தை மாத சிறப்புகள்

சூரியனின் தேர்ப்பாதை வடதிசையில் மாறும் உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள். இது மிகவும் புண்ணியமான காலம் என்று புராணங்கள் சொல்கின்றன. உயர்வான இந்த மாதத்தில் பல தலங்களில் சிறப்பான பூஜைகள் குறித்த சிறு விவரம் இதோ:

மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் தைத் திங்கள் முதல் நாளான மகர சங்கராந்தியன்று சந்திரசேகர சுவாமி திருவீதி உற்சவம் நடைபெறும். மறுநாள் மாட்டுப் பொங்கலன்று கற்பகாம்பாள் கன்னி உற்சவமும், காலையில் அம்மனுக்குக் குளக்கரையில் அபிஷேக அலங்காரமும் ஆராதனையும் திருவீதி உற்சவமும் நடைபெறும். மாலையில் சந்திரசேகர சுவாமி பரிவேட்டை உற்சவம் நடைபெறும்.

ரத சப்தமி அன்று சந்திரசேகர சுவாமி ரதத்தில் எழுந்தருளி, மேலண்டைக் குளக்கரையில் தீர்த்தவாரியும், பின்னர் திருவீதி உற்சவமும் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமைகளில் கற்பகாம்பாள் பிராகார உலா நடைபெறும்.

தேவ குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்திற்கு உரியவர். அறிவுக் கடவுள் என்று அவர் போற்றப்படுகின்றார். எனவே, பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி அமையும் மாதமான தை மாதத்தில் தைப்பூச தினத்தன்று புண்ணியத் தீர்த்தங்களில் நீராடினால், அறிவாற்றல் வளரும் என்பது ஐதிகம்.

மயிலை கபாலீசுவரர் கோயிலில் தைப்பூச நாளையொட்டி முதல்நாள் சந்திரசேகர சுவாமி தெப்போற்சவமும், இரண்டாவது மூன்றாவது நாட்கள் சிங்கார வேலர் தெப்போற்சவமும் நடைபெறும்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தெப்பத்திருவிழா பன்னிரு நாட்கள் நடைபெறும். எட்டாம் நாள் வலை வீசுதலும், பத்தாம் நாளில் தீர்த்தமும், தெப்பந் தள்ளுதலும், 11-ம் நாள் கதிரறுப்பும், 12-ம் நாள் தெப்பமும் மிகச் சிறப்பாக நடைபெறும்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் ராமதீர்த்த தெப்பக் குளத்தில் தெப்பத் திருவிழாவும், கடைசி செவ்வாய்க் கிழமை பிடாரியார் பெருவிழா முதல் காப்பும், முழு நிலவு நாளன்று தேன் வழிபாடும் நடைபெறுகின்றன.

ஷ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் நடக்கும் திருத்தேர் உற்சவம். இதை வீர பூபதி உடையார் என்பவர் 1413_இல் தொடங்கி வைத்ததால், பூபதி திருநாள் என்றே பெயர்.

சமயபுரம் மாரியம்மன் தைப்பூசத்தன்று மாரியம்மன் வட திருக்காவிரிக்கு எழுந்தருளி, அண்ணனாகிய ரங்கநாதரிடமிருந்து பட்டாடை, பரிவட்டம் மற்றும் சீர்வரிசைகளைப் பெற்றுத் திரும்புகிறாள்.

Comments