இறைவனே நேரில் வரும்பொழுது ....

மனிதப் பிறவியின் சூட்சுமங்களை முழுமையாக அறிந்துகொள்ளும் திறன் சாதாரண மக்களுக்குக் கிடையாது என்பதை உணர்ந்த மகானான ஸ்ரீ வேதவியாஸர், அந்தச் சூட்சுமங்களை - அதாவது மனிதப்பிறவியின் ரகசியங்களைத் தெரிந்துகொண்டால்தான் நாம் தர்மநெறியிலிருந்து தவறிவிடாமல் வாழ்ந்து பிறவிப்பயனை அடையமுடியும் என்பதற்காக, தனது ஒப்புயர்வற்ற பிரம்மசூத்திரம் என்ற நூலை எழுதி நமக்கு அளித்தருளினார்.

‘சூத்திரம்’ என்றால் ‘ரகசியம்’ என்ற அர்த்தமும் உண்டு. ஈரேழு பதினான்கு உலகங்களும் பிரம்மத்திடம் (பகவான்) அடக்கம். இறைவனின் திருவுள்ளமான பிறத்தல், இரு த்தல், இறத்தல், மறுபிறவி என்ற வாழ்க்கை தத்துவ ரகசியங்களை விளக்குகிறது பிரம்மசூத்திரம்.

நாளடைவில் பிரம்மசூத்திரத்தில் பொதிந்துள்ள அறிவியல் புதையல் போன்ற பொக்கிஷங்களை உணர்ந்துகொள்ளும் சக்தி மனிதர்களுக்குக் குறைந்துவிட்டதால், அந்நூலின் மகத்துவத்தை எளிதில் புரிந்துகொள்ளும்படி விளக்கவுரை எழுதி பரம கருணையுடன் நமக்கு அளித்தனர் ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர் போன்ற மகாபுருஷர்கள். அவர்கள் அருளிய பிரம்மசூத்திரத்தின் விளக்கவுரைகளைத்தான் ‘ஸ்ரீ பாஷ்யம்’ எனப் பெரியோர்கள் பூஜிக்கின்றனர்.

உண்மையான சொத்து எது?

நாம் நம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்து, நாம் செய்யும் புண்ணிய காரியங்களினால் ஏற்படும் நற்பலன்கள் மட்டுமே! நம் குழந்தைகளுக்கு எத்தனைதான் சொத்தும், செல்வமும் சேர்த்து வைத்தாலும், அவை அனைத்தும் ஏதோ ஒரு காலகட்டத்தில், ஏதோ ஒரு காரணத்தினால் விரயமாகிவிடும் அல்லது அழிந்து விடும். ஆனால், நாம் நம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்கும் புண்ணிய பலன்கள் எவராலும் அழிக்கமுடியாத - எக்காரணத்தினாலும் அழியாத சொத்துகள் ஆகும்.

நல்லதையே நினைப்பது, நல்லதையே செய்வது, ஒழுக்கம், நேர்மை, பிற பெண்களை உடன்பிறந்த சகோதரிகளாகவும், தாயாகவும் நினைப்பது, தவறான ஆசைகளைத் தவிர்ப்பது, இறைவன் கொடுத்ததே போதும் எனத் திருப்தியுடன், மனைவி, மக்கள் மீது அன்புடன் வாழ்க்கை நடத்துதல், திருக்கோயில்களுக்குச் செல்லுதல், ஏழை, எளியவர், நோயுற்றோர் ஆகியோருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தல், பெற்றோர், பெரியோர்களைப் பூஜித்தல், வசதிக்கேற்ப தான, தர்மம் செய்தல் ஆகியவை மட்டுமே நமக்கும், நம் குழந்தைகளுக்கும் என்றும் துணை நிற்கும்.

இத்தகைய தர்மநெறிமுறைகளிலிருந்து நாம் தவறாது, இறைவன் பரம கருணையுடன் அளித்த வாய்ப்பாகக் கருதி நடப்பதற்காக, இறைவனே ஆண்டுதோறும் பல சக்திகளக - தனது பல அம்சங்களாக நேரில் வந்து நமக்கு தர்மநெறியைப் புகட்டுகிறான்.

அவ்வாறு இறைவனே நேரில் வந்து நம்முடன் தங்கி, நமக்குத் துணையிருந்து அருள்பாலிக்கும் காலகட்டத்தையே நவராத்திரி என்றும், மகாளய பட்சம் என்றும், புரட்டாசி மாத சனிக்கிழமைகள் என்றும் நாம் கூறுகிறோம்.

நவராத்திரி எனப்படும் ஒன்பது நாட்களும் ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ பார்வதி ஆகிய மூவரும் நம் இல்லம் தேடி வந்து நம்முடன் இருந்து நம் துக்கங்களைப் போக்கி அருள்புரிகின்றனர். அதுபோன்றே மகாளய பட்சம் எனப்படும் 15 நாட்களும், மறைந்த நமது முன்னோர்கள், சூரியன் மற்றும் பித்ரு தேவதைகள் ஆகியோரின் அனுமதி பெற்று ஸ்வர்ணமயமான விமானத்தில் பூலோகத்திற்கு வந்து, நம்முடன் தங்கி, நம் துன்பங்கள் அனைத்தையும் போக்கி அருள்கின்றனர்.

இவை போன்றே புரட்டாசி சனிக்கிழமைகளில் திருவேங்கடவனே நம் இல்லம் வந்து அருள்புரிகிறான். எனவே புரட்டாசி மாதம் புண்ணிய பலனைச் சேர்த்து வைக்க நமக்குக் கிடைத்துள்ள ஓர் அரிய சந்தர்ப்பமாகும். இப்போது நாம் சேர்த்து வைக்கும் புண்ணியம் என்ற சொத்துதான் நம் குழந்தைகளுக்கு நாம் நிரந்தரமாக வைக்கும் சொத்தாகும்.

Comments

  1. அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment