ஆதிசிவன் ஆலயம்

100 ஆண்டுகளுக்கும் மேலாக....
கும்பாபிஷேகம் காணாத ஆதிசிவன் ஆலயம்


நாம் வசிக்கும் வீட்டை ஐந்தாறு வருடங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து, வெள்ளையடித்து, வண்ணம் பூசி அழகு செய்கிறோம். இத்தனைக்கும் ஒரு வீட்டில் வசிப்பது என்னவோ, அதிகபட்சம் நாலு அல்லது ஐந்து பேர்தான் (கூட்டுக் குடும்பம் என் றால் இந்த எண்ணிக்கை சற்று கூடலாம்). எல்லா மராமத்து வேலை களும் முடிந்த பின், மன சாந்திக்காக வேத பண்டிதர்களை வைத்து கணபதி ஹோமம் செய்கிறோம். அதன் பின், அந்த வீட்டுக்கு ஒரு பொலிவும், களையும் இயல்பாகவே வந்து விடுகிறது.



ஆனால், ஆயிரக்கணக்கான நபர்கள் வந்து போகும் திருக்கோயில்களை எப்படிப் புனிதப்படுத்துவது?

எண்ணற்ற பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து, அனுக்கிரஹம் பெறுவதற்குத் தினமும் ஆலயங்களுக்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சுத்தமானவர்களாகவா இருக்கிறார்கள்? உடலில் சுத்தம் இல்லாமல் இருக்கலாம்; உள்ளத்தளவில் சுத்தம் இல்லாமல் போயிருக்கலாம்; கோயிலைக் கோயிலாக மதிக்காமல் ஒரு பொழுதுபோக்கு இடமாக நினைத்து வந்து போயிருக்கலாம். இதை

எல்லாம் முறையாக யார் கண்காணிப்பது?


உடை விஷயத்தில் கோயிலுக்கு எப்படி வருகிறார்கள் என்று வேண்டுமானால், சில சிப்பந்திகள் கண்காணிக்கலாம். ஆனால், எப்படிப்பட்ட உள்ளத்தோடு அவர்கள் வருகிறார் கள் என்பதை எவர் கண்காணிக்க முடியும்?

இப்படிப்பட்ட தகாத எண்ணங்களுடன் வந்து செல்பவர்களால் ஏற்பட்ட தோஷங்களைத் துடைத்தெடுக்கும் விதமாகவும், ஆலயத்தில் உள்ள மூலவர் திருவுருவங்களுக்கு வேத கோஷங்களின் மூலம் புது சக்தியை ஏற்றும் விதமாகவும், தோற்றத்திலும் பொலிவிலும் ஒரு புதுமையைக் கொண்டு வருவதற்காக வும்... ஆலயங்களையும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். அதைத்தான் 'கும்பாபிஷேகம்' என்றார்கள். இதற்கென்றே, வேதங்களை அடிப்படையாகக் கொண்டு, சில நியமங்களை ஆகம பண்டிதர் கள் உருவாக்கினார்கள்.



ஓர் ஆலயம் என்றால், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்நிதிகளுக்கும், விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்கிறது ஆகமம். அநேகமாக, நகரத்தில் இருக்கின்ற பல ஆலயங்கள், இந்த நடைமுறைக்கு ஏற்ப கும்பாபிஷேகம் கண்டு வருவது சந்தோஷமான செய்தி. அபரிமிதமான வருமானத்தில் இருக்கின்ற சில ஆலயங்களில் உபயதாரர்களது ஏகோபித்த ஆதரவுடன், 12 ஆண்டுகளுக்குள் இரண்டு முறை கூட கும்பாபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், எத்தனையோ வருடங்கள் கடந்தும் கும்பாபிஷேகமே நடக்காமல் இருக்கின்ற ஆலயங்களின் நிலைமையை என்னவென்பது? 12 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் நடத்தி விட வேண்டும். ஆனால், கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாக- அதாவது நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் கும்பாபிஷேகமே நடக்காமல் இருந்தால்...?



அப்படி ஓர் ஆலயம் இருக்கிறது! நன்னிலம் அருகே கீழகரம் என்கிற கிராமத்தில் இருக் கிற ஸ்ரீசௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீஆதி புரீஸ்வரர் ஆலயம்தான் அது!

இந்தக் கிராமத்தில் நூறு வயதைக் கடந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்து இந்த ஆலயத்துக்குக் கும்பாபி ஷேகம் நடந்ததே இல்லையாம். அந்த ஊரைச் சேர்ந்தவர்கள், "இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் ஆகி, நூத்தம்பது வருஷத்துக்கும் மேல இருக்கும்னு சொல்றாங்க. கடந்த 20-ஆம் நூற்றாண்டில் எங்க கோயி லுக்குக் கும்பாபிஷேகம் நடந்ததாக எந்த விதமான ஆதாரமும் இல்லீங்க. ஏதோ, இப்பதான் அந்த நேரம் வந்திருக்கு போல. திருப்பணி வேலைகளை ஆரம்பிச்சிருக்கோம்" என்கிறார்கள் கோரஸாக.



ஆம்! கோயில் சிறப்பாக இருந்தால்தானே, குடியும் சிறப்பாக விளங்கும்?! புகழ்பெற்ற ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம் வெகு அருகே இருந்தும், இந்த ஆலயம் பிரபலமாகாமல் போனது ஏன் என்பதுதான் தெரியவில்லை. பல வருடங்களாக வழிபாடே இல்லாமல்- முட்செடிகளுக்குள் புதைந்து போயிருந்த இந்த ஆலயத்தை, ஓரிரு ஆண்டுகளுக்கு முன் சுத்தம் செய்து ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்த உள்ளூர்க் காரர்களைப் பாராட்டத்தான் வேண்டும். ஆன்மிகத் தில் நாட்டம் கொண்ட வெளியூர் அன்பர்களது ஆதரவும் கைகூட... பணிகள் மெள்ள நிறைவேறி வருகின்றன. இதோ, கும்பாபிஷேகத்துக்கும் நாள் குறித்து விட்டனர். 2009-ஆம் வருடம் ஏப்ரல்

மாதம் 13-ஆம் தேதி திங்கட்கிழமை, கீழகரம் ஸ்ரீஆதி புரீஸ்வரர் கும்பாபிஷேகம் காணப்போகிறார்!

எங்கே இருக்கிறது கீழகரம்?

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது கீழகரம். கீழ்க்குடியின் சிற்றூராக கீழகரம் இருக்கிறது. கீழை யகம் என்றும் ஒரு பெயர் இருக்கிறது. கீழகரம், நஞ் சையும் புஞ்சையும் நிறைந்த பூமி.



கீழகரம் ஸ்ரீஆதிபுரீஸ்வ ரரைத் தரிசிக்கச் செல்வது எப்படி?

கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் பயணித்தால், 'சீகார்பாளையம்' என்கிற நிறுத்தத்தில் இறங்க வேண்டும். திருவாரூரில் இருந்து எரவாஞ் சேரி செல்லும் நகரப் பேருந் துகள் சீகார்பாளையம் வழியாகச் செல்கின்றன. சீகார்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆலயத்துக்கு நடந்து வர அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள்தான் ஆகும்.



ஆக்னேய புராணத்தில், 'பிராகிருகேஸ்வர மகிமை' என்ற தலைப்பில் ஸ்ரீஆதிபுரீஸ்வரரைப் பற்றியும், இங்குள்ள மது தீர்த்தத்தின் சிறப்பு பற்றியும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பிராகிருகேஸ்வரர் என்ற நாமமும் ஆதிபுரீஸ்வரரையே குறிக்கிறது.

புராணம் சொல்லும் சில தகவல்களைப் பார்ப்போம். 'பிராகிருகம்' என்று இந்தத் தலம், அந்த நாளில்

சிறப்பிக்கப்பட்டிருந்தது. 'கயிலாயத்தை விடவும் சிறந்த தலம் இது' என்று பார்வதி தேவிக்குப் பரமேஸ்வரன் சொன்னதாக அந்தப் புராணம் சொல்கிறது. 'இந்தப் புராணத்தைப் படிப்பதாலேயே பாவங்கள் அனைத்தும் ஒழியும்; மக்கட் செல்வம் உண்டாகும்; புழுப் பூச்சிகளும் முக்தி அடையும்' என்று சிவபெருமானே சொல்லி இருக்கிறார்.



