மார்கழி பாடல்கள்

மார்கழி மாதத்தில் விடியற் காலையில் எழுந்து பஜனை செய்வது நம் நாட்டு வழக்கம். அது எவ்வளவு சிறந்ததென்பதை ராஜாஜி சொல்கிறார்:

‘ஆயிரக்கணக்கான வருஷங்களாக மார்கழி மாதத்தில் நாமெல்லாம் சந்தோஷமாகக் காலத்தைக் கழித்து வந்ததாகத் தெரிகிறது. அந்த மாதத்தில் பாட்டுகள் பாடி, பேரானந்தம் பெறுவது வெகு நாட்களாக ஏற்பட்டிருக்கிறது.

பாட்டுக்காக நம் நாட்டில் இந்தப் பழக்கம் ஏற்படவில்லை. பெரிய மரத்தில் சிறு வெற்றிலைக் கொடி ஏறி, தனக்கு ஓர் அதரவைப் பெற்றுப் பிறருக்கும் சந்தோஷத்தை அளிக்கிறது. வெயிலை அடையக் கோல் தேடியோடும் கொடிபோல் பழைய வழக்கத்தின் பேரில் பாட்டு ஏறிச் சந்தோஷத்தையும் இன்பத்தையும் தருகிறது.

வாழ்க்கையை நடத்துகிறவர்களுக்குப் பக்தி இயற்கைச் சம்பத்து. மார்கழி மாதம் பக்திக்குச் சரியான மாதம்.வெயிலும் குளிரும் பக்குவமாகச் சேர்ந்த மாதம். தேகத்தைச் சரியாக வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து, பக்தியுடன் ஞானப் பாட்டுக்களைப் பாடி ஞானத்தையும் உணர்ச்சியையும் புதுப்பித்துக் கொள்ளுகிறார்கள். பழைய நதிகள், பழைய குளங்களுடன், நம் ஆசாரியர்கள் லேசாக நம்மை ஆட்கொள்ள இந்தப் பக்திப் பாட்டுக்களைச் செய்தார்கள். குழந்தைகளுக்குப் பாட்டும், பெரியவர்களுக்கு ஞானமும், நிஷ்டையில் இருப்பவர்களுக்குப் பக்தியும், எல்லாம் ஒன்றுதான்.

பகலெல்லாம் வாழ்க்கை நடத்தி விட்டு, ராத்திரி நாம் தூங்குகிறோம். தூக்கம் தானாக வந்துவிடுகிறது. இந்த இயற்கையான ஆச்சரியத்தைப் பாருங்கள். இது டாக்டர்கள் செய்ததா? இப்பொழுது தான் அதில் உள்ளதை அறிந்து டாக்டர்கள் பிறருக்கு, ‘‘ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்ற மருந்தைச் சொல்லுகின்றனர். ஓய்வெடுத்துக் கொள்வதென்பது தூக்கந்தான். தூக்கத்தில் எவ்வளவு ஆனந்தம் பாருங்கள்! கவலையே இல்லை. அதனால்தான் மனிதனுக்கு ஏற்பட்ட நூறு பிராயத்தில் பாதி தூக்கமாகவே இருக்கிறது. சிலர் வாழ்க்கையில் தமக்குள்ள பற்றுதல் காரணமாகத் தூக்கத்தைக் குறைத்துக் கொள்ளுகிறார்கள். தூங்குவது க்ஷேமம். மனிதன் நீண்ட நாள் ஜீவித்திருப்பதற்கு அவசியமானது.

இந்தத் தூக்கத்தை விட்டுக் குளிர்காலத்தில் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து பக்திப் பாடல்களை அனுபவித்து ரசித்து இன்புறுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் இந்தத் தூக்கம் வேறு. பக்திப் பாடல்களிலே சொல்லப்படும் தூக்கத்தின் அர்த்தம் வேறு. அஞ்ஞானமாகிற தூக்கம் போக வேண்டும். இந்த இருள் நீங்கினால் அகம்பாவம் குறையும். இது முக்கியமான உட்கருத்து.

நாம் பிரதிதினமும் ஆகாரம் உட்கொள்ளுகிறோம். இந்த ஆகாரம் தேகத்தில் பயன்பட்ட பிறகு தேகத்தில் விஷம் உண்டாகிறது. இந்த விஷத்தைத் தேகம் அகற்றி உணவுச் சத்தை ஏற்கின்றது. மாறி மாறி இந்த வேலை நடக்கிறது. இப்படி மாறி மாறி வேலை நடப்பதே உயிர். இந்த உயிர்தான் ஆகாரத்தை உட்கொள்ளுகிறது. ஆகாரத்திலிருந்து உண்டாகும் விஷமே தூக்கத்தைக் கொடுக்கிறது.

சிலருக்குத் தூக்கம் வருவதில்லை என்றால் தூக்கம் தரும் விஷத்தை மருந்தாகக் கொடுக்கின்றனர். அது தூக்கத்தை உண்டாக்குகிறது. சிறிது கொடுத்தால் போதையும் தூக்கமும் உண்டாகின்றன. அதிகமானால் உயிருக்கே ஆபத்து உண்டாகிறது.

பின் ஒரு காலத்தில் இந்தத் தூக்கமே வராமல் நாள் முழுவதும் இரவு பகலாக வாழ்க்கை நடத்த ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிப்பார்களோ என்னவோ தெரியாது! காலராவைத் தடுக்கக் கிருமிகளை செலுத்துவதுபோல மாடுகளுக்கு மருந்து மூலம் கருத்தரிக்கச் செய்வதுபோல மனிதன் எப்பொழுதும் தூங்காமல் இருக்க வழி கண்டு பிடிக்கலாம். ஏனெனில் அப்பொழுதுதானே எப்பொழுதும் இவனுக்குக் கவலை ஏற்பட்டு கொண்டே இருக்கும்! அணுவை ஆராய்ச்சி செய்து இறுதியில் மனுஷ்யனை நிர்மூலமாக்க உபயோகிக்கவில்லையா? கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல் என்ன என்ன வருமோ, யார் கண்டது? தெய்வத்துக்குத்தான் தெரியும்.

ரோஜாச் செடியைப் பாருங்கள். முள்ளுடன் கூடிய அந்தச் செடியிலிருந்து அழகான, மணமான, இன்பமான புஷ்பம் வருமென்று யார் கண்டது? யார் உண்டாக்கியது? இந்த ரகசியத்தை அறிந்தால் உலகை அறியலாம். கடவுளை அறியலாம். ஜலத்தை ஆராய்ச்சி செய்து அதில் இரண்டு வாயுக்கள் இருப்பதாகக் கண்டுபிடித்தனர். ஆனால் அந்த இரண்டு வாயுவையும் சேர்த்து ஜலமாக்கி விடுவதென்பது சுலபமா? சாத்தியமா? வேண்டுமானால் ஜலத்தை இரண்டு வாயுக்களாகப் பிரிக்கலாம். மனுஷ்யனைக் கூட அங்கம் அங்கமாகப் பிரித்துக் காணலாம். டாக்டர்களைக் கேட்டால் விளக்கிச் சொல்லுவார்கள். அங்கங்களைக் கொண்டு மனுஷ்யனைச் செய்ய முடியுமா? அது ஆண்டவனுடைய வியாபாரம். அது அவன் சக்தி. இவ்விதம் ஒவ்வொரு பொருளையும் தெரிந்து கொண்டால் ஆஸ்திகம் தானாக வரும். ஆஸ்திகம் என்பது அடக்கம். ஆண்டவன் படைப்பில் வியப்பும் சந்தோஷமும் உண்டாகிக் கலந்ததே ஆஸ்திகம். அறிவுக்கும் பக்திக்கும் விரோதம் இல்லை. ஆனால் அன்பும் அடக்கமும் சேர வேண்டும்.

ஒரு வேப்பங் கொட்டையை எடுத்துக் கொண்டு பாருங்கள். அதிலிருந்து எவ்வளவு பெரிய மரம் உண்டாகிறது! பூ, காய் எல்லாம் உண்டாகின்றன. அதிலும் எவ்வளவு வியப்பான கசப்பு ஏற்பட்டிருக்கிறது? அந்தச் சிறு வேப்பங்கொட்டையில் ஆண்டவன் இதை எல்லாம் வைத்திருக்கிறான். இதுதான் இப்படி என்றால், ஒரு சிறிய ஆலம் பழத்தில் எவ்வளவு விதைகள்! ஆயிரக்கணக்கான விதைகளில் ஒவ்வொன்றும் தனக்குள் எவ்வளவு பெரிய மரத்தை அடக்கிக் கொண்டிருக்கிறது! இது ஒன்றிலேயே ஆண்டவன் பெருமையையும் படைப்பையும் அறியலாம்.

அடக்கமும் பக்தியும் வேண்டும். படிக்காதவர்கள் அடைவார்கள். படித்தவர் பாடுதான் கஷ்டம். படித்தவர்களைத்தான் ஆண்டவன் காப்பாற்றவேண்டும் போலிருக்கிறது. அவர்களுக்குத்தான் அந்தப் பக்தியும் அடக்கமும் லேசில் வருவதில்லை.

ஒரு மோட்டார் வண்டி மணிக்கு 25 மைல் வேகம் போனாலே உள்ளே உட்கார்ந்திருக்கும்போது பயம் உண்டாகிறது. இப்பொழுது நாமெல்லாம் உட்கார்ந்திருக்கிறோம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறோம்? உண்மையில் அப்படி இல்லை. மணிக்கு 72.000 மைல் வேகத்தில் சூரியமண்டலத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறோம். இதை நாஸ்திகர்கள் கூட ஒப்புக்கொள்ளுவார்கள். இதற்குள்தான் ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடித்துக் கொள்வது, திட்டுவது, கோபம், தாபம் எல்லாம். இவ்வளவு வேகமாகச் சுற்றும் வண்டிக்குள் ஏறிக் கொண்டிருக்கிறோமே என்று அறிந்தால் அடக்கம் ஏற்படும். பக்தியும், பிறகு அதிலிருந்து ஆஸ்திகமும் ஏற்படும்.

பக்திப் பாடல்களைப் படியுங்கள். தேவாரத்தையும் திவ்யப்பிரபந்தங்களையும் படியுங்கள். பாடத் தெரிந்தால் மிகவும் சிலாக்கியம். தானாகவே ஆஸ்திகம் வரும். இல்லாவிட்டால் சயின்ஸையாவது நன்றாகப் படியுங்கள். ஆண்டவனுடைய பிரபாவம் தெரியும்.

(ராஜாஜி ஓர் இடத்தில் பேசியபேச்சு இது.)

Comments