திருவடி தரிசனம்!






எத்தனையோ மகான்கள் இந்த பூமியில் அவதரித்திருக் கிறார்கள். பகட்டையும் படாடோபத்தையும் எதிர் பார்க்காமல், எளிமையை மட்டுமே விரும்பி ஏற்றுக் கொண்டு வாழ்ந்த ஒழுக்கசீலர்கள் அவர்கள். இத்தகைய மகான் களது சரிதத்தைப் புரட்டினால், கண்கள் கசியும்; இதயம் இளகும்.

தங்களுக்கென வாழாமல், பிறரது நலன் களை முன்னிறுத்தியே இவர்களது வாழ்க்கை யும் வரலாறும் அமைந்துள்ளது. இவர்களது ஜீவன் அடங்கி இருக்கும் தவச் சாலைகளைத் தரிசிப்பதே பெரும் பாக்கியம். நம் முன்னோர் செய்த தவப் பயன் விளைவாகவும், நமக்குள் இருக்கும் ஆன்மிக ஆற்றல் காரணமா கவும்தான் அந்த பாக்கியம் இந்த ஜென்மத்தில் நமக்குக் கிடைக்கிறது!

கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவிசலூர் என்கிற கிராமம். திருவிசநல்லூர் என்றும் சொல்வது உண்டு. திருஞானசம்பந்தர் தனது தேவாரத் தில், 'வியலூர்' என்று இந்த ஊரைக் குறிப்பிடு கிறார். இங்குள்ள சிவாலயம் பாடல் பெற்றது. தவிர, அருளாளர்களின் திருவடி பட்ட திவ்ய பூமி இது. ஸ்ரீபோதேந்திராள், மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள், சதாசிவ பிரம்மேந்திராள் (காஞ்சி காமகோடி பீடத்தில் வந்த பரமசிவேந்திரரின் சிஷ்யர்), ராமபத்ர தீட்சிதர், ராமசுப்பா சாஸ்திரிகள் முதலானோரின் வாழ்க்கை சரிதத்துடன் நிரம்ப தொடர்பு கொண்ட ஊர் திருவிசலூர். ஸ்ரீஐயாவாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள், கன்னட தேசத்தில் பிறந்திருந்தாலும், தனது வாழ்நாளின் பிற்பகுதியை இங்குதான் கழித்தார்.


திருவிசலூர் அக்ரஹாரத்தில் அப்போது வசித்து வந்தார் ஐயாவாள். அருகில், பிரமாண்டமாக ஓடும் காவிரி நதிக்கு அக்கரையில் திருவிடைமருதூர். அப்போதெல்லாம் இந்தப் பகுதியில் சிவ சேத்திரம் என்றால், அது திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி கோயிலைத்தான் குறிக்கும். எனவே, தினமும் அர்த்தஜாம பூஜை வேளையில் மகாலிங்க ஸ்வாமியைத் தரிசிக்க திருவிசலூரில் இருந்து பரிசலில் அக்கரைக்குச் சென்று வருவார். தவிர, ஒவ்வொரு பிரதோஷ வேளையின்போதும் தவறாமல் அங்கு இருப்பார் ஐயாவாள்.

ஒரு நாள், அர்த்தஜாம தரிசனத்துக்காக ஐயாவாள் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி சந்நிதிக்கு வந்தபோது, அவர் முகத்தில் கூடுதல் பிரகாசம்!தன்னுடன் இருந்த பக்தர்களுக்குப் பல உபதேசங்களை உருக்கமாக வழங்கினார். அன்றைய தினம், இறை இன்பம் குறித்த அவரது செயல்பாடுகளைக் கண்டு பக்தர்கள் பிரமித்து நின்றனர். ஐயாவாள், சிவ நாமத்தை ஜபித்துக் கொண்டே இருந்தார். கர்ப்பகிரகத்துக்குள் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி, ஜோதி சொரூபமாகக் காட்சி தந்து கொண்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களில் தன் சந்நிதி முன் நடக்கப் போகும் சிலிர்ப்பான அந்தக் காட்சியை, மகாலிங்கம் மட்டும்தானே உணர முடியும்? ஆம்! திட்டமிடுதலும், தீர்மானிப்பவனும் அவன்தானே!

உணர்ச்சிப் பெருக்குடன் 'நமசிவாய' நாமத்தை மனமுருகி நெடுநேரம் உச்சரித்துக் கொண்டிருந்த ஐயாவாள், திடீரென கருவறையை நோக்கி ஓட ஆரம்பித்தார். கர்ப்பகிரகத்துக்குள் இருக்கும் லிங்கத் திருமேனியை ஆலிங்கனம் செய்து கொள்ளும் மனோபாவத்துடன்... ஏதோ ஒரு சக்தியுடன் ஓடி வந்த ஐயாவாளை, ஆலய அர்ச்சகர் தடுக்க முற்பட்டார்;

