரும் பால முருகரும் கூடிய கயிலைக் காட்சி கருத்தை நிறைக்கிறது. அடுத்து நடராஜ சபை. பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில், தெற்குப் பார்த்தபடி, அம்பாள் சந்நிதி. சந்நிதிக்கு முன்பாகச் சிம்மம்.

அருள்மிகு வேற்கண்ணி, பாலாம்பிகை, வாலை எனும் திருநாமங்கள் பூண்ட அம்மன். நின்ற திருக் கோல நாயகி; கரங்களில் பாசாங்குசம் தாங்கி, அபயமும் வரமும் அருளும் பெருமாட்டி. இறைவனார் சொல்படி, வேற்கண்ணி மங்கையாக அம்பாள் இங்கு எழுந்தருளினார். படைப்பின் தொடக்கத்தில் எழுந்தருளியதால், பாலாம்பிகை ஆனார் போலும்! அம்பாள் சந்நிதியை அடுத்து, தெற்கு நோக்கி நிற்கும் பைரவர். கைகளில் பாம்பு, பாசக்கயிறு, இடி, சூலம் ஆகியவற்றைத் தாங்கி, வாகனமான நாயின் மீது சாய்ந்து நிற்கிறார். வலத்தை நிறைவு செய்கிறோம். கிழக்குச் சுற்றில், பைரவருக்கு எதிரில் உள்ள ஒரு தூணில், கருமாரியம்மன் திருவுருவம்; பக்கத்தில் பாம்பு.

மூலவர் சந்நிதி வாயிலை அடைந்து, உள் நுழைகிறோம். முன் மண்டபத்தில், வலப் பக்கம் உற்சவர் மேடைகள். உற்சவர் விக்கிரகங்கள் பாதுகாப்புக்காக வேறு எங்கோ வைக்கப்பட்டிருக்க வேண்டும். அர்த்த மண்டபம் நுழைந்து, பார்வையை உள்ளே செலுத்த... ஆஹா! பேரானந்த காட்சி. அருள்மிகு வேதபுரீசர். வட்ட வடிவ ஆவுடையார்; கம்பீரமான திரு மேனி கொண்ட லிங்கம். பலராமர், இந்திரன், முருகப்பெருமான், விஷ்ணு, வசிஷ்டர், பராசரர், யாக்ஞவல்கியர் ஆகியோர் இந்தத் திருமேனியை பூஜித்ததாகத் தல புராணம் கூறுகிறது.

'காட்டினாலும் அயர்த்திடக் காலனை
வீட்டினான் உறை வேற்காடு
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டினார் வினை ஒல்லையே'

என்று திருஞானசம்பந்தர் போற்றிய வேதவன நாதரை, கரம்குவித்துப் பணிகிறோம். 'திருவேற்காட்டில் மேவிய முன் நூல் காட்டு உயர் வேத நுட்பமே' என்று இந்த ஈசரைப் பாடினார் ராமலிங்க வள்ளலார்.

லிங்கத் திருமேனிக்குப் பின்புறம் அம்மையும் அப்பனும் காட்சி தருகின்றனர். கல்யாணத் திருக் கோலம். இதனால், சுவாமிக்கு கல்யாண சுந்தர மூர்த்தி என்றும் ஒரு திருநாமம் உண்டு. இருவரையும் வழிபட்டு, மீண்டும் முன் மண்டபம் வழியாக உள் பிராகாரத்தை அடைந்து, வலம் வருகிறோம். முன் மண்டபப் பகுதி சற்றே அகன்று, மூலவர் கருவறைப் பகுதி சற்றே குறுகிய அமைப்பு. அகழிக் கட்டுமானம். மூலவர் கருவறையின் பின்சுவர், அரைவட்டமாக வளைகிறது. மேலே விமானத்தை நோக்கினால், கஜபிருஷ்ட அமைப்பு புலப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்கை. கோஷ்ட தட்சிணாமூர்த்தி, வலது கீழ்க்கரத்தில் சின் முத்திரை தாங்கி, இடது கீழ்க்கரத்தை லேசாகத் தழைத்துத் தொங்க விட்டிருக்கிறார். மண்டபத்தில் சண்டேசர். சுவர் முழுவதும் கல்வெட்டுகள்.



