கஷ்டம் தீர்க்கும் கத்ரி ஸ்ரீமஞ்சுநாதர்!








கர்நாடக மாநிலம்- மங்களூர் நகரில், கத்ரி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கத்ரி ஸ்ரீமஞ்சுநாதர் ஆலயம். 10-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், 14-ஆம் நூற்றாண்டில் கருங்கல் கோயிலாக அமைக்கப்பட்டது. இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீமஞ்சுநாதர்.

தென்னிந்திய ஆலயங்களிலேயே, மிகப் பழைமை வாய்ந்த உலோகத் திருவுருவ விக்கிரகம் என இந்தக் கோயிலின் மூலவரைக் குறிப்பிடுகின்றனர். எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும், சொட்டுத் தண்ணீர்கூட விக்கிரகத்தின்மீது நிற்காமல் வழிந்தோடிவிடுமாம்! ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீகணேஷ், ஸ்ரீதேவிதுர்கை, ஸ்ரீஐயப்பன், ஸ்ரீவேதவியாஸர், ஸ்ரீகோமுக கணபதி ஆகியோரும் இங்கே தரிசனம் தருகின்றனர்.

கோயிலின் தெற்குப் பகுதியில், பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சி தரும் ஸ்ரீமத்ஸ்யேந்திரநாதர் கொள்ளை அழகு! மடித்த கால்களுக்கு மேல் இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து அற்புத மாகக் காட்சி தருகிறார். கிரீடமும் காதணியும் தவிர, வேறு ஆபரணங்கள் இல்லை இவருக்கு. அதேபோல், வடக்குப் பகுதியில், ஏராளமான ஆபரணங்களுடன் பத்மாசனக் கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார் ஸ்ரீசௌரங்கிநாதர்.



கத்ரி ஸ்ரீமஞ்சுநாதர் ஆலயம், சதுர அமைப்பில், பிரமிட் வடிவக் கூரையுடன் அமைந்துள்ளது. இங்கே, ஏழு தீர்த்தங்கள்; அருகில் நீரூற்றும் உண்டு. மலையுச்சியில் பாண்டவர் குகைகளும் இருக்கின்றன. இங்கே, கி.பி.968-ஆம் ஆண்டில், மன்னர் குந்தவர்ம பூபேந்திரன் காலத்தில் உருவாக்கப்பட்ட ஸ்ரீதிரிலோகேஸ்வரர் திருவிக்கிரகம் உள்ளது. பத்மாசனக் கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீதிரிலோகேஸ்வரர். பஞ்ச உலோகத்தாலான இந்த விக்கிரகம், மிகப் பழைமை வாய்ந்தது என்கின்றனர். ஆறு கரங்களும் மூன்று திருமுகங்களும் கொண்டு அற்புதமாகத் திகழும் விக்கிரகம், 'கதரிகா விஹாரை’யில் நிறுவப்பட்டதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. விஹாரை என்பது புத்த மதம் பயன்படுத்திய சொல். கத்ரியில் 10-ஆம் நூற்றாண்டு வரை புத்த மதம் தழைத்திருந்தது.

ஒருகாலத்தில் வாழை வனமாக இந்தப் பகுதி விளங்கியதால், கதலி என வழங்கப்பட்டு, பிறகு கத்ரி எனும் பெயர் பெற்றதாம். விஜயநகரப் பேரரசின் கல்வெட்டுகளில் 'கதலி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



காச்யப முனிவரிடம் க்ஷத்திரியர்கள் மரியாதை காட்டினார்கள்; அவருக்கு நிலங்கள் பலவற்றை தானம் அளித்தார்கள். அதேநேரம், சஹ்யாத்ரியில் வசித்து வந்த பரசு ராமருக்கு, க்ஷத்திரியர்கள்மீது கடும் கோபம் ஏற்பட்டது. கண்ணில் பட்ட க்ஷத்திரியர்களைக் கொன்றார். பிறகு அவர், சிவனாரை நோக்கித் தவமிருந்தார். கத்ரி க்ஷேத்திரம் சென்று தவம் இருக்கும்படியும், அங்கே ஸ்ரீமஞ்சுநாதராக தான் இருப்பதாகவும் சிவனார் சொல்ல... பரசுராமர் கத்ரி சென்று தவம் மேற்கொண்டார். அங்கே அவருக்கு, ஸ்ரீபார்வதிதேவியுடன் காட்சி தந்தருளினார் சிவனார். இன்றளவும், ஸ்ரீபரசுராமர் கத்ரி தலத்தில் தவம் இருப்பதாக ஐதீகம்!

ஆலயத்தின் பின்புறம், ஏழு தீர்த்தக் குளங்கள் உள்ளன. அருகில் நீரூற்று. இதற்கு கோமுகம் என்று பெயர். பக்தர்கள் இங்கு வந்து கை, கால், முகம் கழுவிய பின்னரே கோயிலின் உள்ளே செல்கிறார்கள். கோயில் நுழைவாயிலில் மிக உயரமான தீபஸ்தம்பம் உள்ளது. உற்ஸவத்தின்போது, இதில் ஏராளமான தீபங்கள் ஏற்றப்படுமாம்! இங்கே, லட்ச தீப உற்ஸவம் விமரிசையாக நடைபெறும்.

கோயிலுக்கு வந்து, தங்களின் குறைகளை முறையிடுவோ ருக்கு, சந்தோஷத்தையும் நிம்மதியையும் தந்தருள்கிறார் ஸ்ரீமஞ்சுநாதர் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.



Comments