விந்திய தேசத்தில், பிப்பலன் என்பவன் இருந்தான். கூடா நட்பு கொண்டிருந்த இவன், வாழ்க்கையில் என்னென்ன தவறுகள் ஒருவன் செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்து வந்தான். உல்லாசமாக ஊர் சுற்றிக் கொண்டிருந்த பிப்பலன், இறுதியாக பிராகிருகேஸ்வரர் தலத்தை அடைந்து இங்கே தங்கினான். பிற உயிர்களைக் கொல்லுதல், வழிப்பறி முதலான கெடு செயல்களில் ஈடுபட்டுக் களியாட்டம் போட்டு வந்தான். மனைவியை மட்டுமின்றி, மற்ற பெண்களையும் இவன் விட்டு வைக்கவில்லை. இவனது ஆயுள் முடியும் தறுவாயில், எமதூதர்கள் வந்து இவனை ஆக்ரோஷம் பொங்கக் கட்டி இழுத்துச்

சென்றனர். பின்னே... சாமான்யனா இவன்?

வழியில்... சிவகணங்கள், அழகான ஒரு விமானத் துடன் வந்து வழிமறித்தனர். எம தூதர்களுக்கோ குழப்பம்! 'இவர்கள் ஏன் நம்மை வழிமறிக்கிறார்கள்?' என்று திகைத்தார்கள். அப்போது, "பிப்பலனை எங்களிடம் விட்டு விடுங்கள். அவனை சகல மரியாதைகளுடன் கயிலாயம் கூட்டிச் செல்ல வேண்டும். இது ஈசனின் ஆணை" என்றனர்.

எமதூதர்கள், "வாழ்நாளில் ஒரு பொழுதேனும் எந்த ஒரு புண்ணியமும் செய்யாத இவன், கயிலாயம் செல்வதா? விட மாட்டோம். இவனை சித்ரவதை செய்யப் போகிறோம்" என்றனர். பதிலுக்கு

சிவகணங்கள், "அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அவனை விடுவிக்காவிட்டால், நாங்களே அவனை விமானத்தில் ஏற்றிக் கொண்டு கயிலாயம் புறப்படு வோம்!" என்று கூற... இரு தரப்பினருக்கும் போர் மூண்டது. சிவகணங்களே வென்றனர். முடிவில் பிப்பலனை ராஜ மரியாதையுடன் விமானத்தில் ஏற்றி, கயிலாயம் அடைந்தனர்.

விஷயம் கேள்விப்பட்ட எமதர்மன், தானே கயிலாயம் சென்று சிவகணங்களின் செயல் பற்றி ஈசனிடம் முறையிட்டான். புன்னகையுடன் அனைத்தையும் கேட்ட ஈசன், "ஒரு கணமேனும் எனது (பிராகிருகேஸ்வரர்) சந்நிதி அருகே வந்து பிப்பலன் உலவியிருக்கிறான். அதனால், அவனுக்கு இந்த உயர்ந்த பதவி கிடைத்திருக்கிறது' என்று எமனை சாந்தப்படுத்தி அனுப்பி வைத்தாராம்.

ஆக... எப்பேர்ப்பட்ட பாவிகளும், இந்தத் தலத்தில் வசிக்கும் பாக்கியம் பெற்றால் உயர்வு அடைவர் என்பதை சிவபெருமானே உணர்த்திய நிகழ்வு தான் இது.

ஸ்ரீஆதிபுரீஸ்வரருக்கு உண்டான தீர்த்தம்- மது தீர்த்தம் (திருக்குளம்) எனப்படுகிறது. தற்போது, 'தாமரைக் குளம்' என்கிறார்கள். இது, ஸ்ரீஆதிபுரீஸ்வரர் ஆலயத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இலுப்பை மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன (மதூகம் என்றால் இலுப்பை). கார்த்திகை சோம வாரங்களில் இங்கு நீராடுவது சிறப்பு. தண்ணீர் நிரம்பி, குளம் பார்க்க அழகாக இருக்கிறது. ஏராளமான புராணச் சிறப்புகளைக் கொண்டது இந்த தீர்த்தம்.

