ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

கடம்பவனத்தின் நடுவில் வசிப்பவளும், சூரிய மண்டலத்தின் நடுவில் யோகிகளால் தியானிக்கப்படுபவளும், மூலாதாரம் முதலிய ஆறு தாமரை போன்ற சக்கரங்களில் தோன்றுபவளும், உண்மையில் சுத்த சத்வ பிரதானமாய் மின்னல் கொடி போல நிர்மலமாக இருப்பவளும், ரஜோ குணத்தின் சேர்க்கையால் செம்பருத்தியின் சிவந்த நிறம் பெற்றவளும், சந்திர கலையைச் சேகரமாக அணிந்து உலகங்களைக் களிக்கச் செய்கின்றவளுமான திரிபுர சுந்தரியை நமஸ்கரிக்கிறேன்.

- ஸ்ரீ திரிபுரசுந்தரி ஸ்தோத்திரத்தில் ஜகத்குரு ஆதிசங்கரர்

கயிலாயத்தில், அந்தக் குளிரில் அமைதியாய்ப் பல காலங்கள் இருந்ததற்கு ஒரு மாற்றாக, பாரதம் முழுவதும் கால் கடுக்க நடந்தாயிற்று. வந்த வேலையான அத்வைதத்தை நாடு முழுக்கப் பரப்பியாயிற்று. தட்சணாமூர்த்தியாக தவக் கோலத்தில் இருந்ததற்கு மாற்றாக உபன்னியாசங்களையும், பாடல்களையும் செய்தாயிற்று. மளமளவென ஏராளமான நூல்களை எழுதியாயிற்று. பூஜை புனஸ்கார முறைகளைக் கற்றுக் கொடுத்தாயிற்று. செய்தும் ஆயிற்று.

இனி?

வந்த காரியம் முடிந்து திரும்ப வேண்டியதுதான் என்று நினைத்தார் ஆதிசங்கரர். முப்பத்து இரண்டு வயது நிரம்பிற்று.

மெதுவாகத் தன் பணிகளையெல்லாம் குறைத்துக் கொண்டே வந்தார் ஆசார்யாள். தன் சீடர் சுரேச்வரரின் பெருமையை மற்றவர்கள் உணருமாறு செய்தார்.

ஆசார்யாளின் பிரதம சீடராக சுரேச்வரர் இருந்தாலும், மற்ற சீடர்கள் அவரிடம் கொஞ்சம் வித்தியாசம் காட்டினார்கள். காரணம், அவரது பூர்வாஸ்ரமம். மண்டன மிஸ்ரராக, அத்வைதத்திடமிருந்து அவர் விலகியிருந்ததை சிலர் இன்னமும் நினைவில் வைத்திருந்தார்கள். ஆசார்யாளின் பல உபநிஷத பாஷ்யங்களுக்கு விருத்தியுரை அருளினார் சுரேச்வரர். அது தவிர நைஷ்காம்ய ஸித்தி என்ற நூலை எழுதி தன் முழுமையான அத்வைத ஈடுபாட்டையும் வெளிப்படுத்தினார். தட்சணாமூர்த்தி ஸ்லோகத்திற்கும், விளக்கவுரை எழுதினார். இதன் மூலம் சுரேச்வரரின் பெருமையை மற்றவர்கள் உணர்ந்தனர். சீடர்களுக்கிடையே இருந்த சிறுசிறு பூசல்களையெல்லாம் கூட மெல்லக் களைந்தார் ஆசார்யாள். அனைவரிடமும் அன்பொழுகப் பேசினார். எல்லோரின் சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார். அவரது துரித நடவடிக்கைகளின் காரணம் சீடர்களுக்கும், மற்றவர்களுக்கும் புரிந்தது. அவர்களை இனம்புரியாத சோகம் பற்றிக் கொண்டது.

ஒரு சுபயோக சுபதினத்தில் சுரேச்வரரை, காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியாக நியமித்தார் ஜகத்குரு ஆதிசங்கரர்.

இப்போது சுரேச்வரர், எல்லோரின் அன்பையும் பெற்றுவிட்டார் என்றாலும் முன்புபோல, பூர்வாஸ்ரம பேச்சுகள் துளியும் எழும்பக் கூடாது என்று கருதிய ஆசார்யாள், சந்திரமௌளீஸ்வரரையும், திரிபுரசுந்தரியையும் பூஜை செய்ய சர்வக்ஞாத்மரை நியமனம் செய்தார். யார் இவர்? ஒரு சிறுவராக வந்து ஆசார்யாளிடம் மூன்று தினங்கள் வாதிட்டாரே, அவர்தான்.

வைகாசி மாதம், சுக்லபட்ச ஏகாதசி தினம், தன் சீடர்களையும், பக்தர்களையும் ஒன்று கூட்டினார் சங்கரர். எல்லோரும் கண்கலங்கக் கூடினார்கள். கடவுளே, கடவுளை பூஜித்தது மாதிரி சங்கரர், சந்திர மௌளீஸ்வரரை பூஜித்த காட்சியை இனிமேல் காண முடியாதே என்று அத்தனை பேரும் வருந்தினார்கள். அவர் இல்லாமல், அவரைப் பார்க்காமல் எப்படி வாழப்போகிறோம் என்று தவித்தார்கள். அனைவரையும் புன்சிரிப்புடன் பார்த்தார் ஜகத்குரு. அவர்களின் கடமைகளை வலியுறுத்த எண்ணி, தன் வாழ்நாள் முழுவதும் உபதேசித்து அருளிய தத்துவங்களை எல்லாம் வெண்ணெயைப் போல் திரட்டி, எளிய முறையில் ஐந்து பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார். அதற்கு ஸோபான பஞ்சகம் என்று பெயர்.

ஐந்து உபதேசப் பாடல்கள் என்று அதற்கு அர்த்தம்.

வேதோ நித்யம தீயதாம் ததுதிதம்
கர்ம ஸ்வநுஷ்டீயதாம்
தேநேஸஸ்ய விதீயதாமபசிதி :
காம்யே மதிஸ்த்யஜ்யதாம் |

பாபௌக: பரிதூயதாம்
பவஸுகே தோஷோநுஸந்தீயதாம்
ஆத்மேச்சா வ்யவஸீயதாம்
நிஜக்ருஹாத் தூர்ணம் விநிர்கம்யதாம் ||

நித்தியம் வேதத்தை ஓது. அந்த வேதத்தின் விதிக்கு இணங்கக் கர்மத்தை நன்றாகச் செய். அந்தக் கர்மாநுஷ்டானத்தைக் கொண்டே ஈசனுக்குப் பூசனையைச் செய். இதைத் தவிர வேறு காம்ய பலன்களில் புத்தியைச் செலுத்தாதே. (ஆசையற்ற இந்த ஈச பூஜையினால்) பாவப் பெருக்கை உதறித் தள்ளு. உலகப் பற்றை ஒட்டிய இன்பங்களெல்லாம் முடிவில் துயரங்களாகவே மாறுகின்றன என்னும் உண்மையை இடையறாமல் மனத்தில் இருத்திக் கொள். உன்னை நீ அறிவதில் ஆவலை வளர்க்க முனை. குறுகிய தன்னலப்பற்றிலிருந்து விரைவில் உன்னை மீட்டுக் கொள்.

ஸங்க : ஸத்ஸு விதீயதாம்
பகவதோ பக்திர்த்ருடா தீயதாம்
ஸாந்த்யாதி : பரிசீயதாம் த்ருடதரம்
கர்மாஸு ஸந்த்யஜ்யதாம் |

ஸத்வித்வாநுபஸ்ருப்யதாம் ப்ரதிதினம்
தத்பாதுகா ஸேவ்யதாம்
ப்ரஹ்மைகாக்ஷரமர்த்யதாம்
ஸ்ருதிஸிரோவாக்யம்
ஸமாகர்ண்யதாம் ||

நல்லவர்களிடத்தில் உறவு கொள். பகவானிடத்தில் அசையாத அன்பை நிலைநிறுத்து. உன் புலன்களை அடக்குதல் முதலிய உத்தம குணங்களைத் தீவிரமாகப் பழகிக் கொள். தாமதியாமல் இல்லறத்துக்கு உரிய கர்மங்களை விடுத்துத் துறவறத்தை மேற்கொண்டு, ஆத்மஞானியை குருவாக நாடி, அவருடைய திருவடித் தொண்டை இடையறாமல் மேற்கொள். அவரிடம் பிரணவோபதேசத்தை வேண்டிக் கொள். வேதங்களின் முடிவான பொருளை உரைக்கும் வாக்கியங்களைக் கேட்டு அறிந்து கொள்.

வாக்யார்த்தஸ்ச விசார்யதாம்
ஸ்ருதிஸீர:பக்ஷ: ஸமாதீயதாம்
துஸ்தர்க்காத் ஸுவிரம்யதாம்
ஸ்ருதிமதஸ்தர்க்கோநுஸந்தீயதாம் |
ப்ரஹ்மாஸ்மீதி விபாவ்யதாமஹரஹர்
கர்வ : பரித்யஜ்யதாம்
தேஹேஹம்மதிருஜ்யதாம்
புதஜநைர்வாத: பரித்யஜ்யதாம் ||

மறைமுடி வாக்கியங்களின் பொருளை நன்றாக ஆராய்ந்து கண்டறிந்து அந்த முடிவையே மேற்கொள். வீண் தர்க்க வாதங்களில் ஈடுபடாதே. வேதத்தின் முடிவான பொருளை அடைவதற்குத் துணை செய்யும் நியாயமான காரணங்களை மாத்திரம் நன்கு ஆலோசித்துக் கொள். எங்கும் நிறைந்த பரம்பொருளே இந்த உடலிலும் நான் என்னும் அறிவுப் பொருளாக நிற்பது என்ற உண்மையை இடைவிடாமல் நினைவில் இருத்திக் கொள். `நான் ஞானவான்' என்னும் கர்வத்தை அறவே ஒழி. இந்த உடலிலே நான் என்ற எண்ணத்தையும் விடு. படித்த மேதாவிகளுடன் வாதம் செய்ய வேண்டாம்.

க்ஷுத்வ்யாதிஸ்ச சிகித்ஸ்யதாம் ப்ரதிதிநம்
பிக்ஷௌஷதம் புஜ்யதாம்
ஸ்வாத்வந்நம் நது யாச்யதாம்
விதிவஸாத் ப்ராப்தேந ஸந்துஷ்யதாம் |

ஸீதோஷ்ணாதி விஷஹ்யதாம்நது
வ்ருதா வாக்யம் ஸ்முச்சார்யதாம்
ஔதாஸீந்யம்பீப்ஸ்யதாம்
ஜநக்ருபாநைஷ்டுர்ய முத்ஸ்ருஜ்யதாம் ||

நாள்தோறும் பீடிக்கும் பசி என்னும் பிணிக்கு, பிகை்ஷயாம் அன்னத்தை மருந்தாக உட்கொள். ருசியுள்ள உணவைத் தேடாதே. தெய்வ வசத்தினால் தானாகக் கிடைத்ததைக் கொண்டு மகிழ வேண்டும். குளிர், உஷ்ணம் போன்ற ஒன்றுக்கு ஒன்று மாறி வரும் இடைஞ்சல்களைப் பொறுமையை மேற்கொண்டு பொருட்படுத்தாமல் இரு. பயனில்லாமல் ஒரு வார்த்தைகூட வாயினின்றும் வெளிவராதபடி ஜாக்கிரதையாக இரு. எந்த விஷயத்திலும் பற்றற்ற நடுநிலையை விரும்பு. உலக மக்களின் போற்றுதலையோ, தூற்றுதலையோ மனத்தில் வாங்கிக் கொள்ளாதே.

ஏகாந்தே ஸுகமாஸ்யதாம் பரதரே
சேத: ஸமாதீயதாம்
பூர்ணாத்மா ஸுஸமீக்ஷ்யதாம் ஜகதிதம்
தத்வ்யாபிதம் த்ருஸ்யதாம்|
ப்ராக்கர்ம ப்ரவிலாப்யதாம்
சிதிபலாந்நாப்யுத்தரை: ஸ்லிஷ்யதாம் ப்ராரப்தம் த்விஹ புஜ்யதாமத
பரப்ரஹ்மாத்மநா ஸ்தீயதாம் ||

தனித்திருக்கும் நிலையான ஏகாந்த வாசத்தின் வாழ்வை நாடு. உயர்வினும் உயர்வான பரம்பொருளிடம் சித்தத்தை லயிக்கச் செய். எங்கும் நிறைந்து எல்லாமாய் நின்ற ஒரே பொருளான ஆத்மாவை அந்தப் பரிபூர்ண நிலையில் பார். ஆத்மா ஒன்றே உண்மையில் எல்லாமாய் நிற்பதனால், இந்தப் பிரபஞ்சம் எனப்படும் எல்லாப் பொருள்களும் வெறும் தோற்றமே என்னும் தெளிவைப் பெறு. இவ்விதத் தெளிவினால், முன் செய்த வினைகளையெல்லாம் அழித்துவிடு. இவ்விதத் தெளிவின் பலத்தினால், வருங்காலத்தில் நேரிடும் கர்மங்களிடம் ஒட்டாமல் இரு. இந்தப் பிறவியின் இன்ப துன்பங்களைச் சந்தோஷத்துடன் ஏற்று அனுபவித்து விடு. இவ்வளவு வினைகளையும் கடந்த நீயே பரம்பொருள்.

கணீரென்ற குரலில் அந்த ஐந்து பாடல்களைப் பாடினார் ஆதிசங்கரர். நெக்குருகிக் கேட்டார்கள் அனைவரும். இந்தப் பிறவியின் இன்ப துன்பங்களை சந்தோஷத்துடன் ஏற்று அனுபவித்து விடு என்று சொன்ன ஆசார்யாளின் வாக்குகளை இந்தப் பிறவியில் பார்க்கக் கொடுத்து வைத்த இன்ப முகத்தை இனிமேல் பார்க்க முடியாதே என்று துன்பப்பட்டார்கள். அதை அனுபவித்தார்கள். ஏற்றுக் கொண்டார்கள். நடமாடும் தெய்வத்தை வணங்கினார்கள்.

ஜகத்குரு ஆதிசங்கரரின் மனம் இப்போது இதயத்தில் இருந்தது. அதாவது சிதம்பரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார். உலகத்துக்கு காஞ்சிபுரம் மைய ஸ்தானம் என்றால் சிதம்பரம் இதயஸ்தானம் அல்லவா? இன்னும் ஒரு கடமை பாக்கியிருக்கிறதே. ஈசனிடமிருந்து தான் பெற்ற பஞ்சலிங்கங்களில் மீதமிருந்த மோட்ச லிங்கத்தை சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தார் ஆசார்யாள்.

மெல்ல எழுந்தார் சங்கரர். கூட்டத்தினருக்கு ஆசி கூறினார். `ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர' பக்தர்களின் கோஷம் வானைப் பிளந்தது. வருணபகவானுக்கு ஆசார்யாளைப் பார்க்கும் ஆசையிருக்காதா? மழை பொழிந்தது. வாயு பகவான் மட்டும் சும்மாவா? பெரும் காற்று அடித்தது. பஞ்சலிங்கத்தை பாரதத்தில் ஸ்தாபித்த ஞானகுருவைப் பார்க்க பஞ்ச பூதங்களும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. பக்தர்கள் அனைவரும் மௌனமாய்ப் பின் தொடர காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைந்தார் சங்கரர்.

அம்மன் சன்னதிக்குள் நுழைந்ததும் கர்ப்ப கிரகத்தையடைந்தார் ஆசார்யாள். அங்கே சகல தேவதைகளும் அவருக்காகக் காத்திருந்தார்கள். பாற்கடல் அலைவீசியது. கற்பக மரங்கள் கிளை தாழ்த்தி வணங்கின. ஸ்ரீசக்கரம் ஒளி பொருந்தி அவரை வரவேற்றது. அதிலே காமேஸ்வரனாக சிவபெருமான் திகழ, அவரது இடதுபுறம் அமர்ந்தபடி காமாட்சி திவ்ய தரிசனம் தந்தாள்.

இத்தனை அற்புதமான காட்சியைக் கண்ட சங்கரரின் கண்கள் பனித்தன. அவரது திருவாயிலிருந்து தேனாக திரிபுர சுந்தரி வேதபாதஸ்தவம் என்ற அற்புத தோத்திரம் வெளிவந்தது. தேவி தனக்கு எப்படிக் காட்சி தந்தாள் என்பதை அதிலே சொல்கிறார் பாருங்கள்... யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல!

