நீயும் ஓர் அர்ஜுனன்தான்!

இந்த உலகில் நமக்கு மிக விருப்ப மானவர்கள் பட்டியலில், கடவுள் முதலிடத்தில் இருப் பார்... அப்படித்தானே?

ஆனால், கடவுளுக்கு மிகப் பிடித்தமானவர்கள் லிஸ்ட்டில் நாம் இருக்கிறோமா? மில்லியன் டாலர் கேள்வி இது!

அர்ஜுனனுக்குள்ளும் இந்தக் கேள்வி எழுந்தது. அவனுக்குக் கூறிய பதிலின் மூலம், தனக்குப் பிடித்த மானவர் யார் என்பது பற்றி நமக்கும் விளக்குகிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. அவரது பட்டியலில் நாம் இருக்கிறோமா? இல்லாவிட்டால், வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்ப்பதைப் போல, அவரது லிஸ்ட்டில் நமது பெயரையும் சேர்க்க முயற்சிப்போம்!

'கிருஷ்ணா, உனக்கு எப்படிப்பட்ட பக்தர்களைப் பிடிக்கும்?' என்ற அர்ஜுனனது கேள்விக்கு பதிலளித் தார் ஸ்ரீகிருஷ்ணர்:

அத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: ஸம து: கஸ¨க: க்ஷமீ
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிஸ்சய:
மய்யர்பிதமனோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:

அதாவது, 'எந்த உயிரையும் வெறுக்காமல் அனைவரிடமும் நட்பு மற்றும் இரக்கத்துடனும் நடப்பவன்... பற்று- அகங்காரம் முதலியன இல்லாமல், இன்ப- துன்பங்களில் சமநிலையில் இருப்பவன்... 'போதும்' என்ற மனப்பான்மையும் மன்னிக்கும் பக்குவத்தையும் பெற்றவன்... தியானத்தில் உறுதியும் திட சித்தமும் கொண்டவன்... மனம்- புத்தி இரண்டையும் என்னிடம் அர்ப்பணித்து வாழ்பவன் எவனோ... அவனே எனக்குப் பிரியமானவன்.

எல்லோரையும் எனக்குப் பிடிக்கும் என்றாலும் இன்னும் சிலர், என்னை மிகவும் நெருங்கி விடுகிறார்கள்!'' என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

பகவான் தரும் பட்டியலைப் பார்த்தீர்களா... இது குறித்த அவரது விளக்கம் இன்னும் நீள்கிறது:

'கல், புல், புழு, மனிதன் என சகல உயிர்களிட மும் பாகுபாடற்ற அன்பு கொண்டவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள்!'

அந்த மனிதர்- பாறை உடைக்கும் தொழிலாளி. தினமும் குறிப்பிட்ட அளவு பாறையை உடைத்தால்தான் போதுமான வருமானம் கிடைக்கும்.



அன்றும் வழக்கம் போல் பாறை உடைத்துக் கொண்டிருந்தார். பெரிய பாறை ஒன்று- அதைப் புரட்டவோ உடைக்கவோ முடியவில்லை. அதை உடைத்து முடித்தால்தான் அன்றைய வேலை நிறை வடையும். ஆனால், வெகு நேரம் போராடியும் அந்த பாறையை உடைக்க முடியவில்லை. அப்போது... அங்கு வந்த புத்த சந்நியாசி ஒருவர், இவரது கஷ்டத்தைக் கண்டார். அவர், அந்த பாறையின் அருகில் சென்று, அதை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார். பிறகு, அதனிடம் ஏதோ பேசினார். சற்று நேரம் கழித்து தொழிலாளியை அழைத்தவர், 'இப்போது முயற்சி செய்!' என்றார். தொழிலாளிக்கு பாறையைப் புரட்டுவதும் உடைப்பதும் இலகுவாக இருந்தது. ஆம், அந்த புத்த சந்நியாசியின் கனிவான பேச்சு கல்லையே இளகச் செய்தது!

தங்கக் கூண்டில் அடைத்து வைத்து பால் சோறு ஊட்டினாலும் கிளி சந்தோஷப்படாது. அந்தக் கூண்டைத் திறந்து விடுவதே அதற்கு சந்தோஷம்!

