பாவம் போகுமா?

பாண்டவர்களிடம் தர்மம், அறிவு, உடல் பலம், வில் வித்தை எல்லாம் இருந்தது. அது மட்டுமா? எல்லாவற்றுக்கும் மேலாக பகவான் கிருஷ்ணன் எப்போதும் உறுதுணையாக கூடவே இருந்தார். அதாவது பாண்டவர்களுக்கு தெய்வ பலமும் இருந்தது. ஆனால், இத்தனை இருந்தும் ஏராளமானோர் கூடியிருந்த சபையில், திரௌபதிக்குப் பெருத்த அவமானம் ஏற்பட்டது

உலகில் உள்ள எவரையும் அவர்கள் செய்த ஊழ்வினை யானது விடாது என்பதையே இது உணர்த்துகிறது.அப்படியெனில், 'தெய்வத்தை வணங்குவதால் என்ன பயன்?' என்ற கேள்வி எழும். இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இதுபோன்று அவமானம் ஏற்படும் தருணங்களில், 'நான் யாருக்கு என்ன செய்தேன்? ஏன் எனக்கு இப்படியெல்லாம் வருகிறது?' என்று புலம்பக் கூடாது. 'ஐயோ...!' என்று அலறவும் கூடாது. உயிர்களை எடுக்கும் எமதர்மனின் மனைவி பெயர்தான் 'ஐயோ'.

'சரி... அந்த தருணத்தில் என்ன செய்ய வேண்டும்?' திரௌபதி போல் திட நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்க வேண்டும். அப்படி வணங்கினால், திரௌபதி யைக் காப்பாற்றியது போல், பகவான் நம்மையும் காப்பாற்றுவார் என்பதையே இது உணர்த்துகிறது.

கர்நாடகாவில் உள்ள அந்த ஏழைத் தம்பதிக்குப் பல குழந்தைகள் பிறந்தன. கடும் வறுமையால் எந்தக் குழந்தையையும் அவர்களால் படிக்க வைக்க முடிய வில்லை. மூத்த மகன், பல வீடுகளுக்குச் சென்று, அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, முடிந்த அளவுக்கு குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான்.

ஒரு நாள், சற்று தொலைவில் உள்ள ஊரில், பெரிய பணக்காரர் ஒருவரின் மகளுக்கு அதிவிமரிசையாக திருமணம் நடைபெறுவதை அறிந்தவன், 'இந்த திரு மணத்துக்கு சென்றால் வயிறு நிறைய சாப்பிடலாம்; இப்படி சாப்பிட்டால்தான் உண்டு; நம்மை அழைத்து யார் இப்படி உணவிடுவர்' என்று நினைத்தான். மேலும் அங்கு இனிப்புகள் ஏதும் கிடைத்தால் அதை எடுத்துச் சென்று, தனது குடும்பத்தாருக்குக் கொடுக்கலாம் என்று நினைத்து, அந்த ஊருக்குச் சென்றான்.

அந்த திருமணத்துக்கு மிகப் பெரிய செல்வந்தர் கள் வந்திருந்தனர். அழுக்காகவும் களைப்பாகவும் இருந்தவனை எவருமே கவனிக்கவில்லை. மிகுந்த பசியுடனும் பயம் கலந்த வெட்கத்துடனும் பந்தியில் அமர்ந்தான். அங்கு இருந்த பலரும், ''நீ என்னுடன் சாப்பிடக்கூடாது'' என்று அவனை விரட்டினர். பந்தியில் இருந்து எழுந்தவன், சமையலறைக்கு சென்று, அங்கு இருந்தவர்களிடம் உணவு கேட்டான். அவர்கள், ''கிணற்றில் இருந்து நீர் இறைத்துக் கொடு; கடைசியில் சாப்பிடலாம்'' என்றனர்.

உடனே அவன், கிணற்றில் இருந்து நீர் இறைத்து பாத்திரங்களை நிரப்பலானான். ஒரு வழியாக வேலையை முடித்து விட்டுச் சாப்பிட வந்தபோது, 'சாப்பாடு தீர்ந்து விட்டது' என்று தெரிவித்தனர். இதைக் கேட்டதும் அப்படியே மயங்கி விழுந்தவனை, தூக்கி வந்து சிலர் வெளியே போட்டனர். மயக்கம் தெளிந்ததும் அவன் சிந்திக்கலானான்.



'ஆயிரக்கணக்கானோர் விருந்து சாப்பிட்ட இடத்தில் என் சிறு வயிறுக்கு ஒரு பிடி உணவு கிடைக்கவில்லை. இதற்கு நான் செய்த பாவமே காரணம். செய்த பாவங்களைப் போக்கிக் கொள்ளாமல், நான் எப்படி முயற்சித்தாலும் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. காசிக்குச் சென்று, கங்கையில் குளித்தால் பாவங்கள் அனைத்தும் போய்விடும் என்று சான்றோர் சொல்லக் கேட்டிருக்கிறோம். நாமும் காசிக்குச் சென்று கங்கையில் குளிப்போம்!' என்று தீர்மானித்து, காசியை நோக்கி நடக்கலானான்.

வழியில் பிச்சை எடுத்து, பல அவமானங்களையும், பலரது வெறுப்புகளையும், ஏச்சு- பேச்சுகளையும் சந்தித்து, இறுதியில் காசியை அடைந்தான். கங்கையிலும் குளித்தான்.

அன்றிரவு நடுங்கும் குளிரில் கங்கைக் கரையிலேயே படுத்து தூங்கினான். அப்போது அவனுக்கு திவ்யமான கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில், புரந்தரதாஸர் என்ற மகான் தோன்றி, அவனது நாவில் ஒரு மந்திரத்தை எழுதினார்.

அவ்வளவுதான்! மறுநாள் காலையில் கங்கையில் நீராடும்போது, தேனினும் இனிய குரலில் தாமாகவே இறைவனைப் போற்றி புதுப் புது பாடல்களைப் பாடினார். அங்கு இருந்த மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவரது குரலின் இனிமை மற்றும் பாடல்களில் பொதிந்திருந்த கருத்து ஆகியவற்றில் மயங்கி, தங்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்று உபசரித்தனர். அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அவரை வெள்ளம் போல் சூழ்ந்து கொண்டனர். மாவிலைத் தோரணங்கள்; மங்கள வாத்தியம்; பூர்ண கும்பம் என அவரை சர்வ மரியாதையுடன் வரவேற்றனர். அவரை அண்டிய வர்கள், பல நன்மைகள் விளைந்து வளம் பெற்றனர்.

'இந்த மக்கள்தானே முன்பு இவரை வெறுத்தனர்? இப்போது இவர்களே கொண்டாடுகின்றனர்?'

இதற்குக் காரணம் குருவருளே! குருவின் அருள் இவருக்குக் கிடைக்க என்ன காரணம்? வாழ்வில் பல துன்பங்கள் ஏற்பட்டபோதும் கலங்காமல், சான்றோர் உரைத்த வழியில் திடமான நம்பிக்கையுடன் சென்றதால், அவருக்கு குருவருள் வாய்க்கப் பெற்றது. கன்னட மொழியில் பல அருமையான கீர்த்தனங்களை இயற்றிய 'விஜய விட்டல தாஸர்'தான் அவர்.

சான்றோர்கள் காட்டிய வழியில் சென்றால், நமக்கும் தினம் தினம் திருநாளே!

Comments