மழைக்கால மேகம் போல்
குளிர்பவளே,
தாமரை போல் மென்மையானவளே,
தங்க மயமான யாழை ஏந்தியவளே,
விலையுயர்ந்த ரத்தினமாலை
அணிந்தவளே,
சிவந்த கன்னங்களால்
பிரகாசிப்பவளே,
சூரிய மண்டலத்தின் நடுவில்
யோகிகளால்
தியானிக்கப்படுபவளே,
மூலாதாரம் முதலிய ஆறு
தாமரை போன்ற
சக்கரங்களில் தோன்றுபவளே,
மின்னல் கொடி போல் நிர்மலமாய்
இருப்பவளே,
செம்பருத்தியின் சிவந்த நிறம்
பெற்றவளே.
சந்திர கலையை நெற்றிச்
சூடியாய் அணிந்தவளே,
கொங்கை தனில்
அணைக்கப்பட்ட
யாழையுடையவளே,
சுருண்ட குழல்களால் எழில்
பெற்றவளே,
மிருதுவான தாமரையில்
அமர்ந்தவளே,
சிவந்த கண்களை உடையவளே,
இனிமையான மொழி
வாய்ந்தவளே,
அரவிந்த பாணமேந்தியவளே,
சிவப்புப் புள்ளி நிரம்பிய சேலை
தரித்தவளே,
குங்குமப்பூ கலந்த சந்தனம் பூசிக்
கொண்டவளே,
நெற்றியிலும் வகிட்டிலும் கஸ்தூரிப்பொட்டு தரித்தவளே,
சதுர்புஜங்களில் கணை, வில், கயிறு, அங்குசம் தாங்கியவளே,
மந்தஹாசத்துடன் புன்னகைப்பவளே,
உன் கூந்தலை அப்சரஸ் பெண்கள் அழகுபடுத்துகிறார்கள்.
உன் மேல் வாசனைத் திரவியங்களை சரஸ்வதி பூசுகிறாள்.
உன்னை ரத்னாபரணங்களால் லக்ஷ்மி அலங்கரிக்கிறாள்.

இவ்வாறு காட்சிதரும் தேவியே நான் உன்னை நமஸ்கரிக்கிறேன்.

என்று தன் தேனினும் இனிய குரலில் ஸ்தோத்திரம் பாடினார் ஆசார்யாள்.

இந்த ஸ்லோகத்தின் ஒவ்வொரு கடைசி வரியும் வேத வாக்கியங்களாகும். வேதங்கள், காமாட்சி தேவியின் தலை முதல் பாதம் வரை பார்க்க முடியாமல் பாதியிலேயே திரும்பியதாக ஒரு கதை உண்டு. ஆனால் இங்கே நம் ஜகத்குரு ஆதிசங்கரர், அந்த வேதங்களின் வார்த்தைகளாலேயே காமாட்சியை பாதம் முதல் தலை வரை தரிசனம் செய்து வைக்கிறார்.

பாடி முடித்ததும் ஈசனும், தேவியும் ஒருவருக்குள் ஒருவர் ஐக்கியமுறுவதைக் கண்டார்.

அதைக் கண்டபடி, உருகியபடி தானும்... ஆசார்யாளும் கசிந்து, அந்த ஏக வஸ்துவில் கலந்து போகத் துவங்கினார். அந்த ஒளி, தாயே வணங்குகிறேன். தாயே வணங்குகிறேன் என்ற சங்க சப்தத்துடன் புறப்பட்டு கர்ப்பகிரகத்துக்குள் நுழைந்தது. காமாட்சியின் வடிவத்திற்குள் இரண்டறக் கலந்து கரைந்து போயிற்று. மறைந்து போயிற்று.

மறைந்து போயிற்றா? ஆதி சங்கரருக்கு மறைவு உண்டா?

32 வயதுக்குள் புதிய உலகம் படைத்த அந்த மகானுக்கு அழிவு ஏது? நினைக்கும் பக்தர்களின் முன் நித்தம் நித்தம் வந்து நிற்கும் சிவபெருமானல்லவா அவர். ஞானத் துறவியல்லவா அவர். ஒவ்வொரு மனிதனின் இதயத்திற்குள்ளும் நித்தம் அந்தத் தாமரை மலர் புன்னகைக்கிறது, அரவணைக்கிறது, ஆசிர்வதிக்கிறது!

ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர

Comments