எந்த உயிர்களையும் அதன் போக்கில், அதன் இயல்புப்படி வாழ விடுவதே நல்லது. கண்ணனின் வேணுகானத்தில் மயங்கி பசுக்கள் நிறைய பால் சொரிந்ததும், செடி- கொடிகள் நம் உரையாடலுக்கு தலை அசைப்பதும் வாடிக்கையான ஒன்று. நம்மால் தான் அவற்றை உணர முடிவதில்லை.

செடி- கொடிகளிடம் நேசம் கொண்ட அந்தப் பெண்மணி, தனது வீட்டு மொட்டை மாடியில் ரோஜா தோட்டம் வைத்திருந்தார். காலையில் எழுந்ததும், தோட்டத்துக்குச் செல்வார். ஒவ்வொரு செடிக்கும் அன்போடு நீர் ஊற்றி பராமரித்தார். அவற்றில் இருந்து ஒரு பூ- இலையைக்கூட கிள்ள மாட்டார்.

ஒரு நாள் அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் அந்தப் பெண். முன்பு போல் செடி- கொடிகளைக் கவனிக்க இயலவில்லை. மனமுடைந்த அவர் நோய்வாய்ப்பட்டார். அவர் வளர்த்த செடிகளும் வாடிப் போயின. வீட்டில் உள்ள மற்ற வர்கள், தண்ணீர் ஊற்றினர். ஆனாலும் அந்த செடிகள் அனைத்தும் இலைகள் உதிர்ந்து மொட்டையாக நின்றன. சில நாட்கள் கழித்து அந்தப் பெண் குணமடைந்தாள். மீண்டும் தோட்டத் துக்குச் சென்றாள். அவள் நீர் ஊற்றி அளவளாவ ஆரம்பித்ததும் செடிகள் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தன.

மனிதர்களுக்கு மட்டும்தான் அன்பு காட்டத் தெரியுமா? தாவரங்களும் விலங்குகளும் கூட அன்பை பகிர்ந்து கொள்ளும்; நம் துன்பத்தில் பங்கு கொள்ளும்.

'பற்று- அகங்காரம் முதலியன இல்லாதவன் எனக்குப் பிரியமானவன்!'

சிலர் எதற்கெடுத்தாலும், 'நான் சொல்றதைத்தான் கேட்கணும். நான் வைத்ததுதான் சட்டம்' என்பார்கள். 'நான்' என்ற இந்த இரண்டு எழுத்து சொல்லே எல்லா அவஸ்தைகளுக்கும் பிறப்பிடம். கோபம், பொறாமை, பேராசை முதலான துர்க்குணங்கள், இந்த 'நான்' என்பதில் இருந்தே உருவாகின்றன. எனவேதான் ஞானிகள், 'நான் என்பது தொலைய வேண்டும்!' என்றனர். 'நான்' என்ற அகங்காரத்தைத் தொலைப்பது எப்படி? நமக்கு ஈடுபாடு உள்ள எல்லாவற்றிலும் இருந்து விலகிக் கொண்டால்- அவற்றில் இருந்து நம்மை தனியே பிரித்துக் கொண்டால் போதும். நம் மனம் லேசாகி விடும்; வாழ்க்கையும் எளிதாகும். இப் போது... தனிமையான நிலையை அடையும் 'நான்', 'நான் யார்?' என்ற கேட்க ஆரம்பிக்கும். இதுவே ஆத்ம விசாரம்- ஆத்மாவின் தேடல்!

ஆத்ம தேடல் உள்ள மனிதன் எல்லா உயிர்களிடத் தும் அன்பாக இருப்பான். எந்த உயிரைப் பார்த்து உலகம் சந்தோஷிக்கிறதோ, எந்த மனிதரால் உலகுக்கு ஒரு துன்பமும் இல்லையோ அந்த உயிர், கடவுளுக்கு நெருக்கமானது!



இன்ப- துன்பங்களில் சமநிலையில் இருப்பவன்... 'போதும்' என்ற மனப்பான்மையும் மன்னிக்கும் பக்குவத்தையும் பெற்றவன் கடவுளுக்கு நெருக்கமானவன்!

எப்போதும் நாம், நமது சந்தோஷத்துக்கு தடையாக உள்ள எதையும் விரும்புவதில்லை. நமக்கு இடைஞ்சல் தரும் சகோதரர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், கல், முள், நாய்... என எல்லாரும் எல்லாமும் நமக்குப் பகைதான்! இந்த மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நமக்கு பாதகமானவற்றையும் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெரிய மாளிகையோ... நதிக்கரையோ... கடை வீதியோ... இவற்றில் எங்கு வசிக்கும் நிலை ஏற்பட்டாலும் சரி, எல்லாச் சூழலையும் சமமாக பாவித்து வாழ்பவன்- எந்த சந்தர்ப்பத்திலும் இயல்பாக இருப்பவன் கடவுளுக்கு பிரியமானவன்.

மும்பையில் நான் வசித்தபோது நண்பர்கள் சில ரது வீடுகளைப் பார்த்து ஆச்சரியம் அடைந்திருக் கிறேன். பூஜை அறை, குளியல் அறை, ஹால் என்று எல்லாமே அந்த சிறிய வீட்டுக்குள்தான். அதற்குள் ளேயே அவர்களது வாழ்க்கை!

மாணவர்கள் சிலர், பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பர். காரணம் கேட்டால், ''எனக்கு, படிப்பதற்கு வசதியாக 'ஸ்டடி ரூம்' ஒன்று இருந்திருந்தால், நானும் வகுப்பில் முதல் மாணவனாக வருவேன்'' என்பார்கள். தனி அறையில் படித்தால்தான் படிப்பு வருமா என்ன? தெரு விளக்கின் வெளிச்சத்தில் படித்து முன்னேறி, அமெரிக்க ஜனாதிபதியானவரே ஆபிரகாம் லிங்கன். எந்த அறையில் இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தினால் போதும், முதல் மாணவனாக முடியும்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று... இருக்கும் இடத்தை தன் சொந்த இடமாக நினைப்பவனை, அலைபாயாத புத்தியுள்ளவனை கண்ணனுக்கு ரொம்பப் பிடிக்கும். தங்கும் இடம் மட்டுமல்ல, வாழ் வில் சந்திக்கும் இன்ப- துன்பங்களையும் சமமாக பாவிக்கும் மன நிலையை வளர்த்துக் கொண்டால் பகவானின் பிரியத்துக்கு உரியவராகலாம்.

யே து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே
ச்ரத்தானா மத்பரமா பக்தாஸ்தே தீவ மே ப்ரியா:

'நான் கூறிய பக்தி தொண்டின் அழிவற்ற பாதையை மிகுந்த நம்பிக்கையுடன் பின்பற்றி, என்னையே மிக உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டிருக்கும் பக்தர்களை நான் மிகவும் விரும்புகிறேன் அர்ஜுனா..!'' என்கிறார் பரமாத்மா.

'எல்லாமே கிருஷ்ணன்தான்... எல்லாம் அவனது கருணையால் தாமாகவே நடக்கின்றன...!' என்ற எண்ணம் உள்ளவருக்கு துன்பமே இல்லை. இறைவ னுக்குப் பிடித்தவர்களும் இவர்கள்தான்.

மேலைநாடுகளில், உயிர் பிரிவதைத் தடுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் மனித உடலை அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்கும் முயற்சிகளுக்கும் கோடிக் கணக்கில் பணம் செலவிடப்பட்டது. இந்த முயற்சிக ளுள் குறிப்பிடத் தக்கது- 'மம்மிகள் உருவாக்கம்'. போன உயிரைத் திரும்ப கொண்டு வரும்போது, உடல் தேவைப்படும் அல்லவா? எனவேதான் அவர்கள் உடலை பதப்படுத்த நினைத்தனர். இறந்த உடல்களை பாதுகாத்து வைத்தால் உலகம் ஒரு சவக்கிடங்காக மாறிவிடாதா... உலகம் எவ்வாறு புதுப்பிக்கப்படும்... நினைத்துப் பார்க்கவே முடியவில்லை, அல்லவா?

ஆனால், இந்தியர்கள் மட்டுமே அழுகிப்போகும் உடலைப் பற்றி கவலைப்படாமல், இறந்த பிறகு உயிர் என்னவாக மாறுகிறது என்பதை ஆராய்ந்தனர். இந்த ஆத்ம தேடல் இன்றும் தொடர்கிறது; நமது சிறப்பும் இதில்தான் இருக்கிறது!

Comments