முடியவில்லை. ஈசனின் சந்நிதிக்குள் நுழைந்து, பொன்னார்மேனியனின் ஆவுடை அருகே வந்ததும், ஐயாவாள் பொசுக்கென மறைந்து விட்டார். ஆம், ஸ்ரீமகாலிங்கத் திருமேனியில் ஐக்கியமாகி விட்டார் ஐயாவாள். இந்தக் காட்சியை நேரில் கண்ட அர்ச்சகர், பக்தர்கள் மற்றும் ஆலய சிப்பந்திகள் உட்பட பலரும் நடந்த சம்பவத்தின் தாக்கம் குறையாமல், மூர்ச்சையாகி கீழே விழுந்தனர். இன்னும் சிலர் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

ஸ்தூல உடம்புடன் ஜோதிர்லிங்க சொரூபனுடன் இரண்டறக் கலந்து விட் டார் ஸ்ரீஐயாவாள். எனவே, அவருக்கு அதிஷ்டானம் என்று கிடையாது. அவர் வாழ்ந்து, அனுப வித்து, பல நல் உபதேசங்களைப் பக்தர்களுக்கு வழங்கிய திருவிசலூர் வீட்டையே திருக்கோயிலாக பாவிக்கிறார்கள். அவரது நினைவுகளை, வாழ்க்கைச் சம்பவங்களை சொல்லும் இடமாக இன்று காட்சியளிக்கிறது அந்த சந்நிதி. 'ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சேரிடபிள் டிரஸ்ட்' என்கிற அமைப்பு, தற்போது நிர்வகித்து வருகிறது. ஸ்ரீகிருஷ்ணப்ரேமி அண்ணாவின் முயற்சியால், இது நன்றாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. சித்திரையில் வஸந்தோற்ஸவம், ஆவணியில் கோகுலாஷ்டமி உற்ஸவம், கார்த்திகை மாதத்தில் கங்காவதரண மகோத்ஸவம், மார்கழியில் ராதாகல்யாண மகோத்ஸவம் என்று பல விழாக் கள் சிறப்பாக நடந்து வருகின்றன.

ஸ்ரீதர ஐயாவாளின் வீட்டுக் கிணற்றில் கங்காதேவி நிரந்தர வாசம் செய்கிறாள். இதை, ஐயாவாளே தனது ஸ்லோகத்தில் குறிப்பிட்டிருக் கிறார். இந்தக் கிணற்றில் ஸ்நானம் செய்தால் கங்கையில் நீராடிய பலன் உண்டு.

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று கங்கை, இந்தக் கிணற்றில் பொங்கி வருவதாக ஐதீகம். எனவே, அன்றைய தினத்தில் புனிதம் வாய்ந்த இந்தக் கிணற்றில் நீராட எங்கெங்கிருந்தோ பக்தர்கள் சாரி சாரியாக வந்து சேருவார்கள். இந்துக்கள்தான் என்றில்லை... இஸ்லாமியப் பெண்மணிகள் உட்பட அனைத்து மதத்தினரும் இந்த மகானின் மகிமை உணர்ந்து, நீராடும் வைபவத்தில் கலந்து கொள்கிறார்கள்.

மூலவர் சந்நிதி என்று சொல்லப்படும் இடத்தில் ஐயாவாளின் உற்ஸவர் விக்கிரகம், ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி விக்கிரகம், ஸ்ரீநவநீதகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநடராஜரின் படங்கள் ஆகியவை காணப் படுகின்றன. விகட ராமசாமி சாஸ்திரிகள் என்பவ ரது காலத்தில்தான் ஐயாவாளுக்கு விக்கிரகம் செய்யப்பட்டு, முறையாக அவருக்கு ஆராதனை உற்ஸவம் தொடங்கப்பட்டது.

கார்த்திகை அமாவாசைக்கு முதல் நாள் இரவு இடைவிடாமல் பஜனை நடைபெறும். அதிகாலை பஜனை முடிந்ததும், பாகவதர்கள் அனைவரும் காவிரிக்குச் சென்று சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்வார்கள். கங்காஷ்டக ஸ்லோகம் சொல்வார்கள். உடன், ஏராளமான பக்தர்களும் சென்று காவிரியில் ஸ்நானம் செய்வார்கள். பிறகு, அங்கிருந்து நாம கோஷத்துடன் புறப்பட்டு வந்து ஸ்ரீமடத்தை அடைவர். அங்கு, கங்காதேவி வாசம் செய்யும் புனிதக் கிணறுக்கு விசேஷ பூஜைகள் செய்து அதில் ஸ்நானம் செய்வார்கள். இதைத் தொடர்ந்து, பக்தர்களும் அங்கு புனித நீராடுவார்கள் இதற்கென்றே நான்கு பக்தர்கள், கிணற்றின் அருகில் இருந்து கொண்டு, நீராட வரும் பக்தர்களது தலையில் கிணற்று நீரை இரைத்து ஊற்றுவார்கள். இந்தக் கிணற்றில் நீராடுவதற்கு முன் காவிரி ஸ்நானம் செய்ய வேண்டும் (இந்தக் கிணற்றில் பக்தர்கள் எப்போதும் நீராடலாம்). கார்த்திகை அமாவாசை காலத்தில் வரும் பக்தர்கள் தங்குவதற்கு விரிவான ஏற்பாடுகளை டிரஸ்ட் செய்கிறது. அதுபோல், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் குறை வில்லாமல் நடைபெறுகிறது.



நித்ய வழிபாடுகள் அனைத்தும் நன்றாகவே நடந்து வருகின்றன. சுப்ரபாதம், ராமாயணம்- பாகவதம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், டோலோற்ஸவம், பஜனை, நாம கோஷம் என்று எதற்கும் இங்கே குறைவில்லை. ஏகாதசி, அமாவாசை ஆகியவை விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகின்றன.

இறைவனின் விந்தையைப் பாருங்கள்... கர்நாடக தேசத்தில், மைசூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்த லிங்கார்யர் என்பவருக்கு மகனா கப் பிறந்து, தன் கடைசி காலத்தை திருவிசலூரில் கழித்து, அந்தப் பூமிக்கு புண்ணியம் தேடித் தர வேண்டும் என்பதற்காகவே ஐயாவாள் இங்கு வந்து குடி கொண்டார் போலும்!

தகப்பனாரது மறைவுக்குப் பிறகு, சமஸ்தானத் தில் தேடி வந்த உயர் பதவியையும் ஏற்காமல் மனைவி லட்சுமி மற்றும் தாயாருடன் யாத்திரை யாகப் புறப்பட்டு தமிழகம் வந்தார் ஐயாவாள்.

உலகில் பக்தி மார்க்கத்தைப் பரவச் செய்ய வேண்டும் என்பது மட்டுமே ஐயாவாளின் சிந்தை யில் மேலோங்கி இருந்தது. திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருபுவனம், திருநாகேஸ்வரம் ஆகிய தலங்களைத் தரிசித்து கடைசியாக திருவிசலூர் வந்து சேர்ந்தார். எண்ணற்ற பண்டிதர் கள் நிறைந்த இந்த தலமே, தான் தங்க வேண்டிய சேத்திரம் என்பதை உணர்ந்து அக்ரஹாரத்தில் குடி அமர்ந்தார். அந்த ஊரில் இருந்த அந்தணர்கள் ஐயாவாள் மீது பொறாமை கொண்டனர். ஆனால், ஆண்டவன், இவர் மீது அன்பு கொண்டான். தஞ்சையை ஆண்ட மன்னன் ஷஹாஜி ராஜனின் அன்புக்குப் பாத்திரமானார் ஐயாவாள்.

எண்ணற்ற நூல்களையும், ஸ்லோகங்களையும் எழுதி உள்ளார் ஐயாவாள். கோவிந்தபுரத்தில் ஸித்தி ஆன ஸ்ரீபோதேந்திராளுடன் (இவரைப் பற்றி சக்தி விகடன் 14.10.08 இதழில் 'திருவடி தரிசனம்' பகுதியில் கட்டுரை வெளியாகி உள்ளது) இணைந்து பல கிராமங்களுக்குப் பயணித்து நாம ஜபத்தின் மேன்மையை மக்களிடையே பரப்பினார். தீவிரமான சைவர் என்று ஸ்ரீஐயாவாள் சொல்லப்பட்டாலும், பேதம் பார்த்து எதையும் அவர் செய்ததில்லை. சிவபெருமானையும் ஸ்ரீகிருஷ்ணனையும் அவர் ஒன்றாகவே பார்த்தார்.

ஸ்ரீஐயாவாளின் வாழ்வில் நடந்த ஒரு சில அற்புதங்களைப் பார்ப்போம்.

திருவிசலூரில் தங்கி, நாம கீர்த்தன மகிமை பற்றித் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார் ஸ்ரீதர ஐயாவாள். இதையறிந்த ஆன்மிக அன்பர்கள் பலரும் தங்களது ஊர்களில் இருந்து கிளம்பி, திருவிசலூருக்கு வந்து ஐயாவாளின் உபதேசங்களைக் கேட்டுப் பேறு பெற்றனர். ஐயாவாளின் பெருமையையும், நாம மகிமை குறித்து அவர் செய்யும் பிரசங்கம் குறித்தும் தங்களுக்குள் உற்சாகமாக விவாதித்துக் கொண்டனர். 'இப்பேர்ப்பட்ட ஒரு மகான் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே நமக்கெல்லாம் பெருமை' என்று பூரித்துப் போயினர்.



புகழும் பெருமையும் ஒன்று சேர்ந்து ஒரு மனி தரை உயர்த்தும்போது, அதே துறையில் கொஞ்சம் பிரகாசித்து வரும் மற்றவர்களின் மன நிலை, இந்தக் கலியுகத்தில் நாம் அறியாததா? ஆம்! ஊரெல்லாம் ஸ்ரீதர ஐயாவாளின் பெருமையை புகழ்ந்து பேசும் போது, திருவிசலூர் அக்ரஹாரத்தில் வசித்த ஏனைய அந்தணர்கள் உள்ளுக்குள் புழுங்கிப் போனார்கள். 'எங்கிருந்தோ வந்த ஒரு அந்தணருக்கு இவ்வளவு பேரும் புகழுமா? ஏன், நமக்கெல்லாம் திறமை இல்லையா? பக்தி இல்லையா?' என்று எரிச்சல் பொங்கத் தங்களுக்குள் கூடிப் பேசினர். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இவரை மட்டம் தட்டி வைக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.

அப்போது கோகுலாஷ்டமி உற்ஸவம் வந்தது. திருவிசலூரில் வசிக்கும் அந்தணர்கள், இந்த விழாவை ஒவ்வொரு வருடமும் விமரிசையாகக் கொண்டாடுவர். அந்த வருடமும் உற்ஸவம் களை கட்டியது. உள்ளூரில் வசிப்பவர் என்கிற ஒரே காரணத்தால் ஐயாவாளை ஒதுக்கித் தள்ள முடியா மல், தாங்கள் நடத்தும் உற்ஸவத்துக்கு கடனே என்று அவரை அழைத்தனர் அந்தணர்கள். ஆனால், ஐயாவாள் அந்த உற்ஸவத்தைக் காணச் செல்லவில்லை. காரணம்- பக்திக்கு முக்கியத்துவம் தராமல், பகட்டுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த உற்ஸவம் நடத்தப்படுவதாக கருதினார் ஐயாவாள். இது, உள்ளூர் அந்தணர்களை இன்னும் கோபப் பட வைத்தது. 'பாரேன்... உற்ஸவத்துக்கு வராமல், நம்மைப் புறக்கணிக்கிறாரே இந்த பிராமணர்' என்று கொட்டித் தீர்த்தனர்.

அன்றிரவு! இல்லத்தில் தனியே அமர்ந்து பாகவதம் படித்துக் கொண்டிருந்தார் ஐயாவாள். அப்போது- கோகுலாஷ்டமி உற்ஸவத் தின் ஒரு பகுதியாக, வெளியே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா வின் வீதிஉலா ஊர்வலம் ஆடம்பரமாக ஐயாவாள் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது அலங்கரிக்கப் பட்ட கிருஷ்ண பகவானின் படத்தை, மேளதாளம் முழங்க... வீதியில் எடுத்து வந்தனர் அந்தணர்கள். மேளச் சத்தமும், நாமகோஷ முழக்கமும் வெகு அருகில் கேட்கவே... 'ஆஹா... கிருஷ்ணன் வந்து விட்டார். வீடு தேடி வந்தவருக்கு தீபாராதனை கொடுக்க வேண்டுமே'என்று பதட்டத்துடன் எழுந்தார் ஐயாவாள். தீபாராதனைக்குத் தேவையானவற்றை ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். கிருஷ்ணர் ஊர்வலம் இவரது வீட்டு வாசலில் நின்றது. ஸ்ரீகிருஷ்ணரின் படத்துக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து விட்டு, தீபாரா தனைத் தட்டைக் கொடுத்தார்.

ஆனால், உள்ளூர் அந்தணர்கள் அதை வாங்க மறுத்து விட்டனர். உள்ளத்துக்குள் கனன்று கொண் டிருந்த ஆத்திரத் தீயை அவர் மேல் அள்ளி வீசினர். ''கொஞ்சம் கூட கிருஷ்ண பக்தி இல்லாத உம்மைப் போன்றவர்களது தீபாராதனையை ஏற்பதற்காக ஸ்ரீகிருஷ்ணன், இங்கே வீதி வலம் வரவில்லை. உமது தீபாராதனையை ஸ்ரீகிருஷ்ணனுக்குக் காட்டினால், தெய்வ நிந்தனைதான் எங்களை வந்து சேரும்!'' என்று வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.ஐயாவாளுக்கும் கோபம் எழுந்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ''அந்தணர்களே... எனது பக்தியை உங்களால் அறிய முடியாது. அதை, அந்த கிருஷ்ண பகவான் மட்டுமே அறிவார்'' என்றார் அமைதியாக.

இதைக் கேட்டு அந்தணர்கள் சிரித்தனர். ''உமது பக்தியை எங்களாலேயே புரிந்து கொள்ள முடிய வில்லை. இந்த நிலையில், ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு மட்டுமே உமது பக்தியின் திறன் தெரியுமோ? நன்றாக இருக்கிறது உம்முடைய நகைச்சுவைப் பேச்சு'' என்ற அந்தணர் ஒருவர், ''எதற்கு இந்த வீண் பேச்சு? நீர் உண்மையான பக்தன் என்றால், இதோ... இந்தப் படத்தில் இருக்கும் மாயக் கிருஷ்ணனைக் கூப்பிடும். உமது பக்திக்கு இரங்கி, அவன் வருகிறானா என்று பார்ப்போம்'' என்றார் சவாலாக.

ஐயாவாளுக்கு அவமானமாகவும் தர்மசங்கடமா கவும் போய் விட்டது. ஒட்டுமொத்த கூட்டத்தில் இருக்கும் பக்தர்கள் அனைவரும் தன்னையே கவனிப்பதாகப் பட்டது. 'இது தனக்கு ஏற்பட்ட சோதனை. கிருஷ்ணருக்கும் தனக்குமான நட்பை இவர்களுக்கு எப்படியாவது உணர்த்த வேண்டும்' என்று தீர்மானித்தார். படத்தில் இருக்கும் கிருஷ்ண பகவானைக் கண் குளிரப் பார்த்து, ஸ்லோகம் ஒன்றைப் பாடினார். பின்னர், விருட்டென்று தனது வீட்டுக்குள் சென்று விட்டார்.

அவரைப் பரிகாசம் செய்து சிரித்த படி மேற்கொண்டு ஊர்வலத்தை நகர்த்திச் சென்றனர் அந்தணர்கள். அடுத்த வீட்டு வாசலில் ஊர்வலம் நின்றது. அந்த வீட்டில் இருந்த ஒரு பாகவதர், தீபாராதனைத் தட்டைக் கொடுத்தார். அதை வாங்கிய அந்தணர்... கிருஷ்ணருக்கு ஆரத்தி காண்பிப்பதற்காக படத்தைப் பார்த் தவர் திடுக்கிட்டார். அங்கே, இது வரை இருந்த கிருஷ்ண பகவானது ஓவியத்தைக் காணவில்லை. வெறும் பலகையும் கண்ணாடியும் மட்டுமே இருந்தது. பதறிப் போன அந்தணர்கள் நடந்ததை ஒருவாறு ஊகித்துக் கொண்டு, ஐயாவாளின் வீட்டுக்குள் ஓடி வந்தனர். உள்ளே- ஊஞ்சலில் ஸ்ரீகிருஷ்ணனின் ஓவியம் புன்னகையுடன் காட்சி தந்தது. இதுவரை வீதிவலம் வந்த அதே ஸ்ரீகிருஷ்ணர் போலவே அது விளங்கியது. ஸ்ரீகிருஷ்ணரை துதித்து மனம் நிறைய ஆனந்தத்துடன் ஸ்லோகம் பாடிக் கொண்டிருந் தார் ஐயாவாள். இந்த ஸ்லோகங்களுக்கு, 'டோலோ நவரத்னமாலிகா' என்று பெயர்.

ஐயாவாளின் பிரார்த்தனைக்கு இரங்கி, வீதியில் வலம் வந்து கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணர், அவரது வீட்டுக்குள்ளே சென்று, அவரது பாடலைக் கேட்டு மயங்கிக் கிடக்கிறார் என்றால், ஐயாவாளின் பக்தித் திறத்தை என்னவென்பது?! திருவிசலூர் அந்தணர் கள் அனைவரும் ஐயாவாளிடம், தங்களது தகாத செயலுக்காக மன்னிப்புக் கேட்டனர். அன்றிரவு, அந்தணர்கள் அனைவரும் ஐயாவாளின் வீட்டி லேயே தங்கி, நாமகீர்த்தனம் செய்து விட்டு மறு நாள் காலைதான் சென்றனர்.

ஒரு முறை ஐயாவாளின் ஆத்மார்த்தமான பக்தியுடன் விளையாடிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை, சாட்சாத் பரமேஸ்வரனுக்கு வந்து விட்டது (ஐயாவாளே பரமேஸ்வரனின் அவதாரம் என்றும் சொல்வார்கள்). திருவிளையாடலுக்கான தினத்தைக் குறித்தும் விட்டார்.

அன்றைய தினம் இரவு வேளையில், திருவிடை மருதூர் ஸ்ரீமகாலிங்கத்தைத் தரிசிக்கப் புறப்பட்டார் ஐயாவாள். அப்போது, காவிரி யில் வெள்ளம் அதிகம் ஓடியது. பரிசல் ஓட்டிகள் எவரும் காவிரிக் கரையில் இல்லை. இந்த வெள்ளத்தில் பரிசல் ஓட்ட முடியாது என்பதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி விட்டனர்.

காவிரியின் இக்கரையிலேயே நின்று கொண்டு, 'என்ன செய் வது?' என்று தவித்துப் போனார் ஐயாவாள். சிவபெருமானை தரிசிக்காமல், வீட்டுக்குப் போவது அபசாரமாகப் பட்டது அவருக்கு. நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. காவிரியில் தண்ணீர் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர, குறைந்த வழியாகத் தெரியவில்லை. சற்று நேரம் காத்திருந்தவர், இக்கரையில் இருந்தபடியே திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி ஆலய ராஜகோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டார். சிவபெருமானை நேரில் தரிசிக்க முடியாத ஏக்கத்தில் அவரது கண்களில் இருந்து நீர் கரகரவென வழிந்தது. அப்போது ஈஸ்வரனை தியானித்து, 'ஆர்த்திஹர ஸ்தோத்திரம்' எனும் ஸ்லோகத்தைப் பாடினார்.

