உயிர் காக்கும் உமா மகேசன்















இறைவனிடம் பக்தி செலுத்துவோரில் இருவகையினர் உண்டு. ஒருவகையினர் உளமாரத் தொழுது, அழுது, அவன் திருவடி பணிந்து அவன் அருளுக்காக எத்தனை காலமும் காத்திருப்பவர்கள்.

இன்னொருவகையினர், குறிப்பிட்ட காலமோ, அல்லது வேறு ஏதாவது எல்லையோ வகுத்துக்கொண்டு அதற்குள் இறைவனின் ஆசி கிட்டாவிட்டால், தம்மையே தண்டித்துக்கொள்ளவோ தமக்குத்தாமே ஊறு விளைவித்துக்கொள்ளவோ தயங்காதவர்கள்.

முதல்வகையினர் மென் தொண்டர்கள் என்றால், இரண்டாம் வகையினர் வன்தொண்டர்கள்.

நாயன்மார்கள் அறுபத்து மூவருள் வன்தொண்டர்களும் உண்டு, மென்தொண்டர்களும் உண்டு. வன்தொண்டர்களுள் ஒருவரான ஏயர்கோன் கலிக்காம நாயனார்க்கு இறைவன் அருள்பாலித்த தலங்களுள் ஒன்று, திருப்பெருமங்கலம்.

ஊரின் தெற்கு எல்லையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, பல நூற்றாண்டுகளைக் கடந்த வன்தொண்டரீசர் ஆலயம். கோவில் முகப்பைக் கடந்ததும் விசாலமான பிராகாரம். வலதுபுறம் இறைவி அபிராமி அன்னையின் சன்னதி உள்ளது. இறைவி தென்முகம் நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

நந்தியும் பலிபீடமும் முன்னே இருக்க, அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தைக் கடந்ததும் கருவறை உள்ளது. உள்ளே, இறைவன் வன்தொண்டரீசர் லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் சன்னதி உள்ளது. இவர் இறைவனுக்காகத் தன்னையே அழித்துக் கொண்டவர்.

அந்தத் தல வரலாறு என்ன?

விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட வேளாளர் குடியில் ஏயர்கோக்குடி என்பது ஒரு பிரிவு. இவர்கள் சோழ மன்னர்களிடம் சேனாதிபதியாக பரம்பரை பரம்பரையாக இருந்து வந்துள்ளனர்.

ஏயர்கோன் என்பது சிறந்த சேனைத் தலைவனுக்கு மன்னன் வழங்கும் பட்டமாகும். ஏயர்கோன் சிறந்த சிவனடியார்.

இத்தலத்துக்கு அருகே உள்ள கஞ்சாளூர் எனும் ஊரில் மானக் கஞ்சாற நாயனார் என்று ஒரு சிவபக்தர் இருந்தார். மன்னனிடம் தலைமைத் தளபதியாகப் பதவி வகிக்கும் மரபினைச் சேர்ந்தவர்.

சிவபெருமான் மேல் அளவற்ற பற்றும் பாசமும் கொண்டவர் அவர். சிவனடியார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாத பெருங்குணம் கொண்டவர்.

அவருக்கு ஒரு மகள் இருந்தாள். தன் மகளுக்கு நல்ல இடத்தில் மணம் முடிக்க எண்ணிய நாயனார், ஏயர்கோனின் குணத்தையும் குடும்பத்தைப் பற்றியும் கேட்டறிந்தார்.

பின், அவருக்கே தன் மகளை மணம்முடிக்க எண்ணிய நாயனார், திருப்பெருமங்கலத்தில் உள்ள பெரியோர்கள் ஆசியுடன் திருமணத்தை நிச்சயம் செய்தார்.

திருமணத்தை மணமகள் வீட்டில் நடத்துவதென முடிவாயிற்று. மாப்பிள்ளையும் ஊர்வலம் வந்து திருமண வீட்டை அடைந்தார்.

மானக் கஞ்சாற நாயனார், சிவனடியார் எது கேட்பினும் கொடுக்கக்கூடிய குண நலன் கொண்டவராயிற்றே!

அவரை சோதிக்க எண்ணிய சிவ பெருமான், சமய முனிவர் வேடம் பூண்டார். திருமண வீட்டை அடைந்தார்.

முனிவரைக் கண்ட நாயனார் மனம் மகிழ்ந்து, மணப்பெண்ணை அவர் காலில் விழுந்து வணங்கச் செய்தார்.

அப்படியே செய்த மணப்பெண்ணை `மங்களம் உண்டாகட்டும்' என்று வாழ்த்திய முனிவரின் பார்வை அவளது அழகிய நீண்ட கூந்தல் மேல் பதிந்தது.

``நாயனாரே! நான் அணிந்துள்ள முப்புரிநூல் தலைமுடியினால் ஆனது. இப்பெண்ணின் நீண்ட கூந்தல் நம் பஞ்சவடிக்கு உதவும்'' என்று முனிவர் சொல்லவும், சிவனடியார் கேட்பதை உடனே தரும் நாயனார், தன் உடைவாளை எடுத்தார்.

தன் மகளான மணப்பெண்ணின் நீண்ட கூந்தலை அறுத்தார். மணப்பெண்ணும் மறுப்பேதும் சொல்லவில்லை.

கைக்கொள்ளாத நீண்ட, அறுபட்டக் கூந்தலை எடுத்து முனிவரிடம் தருவதற்காக அவர் இருந்த பக்கம் திரும்பினார் நாயனார்.

அங்கே, முனிவர் இல்லை. நாயனார் திகைத்தார். அப்போது, வானில் சிவபெருமான் உமையொரு பாகனாய் காட்சி தந்தார்.

``சிவனடியார் மேல் நீ காட்டும் அன்பை இந்த உலகுக்கு உணர்த்தவே நாம் உன்னைச் சோதித்தோம்'' என அசரீரி குரல் ஒலித்தது.

மணப்பெண்ணின் கூந்தல் முன்னிலும் பொலிவுடன் திகழ்ந்தது. ஏயர்கோன் அப்பெண்ணை மணந்து நல்வழியில் இல்லறம் நடத்தினார்.

சிவபெருமானுக்காக தன் கூந்தலைக் கொடுத்த பெண் தன் மனைவியாக அமைந்ததில் அவருக்கு ஏக மகிழ்ச்சி.

அதுசமயம் ஒரு சம்பவம் நடந்தது.

தம்பிரான் தோழர் என அழைக்கப்படும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் அவதரித்த பரவையாரை மணந்தார். பின்னர், அவருக்குத் தெரியாமல் திருவொற்றியூரில் அவதரித்த சங்கிலியாரையும் மணந்து கொண்டார்.

பரவையார், சுந்தரரின் மறுமணச் செய்தி கேட்டு கோபம் கொண்டார். அவரது கோபத்தைத் தீர்க்க சுந்தரர் பலரை தூது அனுப்பியும், அவரது சினம் தணியவில்லை.

சுந்தரர், சிவபெருமானிடம் பரவையாரின் சினம் தீர்க்க தூது போகும்படி வேண்டினார். சிவபெருமானும் இருமுறை பரவையாரைத் தேடிச் சென்றார். தூது வந்தவர் சிவபெருமான் என்றுணர்ந்த பரவையார், சினம் தணிந்து சுந்தரருடன் இணைந்தார்.

இந்தச் செயலைக் கேள்விப்பட்டார் ஏயர்கோன் கலிக்காமர். சிவபெருமானை தூது அனுப்பிய சுந்தரரின் மேல் கடுங்கோபங் கொண்டார்.

கலிக்காமருடைய சினத்தை அறிந்தார் சுந்தரர். அவரது சினத்தை தணித்தருளும்படி சிவபெருமானிடம் சுந்தரர் வேண்டினார்.

சம்பந்தருக்குப் பாலைக் கொடுத்தும், அப்பருக்கு சூலைக் கொடுத்தும், சுந்தரருக்கு ஓலை கொடுத்தும் ஆட்கொண்ட பெருமான், கலிக்காமருக்கு சூலைக் கொடுத்தார்.

சூலை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கலிக்காமர், தன் நோய் குணமாக இறைவனை வேண்டினார்.

``அன்புக் கொண்டவனே! உன் சூலை நோயை என் தொண்டன் சுந்தரன் வந்து தீர்ப்பான்'' என சிவபெருமான் அருள, கலிக்காமர் உள்ளம் நொந்தார்.

``அடியவனாகிய என் நோயை நீர் குணப்படுத்தாது உம்மிடமே வேலை வாங்கிய அடியவன் வந்து என்னை குணப்படுத்துவதா? அதைவிட நான் இறப்பதே மேல்'' என்று கூறி, உடைவாளை எடுத்து தன் வயிற்றைக் கிழித்து உயிரை மாய்த்துக் கொண்டார், கலிக்காமர்.

சுந்தரர் வருவதை அறிந்து கலிக்காமரின் மனைவி, அவரது உடலை மறைத்து வைத்துவிட்டு சுந்தரரை வரவேற்று உபசரித்தார்.

``கலிக்காமர் எங்கே? இறைவனின் ஆணைப்படி அவரது சூலை நோயைக் குணப்படுத்த வந்துள்ளேன்'' என சுந்தரர் கூற, கலிக்காமரின் மனைவியோ, ``அவர் உறங்குகிறார்'' எனக் கூறினார்.

``நான் அவரைக் காண வேண்டும்'' என்று சுந்தரர் கூறவே, வேறு வழியின்றி கலிக்காமரின் உடலை அவரிடம் காட்டினாள் அவர் மனைவி.

உண்மை உணர்ந்த சுந்தரர், ``இவருடன் நானும் செல்வேன்'' எனக் கூறி உடை வாளை எடுத்தார்.

மறுகணம், இறைவன் திருவருளால் கலிக்காமர் உயிர் பெற்று எழுந்தார். இருவரும் ஆரத் தழுவி மனம் மகிழ்ந்தனர். ஏயர்கோன் கலிக்காமருக்கு இந்த ஆலயத்தில் தனிச் சன்னதியே உள்ளது.

இறைவனின் கருணையை உலகுக்கு உணர்த்திய ஏயர்கோன் கலிக்காமரையும், தன் தொண்டனுக்கு உயிர் கொடுத்த வன்தொண்டரீசரையும் தரிசிக்க நாமும் ஒருமுறை திருப்பெருமங்கலம் சென்று வரலாமே!

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மேற்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது, திருப்பெருமங்கலம் என்ற இந்தத் தலம்.

Comments

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment