அள்ளிக் கொடுப்பாள் அம்பகரத்தூர் காளி!





புதுவை மாநிலத்தின் மிக முக்கிய தேவி ஸ்தல மாகத் திகழ்வது, அம்பகரத்தூர். அம்பன் மற்றும் அம்பாசுரனை அழித்து, அனைவரையும் காத்ததுடன், இன்றைக்கும் ஸ்ரீபத்ரகாளி எனும் திருநாமத்துடன் அருள்பாலித்துக்கொண்டு இருக்கிறாள் அம்பிகை.



புதுச்சேரி மாநிலத்தில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது அம்பகரத்தூர். திருநள்ளாறு தலத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலுக்கு பஸ் வசதிகள் உண்டு.

அற்புதமாகத் திகழ்கிறது ஆலயம். உள்ளே நுழைந்ததும், தெற்குப் பகுதியில், அம்பாசுரனை தன் பாதங்களால் மிதித்தபடி, சூலாயுதத்தால் மார்பைப் பிளக்கும் திருவிக்கிரகத்தையும், வடக்குப்பகுதியில், அம்பனை மிதித்து வாளால் துண்டிக்கும் திரு விக்கிரகத்தையும் தரிசிக்கலாம்.

ஸ்ரீபத்ரகாளியம்மனை கண்ணாரத் தரிசித்து, தங்களுடைய கோரிக்கைகளை வைத்துப் பிரார்த்தித் தால், கேட்டதெல்லாம் நிறைவேறும்; நினைத்தது நடக்கும் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

இங்கு, அம்மன் சந்நிதிக்கு முன்னே பலிபீடமும், மகிஷ பீடமும் உள்ளன. இந்த இடத்தில் நின்று, அம்மனை வணங்கித் தொழுதால், எதிரிகள் தொல்லை ஒழியும்; துன்பங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!



அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் மட்டுமின்றி தை மாதமும் இங்கு விசேஷம்! தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமையன்று, சுமார் 2000 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை பிரமாண்டமாக நடை பெறுகிறது. புரட்டாசி நவராத்திரி விழாவையட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார- ஆராதனைகள் நடைபெறு கின்றன. மார்கழியிலும் இங்கு விசேஷம்தான். மேலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி நாட்களில் ஸ்ரீபத்ரகாளியம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், திருமண வரம் கிடைக்கும் என்கின்றனர், பெண்கள்.

தீபாவளி நாளில், கேதார நோன்பு இருக்கும் அற்புத வேளையில் ஸ்ரீபத்ரகாளியம்மனைத் தரிசித்துத் தொழுதால், தாய்க்குத் தாயாக இருந்து, நம் இல்லறத்தை செழிக்கச் செய்வாள் தேவி எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்!

Comments