கைகேயி கொடியவளா?

ராமாயணம், நம் எல்லோருக்கும் தெரிந்த கதை. அதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் நமக்கு மிகப் பரிச்சயமானவர்கள்தான். ஆனால், அந்தக் கதையில் இடம்பெறும் சம்பவங்கள், அவற்றில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்கள், கதாபாத்திரங்களின் உண்மைப் பரிமாணம் ஆகியவை பல்வேறு காலங்களில், பல்வேறு காவிய கர்த்தாக்களாலும் உபன்யாசகர்களாலும் நமக்குப் பலவிதமான முறைகளில் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு புதிய கோணத்தில் சொல்லப்பட்ட கைகேயியின் கதையைப் பார்ப்போமா?

தசரதனின் மூன்று மனைவியரில் இளையவள், கைகேயி. அழகே உருவானவள். வீரமும் விவேகமும் கொண்டவள். தன் அன்பாலும் பாசத்தாலும் தசரதன் உள்ளத்தில் மட்டும் அல்லாமல், அனைவரின் உள்ளத்திலும் இடம்பெற்றவள். எல்லாவற்றுக்கும் மேலாக, தன் மகன் பரதனிடத்தில் காட்டும் அன்பையும், பரிவையும்விட, ஸ்ரீராமனிடம் அவள் அதிக அளவு அன்பும் பாசமும் கொண்டிருப்பதை நினைத்துப் பெரிதும் மகிழ்ந்தான் தசரதன். ஆகவே, அவளிடம் அதிக மதிப்பு வைத்திருந்தான் தசரதன்.

இத்தனை உண்மைகளுக்கு நடுவில், ஒரே இரவில் அவள் மனம் மாறி, 'ராமனுக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும்’ என்றும், '14 வருடங்கள் ஸ்ரீராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்றும் தசரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றாள் கைகேயி. ராமனுக்கு மட்டுமின்றி, தன் மகன் பரதனுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு கொடிய செயலை கைகேயி செய்திருப்பாளா என நினைத்துப் பார்த்தால், அதனை அப்படியே ஏற்க மனம் வரவில்லை.

மந்தரை என்றொரு கூனி. கைகேயியின் தாதியாக இருந்தவள். அவளிடம் அரை மணி நேரம் பேசியதன் விளைவு... விவேகம் மிக்க கைகேயி மனம் மாறி, ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்ப விரும்பினாள் என்பது உண்மையானால், அவளது கதாபாத்திரத்தின் உயர்வே அழிந்துவிடுகிறதே!



ஏதோ பேராசையின் காரணமாகத் தன் மகனுக்கு அரசு பதவி தேடித் தரவேண்டும் என்று விரும்பி, அதன் பொருட்டு, கைகேயி தசரதனிடம் வரம் கேட்டிருக்கலாம்; வாதாடி, பரதனுக்கு முடிசூட்ட நினைத்திருக்கலாம் என்பதையாவது ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளலாம். ஆனால், பிரியத்துக்குகந்த ராமனைக் காட்டுக்கு அனுப்பும்படி சொல்ல, அந்தத் தாய்க்கு எப்படி மனம் வந்திருக்கும்?
சற்றே சிந்தித்துப் பார்க்க, கைகேயி எத்தகையவள் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

சம்பராசுரன் என்ற அசுரனுடன் தசரதன் ஒருமுறை போர் புரிந்தான். அப்போது, அவனுடைய தேருக்குச் சாரதியாக இருந்தாள் வீராங்கனை கைகேயி. தேரின் அச்சு முறிந்த நிலையில், தன் விரலையே அச்சாணியாகக் கொடுத்து, தன்னுயிரைப் பணயம் வைத்து, தசரதன் உயிரைக் காத்தாள். அவளின் பதிபக்தி மற்றும் தியாகத்தில் சிலிர்த்த தசரதன், இரண்டு வரங்களை அவளுக்கு அளித்தான். பேராசைக்காரியாக அவள் இருந்திருந்தால்... 'தானே பட்ட மகிஷியாக வேண்டும்’ என்றும், 'தனக்குப் பிறக்கும் குழந்தைக்கே முடிசூட்ட வேண்டும்’ என்றும் அப்போதே வரம் கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அப்படிச் செய்யவில்லை. கணவனுக்குச் செய்த சேவை, தன் கடமைதானே என்று உணர்ந்து, 'வரங்கள் இப்போது வேண்டாம். தேவைப்பட்டால் பின்பு எப்போதாவது கேட்டுப் பெற்றுக்கொள்கிறேன்’ என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டாள். அப்படிப்பட்டவளா இந்தக் கொடிய வரங்களைக் கேட்டிருப்பாள்?

ஆராய்ந்து பார்த்தால், இதற்கு ஏதோவொரு மூல காரணம் இருந்திருக்க வேண்டும், அதற்குப் பின்னே எவரும் அறியாத சம்பவங்கள் சில புதைந்து கிடக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒரு முறை தசரதன் வேட்டையாடச் சென்றபோது, தடாகம் ஒன்றில் தண்ணீர் முகந்து செல்ல வந்திருந்த சிறுவன் சிரவணகுமாரன் என்பவன் மீது, தெரியாமல் அம்பு எய்திவிட்டான். கமண்டலத்தில் தண்ணீர் முகந்த சப்தம், யானை தண்ணீர் குடிப்பது போலக் கேட்டது. அதனால் தூரத்திலிருந்து தசரதன் எய்த 'சப்தவேதி’ என்ற பாணம், ஒலி வந்த திக்கை நோக்கிச் சென்று, சிறுவன் உயிரைப் போக்கிவிட்டது. உயிர் துறக்குமுன் அந்தச் சிறுவன் வேண்டிக்கொண்டது போல, அவன் சடலத்தை எடுத்துக்கொண்டு, கண்ணில்லாத அவனுடைய வயோதிகத் தாய்- தந்தையிடம் சென்று, நடந்ததைக் கூறினான் தசரதன். மகனை இழந்த துயரத்தில் அந்தப் பெற்றோர் தசரதனுக்குக் கடும் சாபமிட்டுவிட்டு, உயிர் துறந்தனர். 'எங்களைப் போலவே புத்திரனைப் பிரிந்து, அந்தச் சோகத்தில் நீ உயிர் துறப்பாய்’ என்பதே அந்தச் சாபம். தசரதன் உள்ளத்தைக் கரையான் போல் அரித்துக் கொண்டிருந்த சம்பவம் இது.



வேட்டைக்குச் சென்று திரும்பிய தசரதன், சொல்லவும் மெல்லவும் முடியாமல், கலங்கித் தவித்ததை தனது விவேகத்தால் ஊகித்த கைகேயி, தசரதனின் தேர்ப் பாகன், அந்தரங்கக் காவலன் ஆகியோரைக் கூப்பிட்டு, சாமர்த்தியமாக விசாரித்து, நடந்த உண்மைகளை ஓரளவு தெரிந்துகொண்டாள்; சாபம் பற்றிய உண்மை தெரிந்து, கைகேயி பதறினாள்; துடித்தாள்.

புத்திரன் எனப் பொதுப்படை யாகவே குறிப்பிட்டதால், அது தசரதன் பெற்ற புதல்வர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அல்லவா? இதன் உண்மைகளை இன்னும் ஆராய்ந்து அறிய விரும்பினாள் கைகேயி. அந்தரங்கமாக, ஆஸ்தான ஜோதிடர்களை அழைத்தாள். தசரதனின் ஜாதகத்தையும், குழந்தைகளின் ஜாதகத்தையும் கொடுத்து ஆராயச் சொன்னாள். பொதுவாக, விண்ணில் உள்ள கிரகங்களது அமைப்பின்படி, நாட்டின் நிலை குறித்தும் விளக்கப் பணித்தாள். அந்தக் கால கட்டத்தின்படி, கிரக நிலைப்படி, அயோத்தி சிம்மாசனத்தில் எவர் அமர்ந்தாலும், அவர்கள் சில நாட்களில் மரணம் அடைய நேரும் என ஜோதிடர்கள் கூறினார்கள்.

'புத்திரனைப் பிரிந்து’ என்கிற சாபம் 'புத்திரன் இறந்து’ என்கிற அர்த்தத்தில் இடப்பட்டாலும், இது குறித்து சாஸ்திர விற்பன்னர்கள் மற்றொரு விளக்கமும் பரிகாரமும் சொன்னார்கள். ஒருவேளை, புத்திரன் தந்தையை விட்டு வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டால், அதனால் புத்திரன் உயிர் பிழைத்துவிடுவான்; தந்தை மட்டும் அந்தப் பிரிவால் உயிர் துறக்க நேரிடும் எனும் விளக்கம், ஜோதிட பண்டிதர்களால் தரப்பட்டது. ஆக, தசரதன் உயிர் துறப்பது சாபத்தால் ஏற்பட்ட, தவிர்க்க முடியாத நியதி எனும் உண்மையை உணர்ந்தாள் கைகேயி. அதே நேரம், மைந்தன் ஸ்ரீராமனையாவது காப்பாற்றியாக வேண்டும் என நினைத்தாள்.

மனைவியின் கடமையைவிட, தாய்மையின் அன்புதான் அங்கே தலை தூக்கி நின்றது. ஸ்ரீராமனை மட்டும் தசரதனிடமிருந்து பிரிக்க நினைத்தால், அதற்குச் சரியான காரணம் காட்ட வேண்டுமே? அதற்காகத் தியாகமும் அன்பும் உருவான அந்தத் தாய், தன்னை இந்த உலகம் 'பேராசைப் பேய்’ என்று நிந்தித்தாலும் பரவாயில்லை என மனத்தை திடப்படுத்திக் கொண்டு, ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். பரதனுக்கு முடிசூட்ட வேண்டினாள்; அதற்குத் தடையில்லாதபடி, ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்பச் சொல்வது போல் இருக்கட்டும் என முடிவு செய்தாள். அப்படியே வரமும் கேட்டாள். அது மட்டுமா? ஒருவேளை, சக்கரவர்த்தியாக தசரதனே தொடர்ந்து நீடித்தால், ஜோதிடப்படி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னன் உயிர் துறக்க நேரிடுமே?! அதையும் எப்படியாவது தடுத்துவிட முடியாதா என ஏங்கினாள். எனவே, கணவனையும் ஸ்ரீராமனையும் காப்பதற்குத் தன் மகனைத் தியாகம் செய்யத் துணிந்தாள். ஆகவே, பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வலியுறுத்தினாள்.



'பரதனுக்கு முடிசூட்டிவிடுகிறேன். ஆனால், ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டாமே’ எனக் கெஞ்சினான் தசரதன். ஆனால், கைகேயியோ பிடிவாதமாக இருந்தாள். ஸ்ரீராமன், அவளுக்கு மட்டும் குழந்தை அல்ல; அயோத்தியின் குழந்தை. அவன் அவதாரப் பணி நிறைவேற வேண்டும். ராவணனைப் போன்ற அரக்கர்களை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவன் அல்லவா ஸ்ரீராமன்! ஆகவே, அவன் காக்கப்பட வேண்டும். எனவே, விதிப்படி தனக்கு இடப்பட்ட பணியைச் செய்தாள் கைகேயி.

'பாவி கைகேயி சதி செய்து விட்டாளே!’ என்று எல்லோரும் அவளை நிந்தித்தனர். சீதையும் லட்சுமணனும் பின் தொடர, மரவுரி தரித்து, அயோத்தியை விட்டு ஸ்ரீராமன் தவக் கோலத்தில் கானகம் புறப்பட்டான். அவனைக்

காட்டில் விட்டுவர, ஒரு ரதம் புறப்பட்டது. அந்த ரதம், வீதியில் நகர முடியாதபடி மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு, அழுது புலம்பியது. ஊரே அழுது கொண்டிருந்தது. ஒருத்தியின் மனதில் மட்டும் ஸ்ரீராமனைக் காப்பாற்றிவிட்ட பெருமிதம் நிலைத்திருந்தது. அவள் கண்களிலிருந்தும் கண்ணீர் சிந்தியது. அது ராமனுக்காக அல்ல; புத்திர சோகத்தால் உயிர் நீத்து, தன்னை நிரந்தரமாகப் பிரியப் போகும் கணவன் தசரதனுக்காக!

ஸ்ரீராமன், அவதாரப் பணியைத் தொடங்கி விட்டான்; ராவணன் அழிவான்; துயர் தீரும் நேரம் வந்துவிட்டது என தேவர்களெல்லாம் பூமாரிப் பொழிந்தனர். அரக்கர்கள் அழிந்து, ராமனால் நல்லோர் காக்கப்படுவர் என்பதால், அவனைக் காட்டுக்கு அனுப்பிய கைகேயியை அவர்கள் மனதார, மானசிகமாக வாழ்த்தினர்.

ஊரார் பழித்தனர்; உலகோர் நிந்தித்தனர்; பெற்ற மகன் பரதனோ, தாயின் தியாகம் தெரியாமல், அவளை வெறுத்தான். ஏசினான். ஆனால், ஸ்ரீராமனுக்கு மட்டும் தன் அன்புத் தாய் கைகேயி செய்த தியாகம் தெரியும். ஆரண்ய முனிவர்களுக்கெல்லாம் அவள் பெருமை தெரியும். தேவர்களுக் கெல்லாம் அவள் செய்த உதவி புரியும்!

இப்போது சிந்தியுங்கள்... கைகேயி கொடியவளா?

Comments

  1. அரிய செய்தி. அருமையான பதிவு.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment