ஜெயம் தரும் சுயம்புலிங்கம்!



நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில், லிங்கமூர்த்தி, லிங்கம், லிங்கப்பாண்டியன், சுயம்புலிங்கம், சுயம்புமூர்த்தி என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவார்கள். இவர்கள் எல்லோரும் உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமியைக் கண்கண்ட தெய்வமாக வழிபடுபவர்களாக இருப்பார்கள்; இவர்களின் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம்... உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமியாக இருக்கும்!



மூன்று மாவட்டங்களில் வாழும் அன்பர்களும், அந்த மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக வெளியூரில் வசிக்கிற அன்பர்களும் சதாசர்வ காலமும் நினைப்பதும் வேண்டுவதும், உவரி சிவனாரைத்தான்!

திருச்செந்தூரின் கடலோரத்தில் பிள்ளை முருகப்பெருமான் அருளாட்சி நடத்த... உவரி கடற்கரையில் அழகு மிளிரும் ஆலயத்தில் இருந்தபடி, அருளாட்சி நடத்துகிறார் சிவனார்.



ஒருகாலத்தில் பால், மோர், தயிர் ஆகியவற்றை பானைகளில் வைத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, தலையில் சுமந்தபடி விற்று வந்தனர் யாதவ குல மக்கள். அவர்களில் ஒரு மூதாட்டி, ஒருநாள் அந்தக் கடம்பமர வேருக்கு அருகில் அமர்ந்து, அழுதுகொண்டிருந்தாள். 'என்ன பொழப்புடா இது! தெனமும் பானைகளைச் சுமந்துக்கிட்டு, விக்கிறதுக்குக் கிளம்பினா, கடம்பவேர் தடுக்கி விழுந்து, பானைகள் உடைஞ்சு, பாலும் மோரும் தரையில ஆறாட்டம் ஓடுறதே வேலையாப் போச்சு! காலம் போன காலத்துல கண்ணும் தெரியலை, மண்ணும் தெரியலை எனக்கு!’ என்று புலம்பியவள், வெறுங்கையுடன் வீடு திரும்பினாள். விவரம் அறிந்து ஆவேசமான கணவன், கடம்பவேர் இருக்குமிடத்துக்கு வந்தார். 'உன்னோட அடிவேர் கூட இருக்கக்கூடாது! இதோ... உன்னைப் பூண்டோடு அழிக்கிறேன், பார்’ என்று அரிவாளால் அடிவேர்ப் பகுதியில் வெட்டினார். அவ்வளவுதான்... அங்கிருந்து குபுக்கென்று கிளம்பி, பீறிட்டு அடித்தது ரத்தம். இதில் அரண்டு போனவர், தலைதெறிக்க ஓடி, ஊர்ப் பெரியவரிடம் விவரம் சொன்னார். ஊரே திரண்டது. அப்போது ஊர்ப் பெரியவருக்கு அருள்வாக்கு வந்தது. 'வந்திருக்கறது சிவன். லிங்கமா, சுயம்புவா நமக்காக வந்திருக்காரு. உடனே சந்தனத்தை அரைச்சு, ரத்தம் வர்ற இடத்துல தடவுங்க. சரியாயிடும்!’ என்று சொல்லி, தென்னையும் பனையும் சூழ்ந்த இடத்தில், சந்தன மரத்தையும் காட்டியருளினார். பிறகு, சந்தனம் அரைத்துப் பூசியதும், ரத்தம் வழிவது நின்றது. அதையடுத்து அங்கேயே சின்னதாக கூரை வேய்ந்து, கோயிலாக்கி வழிபடத் துவங்கினர் மக்கள். அந்த ஊர்ப் பெரியவரே கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்து, கோயிலை வளரச் செய்தார். பிறகு, கல் மண்டபங்கள் கட்டப்பட்டு, சந்நிதி அமைக்கப்பட்டு, மிகப் பெரிய ஆலயமாக உருவானதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

கடலில் குளித்துவிட்டு, அருகில் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி (கிணற்றிலும் நீராடுகின்றனர்), தனிக்கோயிலில் எழுந்தருளும் ஸ்ரீகன்னி விநாயகரை வணங்கி, ஸ்ரீசுயம்பு லிங்க ஸ்வாமியை வேண்டினால், சகல பிரச்னைகளும் பறந்தோடும்; சந்தோஷமும் நிம்மதியும் பொங்க வாழலாம் என்கிறார் கோயிலின் தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன்.



கோயிலுக்குப் பின்னே, ஸ்ரீபூரணை - புஷ்கலையுடன் உள்ள ஸ்ரீவன்னியடி சாஸ்தா காட்சி தருகிறார். இவருக்கு, பொங்கல் படையலிட்டுப் பிரார்த்திக்கின்றனர், பக்தர்கள்.

இங்கே, அம்பாளுக்குச் சந்நிதி இல்லை. ஆனால், அவளின் இன்னொரு வடிவமாக வணங்கப்படும் கிராம தேவதையான ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் சந்நிதி கொண்டிருக் கிறாள். இவளுக்கு, மஞ்சள் அல்லது குங்கும அபிஷேகம் செய்து வழிபட்டால், வீடு- வாசலுடன் இல்லறத்தைச் சிறக்கச் செய்வாள் என்பது ஐதீகம்.

''உடன்குடிதான் சொந்த ஊர். எங்களுக்கு இஷ்ட தெய்வம், காவல் தெய்வம் எல்லாமே சுயம்பு சாமிதான். சக்தி வாய்ந்தவர் இவர். சென்னைக்குப் போய் பல வருஷமாகிட்டாலும், எப்பத் தோணுதோ அப்பல்லாம் இங்கே ஓடோடி வந்துடுவேன்'' எனச் சிலாகிக்கிறார் சென்னை அன்பர் ஜி.டி.முருகேசன்.



பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை சிவனார் முன் வைப்பதற்கு, ஒரு சம்பிரதாயத்தை இங்கே கையாளு கின்றனர். அதாவது, கடலில் இருந்து மணலை எடுத்து வந்து, கரையில் குவியலாக்கிவிட்டு, சிவனாரை வணங்கு கின்றனர் (தங்கள் வேண்டுதலுக்கேற்ப 11 முறை 108 முறை என மணல் பெட்டி சுமக்கின்றனர்). வேண்டுதல் நிறைவேறியதும், சுயம்புலிங்க ஸ்வாமிக்கு பால், தேன், சந்தனத்தால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். ஆடு, மாடு மற்றும் கோழிகளைக் காணிக்கை செலுத்துபவர் களும் உண்டு.

அதேபோல், வீட்டில் எவரேனும் பிரச்னையில் சிக்கியுள்ளார் அல்லது தீராத நோயால் அவதிப்படுகிறார் என்றால், உடனே அவரை இங்கு அழைத்து வந்து, சுயம்புலிங்கமூர்த்தியின் பிள்ளையாக அறிவித்து, 'உன் புள்ளையை நீதாம்பா காக்கணும்’ என்று வேண்டுகின்றனர். நோய் தீர்ந்ததும், தங்களால் இயன்ற தொகையை 'பிடிபணம்’ செலுத்தி, நேர்த்திக் கடனை அடைக்கின்றனர். இந்தப் 'பிடிபணம்’ நேர்த்திக் கடன் சம்பிரதாயம் வந்ததற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு.

குமரி மாவட்டத்தில் உள்ள ஆயர் குலத்தோர், அந்தக் காலத்தில் நடந்தே வந்து தரிசிப்பார்கள். அப்போது வழியில், ஒரு தென்னந்தோப்பில் தங்கி இளைப் பாறுவார்கள்.



ஒருமுறை, அந்தத் தோப்பின் உரிமை யாளர் கடும் நோயால் அவதிப்பட்டார். இளைப்பாறியவர்கள், 'எங்க சுயம்புலிங்க சாமி, உன்னைக் கைவிட மாட்டாரு’ எனச் சொல்லிவிட்டு, உவரிக்கு வந்து தரிசனம் முடித்து, விபூதி பிரசாதத்துடன் தோப்புக்குச் செல்ல, பூரணமாகக் குணமாகி இருந்தாராம் அவர்.

சுயம்புலிங்க ஸ்வாமியின் அருட் கடாட்சத்தை எண்ணி நெகிழ்ந்தவர், உவரி தலத்துக்கு வந்து, நாணயம் காணிக்கை (திருவிதாங்கூர் நாணயம்) தந்து, வணங் கினாராம். அன்று முதல், 'பிடிபணம்’ எனும் நேர்த்திக்கடன் நடைமுறைக்கு வந்ததாகச் சொல்வர்.

அழகிய கடல், அதன் கரையையட்டி தேரோட்டம் நடைபெறுவதற்காகப் போடப்பட்டுள்ள தார்ச்சாலை, அருகில் தீர்த்தக் குளம், கோயிலைச் சுற்றிலும் மணல் பரப்புகளும் அழகிய மரங்களும்... என ரம்மியமாகக் காட்சி தரும் உவரியை சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது தமிழக அரசு. தற்போது, அழகிய கோபுரம் அமைக்கும் திருப்பணியிலும் ஈடுபட்டுள்ளது, கோயில் நிர்வாகம்.



சுயம்பு மூர்த்தமாக, கடம்ப வேரின் அடியில் இருந்து வெளிப்படும்போது, சந்தனம் பூசப்பட்டது அல்லவா! எனவே, இன்றைக்கும் இங்கு வரும் பக்தர்களுக்கு (கோயிலுக்குள் சட்டை அணியக்கூடாது), கட்டையில் அரைக்கப்பட்ட சந்தனப் பிரசாதம் தரப்படுகிறது. இந்தச் சந்தனத்தை உடலில் பூசிக்கொள்ள, சகல நோய்களும் தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமியைத் தரிசித்து, சந்தனத்தை உடலில் மணக்க மணக்கப் பூசிக் கொண்டு, கடல் காற்றை அனுபவிக்கும்போது, கவலையாவது துக்கமாவது... எல்லாம் காற்றோடு காற்றாகக் கலந்துவிடும் என்பது உறுதி!

உவரிக்கு வாருங்கள்; உவகையால் உள்ளம் குளிர்வீர்கள்!

Comments