ஓம் நமசிவாய

காஞ்சிபுரம் அருகில் உள்ள ஊர் அம்பி. இங்குள்ள சிவாலயம் 'முப்புராரி கோட்டம்' எனப் படுகிறது. 'திரிபுராந்தகம்' எனும் தேவார வைப்புத் தலமும் உள்ளது. திருநெல்வேலியை அடுத்த பாளையங் கோட்டைக்கு அருகில், 'திரிபுராந்த கேசம்' என்ற சிவாலயம் உள்ளது.

ஆந்திர மாநிலத்தில், சிம்மாசலம் மலை மீது 'திரி புராந்தகேஸ்வரர் கோயில்' அமைந்துள்ளது.

வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த

அம்பினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே- எனப் போற்றுவார் திருநாவுக்கரசர். ஈசன், திரிபுராதிகளை வென்ற நிகழ்ச்சி திருவதிகை ஸ்ரீவீரட்டேஸ்வரர் ஆலயத்தில் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு, வைகாசி விசாகத்தை கடைசி நாளாகக் கொண்ட பெரு விழாவின் 9-ஆம் நாள் அன்று திரி புர சம்ஹார வைபவம் நடைபெறுகிறது. அன்று காலை திரிபுராந்தக மூர்த்திக்கு சிறப்பான அபிஷேக வழிபாடுகள் நடைபெற்ற பின்னர், திருத்தேரில் பெரு மான் எழுந்தருள்கிறார். மாட வீதியில் தேர் வலம் வந்து அக்னி மூலையில் நிறுத்தப்படுகிறது.



அப்போது, ஊரின் கிழக்கில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீசரநாராயண பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருள்வார். அவரை எதிர்கொண்டு அழைத்து வந்து, தேரின் பக்கத்தில் எழுந்தருளச் செய்து தீபாராதனை செய்கின்றனர். பிறகு, திரிபுராந்தகரின் கரத்தில் உள்ள சந்திர கணை (அம்பு), பெருமாள் மீது வைக்கப்படுகிறது. அதில் திருமால் மந்திர பூர்வமாக எழுந்தருள்கிறார். பின்னர் அந்த சந்திர கணை, சிவனாரின் கரத்தில் வைக்கப்படும். இது, சிவனாரின் கரத்தில் திருமால், அம்பாக இருப்பதை உணர்த்தும் ஐதீகம். அடுத்து விஷ்ணுவுக்கும், சிவனாருக்கும் ஏக காலத்தில் தீபாராதனை நடைபெறும்.

இதன் பிறகு, ஸ்ரீவீரட்டேஸ்வரர் கோயிலுக்கு தெற்கில் உள்ள கெடில நதிக்கரையில்- தேருக்கு எதிரில் வைக்கோல், தென்னங் கீற்று, பனை ஓலை ஆகியவற்றால் செய்யப்பட்ட மூன்று கோட்டைகள் மற்றும் அசுரர்களது பொம்மைகள் ஆகியன கொளுத் தப்படுகின்றன. தீ மூண்டெழும்போது வாண வேடிக்கைகள் நடைபெறுகின்றன. விழா முடிந்ததும் ஸ்ரீசரநாராயண பெருமாளுக்கு மாலைகள் சார்த்தி, நைவேத்தியம் செய்து விடை கொடுக்க... அவர் தமது திருக்கோயிலுக்குத் திரும்புகிறார்.

பிறகு, திரிபுராந்தக மூர்த்தி தேரில் இருந்து இறங்கி மகா மண்டபத்தை அடைவார். அங்கு, அவருக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும். ('ஸ்ரீவீரட்டேஸ்வரர் கோயிலில் பாலாலயம் செய்யப் பட்டுள்ளதால், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விழா நடைபெறவில்லை' என்கிறார் கோயில் தலைமை சிவாச்சார்யரான ஞானசேகர குருக்கள்).

சிவபெருமான் முப்புரங்களை அழிக்கச் சென்ற போது அவரின் கரத்தில் அம்பாகத் திகழ்ந்த திருமால், அதிஉக்ர நரசிம்மராக விளங்கினாராம்! திரிபுரம் எரித்த பிறகு, களைப்பு நீங்க அவர் அரிதுயில் கொண்டார். ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீசரநாராயண பெருமாளாக காட்சி தரும் திருக்கோயில், திருவதிகை ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. சிவனாரின் கரத்தில் சரமாக (அம்பாக) இருப்பதால், இவருக்கு ஸ்ரீசர நாராயண பெருமாள் என்று பெயர். மேலும், சயன கோலத்தில் ஸ்ரீநரசிம்மரை வெறெங்கும் காண்பது அபூர்வம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில்- நந்தி மண்டபத் தூணில் உள்ள திரிபுராந்தகர் சிலையில், திருமால் அம்பாகி சிவனாரின் திருக்கரத்தில் திகழ்வதைக் காணலாம்.

சிவனார் திரிபுரங்களை அழிக்கப் புறப் பட்டபோது தம்மிடம் உத்தரவு பெறாததால் கோபம் கொண்ட விநாயகர், தேரின் அச்சினை முறித்ததாக ஒரு கதை உண்டு. அப்படி தேரின் அச்சு முறிந்த இடம், அச்சிறுப்பாக்கம். இங்குள்ள விநாயகர், 'அச்சிறுத்த விநாயகர்' எனப்படுகிறார். சென்னை- திண்டிவனம் வழியில் மேல்மருவத்தூர் அருகில் உள்ள இந்தத் தலம், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. சம்ஹாரத்தின்போது தேவர்களால் 'பசுபதி' என்று போற்றப்பட்ட இறைவன், இங்குள்ள மலை மீது லிங்கமாக எழுந்தருளி உள்ளார். திரிநேத்ரதாரி என்ற முனிவர் இங்கு வந்து இறைவனை வேண்டி கடும் தவம் செய்து, சிவனாரின்- திரிபுரம் எரித்த கோலத்தை தரிசிக்கும் பேறு பெற்றாராம். இவருக்கும் இங்கு சிலை உள்ளது.

திரிபுர சம்ஹார வரலாறை ஆராய்ந்தால், ஓர் அருமையான தத்துவம் வெளிப்படும். உயிர்களுக்கு அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய முப்பெரும் துணைகள் உள்ளன. ஆனால் இவை, உயிர்களைப் பற்றியிருக்கும் ஆணவம், கன்மம் (வினைச் செயல்), மாயை ஆகிய மூன்று கோட்டைகளால் சூழப்பெற்று- மறைக்கப்பட்டு உள்ளன. இறைவன், உயிர்களது தன்னிலையை அறிந்த பிறகு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களாகிய அந்தக் கோட்டைகளைச் சுட்டெரித்து அருள்புரிகிறான். ஆணவம் எரிந்து அறிவாகவும், கன்மம்- ஆற்றலாகவும், மாயை- அன்பாகவும் மாற்றப்படுகின்றன. இதை உணர்த்தவே தாரகன், வித்யுன்மாலி, கமலாட்சன் ஆகியோரை ஆணவம், கன்மம், மாயை என உருவகப்படுத்தியுள்ளனர்.

முப்புரங்களும் எரிந்த பிறகு, அசுரர்கள் மூவரின் ஆன்மாக்களும் மீண்டும் கடும் தவம் புரிந்தனவாம். முற்பிறப்பில் அவர்கள் செய்த சிவபூஜையின் பலனால் அவர்களுக்கு அருள்புரிந்தார் சிவனார். தாரகனும், வித்யுன்மாலியும் இறைவனின் சாரூபம் பெற்று, அவரின் துவார பாலகர்கள் ஆகும் பேறு பெற்றனர். கமலாட்சன்- எம்பெருமானின் சந்நிதியில் 'குடமுழா' எனப்படும் பஞ்சமுக வாத்தியம் இசைக்கும் பேறு பெற்றான். இதனை சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்புன்கூர் பதிகத்தில் பாடியுள்ளார். அறிவையும் ஆற்றலையும் தனது ஆலயத்துக்கு துவார பாலகர்களாக நியமித்த சிவனார், அன்பை- தனது ஆனந்த நடனத்துக்கு முழவு (மத்தளம் போன்ற ஒலி வாத்தியம்) வாசிக்குமாறு செய்தாராம். இதை விளக்குவதே, 'முப்புரம் எரித்தல்' வைபவம். இதனை, திருமந்திரத்தில் அற்புதமாகப் பாடுகிறார் திருமூலர்:

அப்பணி செஞ்சடை ஆகி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவன மும்மல காரியம்
அப்புரம் எய்தமை ஆர் அறிவாரே

அறிவுக்கு- யானையும், ஆற்றலுக்கு- சிங்கமும் குறியீடுகள் ஆகும். சிவாலயங்கள் பலவற்றில் உள்ள துவாரபாலகர்களில், தாரகன்- யானை முகம் பொறித்த தோடுகளையும், வித்யுன் மாலி- சிங்கம் பதித்த தோடுகளையும் அணிந்துள்ளதைக் காணலாம்.

அம்சுத் பேதாகமம், திரிபுராந்தகர் வடிவை எட்டு விதமாகக் காட்டுகிறது. உத்தர காமிகாகமம், சுப்ரபேதம், சில்பரத்னம் மற்றும் பூர்வ காரணாகமம் ஆகியனவும் இந்த வடிவங்களைக் காட்டுகின்றன. திரிபுர சம்ஹாரத் துக்குப் பிறகு சிவனார் ஆடிய பெருங்கூத்தை 'பாண்ட ரங்கம்', 'கொடுகொட்டி' என்று இலக்கியங்கள் குறிப் பிடுகின்றன. தேவாரம் 'நாடற்கரிய கூத்து' எனக் கூறும்.

திருச்செங்காட்டங்குடியிலும் திரிபுர தாண்டவ சிற்பம் உண்டு. கொடுமுடி, திருவக்கரை, காமக்கூர் மற்றும் திரு நல்லூர் ஆகிய தலங்களில் உள்ள (சதுர கரணங்கள்) தாண்டவ மூர்த்தங்கள், திரிபுர தாண்டவ வடிவங்களே ஆகும். இவற்றில், பெருமானது ஜடையை விரித்துப் படர விடாமல், ஜடாமுடியாகக் காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது. தஞ்சை பெரிய கோயிலில் காணப்பெறும் 'திரி புராந்தகர்' ஓவியம் அற்புதமான ஒன்று.

Comments