ஆசார்யார்களின் அணிவரிசை

மிக அழகிய உடல், நோயற்ற நிலை, பலவகை இனிய புகழ், மேரு மலைக்கு இணையான செல்வம் என்று எல்லாம் இருந்தாலும் குருவின் திருவடித் தாமரைகளில் மனம் குவியவில்லை என்றால், அதனால் என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

மனைவி, செல்வம், பிள்ளை, பேரன் முதலிய எல்லாமும், வீடு, சுற்றம் என்று அத்தனையும் கூடியிருந்தும் குருவின் திருவடித் தாமரைகளில் மனம் குவியவில்லை என்றால் அதனால் என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

- குருவஷ்டகத்தில் ஜகத்குரு ஆதிசங்கரர்.

காஞ்சி காமகோடி பீடாதிபதிகளாக அருளாட்சி புரிந்த ஆசார்யார்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அந்த அருள் நிறைந்த அணிவகுப்பு தொடர்கிறது.

13. ஸ்ரீசட்சித்கனேந்திர சரஸ்வதி
(கி.பி.235-273)

கெடில நதிக்கரையோர கிராமத்தைச் சேர்ந்தவர். பூர்வாஸ்ரமப் பெயர் சேஷையா. தகப்பனார் ஸ்ரீகர பண்டிதர். இவரும் தன் குருவைப் போலவே, மடத்தின் பணிகளை ஒரு சீடரிடம் ஒப்படைத்துவிட்டு, காஞ்சியின் சுற்றுப்புறங்களில் அவதூதராகச் சுற்றித் திரிந்தார். 32 ஆண்டுகள் இப்படிச் சுற்றித் திரிந்த இவர், மீண்டும் குருவைப் போலவே, காஞ்சி கோயிலுக்குள் நுழைந்தவர், அப்படியே ஒரு சிவலிங்கமாக மாறி விட்டார். இன்று காயாரோகணேஸ்வரர் கோயில் என்று அது அழைக்கப்படுகிறது. லிங்கத்தை இப்போதும் தரிசனம் செய்யலாம். கர வருடம் (கி.பி.272) மார்கசிரீஷ மாதம், சுக்ல பிரதிமையில் இது நடந்தது.

14. வித்யாகனர் I
(கி.பி.272-317)

ஆந்திராவைச் சேர்ந்த அந்தணர். தந்தை, பாபண்ண சோமயாஜி. இயற்பெயர் நாயனா.

மந்திரசாஸ்திரத்தில் கைதேர்ந்தவர் இவர். மலையமலையில் உக்கிரத்-துடன் காணப்பட்ட பைரவமூர்த்தியை, சாந்தப்படுத்தியவர் இவர்.

கி.பி.317 தாது வருஷம், மார்கசீரிஷ மாதம் அமாவாசையன்று மலையமலைத் தொடரில் உள்ள அகத்திய மலையில் சித்தியடைந்தார்.

15.கீஷ்பதி கங்காதரர்
(கி.பி.317-329)

ஆந்திராவைச் சேர்ந்த அந்தணர். தந்தை, காஞ்சி பத்ரகிரி. இயற்பெயர், சுபத்ரர்.

அகத்திய மலைப்பகுதியில் இவர் சஞ்சரித்த போது அகத்திய முனிவரை தரிசித்து, அவரிடம் பஞ்ச தசாக்ஷரி மந்திர உபதேசம் பெற்றார்.

தன் பன்னிரண்டாவது வயதிலேயே பீடாதிபதியாகிவிட்ட இவர், பெரும் புலமையும் ஞானமும் மிக்கவர்.

கி.பி.329 சர்வதாரி வருஷம், சைத்ர மாதம் சுக்லப்பிரதமை நாளன்று அகஸ்திய மலைப் பகுதியில் சித்தியுற்றார்.

16. உஜ்வல சங்கரேந்திர சரஸ்வதி
(கி.பி.329-367)

இவர் மகாராஷ்டிர அந்தணர். இயற்பெயர் அச்சுத கேசவர். தந்தையார் கேசவ சங்கரர்.

இவர் சிறந்த அருளாளர். சீயாநந்தூர நாட்டு அரசனான குலசேகரனை தன் அருளால் பெரும் கவிஞனாக ஆக்கியவர். இமயம் முதல் குமரி வரை தல யாத்திரை செய்தவர். கி.பி.367-ல் அட்சய வருடம், சுக்லபட்சம், அஷ்டமி நாளில் காஷ்மீரில் உள்ள கலாபூரி என்ற ஊரில் சித்தியடைந்தார்.

17. பால குரு சதாசிவர்
(கி.பி.367-375)

காஷ்மீரில் அரசனாக இருந்த தேவமிச்ரன் என்பவரின் திருமகன் இவர். இவர் அவதரித்த சில வருடங்களில் இவரது தந்தை ஜைனமதத்தைத் தழுவி விட்டார். ஆனால் சதாசிவரோ சிறுவயதிலேயே வேதாந்தத்தில் பற்றுள்ளவராக இருந்தார். தந்தை, தன் மகனை மாற்ற எவ்வளவோ முயற்சித்தும் பலன் இல்லை. இரண்யனின் முயற்சிகள், பிரகலாதனிடம் பலிக்காதது போல தோல்வியடையவே, வெகுண்ட மன்னன், தன் மகன் என்றும் பாராது, சதாசிவரை சிந்து நதியில் வீசியெறிந்தான்.

நீரில் தத்தளித்த சிறுவனை பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பூரிவசு என்பவன் மீட்டு, சிந்து நதியில் கிடைத்ததால் சிந்து தத்தன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். பின்னர், யாத்திரை வந்த உஜ்வலரிடம் ஒப்படைத்தான். அவர் அருளால் சிறுவன், ஸ்ரீபாலகுரு சதாசிவேந்திரர் ஆனார்.

தன் 17-ம் வயதில் காஞ்சி பீடாதிபதியான இவர், பாலிக, பௌத்த சமயத்தவரை, நம் நாட்டை விட்டு, புறத்தே செல்லுமாறு செய்தார்.

தன் 25-ம் வயதில் கி.பி.375 பவ ஆண்டு, ஜேஷ்ட மாதம் கிருஷ்ண பட்ச தசமியில் நாசிக் அருகில் உள்ள த்ரயம்பகத்தில் சித்தியடைந்தார்.

18.சுரேந்திரேந்திர சரஸ்வதி
(கி.பி.375-385)

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மதுராநாதர் என்பவரின் மகன் இவர். தன் யோகத் திறமையால் யோகி திலகர் என்று கூறப்பட்டவர். இயற்பெயர் மாதவர்.

துர்த்தீவி என்ற பிரபலமான நாத்திகனை தன் வாதத்தால் தோற்கடித்தவர் இவர். இதனைக் கேள்விப்பட்ட காஷ்மீர மன்னன் நரேந்திராதித்யன், தன் அரியணையையும் அரசுரிமையையும் சுரேந்திரரின் பாதங்களில் சமர்ப்பித்து வணங்கினான்.

கி.பி.385 தாரண ஆண்டு மார்கசீரிஷ மாதம் சுக்ல பிரதமையில் உஜ்ஜயினியில் சித்தியடைந்தார்.

19.வித்யாகனேந்திரர் II
(கி.பி.386-398)

ஸ்ரீகண்டர் என்ற இயற்பெயருடைய இவர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த உமேச சங்கரர் என்ற அந்தணரின் மகன். குழந்தைப் பருவத்திலிருந்தே இவருக்கு வெண்மேக நோய் இருந்தது. அதனால் தினமும் 1008 தடவை சூரிய நமஸ்காரம் செய்து, நோயிலிருந்து விடுதலை பெற்றார். எனவே சூரிய தாசர் என்று அனைவராலும் புகழப்பட்டார்.

மார்த்தாண்டவித்யாகனர் என்ற பெயரும் இவருக்குண்டு. தன் 18-ம் வயதில் காஞ்சி பீடாதிபதியான இவர், கி.பி. 398 ஹேவிளம்பி வருடம், பாத்ர பத மாதம், கிருஷ்ணபட்ச நவமியில் கோதாவரி நதி தீரத்தில் சித்தியடைந்தார்.

