ஸ்ரீகாலபைரவர்














வேண்டியதை அருளும் காலபைரவ வடுகநாதர்

குண்டடம் ஸ்ரீகாலபைரவ வடுகநாதர்

'காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள்; காசு இல்லை என்றால் குண்டடத்துக்கு வாருங்கள்' என்று குண்டடம் ஸ்ரீகாலபைரவ வடுகநாதரின் சிறப்பைப் பற்றி கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொல்வார். பைரவர் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காசி மாநகரின் காவல் தெய்வமான ஸ்ரீகாலபைரவர்தான். புராணச் சிறப்பு வாய்ந்த காசி மாநகரை, எந்த வித தீய சக்திகளும் அண்ட விடாமல் காவல் காத்து வருபவர்- அங்கே குடி கொண்டுள்ள ஸ்ரீகாலபைரவர். காசிக்குச் செல்லும் பக்தர்கள் திரும்பும்போது, அவரைத் தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்தி பெறும் என்று புராணம் சொல்கிறது.

பொருளாதார ரீதியாக காசிக்குச் செல்வது என்பது எல்லோருக்கும் இயலாத ஒன்று. எனவேதான், வசதி உள்ள அன்பர் கள் பைரவரை தரிசிக்க விருப்பம் கொண்டால் காசிக்குப் போகலாம்... வசதி இல்லாத அன்பர்கள், நம் தமிழகத்திலேயே உள்ளே குண்டடம் சென்று அங்குள்ள பைரவரை தரிசித்து பலன் பெறுங்கள் என்றார் வாரியார் ஸ்வாமிகள்.

பைரவர் என்பவர், சிவனின் அம்சம். «க்ஷத்திரங்களை இவர் காப்பதால், «க்ஷத்திரபாலகர் என்றும் அழைக்கப் படுகிறார். நான்கு வேதங்களே நாய் வடிவில் பைரவருக்குக் காவலாக இருக் கின்றன. 64 வேறுபட்ட வடிவங்களில் பைரவர் திருமேனிகளைப் பிரித்துச் சொல்வார்கள்.

பைரவரை வழிபட்டால் அனைத்து வளங்களும் கிடைக்கும். பொன்னும் பொருளும்
மன அமைதியும் மகிழ்ச்சியும் இவரை வழிபட்டால், கிடைக்கக் கூடிய சில செல்வங்கள். பதினெட்டு சித்தர்களுள் ஒருவ ரான கொங்கணர், பைரவரை வழிபட்டு அட்டமாஸித்திகளை அடைந்தார். செம்பைத் தங்கமாக்குதல், எத்தகைய நோயையும் குணமாக்க வல்ல மூலிகை மருந்துகளைத் தயாரித்தல் போன்ற பிரமிப்பான கலைகளில் கொங்கணர் தேர்ந்து விளங்கியதற்கு ஸ்ரீபைரவரின் அருளே பிரதான காரணம்!

பிரம்மதேவன் செருக்கடைந்து திரிந்த ஒரு காலம் உண்டு. அப்போது பிரம்மனுக்கு ஐந்து தலைகள் (நான்முகன் என்ற பெயர் பிற்பாடு வந்திருக்க வேண்டும்). திசைகளின் காவலனாக, படைப்புத் தொழிலின் அதிபதியாக விளங்கியதா லும், ஐந்து தலைகளுடன் அவதரித்ததாலும் லோக ரட்சகனான சிவ பெருமானையே மதிக்கத் தவறினார் பிரம்மன். அதோடு, தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதுகுறித்து சிவனிடம் சென்று முறையிட்டனர் தேவர்கள். சினம் கொண்டார் சிவபெருமான். பிரம்மனின் செருக்கை அடக்கத் தீர்மானித்தார். தனது சக்தியால் பைரவரை உருவாக்கி, பிரம்மனின் தலைகளில் ஒன்றை கிள்ளி வரும்படி ஆணை இட்டார். வீராவேசத்துடன் புறப்பட்ட பைரவர், பிரம்மனின் ஐந்து தலைகளுள் நடுவில் இருந்த ஒரு தலையைத் தன் நகத்தால் கிள்ளி எடுத்தார். இந்த பைரவர் அம்சமே வடுகதேவர் ('வடுகன்' என்றால் பிரம்மச்சாரி). புராணத்தில் சொல்லப்பட்ட தகவல் இது.



குண்டடத்துக்கு வருவோம். இங்குள்ள பைரவரின் திருநாமம்- ஸ்ரீகாலபைரவ வடுகநாத ஸ்வாமி. இங்கு உறையும் ஈசனின் திருநாமம் விடங்கீஸ்வரர். விடங்கர் என்ற முனிவர் தவம் இருந்தமையால் இந்தப் பெயர். அம்பாள் திருநாமம்- விசாலாட்சி. என்றாலும் பைரவர் கோயில், வடுகநாதர் கோயில் என்று சொன்னால்தான் பலரும் இந்தக் கோயிலை அடையாளம் காட்டுகிறார்கள். பைரவருக்கு சிறப்பான வழிபாடு நடந்து வருகிறது. கலியுகத்தில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி, பக்தர்களைத் தன்பால் ஈர்த்து வருகிறார் இந்த காலபைரவ வடுக நாதர்.

கோவை- மதுரை நெடுஞ்சாலையில் குண்டடம் இருக்கிறது. கோவையில் இருந்து சுமார் 82 கி.மீ.! பல்லடம்- தாராபுரம் மார்க்கத்தில் இரண்டு ஊர்க ளுக்கும் நடுவில் இருக்கிறது குண்டடம். பல்லடத்தில் இருந்து சுமார் 28 கி.மீ.! தாராபுரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவு.



மகாபாரத காலத்திலேயே குண்டடம் சிறப்புற்று விளங்கியதாக புராணம் சொல்கிறது. கீசகன் என்பவன், திரௌபதியின் மேல் மோகம் கொண்ட தால், அவனைக் கொன்றான் பீமன். இது நிகழ்ந்த இடம்- குண்டடம். 'கொன்ற இடம்' என்பது பின்னாளில் குண்டடம் ஆகி விட்டது.

''பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது (மறைந்து வாழ்வது) குண்டடத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள ருத்ராபதிக்கு வந்தனர். இங்குள்ள தொரட்டி மரத்தின் பொந்தில்தான் தனது வில், அம்பு போன்ற ஆயுதங்களை மறைத்து வைத்தான் அர்ஜுனன் (இதே நிகழ்வை வேறு சில ஊர்களோடும் தொடர்புபடுத்திச் சொல்வது உண்டு). இதனால் இந்த மரத்தின் அடியில் உள்ள விநாயகர் 'வில் காத்த விநாயகர்' என்று இன்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தை சூழ்ந்த பகுதியில் 1950-ஆம் வருடம் கிணறு வெட்டும்போது பூமிக்கடியில் இருந்து கைப்பிடி இல்லாத வாள், யானையின் தந்தம், குதிரை மற்றும் யானையின் எலும்பு கிடைத்ததாகத் தொல்பொருள் துறையின் ஆய்வு ஒன்று சொல்கிறது.

தற்போது உள்ள தாராபுரத்துக்கு அந்த நாளில் விராடபுரம் என்று பெயர். அஞ்ஞாதவாசத்தின்போது விராடபுரம் அரண்மனையில் ஒரு வருடம் பேடி யாக இருந்தான் அர்ஜுனன். ஒரு வருடம் முடிந்து திரும்பும்போது ஒரு நாள் சூர்ய உதய நேரத் தில் அர்ஜுனனின் பேடி வேஷம் நீங்கியது. இது நீங்கிய இடம் சூரியநல்லூர் எனப்படுகிறது. இது, தாராபுரத்துக்கும் குண்டடத்துக்கும் நடுவே இருக்கிறது.



புராணச் சிறப்பும் வரலாற்று முக்கியத்துவமும் குண்டடத்துக்கு அதிகம் உண்டு. அந்நியர்கள் ஆட்சிக் காலத்தில் ஆலயம் தொடர்பான பல ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அந்தத் தாக்கு தலில் பெரியகளந்தை ஆதீஸ்வரர், எரகாம்பட்டி நாகலிங்க ஸ்வாமி, குண்டடம் வடுகநாத ஸ்வாமி, தாராபுரம் அகஸ்தீஸ்வரர், கூத்தம்பூண்டி சொர்ணேஸ்வரர் முதலான பல சுற்றுப்பட்ட ஆலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. பல கல்வெட்டுகள் அழிந்து போய் விட்டன. ஆனாலும், பெருமைகளையும் மகிமைகளையும் தன்னகத்தே கொண்டு ஸ்ரீகாலபைரவ வடுகநாத ஸ்வாமி இன்றைக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்'' என்கிறார் குண்டடம் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

ஸ்ரீகாலபைரவ வடுகநாத ஸ்வாமி குண்டடம் வந்து குடி கொண்ட கதையைப் பார்ப்போம்.

தற்போது ஆலயம் அமைந்துள்ள பகுதி, ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இலந்தை, அரசு போன்ற மரங்கள் நிறைந்த பெரும் வனமாக திகழ்ந்தது. 'இந்து வனம்' எனப்பட்ட இந்தப் பகுதியில் விடங்கர் எனும் முனிவர் இந்த வனத்தில் சிவபெருமானை நினைந்து தவத்தில் இருந்தார். அப்போது, அரக்கர்களால் தனக்குத் தொல்லைகள் நேரக் கூடாது என்று காசியில் உள்ள ஸ்ரீவிஸ்வநாதரை மனமுருக பிரார்த்தித்தார் விடங்கர்.

அவரது பிரார்த்தனைக்கு இணங்க, கால பைரவ மூர்த்திகளுள் ஒருவரான வடுக பைரவரை விடங்கரின் பாதுகாப்புக் காக அனுப்பினார் காசிவிஸ்வநாதர்.இறைவன் இட்ட பணியைச் செவ்வனே செய்தார் வடுகபைரவர். முனிவரது தவத்துக்கு இடையூறு செய்யும் அரக் கர்களை அழித்தார். இந்து வனத்தில் ஒரு இலந்தை மரத்தடியில் புற்றில் நிரந்தரமாகக் குடிகொண்டார் வடுக பைரவர்.

காலம் உருண்டது. அருகே ஓர் அரச மரத்தடியில் பாம்படீஸ்வரர், சுயம்பு மூர்த்தி யாகக் கிளம்பினார். இந்து வனம்தான், சேர நாட் டின் எல்லைப் பகுதி. எனவே, சேர நாட்டைச் சேர்ந்த வாணிபச் செட்டியார்கள் வியாபார நிமித்தமாகப் புறப்பட்டு, இரவுப் பொழுதை இந்து வனத்தில் கழித்துவிட்டு, மறுநாள் காலையில் மதுரைக்குப் புறப்படுவார்கள்.



ஒரு முறை சேர நாட்டைச் சேர்ந்த வியாபாரிகள் (செட்டியார்கள்) வண்டிகளில் மிளகு மூட்டைகளை எடுத்துப் புறப்பட்டனர். இரவு நேரம் நெருங்கவே, இந்து வனத்தில் (குண்டடம்) தங்கி விட்டு, மறுநாள் புறப்படத் தீர்மானித்தனர். அப்போது, இலந்தை மரத்தின் அடியில் குடிகொண்டிருந்த பைரவர் (காசியில் இருந்து வந்தவர்), கிழ வடிவம் எடுத்து மிளகு வியாபாரி ஒருவரை நெருங்கினார். 'உடல் நிலை சரியில்லை. கஷாயம் வைக்க வேண்டும். நீங்கள் கொண்டு வந்த மூட்டையில் இருந்து சிறிது மிளகு எடுத்துத் தாருங்கள்' என்றார். வியாபாரிக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே, 'மூட்டைக்குள் இருப்பது மிளகு இல்லை; பாசிப் பயறு' என்றார். கிழவரும் 'ஓ... அப்படியா' என்று கேட்டு விட்டு அங்கிருந்து மறைந்தார்.

நாட்கள் ஓடின. மதுரைக்குப் போய்ச் சேர்ந்த வியாபாரிகள், பாண்டிய மன்னரி டம் ஒரு விலை பேசி, சரக்குகள் அனைத்தையும் விற்றனர். மூட்டைகளை எடுத்துக் கிடங்கில் அடுக்குவதற்கு முன் அரண்மனைச் சிப்பந்தி ஒருவனிடம், ஒரு மூட்டையைப் பிரித்து உள்ளே இருப்பது மிளகுதானா என்று சோதிக்கும்படி பாண்டிய மன்னன் சொன்னான். அதன்படி சிப்பந்தி ஒரு மூட்டையைப் பிரிக்க... உள்ளே இருந்தவை- பாசிப் பயறு. மிளகு வியாபாரிகளுக்கோ வியர்த்து விட்டது. முகம் சுளித்த மன்னன், வேறொரு மூட்டையைப் பிரித்துப் பார்க்கச் சொன்னான். அதிலும்- பாசிப் பயறு. இப்படி எல்லா மூட்டைகளிலுமே பாசிப் பயறு இருப்பதைக் கண்ட மன்னன், சேர நாட்டு வியாபாரிகள் தன்னை ஏமாற்ற முயன்றதாகச் சொல்லி, அவர்களுக்குத் தண்டனை தரத் தீர்மானித்தான்.



அப்போது, பைரவரின் திருவிளையாடல் நிகழ்ந்தது. எந்த வியாபாரியிடம் பைரவர் மிளகு கேட்டாரோ, அவருக்கு திடீரென 'சாமி' வந்தது. 'மிளகு மூட்டைகளை பாசிப் பயறு ஆக்கியது நான்தான்டா' என்றார் அந்த வியாபாரி. மற்றவர்கள் நம்பினாலும், மன்னன் இதை நம்பத் தயார் இல்லை. எனவே, 'சாமி' ஆடிய செட்டியாரைப் பார்த்து, 'எனக்கு இருப்பது இரண்டு குழந்தைகள். பெண்ணுக்கு வாய் பேச முடியாது. பையனுக்கு நடக்க முடியாது. இந்த இரு குழந்தைகளையும் நீ குணப்படுத்தினால் நீ சொல்வதை நம்புகிறேன்' என்றான்.

'நான் குடிகொண்டிருக்கும் புற்றை அழித்து, என்னை சந்நிதியில் குடியேற்று. அபிஷேகங்கள் செய். மிளகு சாற்றி வழிபடு. உன் குழந்தைகளைக் குணப்படுத்துகிறேன்' என்று வியாபாரி வடிவில் வந்த பைரவர் சொன்னார். பாண்டிய மன்னனும் அதை சிரமேற் கொண்டு, சேர நாட்டு எல்லைக்கு வந்தான். இலந்தை மரத்தின் அடியில் புற்றில் குடி கொண்டிருக்கும் பைரவரை வெளியே எடுத்தான். மண்டபம் கட்டி பிரதிஷ்டை செய்தான். பைரவருக்கு மிளகு சாற்றி வழிபட்டான். பைரவர் அருளியபடியே, எட்டு நாட்களில் மன்னனின் குழந்தைகள் நலம் பெற்றன. இதனால் இந்த பைரவரை 'பயறாக்கிய முத்துவடுகநாத ஸ்வாமி' என்றும் அழைப்பது உண்டு.

விடங்கர் தவம் இருந்த இடத்தில், விடங்கீஸ்வரர் லிங்கத் திருமேனியை அமைத்தான். தவிர, விசாலாட்சி அம்மன், கல்யாண சுப்ரமண்யர் மற்றும் பரிவார தேவதைகளை பிரதிஷ்டை செய்தான். ஏழு பிராகாரங்களையும் எட்டுத் தெப்பக்குளங்களையும் அமைத்தான். இந்த நிகழ்வுக்குப் பிறகு 'சாமி' வந்து ஆடிய வியாபாரி (செட்டியார்), பிரதிஷ்டை ஆன பைரவர் சந்நிதிக்குள் வழிபடுவதற்காக நுழைந்தார். ஆனால், திரும்பவே இல்லை. உள்ளேயே ஐக்கியமாகி விட்டதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து ஆலய அர்ச்சகர் நம்மிடம் சொல்லும்போது, ''காவல் தெய்வமான பைரவருக்கே இங்கு காவலாக இருக்கிறார் செட்டியார். இதையே அவர் சந்நிதிக்குள் ஐக்கியமான நிகழ்ச்சி உணர்த்துகிறது. சுமார் 60 வருடங்களுக்கு முன் வரை அந்தச் செட்டியாருடன், சந்நிதிக்குள் செல்லும் அர்ச்சகர்கள் பேசுவார்கள். அவரும் அர்ச்சகர் களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தருவார். ஆனால், உருவம் புலப்படாது; குரல் மட்டும் கேட்கும். மூத்த அர்ச்சகர்கள் சொல்ல, இதை நான் கேட்டிருக் கிறேன். செட்டியாரின் உருவச் சிலை பைரவரின் சந்நிதியில் இருக்கிறது'' என்றார்.



சில நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அந்நியர்களது படையெடுப்பால் ஆலயம் பாதிக் கப்பட்டது. வழிபாடுகள் தடைபட்டுப் போயின. சமீப காலத்தில், சுமார் 60 வருடங்களுக்கு முன்பு, ஊர்க்காரர்களின் ஒத்துழைப்புடனும், குலமக்களின் முயற்சியுடனும் பைரவர் ஆலயத்துக்கு கல் திருப்பணி நடந்து, 1952-ல் கும்பாபிஷேகம் நடை பெற்றது. பிறகு, ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன.

ஆதிசைவ சிவாச்சார்யர்கள், கொங்கு வேளாளர் கள், யாதவர்கள், வைசியர்கள் (கொங்கு வாணிபச் செட்டியார்கள்), தேவர்கள், பண்டிதர்கள், செங்குந் தர்கள் என்று பல தரப்பட்ட குலத்தாருக்கும் இது குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. ஆலய விசேஷத் திருநாட்களில் இவர்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

ஆலய தரிசனம் செய்வோமா?

நுழைவதற்கு முன் திருக்குளம். ராஜகோபுரம் தாண்டி உள்ளே நுழைகிறோம். விடங்கீஸ்வரர் மற்றும் விசாலாட்சி ஆகிய திருவுருவங்கள். கிழக்கு நோக்கியவை. விடங்கீஸ்வரருக்கு இரு பக்கமும் மகா கணபதி, பாலமுருகன் ஆகிய விக்கிரகங்கள்.

அருகே தெற்கு நோக்கிய வண்ணம் ஸ்ரீகாலபைரவ வடுகநாதர் சந்நிதி. குழந்தை வடிவம். உதடுகளில் குறுஞ்சிரிப்பு. காலங்களை அடக்கி, கஷ்டங்களைப் போக்கும் வடிவம். நான்கு கரங்கள். வலக் கரங்களில் சூலம்- உடுக்கை. இடக் கரங்களில் நாகம்- கபாலம். நாய் வாகனத்தில் சாய்ந்தபடி அக்னி ஜுவாலை போன்ற ஜடாமுடியுடன், கோரப் பல் கொண்டு, சாந்தசொரூபமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீகாலபைரவ வடுகநாதர். மூன்று கண்கள். இவரது சந்நிதியில் மடி, ஆசாரம் போன்றவற்றை அர்ச்சகர்கள் சுத்த பத்தமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லை என்றால், தண்டனை தந்து விடுவாராம்.

ஸ்ரீகாலபைரவ வடுகநாதரை வழிபட்டால் நவக் கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும். ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போல் இவருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது. உளுந்து, மிளகு ஆகியவை கொண்டு தயார் செய்யப்படும் இந்த வடை மாலை சாற்ற விரும்புவோர், ஆலயத்தில் பணம் கட்டினால் போதும். வெண்பொங்கல் நைவேத்தியமும் இவருக்கு விசேஷம். பதினோரு மிளகு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி எட்டு தீபங்களை ஏற்றி வைத்தால், நாம் வேண்டும் பிரார்த்தனை நிறைவேறும். தவிர, தேங்காய் மூடியிலும், வெட்டப்பட்ட பூசணித் துண்டிலும் எண்ணெய் ஊற்றி, சில பரிகாரத் துக்காக விளக்கேற்றுகிறார்கள்.

தேய்பிறை அஷ்டமியில் இவரை தரிசித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். அன்றைய தினம் மாலை நேரத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஹோமம் ஆகியவை நடைபெறும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத அஷ்டமி, பைரவாஷ்டமியாக விமரிசையுடன் 3 நாள் திரு விழா நடைபெறுகிறது. லட்சார்ச்சனை, சங்காபி ஷேகம் என்று பிரமாதமாக இருக்கும்.

விடங்கீஸ்வரர் கருவறை கோஷ்டத்தில் விநாய கர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகிய திருவுருவங்கள் அருள் பாலிக்கின்றன. தவிர சந்திரன், சூரியன், நர்த்தன விநாயகர், பட்டக்காரர், கல்யாண சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், பலிபீடம்- கருடாழ்வாருடன் கூடிய வரதராஜ பெருமாள், ஸ்ரீராமானுஜர், ஆஞ்சநேயர், நவக்கிரகம் போன்ற பல சந்நிதிகளுடன் ஆலயம் விரிவாக அமைந்துள்ளது.

இங்குள்ள சுப்ரமண்யர் சிலை, விசேஷமான ஓர் அம்சம். முருகனின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக இங்கு இடப்பக்கம் நோக்கி இருக்கிறது. சூர சம்ஹாரத்துக்கு முன் இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம் இது என்கிறார்கள் சிற்ப சாஸ்திர வல்லுநர்கள். தல விருட்சம்- இலந்தை மரம்.

''இப்போது திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன. காசிக்கு அடுத்த சிறப்பு கொண்ட இந்த ஆலயம் பற்றிய தகவல்கள் பலருக்கும் தெரியப்படாமல் இருக்கிறது. எத்தகைய கஷ்டத்தையும் போக்கி, இனிமையான வாழ்க்கையைப் பெற விரும்புபவர்கள் இந்த பைர வரை வணங்கி அவரது அருள் பெற வேண்டும்'' என்றார் திருப்பணிக் குழுவைச் சேர்ந்த அன்பர் ஒருவர்.


Comments