இப்படி, ஐயாவாள் காவிரிக் கரையில் நின்றபடி ஈஸ்வரனைத் தியானித்திருந்த வேளையில்... திரு விடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி ஆலயத்தில் அர்ச்சகராக இருக்கும் - ஐயாவாளுக்குப் பழக்கமான சிவாச்சார்யர் ஒருவர், அவர் முன் தோன்றினார். ஐயாவாளுக்குப் பிரமிப்பு. விழிகளை இமைக்க மறந்து, சிவாச்சார்யரையே பார்த்துக் கொண்டிருந்தார்!

அப்போது, ''காவிரியில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது. அதனால், ஆற்றைக் கடந்து வந்து ஈசனைத் தரிசிக்க முடியவில்லையே என்று தாங்கள் மிகவும் வருந்தியிருப்பீர்கள் என்று அறிவேன். தங்களது மனம் புண்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அர்த்தஜாம பூஜை முடிந்ததும், விபூதிப் பிரசாதம் எடுத்து வந்தேன். இந்தாருங்கள்'' என்று கொடுத்தார் சிவாச்சார்யர்.

'ஆகா... சிவ தரிசனம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று கவலைப்பட்டேன். ஆனால், அந்த மகாலிங்கமே அர்ச்சகரை நேரில் அனுப்பி, விபூதிப் பிரசாதம் கொடுத்தனுப்பி விட்டார். இனி, எனக்குக் கவலை இல்லை. ஈஸ்வரனையே தரிசித்த பாக்கியத்தை அடைந்து விட்டேன்' என்று கண் மூடி, பிரசாதத்தை இட்டுக் கொண்டு, நிமிர்ந்து பார்த்தார். அர்ச்சகரைக் காணவில்லை! பிரசாதம் கொடுத்து விட்டு, நேரமாகி விட்டது என்று கிளம்பிப் போய் விட்டார் போலிருக்கிறது என்று நினைத்த ஐயாவாளுக்கு அப்போதுதான் சுய பிரக்ஞை வந்தது. 'அது சரி... வெள்ளம் கரை புரண்டு ஓடும் இந்த வேளையில், நம்மால் அக்கரைக்குச் செல்ல முடியவில்லை. அப்படியானால் அர்ச்சகர் மட்டும், வேஷ்டி- துண்டு நனையாமல், உடலில் இட்ட திருநீற்றுச் சுவடு கலையாமல் இக்கரைக்கு எப்படி வந்து சேர்ந்தார்? வந்தவர்- ஒருவேளை ஸ்ரீமகாலிங்க ஸ்வாமியாகவே இருக்குமோ? சரி... நாளை திருவிடைமருதூர் போகும் போது அந்த அர்ச்சகரிடமே கேட்டு விட்டால் ஆச்சு' என்று நினைத்து வீடு திரும்பினார்.

மறுநாள்! காவிரியில் வெள்ளம் வடிந்திருந்தது. பரிசல் மூலம் அக்கரைக்குச் சென்றவர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமியின் ஆலயம் சென்று அவரைக் கண்குளிர தரிசித்தார். தரிசனம் முடிந்த பின், முந்தைய தினம் இவருக்கு விபூதிப் பிரசாதம் கொடுத்த அர்ச்சகர் கண்ணில் பட்டார். பயபக்தியுடன் அவர் அருகே சென்று, ''நேற்று திருவிசலூருக்கு வந்து எனக்குப் பிரசாதம் கொடுத்த அர்ச்சகர் தாங்கள்தானே?'' என்று கேட்டார். அதற்கு அவர், ''நானா? காவிரியில் நேற்று கரை புரண்டு ஓடிய வெள்ளத்தைத் தாங்கள் பார்க்கவில்லையா? அதைக் கடந்து எவர் வர முடியும்? நான் வரவில்லை ஸ்வாமிகளே'' என்றார். ஐயாவாளுக்குப் பிரமிப்பு அதிகமானது.

'அப்படியெனில், நேற்று திருவிசலூருக்கு வந்து விபூதிப் பிரசாதம் தந்தருளியது சாட்சாத் பரமேஸ் வரன்தானா? தயாபரனே... என்னே உனது கருணை! உன்னைத் தரிசிக்க இயலாமல் நான் தவித்து நின்ற போது என் குரலுக்கு செவி சாய்த்து, என்னையே தேடி வந்து விட்டாயே...' என்று உருகினார்.

ஐயாவாள் வீட்டுக் கிணற்றில், கங்கை பொங்கி வந்த கதையைப் பார்ப்போம்.

ஒரு முறை ஐயாவாள் வீட்டில் முன்னோர் சிராத்தம் வந்தது. பிராமணர்கள் சாப்பிடுவதற்காக வீட்டில் சமையல் தயார் செய்யச் சொல்லி விட்டு, காவிரியில் குளிக்கக் கிளம்பினார் ஐயாவாள். வழியில் யாரோ ஓர் ஆசாமி, பசியால் துடித்துக் கொண்டிருந் தான். அவனது நிலையைப் பார்த்ததும் ஐயாவாள் மிகவும் வருந்தினார். கொஞ்சமும் தாமதிக்காமல், அவனைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். பிராமணர்களுக்கென்று ஆசாரத்துடன் சமைத்து வைக்கப்பட்டிருக்கும் சிராத்த உணவை அவனுக்குக் கொடுத்தார். பசியால் தவிக்கும் அந்த ஆசாமியை ஈசனின் வடிவமாக எண்ணி, போஜனம் செய்வித்து அனுப்பினார் ஐயாவாள்.

பிறகு, சாஸ்திரக் கோட்பாடுகள் கருதி வீட்டை மறுபடியும் நீரால் கழுவி சுத்தம் செய்தார். புதி தாக வேறு ஆசாரமான சமையல் தயாராவதற்கு ஏற்பாடுகள் செய்தார். இன்னொரு முறை ஸ்நானம் செய்வதற்காகக் காவிரிக் கரைக்குச் சென்றார்.

எல்லாம் வீட்டில் தயாரான பின், ஏற்கெனவே உணவு உண்பதற்குத் தயார் செய்யப்பட்டிருக்கும் அந்தணர்களை வீட்டுக்கு அழைத்தார். ஐயாவாளின் மேல் வெறுப்பில் இருந்த சில அந்தணர்கள் இன்னும் மனம் மாறாமல், இவரைக் காயப்படுத்துவதற்குத் தகுந்த சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தனர்.

'சிராத்தம் நடக்கும் நாளன்று பிராமணர் அல்லாத ஆசாமியை அழைத்து, போஜனம் செய்து வைத்திருக்கிறார். எனவே, இவரது வீட்டுக்கு எந்த ஒரு அந்தணரும் சிராத்த உணவு உட்கொள்ளச் செல்ல வேண்டாம்' என்று சொல்லி விட்டனர். 'சாஸ்திரப்படி இது தவறில்லை' என்று ஐயாவாள் எவ்வளவோ விளக்கியும் எவரும் சமாதானம் அடையவில்லை.

இறுதியில், ஐயாவாளை 'ஜாதிப் பிரதிஷ்டம்' செய்வதாகச் சொல்லி, அவரை விலக்கி வைத்து விட்டனர். 'எல்லாம் ஈசனின் செயலே' என்று தீர்மானித்து, அன்றைய சிராத்தத்தை, பிராமணர்கள் இல்லாமல் ஒருவாறு செய்து முடித்தார் ஐயாவாள். இதோடு முடியவில்லை இந்த அவஸ்தை. அடுத்த சில நாட்களுக்குள் ஐயாவாள் இல்லத்தில் இன்னொரு சிராத்தம் வந்தது. இதையாவது பிராமணர்களை வைத்து முறையாக நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார் ஐயாவாள்.

எனவே, ஏற்கெனவே வீட்டுக்கு வருவதாக இருந்த பிராமணர்களை நேரில் சந்தித்து, மன்னிப்புக் கேட்டு, தகுந்த பிராயச்சித்தம் செய்யத் தயாராக இருந்தார். அதன்படி, பிராமணர்களைச் சந்தித்துக் கேட்டார். அதற்கு, ''கங்கையில் மூழ்கி விட்டு வந்தால், உங்களை மீண்டும் எங்களோடு இணைத்துக் கொள்கிறோம். உங்கள் வீட்டில் நடக்கும் சிராத்தத்தில் சாப்பிட வருகிறோம்'' என்றனர்.

உடனே ஐயாவாள், ''தாங்கள் இப்போது சொன்ன பிராயச்சித்தம் சற்று கடினமாக இருக்கிறது. அத்தனை தூரம் யாத்திரை செல்ல எனது உடல் நலம் ஒத்துழைக்காது. தவிர, அடுத்தடுத்த நாட்களில் என் முன்னோருக்குச் செய்ய வேண்டிய சிராத்தங்களும் வருகின்றன. எனவே, இப்போது நான் பயணிக்க முடியாது. வேண்டுமானால், கங்கையை இந்த இடத் துக்கே வரவழைத்து ஸ்நானம் செய்து விடுகிறேன். எனக்கு மீண்டும் ஆதரவளியுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்.

''ஓகோ... 'கங்கே... கங்கே' என்று கங்காதேவியை நினைத்து துதித்து, உம் வீட்டுக் கிணற்றில் முழுகி விட்டால் கங்கையில் குளித்த பலன் கிடைத்து விடும் என்று பார்க்கிறீரா..? அப்படியே இனத் தாரோடு சேர்ந்து விடலாம் என்று கணக்குப் போடுகிறீர்களா?'' என் றெல்லாம் கேலி பேசினர்.

அதற்கு ஐயாவாள் உறுதியாகச் சொன்னார்: ''நான் கங்கையில் ஸ்நானம் செய்கிறேன் என்று அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. எல்லோரும் பார்க்கும்படி காசியம்பதியில் ஓடும் கங்கா நதியை இந்த திருவிசலூருக்கு வரவழைத்து, பொங்கிப் பிரவாகிக்கும் அந்த நீரில் ஸ்நானம் செய்கிறேன் என்றுதான் சொன்னேன்.''

இதைக் கேட்டு அங்கு திரண்டிருந்த அந்தணர்கள் அனைவரும் எகத்தாளமாகச் சிரித்தனர். பிறகு அவர்களில் ஒருவர், ''என்ன ஓய்... உமக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? கங்கையை எப்படி உம்மால் வரவழைக்க முடியும்?'' என்று பரிகசிக்க... அனைவரும் கைகொட்டிச் சிரித்தனர்.

ஐயாவாளுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. மிகவும் மனம் வருந்தி, தன் வீட்டு முற்றத்தின் ஓரத்தில் உள்ள கிணற்றடிக்குச் சென்றார். 'கங்காஷ்டகம்'

எனும் ஸ்தோத்திரத்தை மனம் உருகிப் பாடினார். ஈசனின் அம்சாவதாரமான ஐயாவாள் உருகி அழைக்க... அங்கே கங்கை வந்ததில் வியப்பு என்ன இருக்க முடியும்? ஆம்! ஐயாவாளுக்கு அருகில் இருந்த கிணற்றில், கங்கையானவள் பொங்கிப் பெருகி, கடகடவென்று வெளியே வழிந்தாள். பல மாநிலங்களை வாழ வைக்கும் கங்காதேவிக்கு திருவிசலூர் என்கிற சிறு கிராமம் எம்மாத்திரம்?

அக்ரஹார வீதி எல்லாம் கங்கா நீர் கொப்பளித்து ஓடியது. இதுவரை ஐயாவாளைப் பரிகசித்து வந்த அந்தணர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

தெருவெங்கும் வெள்ளம்! இனியும் இது தொடர்ந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த அந்தணர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஐயாவாளின் இல்லத்துக்கு ஓடோடி வந்தனர்.

''ஐயா... எங்களை மன்னிக்க வேண்டும். உங்க ளைப் பற்றித் தவறாக நினைத்து விட்டோம். நீர் உண்மையிலேயே மகா புருஷர்தான். கங்கையை உடனே அவளது தேசத்துக்குத் திருப்பி அனுப்பி விடும்'' என்று பதறினார்கள்.

ஐயாவாளின் முகத்தில் மலர்ச்சி. ''திருவிசலூர்வாழ் அந்தணர்களே... புனிதமான இந்த கங்கையில் நான் ஸ்நானம் செய்து விட்டேன். கங்கை இப்போது போய் விட்டால், நீங்கள் எல்லாம் வெகு தூரம் பயணித்துதான் ஸ்நானம் செய்ய வேண்டும். எனவே, எல்லோரும் இப்போதே ஸ்நானம் செய்யுங்கள்'' என்றார். ஆனால், திருவிசலூர் அந்தணர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பிரமிப்பு முற்றிலும் அகலாததால், அப்போது ஸ்நானம் செய்யும் எண்ணத்தில் இல்லை.

எனவே, ''ஐயாவாளே... உண்மையான சாதுக்களிடம் சகல தீர்த்தங்களும் வாசம் செய்கின்றன. எனவே, உம் வடிவில் கங்கையை நாங்கள் தரிசிக்கிறோம். அந்த பாக்கியமே எங்களுக்குப் போதும். இந்த கங்கையை இப்போது அனுப்பி விடுங்கள்'' என்று மன்றாடினர்.

ஐயாவாள், ''சரி... 'கங்கா ஸ்நானம் வேண்டாம்' என்று இப்போது நீங்கள் சொன்னாலும், உலகத்தாரின் நலனுக்காக கங்காதேவியானவள் என்றென்றும் இந்தக் கிணற்றில் வாசம் செய்யட்டும். இந்தப் பகுதியில் உள்ள மக்கள் சுலபமாக கங்கா ஸ்நானம் செய்யட்டும்'' என்று ஸ்லோகம் ஒன்றைச் சொல்லிப் பிரார்த்திக்க... கங்காதேவியானவள் அந்தக் கிணற் றுக்குள் தன்னை அடக்கிக் கொண்டாள்.

இந்தச் சம்பவம் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தில் நடந்தது. எனவே, இப்போதும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று அந்தக் கிணற்றில் கங்காதேவி பொங்கி வருவதாக ஐதீகம். எனவே, இந்தப் புனித நாளில் இங்கு ஸ்நானம் செய்ய ஏராளமானோர் வருகிறார்கள்.

சிறப்பு மிக்க இந்த கார்த்திகை அமாவாசை அன்று வருகிறது. இந்தத் திருநாளில் திருவிசலூர் பகுதியே திமிலோகப்படும். மகான் வாழ்ந்த மண்ணில், அவர் வரவழைத்த கங்கையில், அன்றைய தினம் நீராடினால், சகல வளங்களும் வாழ்வில் பெருகும். ஐயாவாளின் நினைவைப் போற்றி, அவரது அருளுக்குப் பாத்திரமாவோம்!

Comments

  1. வணக்கம்!

    நல்லதொரு விபரம்! அருமை! உண்மையான பக்திக்கு ஒர் நல் உதாரணம் ஸ்வாமி ஐயாவாள் வாழ்க்கை!

    வாழ்க அருளுடன்! வளர்க அறமுடன்!

    ஓம் சிவசிவ ஓம்!

    ReplyDelete

Post a Comment