வலம் நிறைவு செய்து, மூலவர் சந்நிதி வாயிலை அடைகிறோம். கிழக்குச் சுற்றில் இருந்து தெற்குச் சுற்று திரும்பும் இடத்துக்கு அருகில், பத்ம பீடத்தில் எண்கோணமாக அமைந்த சந்நிதியில் வாகனங்களுடன் நிற்கும் நவக்கிரக நாயகர்கள். மண்டபம் என்று சொல்லும் அளவுக்கு விசாலமான உள் பிராகாரக் கிழக்குச் சுற்றில் நிறைய தூண்கள். பற்பல சிற்பங்கள். பிள்ளையார், ஊர்த்துவ தாண்டவர், பைரவர், தும்புரு, ரிஷபாரூடர், அனுமன், தட்சிணாமூர்த்தி, ஐந்து தலை பறவை, பூதகணங்கள், நாகாத்தம்மன் என்று பலவிதமான சிற்பங்கள்.

தலச் சிறப்பும் தீர்த்தச் சிறப்பும் நிரம்பப் பெற்ற திருவேற்காட்டில், பலரும் வழிபட்டு, பற்பல வகை களில் லிங்கப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அவையும் தீர்த்தங்களும் எங்கே உள்ளன? தேவர்கள் அமைத்த தேவதீர்த்தம்- கோயிலுக்குத் தெற்குப் பகுதியில், ஒரு தோப்புக்குள் குளமாகக் காணப்படுகிறது என்பது தலபுராணக் குறிப்பு. இப்போதைய இடம் தெரியவில்லை. முருகப்பெருமான் தோற்றுவித்த மந்தாகினி- கோயில் கோபுரத்துக்கு எதிரில் உள்ளது. வேலாயுத தீர்த்தம்- மேற்கு மதில் தாண்டி, ஓர் அரச மரத்தடியில் உள்ளது. இரண்டுமே பராமரிப்பும் பயன்பாடும் இல்லாமல் இருக்கின்றன. சுவாமிக்கான தீர்த்த நீர், கோயிலுக்குள் வெளிப் பிராகாரத் தென்மேற்கு மூலையில் உள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்திரனும் இங்கு வந்து வேதவன நாதரை வணங்கி, பின்னர் சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்து வணங்கினான். அவனைத் தொடர்ந்து, பிற திசைக் காவலர்கள் எழுவரும் (அஷ்டதிக் பாலர்களில் இந்திரன் தவிர, மீதமுள்ளோர்) அவ்வாறே செய்தனர். இந்திரன் அமைத்த லிங்கம், திருவேற்காட்டுக்கு சற்று கிழக்காகவும், அக்னி லிங்கம் தூம்பலிலும் (தென்கிழக்கு), யம லிங்கம் செந்நீர்க்குப்பத்திலும் (தெற்கு), நிருதி லிங்கம் மேட்டுப்பாளையத்திலும் (தென்மேற்கு), வருண லிங்கம் பாரிவாக்கத்திலும் (மேற்கு), வாயு லிங்கம் பருத்திப்பேட்டையிலும் (வட மேற்கு), குபேர லிங்கம் சுந்தர சோழவரத்திலும் (வடக்கு), ஈசான லிங்கம் சின்னக் கோயிலடியிலும் (வடகிழக்கு) உள்ளனவாம்.

சலந்திரன் எனும் அரக்கனிடத்தில் தமது திருவாழிச் சக்கரத்தை இழந்து துன் புற்ற திருமால் அதனை மீண்டும் பெற, வேற்காட்டுநாதரைப் பூஜித்தார். சிவலிங்கம் ஸ்தா பித்து, தினமும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்தார். ஒரு நாள் தாமரை ஒன்று குறைய, தமது விழிகளில் ஒன்றை எடுத்துச் சேர்த்தாராம் திருமால். திருவாழிச் சக்கரத்தையும் திரும்பப் பெற்றார். அவர் வழிபட்ட இடம் கண்ண பாளையம். திருமால் வழிபாடு மற்றும் சிவனாரின் அருளை பார்த்து அதிசயித்த ஆதிசேஷன், 'இனி இந்த திருத்தலத்தில், யாரைப் பாம்பு கடித்தாலும் அவர் மீது விஷம் அணுக விட மாட்டேன்; வேறெந்த விஷப் பூச்சி கடித்தாலும் அப்படியே' என்றாராம். எனவேதான், வேற்காடு 'விஷம் தீண்டா பதி' ஆகி விட்டது.



இப்படியே தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள சிவலிங்கம் வரை, வேற்காட்டுநாதரோடு இணைக்கிறது தலபுராணம். வேதவனப் பெருமானை வழிபட்ட ராமரும் லிங்கப் பிரதிஷ்டை செய்தார்.

கோயம்பேட்டில் லிங்கம் அமைத்து வழிபட்ட லவ- குசர்களும் வேற்காட்டில் பூஜித்தனர். பலராமரும் இவ்வாறே செய்தார். சுசீரன், சுகன்மன் ஆகிய அரக்கர்கள், துவாரபாலகர்கள் ஆக வேண்டும் என வரம் கேட்டு சிவனாரைப் பிரார்த்தித்தனர். பலராம லிங்கமும், அரக்கர்களின் திரிபுராந்தக ஈசர் லிங்கமும் அயனம்பாக்கத்தில் உள்ளன.

அதெல்லாம் சரி. பாலி நதி எங்கே என்கிறீர்களா? திருவேற்காடு திருத்தலத்தை அடைய கூவம் ஆற்றைக் கடக்கிறோம். பூவிருந்தவல்லி- ஆவடி மார்க்கத்தில் வந்தால், காடுவெட்டி நதியைக் கடக்கிறோம். இந்த ஆற்றின் கிழக்குக் கரையில்தான், வேற்காடு உள்ளது. முருகப் பெருமானுக்கு தேவர்கள் நந்தினியின் (காமதேனுவின் மகள்) பால் கொண்டு அபிஷேகம் செய்தனர். அவ்வாறு வழிந்த பால், பூலோகத்திலும் பரவியது. அதுவே பாலி நதி (பாலாறு) என்று அழைக்கப்படலானது. பாலி நதி வேறெதுவும் அல்ல; நமது கூவம் நதியே. பழம் பாலாறு, விருத்தக்ஷீரா என்பதெல்லாம் கூவத்தின் பழைய பெயர்கள். காடுவெட்டி, கூவத்தின் கிளை நதி.

திருவேற்காடு என்றவுடன், சைவப் பெரு மக்கள் நினைவில், மூர்க்க நாயனார் வந்து நிற்பார். இந்தத் தலத்தில் அவதரித்தவர் அவர். சிவனடியார்க்கு அன்னமிட்டு, வேண்டியன கொடுத்து, தொண்டு செய்தார். பெற்றோர் சேர்த்து வைத்த செல்வம் அனைத்தும் அழிந்தது. வறுமை சூழ, வருமானத்துக்கு வழி இல்லை. அவருக்கு எந்தத் தொழிலும் தெரியாது. தெரிந்த ஒன்றே ஒன்று; சூதாடுதல். அப்படி சூதாடிக் கிடைத்த பொருளைக் கொண்டு தொண்டுகளைத் தொடர்ந்தார். வேற்காட்டில் உள்ளவர்கள் இவர் சூதாட்டத்தில் தங்களைத் தோற்கடித்துவிடுவார் என்று ஒதுங்கிக் கொள்ள, பிற ஊர்களுக்கு சென்று சூதாடி, பொருள் சேர்த்து தொண்டு செய்தார்.

அள்ள அள்ளக் குறையாது நிறையும் செல்வமாக, தெவிட்டாத தெள்ளமுதாக, திருவேற்காட்டுப் பெருமைகள்தாம் எத்தனை எத்தனை! இந்தச் சிறப்பு களையெல்லாம் நினைத்துக் கொண்டே கொடி மரத்தை அடைந்து தண்டனிடுகிறோம்!

Comments