20. மூகசங்கரேந்திர சரஸ்வதி
(கி.பி.398-437)

இவர், வித்யாவதி என்னும் வானவியல் வல்லுநரின் மகன். பிறந்ததி-லிருந்தே பேசும் திறனற்று இருந்த இவர், காஞ்சி காமகோடி பீடாதிபதி திருவருளால் பேசும் திறன் பெற்று மூக பஞ்ச சதி என்ற 500 பாடல்களைப் பொழிந்தார்.

இவர் காலத்தில் காஷ்மீரின் மன்னனாக இருந்தவன் மாத்ருகுப்தன். பேரரசன் சகாரி விக்கிரமாதித்தன் சபையில் சந்தனம் அரைப்பவனாக இருந்து, சகாரியின் கருணையால் காஷ்மீர் மன்னனானவன். கவித்திறமையும் உடைய மாத்ருகுப்தன், மிகுந்த ஆணவத்துடன் யாரையும் மதிக்காமல் செயல்பட்டான்.

அவனை ஆட்கொள்ள விரும்பினார் மூகசங்கரர். மாத்ருகுப்தன் அரண்மனையில் ராமிலன் என்ற குதிரை ராவுத்தனும், மேது என்னும் யானைப் பாகனும் இருந்தார்கள். அரசனின் ஆணவம் அடங்க, அந்த இருவரும் பெரும் கவிஞர்களாக மாறுமாறு மூகசங்கரர் அனுக்ரஹம் செய்தார். அதன்படியே அவர்களும் ஆனார்கள். குதிரைக்காரனான ராமிலன், `மணிப்ரபா' என்ற கவிதை நாடக நூலை எழுதினான். யானைப் பாகனான மேது, `ஹயக்ரீவ வதம்' என்னும் நாடக நூலை இயற்றினான்.

அவர்கள் இருவரையும் பெரும் புலவர்களாக்கியது மூகசங்கரர்தான் என்பதை உணர்ந்த மன்னன் மாத்ருகுப்தன், மனம் மாறினான்.

ஆணவம் அழிந்து ஆசார்யாளின் திருவடியைப் பணிந்தான். `ப்ரவரசேனன்' என்பவனை காஷ்மீர் மன்னனாக ஆக்கிவிட்டு, ஞானம் பெற்று, மூகசங்கரருடன் காசியாத்திரை மேற்கொண்டான்.

அதுமட்டுமல்ல, மூகசங்கரர், மாபெரும் சமுதாயப் பணியையும் புரிந்தார். காஷ்மீரில் ஜீலம் நதி முதல் சிந்து நதிக்கரை வரை பரவியிருந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் பொதுமக்கள் நலனுக்காக நெடுஞ்சாலை ஒன்றை மன்னனின் உதவியுடன் ஏற்படுத்தினார். நமது துரதிருஷ்டம், இன்று அது கிடைக்கவில்லை.

அற்புதங்கள் பலபுரிந்த மூகசங்கரர், கி.பி.437ல் தாது வருடம், ச்ரவண மாதம், பௌர்ணமி நாளில் கோதாவரி நதி தீரத்தில் சித்தியுற்றார்.

21.ஸார்வபௌம சந்திரசேகரேந்திரர்
(கி.பி.437-447)

காஷ்மீர மன்னனாக இருந்து, மனம் திருந்திய மாத்ருகுப்தன்தான் இவர்.

சந்தனம் அரைப்பவனாக இருந்த இவர் சகாரி விக்கிரமாதித்தனால் காஷ்மீர் மன்னனாக மாறியது ஒரு சுவையான கதை.

உஜ்ஜைனி மன்னனான விக்ரமாதித்தன், காஷ்மீரத்தை வென்று, காஷ்மீர் அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்தான். நள்ளிரவு, திடீரென விழிப்புற்றான் மன்னன்.

விளக்குகள் எல்லாம் அணைந்து இருள் சூழ்ந்திருந்தது. உடனே காவலரை அழைத்தான் மன்னன். பதில் வரவில்லை. உரத்த குரலில் அழைத்தான் மன்னன். அப்போது அரண்மனையில் சந்தனம் அரைக்கும் சிறுவனான மாத்ருகுப்தன் மட்டும் பதில் தந்துவிட்டு, விளக்கை ஏற்றி வைத்தான்.

அவனிடம் மன்னன், ``அனைவரும் தூங்கியிருக்க, நீ மட்டும் ஏன் தூங்கவில்லை?'' என்று கேட்டான்.

அதற்கான பதிலை சிறுவன் மாத்ருகுப்தன், ஒரு பாடலாகவே பாடினான்.

சிறுவனின் அரச பக்தியையும் கடமையுணர்வையும் கண்ட பேரரசன் விக்கிரமாதித்தன், காஷ்மீரின் மன்னனாக அவனையே நியமித்துவிட்டு உஜ்ஜைனி போய்ச் சேர்ந்தான்.

மாத்ருகுப்தன், காஞ்சிப் பெரியவரிடம் ஆசிபெற்று ஸார்வ பௌமன் என்னும் பெயருடன் பீடாதிபதி ஆனார்.

கி.பி.447-ல் சிரவண மாதம், கிருஷ்ணாஷ்டமி நாளில் வாரணாசியில் இவர் முக்கியடைந்தார்.

22.பரிபூர்ண போதேந்திரர்
(கி.பி.447-481)

மகாராஷ்டிர அந்தண மரபைச் சேர்ந்த இவர், ரத்னகிரி என்னும் ஊரில் பிறந்தவர். மதுரா என்பது இயற்பெயர். தந்தை பெயர், ராமநாதர்.

தன்வந்திரியைப் போன்று பெரும் மருத்துவப் புலமை உடையவராக இவர் இருந்தார். `அஸ் மா பிலாபக' என்னும் மந்திர சாஸ்திரத்திலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார். பெரிய யோகியும் கூட.

கி.பி.481-ல் ரௌத்ரி ஆண்டு, கார்த்திகை மாதம் சுக்லபட்ச நவமியன்று ஜகந்நாதம் அருகில் சித்தியடைந்தார்.

23. சத்சித் சுகேந்திர சரஸ்வதி
(கி.பி.481-512)

ஆந்திர நாட்டு ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த அந்தணர். கிரீசர் என்பது இயற்பெயர். தந்தை சோமநாராயணர்.

சிறந்த முருக பக்தரான அவர், சதா முருகனையே பிரார்த்தனை செய்து, முருகப் பெருமானின் அனுக்ரஹம் பெற்றவர்.

வானியல் நிபுணர் ஆர்யபட்டர், இவரது காலத்தவரே. நாத்திகரான ஆர்யபட்டரை வாதத்தில் வென்று, அவருக்கு மெய்ஞான மார்க்கத்தைக் காட்டினார் இந்த ஆசார்யாள்.

பின்னர், ஆர்யபட்டர் வேதாந்த முறையில் பிடிப்புடன் இருந்தாலும், சூரிய கிரகணம் பற்றி ஆராய ஒரு முறை கடல்தாண்டி வெளிநாடு சென்றார். அந்தக் காலத்தில் அந்தண சமூகத்தினர் வெளிநாடு போவது சாஸ்திரங்களுக்கு முரணானது. எனவே ஆர்யபட்டரை, பெரியவர்கள் சமூக பிரஷ்டம் செய்தார்கள். அதைப் பார்த்த ஆசார்யார், இந்த விஷயத்தில் தலையிட்டு, சில பிராயச்சித்தங்களைச் செய்யச் சொல்லி இக்கட்டிலிருந்து ஆர்யபட்டரைக் காப்பாற்றினார்.

சத்சித் சுகேந்திரர் கி.பி. 512 கர ஆண்டு, வைசாக சுக்ல சப்தமி நாளில், முந்தைய ஆசார்யாளைப் போலவே ஜகந்நாதத்திற்கு அருகில் சித்தியுற்றார்.

24. சித்சுகேந்திரர் I
(கி.பி. 512-527)

கொண்காண நாட்டைச் (மகாராஷ்டிரா) சேர்ந்த இவரது இயற்பெயர் சிவசர்மா. தன் அருளாட்சிக் காலமான 15 ஆண்டுகளைப் பெரும்பாலும் கொண்காணப் பகுதியிலேயே கழித்தார்.

கி.பி.527 பிரபவ ஆண்டு, ச்ரவண சுக்ல நவமி நாளில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்னகிரிக்கு அருகில் சித்தியடைந்தார்.

Comments