சோமவார விரதம்

சிவவிரதங்களுள் முதன்மையானது சோமவார விரதம். அதிலும் அதி சிறப்பானது கார்த்திகை மாத சோமவார விரதம்.

முப்பத்து முக்கோடி தேவர்களில் உத்தமமானவர் சிவபெருமான். சக்தி தேவியருள் உத்தமியாய் திகழ்பவள் உமாதேவி.

கார்த்திகை சோம வாரத்தில் (திங்கட்கிழமைகளில்) பகல் உணவு தவிர்த்து இரவில் மட்டும் உணவு உட்கொண்டு சிவனை பூஜிப்பவர்களுடைய பாவம் தீயிலிட்ட பஞ்சு போல் ஆகிறது. சிவனை அபிஷேகித்து அர்ச்சனை செய்வோர் தம்மோடு தம் முன்னோர்களும் பாவ விமோசனம் பெற வழிசெய்கிறார்கள் என்கிறது கார்த்திகை மகாத்மியம்.

காஷ்மீர் தேசத்தில் ஓர் அந்தணர் இருந்தார். அவர் தன் மகளுக்கு ஒரு மறையவனை மணமுடித்தார். திருமணமான பின்னும் அந்தப் பெண் ஆட்டம், பாட்டம், அலங்காரம் என்று உலக மாயையில் உழன்றாள். கணவனோடு சண்டையிட்டாள். தீய வழிக்குச் சென்றாள். இறுதியில் கணவனையே கொன்றாள்.

நாளடைவில் அவளது அங்கங்கள் தளர்ந்தன. அழகு குறைந்தது. நோய்வாய்ப்பட்டாள். இறுதியில் உயிர் விட்டாள். நரகம் சென்று துன்பப்பட்டாள். பல்வேறு பிறவிகளை எடுத்த அவள் நாயாகப் பிறந்தாள். அந்த நிலையில் அவள் ஓர் அந்தணன் வீட்டின் வாயிலில் கிடந்த உணவை சாப்பிட்டாள். அது கார்த்திகை சோமவார பூஜை செய்து அந்தணன் இட்ட பலி. எனவே அதனை உண்ட நாய்க்கு முன்ஜென்ம நினைவுகள் வந்தன. பேசத் தொடங்கிற்று.

அதைப் பார்த்த அந்தணன் வியந்தான். நாயோடு பேச்சுக் கொடுத்தான். எனக்கு பூர்வஜென்ம நினைவு வரக் காரணம் என்ன என்று அந்த நாய் அந்தணனிடம் கேட்டது. அதற்கு அவன், ‘சோமவார பூஜா பலியை உண்டாய். எனவே உனக்கு ஞானம் வந்தது’ என்றான்.

ஞானம் வந்த நாய், ‘சுவாமி நீங்கள்தான் என்னைக் கரையேற்ற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டது. கருணை மிகுந்த அவன் சோமவார பூஜை பலனை நாய்க்குத் தந்தான். பலனைப் பெற்ற நாய் பேரழகி உருவம் எடுத்து, சொர்க்க லோகம் சென்றது என்கிறது கார்த்திகை மகாத்மியம்.

சோமவார விரதத்தை காசி போன்ற புண்ணிய தலங்களில் கடைப்பிடித்தால் பலன் அதிகம். மதுரை நகரில் சோமசுந்தரக் கடவுளை வழிபடுவது கோடி மடங்கு புண்ணியம் தரக்கூடியது. சிவபெருமான் உமையோடு கூடியிருப்பதால் சோமன் என்றும் அவனை அழைப்பார்கள். சோமனுக்குரிய வாரம் (வாரம் என்றால் வடமொழியில் கிழமை என்று அர்த்தம்) சோமவாரம்.

சோமவாரத்தில் அமாவாசையும் சேர்ந்து வருவது அமாசோமவாரம் எனப்படும். இது மிகவும் விசேஷம். நீதி நெறிப்படி தேடிய பொருள் கொண்டு சோமவார விரதம் இருந்தால் பலன் அதிகம் என்கிறது திருவிளையாடல் புராணம்.

கார்த்திகை அல்லது மார்கழி மாதத்தில் சுக்லபட்சத்தில் சோமவார விரதம் தொடங்கலாம். அந்த மாதங்களில் இரு அமாவாசைகள் இருக்கக்கூடாது. ஞாயிற்றுக்கிழமை இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். வெறும் தரையில் உறங்க வேண்டும். திங்கள் காலை சோமசுந்தரக் கடவுளை தியானிக்க வேண்டும். நித்திய கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும்.
விபூதி, வில்வ மரத்தடியில் இருக்கும் மண், தர்ப்பை, பசுஞ்சாணம், எள் ஆகியவற்றை தலையில் வைத்துக் கொண்டு பவித்ரம் (தருப்பையாலான மோதிரம்) தரித்த கையுடன் மனம், வாக்கு, காயம் என்ற மூன்றும் ஒரு நிலையிலிருக்க இறைவனை தியானித்து, ‘இவ்வுலகிலுள்ள எல்லா தீர்த்தங்களிலும் மூழுகிய பலனை எனக்குத் தர வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டு நீராட வேண்டும்.

பின்னர் உடல் துவட்டிக் கொண்டு திருநீறு, ருத்ராட்சம் அணிய வேண்டும். வெள்ளை மந்தாரம், முல்லை, மல்லிகை, ஜாதி, இருவாட்சி, வெண்தாமரை முதலிய வெள்ளை மலர்களையும்; வில்வம், அருகு, அட்சதை முதலியவற்றையும் எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் செல்ல வேண்டும். சிவாகம முறைப்படி அப்பனையும், அம்மையையும் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

சோமவார நாளில் இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் எல்லா பாவங்களும் அகலும். மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும். நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களும் தருவது கார்த்திகை சோமவார விரதம்.

Comments