பொங்கு வளம்தரும் பாதக்கரையான்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகு நிறைந்த கிராமம் நாலுமாவடி. இந்த ஊர் பெயரைக் கேட்டவுடன் பாதக்கரை சுவாமிகள்தான் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு நாலுமாவடி மக்களின் உணர்விலும் உள்ளத்திலும் கலந்து காவல் தெய்வமாக விளங்குகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குரும்பூர் ஒரு காலத்தில் முக்கிய வணிக நகரமாக விளங்கியது. உடன்குடியைச் சேர்ந்த வியாபாரிகள் தேவையான பொருட்களை குரும்பூரில் கொள்முதல் செய்து விட்டு மாட்டு வண்டியில் ஏற்றி ஊருக்கு கொண்டு செல்வார்கள். அந்த வகையில், ஒரு சமயம், வண்டிகள், ஒன்றன்பின் ஒன்றாக ஒரே பாதையில் சீராக சென்று கொண்டிருந்தன. ஒரு மாடு மட்டும் தள்ளாடியபடியே மெதுவாகச் சென்றது. அந்த மாட்டின் மீது அப்போது அங்கே அரூபமாகத் தங்கியிருந்த பாதக்கரை சுவாமிகள் ஏறிக் கொண்டதால் ஏற்பட்ட தள்ளாட்டம்தான் அது. இது தெரியாத வியாபாரிகள் தத்தமது வண்டிகளில் குரும்பூர் நோக்கி சென்றார்கள். பணிக்க நாடார் குடியிருப்பு வழியே வந்தார்கள்.

தள்ளாடிய மாடு மீது அமர்ந்து வந்த பாதக்கரை சுவாமிக்கு இந்த ஊர் மிகவும் பிடித்து போய்விட்டது. எனவே திடீரென தான் அமர்ந்து சென்ற மாட்டிலிருந்து சுவாமி இறங்கிக்கொண்டார். இதனால் சுமை இறங்கிய மாடு வேகமாக நடந்து சென்றது. இதைக்கண்ட வியாபாரிகள் ஆச்சரியப்பட்டார்கள். பாதக்கரை சுவாமிகள் இந்த ஊரில் தங்கி தன் திருவிளையாடல்களை துவக்கினார். தான் தங்கி இருக்கும் இடத்தின் வழியாக செல்லும் ஆட்களின் முதுகில் ஆள் அடிப்பது போல் சுவாமி கையால் செல்லமாக அடிப்பார். யார் அடிப்பது? என அடிபட்டவர் திரும்பிப் பார்த்தால் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். எந்த உருவமும் தெரியாது. அப்போது ‘பாதக்கரையான் அடித்தான் என்று சொல்’ என்ற குரல் மட்டும் கேட்கும். இது போல் பலருக்கு நடந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பனை மரங்களும், மாட்டு மந்தையும்தான் இந்த ஊரின் அடையாளங்கள். அங்கு மாடு மேய்க்க வரும் சிறுவர்களுக்கு சுவாமி காட்சியளித்து, அவர்களோடு கிளியாந்தட்டு என்னும் விளையாட்டை விளையாடி மகிழ்வார். அப்போது விளையாட்டு வேகத்தில் சிறுவர்கள் சிலரை அடிப்பது வழக்கம். அடிபட்டவர்கள் யாராவது கேட்டால் பாதக்கரையான் அடித்தான் என்று சொல்வார். பணிக்க நாடார் குடியிருப்பு நாலு திசையிலும் நந¢தவனம் கொண்ட ஊர். நாலுமாவடி என்னும் புகழ் பெற்ற ஊருக்கு அருகிலேயே உள்ள தலம். ஒருநாள் பனைத் தொழிலாளி ஒருவர் பனைமரத்தில் ஏறி உச்சியில் பாளையை சீவிக்கொண்டிருந்தார். அப்போது வயதான வேடத்தில் வந்த சுவாமி, பனைமரத்து மீது இருந்தவரை பார்த்து “பதநீர் குடிக்க வேண்டும். பட்டைக்கு ஓலை வெட்டி கீழே போடு’’ என்றார். பனைத் தொழிலாளியும் ஓலையை வெட்டி போட்டுவிட்டு கீழே இறங்கி வந்து முதியவரைத் தேடினார். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. பனைத்தொழிலாளி அதிர்ச்சி அடைந்தார். மறுநாள் பனைத்தொழிலாளி பனைமரத்தில் பாளை சீவிக்கொண்டிருந்தபோது மீண்டும் சுவாமி அதே முதியவர் வேடத்தில் வந்து
“பட்டைக்கு ஓலை போடு’’என்றார். பின்பு மாயமாய் மறைந்துவிட்டார். இதுபோன்று அடுத்தடுத்து நடைபெற்றது.ஒருநாள் பனைத் தொழிலாளி பனைமரத்தில் இருந்துகொண்டு, ‘‘யாருய்யா நீ? உனக்கு என்ன வேண்டும்? ஏன் இப்படி செய்கிறாய்? என எரிச்சலுடன் திட்டினார். உடனே திடீரென்று பனைத்தொழிலாளிக¢கு கண் பார்வை போனது. இதனால் அவர் மரத்திலிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்தார். அப்போது தான் வந்தவர் சாதாரணமானவர் அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டார். இவர் தெய்வத்துக்கு சமமானவர். எனவே தெரியாமல் பேசி விட்டோமே என வருத்தப்பட்டார். அதோடு மட்டுமல்லாமல் “நான் தெரியாமல் செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று கதறினார், பனைத் தொழிலாளி.இதைக் கண்டு பரிதாபப்பட்ட சுவாமிகள், மரத்தில் இருந்தவருக்கு காட்சி கொடுத்தார். “மரத்திலிருந்து கீழே இறங்கி வா’’ என்றார். உடனடியாக அவருக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்தது. மரத்தை விட்டு இறங்கிவந்த அவர், சுவாமியை பார்த்து “நீங்கள் யார்? பதநீர் குடிக்க பட்டை கேட்கிறீர்கள்... பட்டை செய்ய ஓலை போட்டதும் மறைந்து விடுகிறீர்கள், ஏன்?’’ என்று கேட்டார்.

அதற்கு சுவாமி ‘‘நான் பாதக்கரையான்’’ என்றார். “இந்த இடம் எனக்கு பிடித்துப் போய்விட்டது. இங்கே நான் தங்க முடிவு செய்துள்ளேன். நீ எனக்கு இந்த இடத்தில் இருப்பிடம் ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்றார். அதற்கு பனைத் தொழிலாளி, ‘‘நானே பனை ஏறி அன்றாடம் ஜீவனம் நடத்துபவன். உமக்கு இருப்பிடம் அமைக்க என்னிடம் ஏது பணம்?’’ என்று பதிலளித்தார். அதற்கு சுவாமி “இ¢ந்த இடத்தில் வரும் புரட்டாசி மாதம் 10ம் தேதிக்குப் பிறகு வரும் செவ்வாய்க்கிழமையன்று 3 குருத்து ஓலையை நட்டு அதில் மாலை சூட்டி, தேங்காய் பழம் படைத்து, கிடாவெட்டி பொங்கலிட்டு என்னை வழிபடு. நான் உன்னையும் இந்த ஊர் மக்களையும் காத்து நலம் அளிக்கிறேன்’’ என்று கூறி அங்கிருந்து மறைந்தார். அதன்படியே அந்த தொழிலாளி செய்தார். அவர் செய்ததை கண்டு பக்தர்கள் அங்கு கூடினர். மக்கள் பாதக்கரையானிடம் கேட்டது கிடைக்கவே ஊர்மக்களும்
அங்குச் சென்று வழிபட்டனர்.

பாதக்கரையானின் கோயிலில் மும்மூர்த்திகள் மூவரும் மேற்கு நோக்கி உள்ளனர். அவர்களோடு கிருஷ்ணரும் அருள்பாலிக்கிறார். பாதக்கரை சுவாமிகள் நடுவில் கிழக்கு நோக்கி இருக்க, இருபுறமும் ஆதிநாராயணர், பலவேசமுத்து இருவரும் உள்ளனர். அருகே சிவனும் பார்வதியும் கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றனர்.விநாயகர், மரத்திற்கு கீழே, கிழக்கு நோக்கி உள்ளார். முருகன் வள்ளி&தெய்வானையோடு அருள்
பாலிக்கிறார். பட்டாணி சாமி, அகத்தியர், சிவனைந்த போத்தி, மலையாள வைத்தியர் ஆகியோர் வடக்கு நோக்கி உள்ளனர். அவர்களுக்கு எதிரே பாதாள வடிவம்மன் தெற்கு நோக்கி தனிச்சந்நதியில் வீற்றிருக்கிறார். முத்துப்பேச்சி, பத்ரகாளி, முப்பிடாதி, இசக்கி, சுடலை மாடன் ஆகியோர் ஒரே இடத்தில் உள்ளனர். மேற்கு நோக்கி மச£னபோத்தி, தனிச் சந்நதியில் உள்ளார். பேச்சி அம்மன் மேற்கு நோக்கியபடியும் காலதேவன் தெற்கு நோக்கியபடியும் உள்ளனர்.

ஒரு காலத்தில் மண்பூடமாக இருந்த சந்நதிகள் பக்தர்கள் மனமுவந்து செய்த பணிவிடையால் வண்ணச் சிலையாக பிரமாண்டமாக காணப்படுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி மாதக்கொடை விழாவின்போது, வெளியூரில் தங்கி இருக்கும் நாலுமாவடி ஊர் மக்கள் இங்கு வந்து தங்கள் தொழில், குடும்பம் வளம்பெற வேண்டி பாதக்கரை சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர். இன்றும் சுவாமியின் மகிமையால் வேண்டுதல் நிறைவேறிய பலர் மறவாமல் சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். வெளிநாடு, மும்பை, சென்னை என்று வெளியூரில் இருக்கும் மக்கள் இங்கு வந்து கூடுவதும் சுவாமியை வணங்கி நலம் பெற்றுச் செல்வதும் வழக்கமாக உள்ளது.

பணிக்க நாடார் குடியிருப்போடு பாதக்கரை சுவாமிகள் நின்று விடவில்லை. அருகிலேயே நாலுமாவடியிலும் இவருக்குக் கோயில் எழுப்பப்பட்டது. பணிக்க நாடார் குடியிருப்பு அருகே உள்ள நாலுமாவடி ஊர் மக்கள் பாதக்கரை சுவாமியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார்கள். இதனால் 200 வருடங்களுக்கு முன்பு, சுவாமியின் அருள் தங்கள் ஊர் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அங்கிருந்து பிடிமண் எடுத்து வந்து நாலுமாவடியில் சுவாமிக்கு கோயில் எழுப்பி பக்தியுடன் வழிபட்டனர். சிறிய அளவில் எழுப்பிய கோயிலை, பெரிதாக எடுத்து கட்டி முடிக்க, தற்போது கம்பீரத்தோற்றத்தில் கோயில் காட்சியளிக்கிறது.

கோயில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை இரு தினங்களிலும் காலை 6 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு 9486537743, 9488103798 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை&திருச்செந்தூர் பாதையில் குரும்பூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில்தான் பணிக்க நாடார் குடியிருப்பு, நாலுமாவடி ஆகிய இரு தலங்களும் உள்ளன.

Comments