முற்காலத்தில், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை களில் ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் நீராடிய பின், இங்குள்ள மது தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீஆதிபுரீஸ்வரரை வழிபட்டுச் செல்வது மரபாக இருந்தது.

இந்த மது தீர்த்தத்தின் கரையில் ஆசிரமம் அமைத்து, தன் மனைவி லோபாமுத்திரையுடன் இல்லறம் நடத்திய அகத்திய மாமுனிவர், நித்தமும் ஆதிபுரீஸ்வரரை வணங்கி வந்தாராம். இந்தக் கதையும் சுவாரஸ்யமானது. அதைச் சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

கீழகரத்தில் உறையும் ஸ்ரீஆதிபுரீஸ்வரரிடம், "சம்சார பந்தத்தை அடைந்து, உன் திருவடி தொழுது,

வேள்விகள் செய்து, நற்கதி அடைய விருப்பம். அருள்புரிய வேண்டும்" என்றார் அகத்தியர். இல்லறம் நடத்த இறைவனும் அவருக்கு வரம் கொடுத்தார். "அகத்தியரே... கவேரரின் மகளான லோபாமுத்திரையை திருமணம் புரிந்து கொண்டு இந்தப் பிறவியில் வேள்விகளைச் செய்து சத்திய புருஷனாக வாழ்வீராக!' என்று ஆசீர்வதித்தார்.

அதன்படி தவசீலரான கவேரரின் குடிலை அடைந்து அவரை வணங்கினார் அகத்தியர். இறைவனின் வரம் பற்றிக் கவேரரிடம் அகத்தியர் சொல்ல... பெரிதும் மகிழ்ந்த அவர், தன் மகளை அகத்தியருக்கு மனைவி ஆக்கினார். பிறகு, மது தீர்த்தத்தின் கரையில் பர்ணசாலை அமைத்து, தினமும் ஸ்ரீஆதிபுரீஸ்வரரை வணங்கி, இல்லாளின் துணைவியுடன் வேள்விகளைச் செய்தார். முக்தியும் அடைந்தார் (அகத்தியர் வழிபட்டதால், இந்த ஈசனுக்கு அகத்தீஸ்வரர் என்ற பெயரும் உண்டு).

வைகாசி விசாகத்தன்று மது தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீஆதிபுரீஸ்வரரை வணங்குபவர்களுக்கு, சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்று ஆக்னேய புரா ணத்தில் குறிப்பு இருக்கிறது. மது தீர்த்தத்தின் நீரை

நூறு குடங்களில் எடுத்துச் சென்று ஸ்ரீஆதிபுரீஸ் வரருக்கு அபிஷேகம் செய்விப்பவன், கங்கையை தரிசித்த பாக்கியவான் ஆகிறான்.

மது தீர்த்தக் கரையில் பிதுர் தர்ப்பணங்கள் செய்வது விசேஷம். இங்கு பிதுர்களுக்கு பிண்டதானம் செய்பவர்கள், கங்கைக் கரையில் நூறு முறை பிண்டதானம் செய்த பலனைப் பெறுகிறார்கள்.

தவிர, பிதுர்களும் பெரும் சந்தோஷம் அடைவார் களாம். எள் மற்றும் கோதுமை மாவா லும், உயர்ரக நெற்களாலும், உளுந்து மாவாலும் ஆன பிண்டங்களைத் தானம் அளித்தால், குறைவற்ற பலன் களைத் தருமாம்.

புராதனமான ஆலயத்தின் பழை மையைக் கணக்கிட்டால் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டும்.

கிழக்கு நோக்கிய சிவாலயம். பலிபீடம், பிரதோஷ நந்திதேவரைக் கடந்து சென்றால், ஸ்ரீஆதிபுரீஸ்வரர். அதற்கு முன் நமக்கு வலப் பக்கமாக- அதாவது தெற்கு நோக்கி ஸ்ரீசௌந்தர நாயகியின் தனிச் சந்நிதி.

சுமார் நான்கடி உயரத்தில் நான்கு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள் இந்த அழகு நாயகி. அட்ச மாலை, தாமரை, அபயம், வரதம் தாங்கிய திருக்கரங்கள். தரிசித்து வெளி வருகிறோம்.

பிரதோஷ நந்திதேவரைத் தாண்டி ஒரு மண்டபம். ஆஜானுபாகுவான துவாரபாலகர்களின் தரிசனம். அதைத் தாண்டி கருவறையில் கனஜோராகக் காட்சி தருகிறார் ஸ்ரீஆதிபுரீஸ்வரர். ஆதியின் நாயகன்!

ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்கிற நான்கு வேதங்களின் பிம்பமாகத் திகழும் சதுர்முகலிங்கத் திருமேனி கொண்டு, பக்தர்களுக்கு அருள் பாலிக் கிறார் ஸ்ரீஆதிபுரீஸ்வரர். சதுர வடிவிலான பிர மாண்ட லிங்கத் திருமேனி.

இந்த லிங்கத் திருமேனிக்கு அபிஷேகங்கள் செய்து வணங்கினால், கிடைத்தற்கரிய பலன்களை நாம் பெறலாம். ஸ்ரீஆதிபுரீஸ்வரருக்கு சண்பக மலர் களால் ஆன மாலை அணிவித்து வழிபடுபவர், சிறந்து விளங்குவர். நூறு வில்வ தளங்களாலும், ஆயிரம் புங்க மலராலும் ஸ்ரீஆதிபுரீஸ்வரரை கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்குபவர்,

இறைவனின் பேரரருளுக்குப் பாத்திரமாவர். சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் மது தீர்த்தத்தால் அபிஷேகம் செய்பவர், பிரம்மஹத்தி தோஷங்களில் இருந்து விடுபடுவர். இப்படி ஒவ்வொரு மாதங்களி லும் ஸ்ரீஆதிபுரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு விசேஷ அனுக்கிரஹம் உண்டு. சிவராத்திரி

காலங்களில், ஸ்ரீஆதிபுரீஸ்வரரைத் தரிசித்து சிவபுராணம் படிப்பவர்கள், ஈஸ்வர சொரூபத்தையே அடைவார்களாம்.

திருப்பணி வேலைகள் துவங்கியும், பழைய நினைப்பு மாறாமல் வவ்வால்கள் ஸ்ரீஆதிபுரீஸ்வரர் கருவறையில் நூற்றுக் கணக்கில் வசிக்கின்றன. கருவறையும் மண்ட

பமும், கருங்கல்லில் காட்சி தருகின்றன. இங்கே வீரபத்திரர், பைரவர், அப்பர் ஆகிய திருமேனிகளும் தரிசனம் தருகின்றன.

பிராகார வலத்தின்போது கோஷ்ட மூர்த்திகளாக அழகான ஸ்ரீதட்சிணாமூர்த்தி, லிங்கோத் பவர், பிரம்மா, ஸ்ரீவிஷ்ணுதுர்கை ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கிறோம். தவிர ஸ்ரீவிநாயகர், முருகப் பெருமான், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய தனிச் சந்நிதிகளைக் காண்கிறோம். ஒரு காலத்தில் ஆலயம், மிகப் பெரிய அளவில் விஸ்தாரமாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கேற்ற மாதிரி ஆலயத்தின் பரப்பரளவு பெரிதாக இருக்கிறது. பிராகார வலத்தின்போது ஏராளமான கல்வெட்டுகளைக் காண முடிகிறது. தமிழகத் தொல்பொருள் துறை இந்த

கல்வெட்டுக்களை ஆய்வு செய்துள்ளது. கல்வெட்டுக்களே ஆயிரம் ஆண்டு பழைமை கொண்டவையாம். மாறவர்மன் வீரபாண்டியன், மாறவர்மன் பராக்கிரம பாண்டியன், விக்கிரம சோழன் ஆகியோரது காலத்தைச் சேர்ந்த கல் வெட்டுகள். ஆலயத்துக்கு மன்னர்களும் மற்றவர்களும் வழங்கிய நிலபுலன்கள், திருப்பணி விவரங்கள், பிள்ளையார்- சிவபெருமான் குறித்த பாடல்கள் ஆகியவற்றை இந்தக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

தல விருட்சமான வன்னி மரம், பிராகாரத்தில் காணப் பெறுகிறது. இதன் அடியில் ஒரு சிவலிங்கம். வைகாசி விசாக வைபவம், இந்த ஆலயத்தில் விசேஷம். அன்றைய தினம் மது தீர்த்தத்தில் இருந்து 111 குடங்களில் புனித நீரை எடுத்து வந்து ஸ்ரீஆதிபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வார்களாம். அப்போது திரளான மக்கள் கூடி, ஊரே திருவிழா களையோடு காணப் படுமாம்.

ஊர்ப் பெரியவர் ஒருவர் சொன்னார்: "அருகே இருக்கிற அச்சுதமங்கலம் கிராமத்தில் செல்வச் சிறப்பு மிக்க ஒரு குடும்பத்தினர் வசித்தனர். அவர்களது குடும்பத்துக்கு, குழந்தை பாக்கியம் இல்லாமல் போயிற்று. எத்தனையோ ஆலயங்களுக்குப் போய் வந்தனர். என்றாலும், பாக்கியம் கிடைக்க வில்லை. கடைசியில், ஒரு துறவியின் ஆசி யோடு இந்த ஆதிபுரீஸ்வரருக்கு வைகாசி விசாகத்தன்று மது தீர்த்தத்தில் இருந்து ஆயிரத் தெட்டு குடங்களில் புனித நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்து அவர்கள் வழிபட்டனர். அதன் பின் குழந்தை பாக்கியம் பெற்றனர். இதன் நன்றிக் கடனாக, தொடர்ந்து வைகாசி விசாக விழாவை அவர்கள் சிறப்பாக நடத்தி வந்தார்கள். விசாக மண்டகப்படிக்கென்று ஒரு ஏக்கர் நஞ்சை நிலத்தை ஆலயத்துக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்." என்றாலும், இந்தப் பிரமாண்டமான விழா இங்கு நின்று போய் பல வருடங்கள் ஆகின்றனவாம்.

மூன்று தலைமுறையாக கும்பாபிஷேகமே நடக்காமல் இருந்த ஒரு அற்புதமான சிவா லயம் - அதுவும் புராணங்களால் புகழப்பட்ட ஸ்ரீஆதிபுரீஸ்வரர் ஆலயத் திருப்பணிகள், விரைவில் நடந்தேறி சகல வளங்களையும் எல்லோரும் பெற வேண்டும் என்பதே இந்த ஊர்க்காரர்களின் விருப்பம்.

ஆன்மிகப் பெருமக்களின் பார்வை, ஸ்ரீஆதிபுரீஸ்வரர் ஆலயத்தின் பக்கம் திரும்பும் என்பதில் சந்தேகமில்லை. அந்த ஆதி சிவனின் அருள் இனிதே பெருகட்டும்!


தகவல் பலகை


தலம் : கீழகரம் என்கிற கீழையகம்
மூலவர் : அம்பாள்: அருள்மிகு ஸ்ரீசௌந்தரநாயகி. ஈஸ்வரன்: ஸ்ரீஆதிபுரீஸ்வரர் என்கிற பிராகிருகேஸ்வரர். அகத்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.



எங்கே இருக்கிறது?: கும்பகோணத்தில் இருந்து சுமார் 30. கி.மீ. தொலைவு. திருவாரூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவு. நன்னிலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு. சன்னாநல்லூர் (நன்னிலம் அருகே இருக்கிறது) ரயில் நிலையத்தில் (திருவாரூர்- மயிலாடுதுறை மீட்டர்கேஜ் மார்க்கம்) இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு. ஸ்ரீவாஞ்சியம் ராஜகோபுர சந்நிதி எதிரே சாலை வழியாகப் பயணித்தால் சுமார் 2 கி.மீ. தொலைவு.

எப்படிச் செல்வது?: கும்பகோணம்- நன்னிலம் சாலையில் பயணித்தால் சீகார்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஐந்து நிமிடம் நடந்தால் ஆலயம் வந்து விடும் (கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் உண்டு). கும்பகோணத்தில் இருந்து பேருந்து (எண்: 28) வசதி உண்டு. திருவாரூரில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் நகரப் பேருந்துகளில் பயணித்து (எண்: 11, 16, 51) சீகார்பாளையம் நிறுத்தத்தில் இறங்கி, ஆலயத்தை அடையலாம். நன்னிலம்- எண்கண் மினி பஸ்ஸில் பயணித்தால் ஆலய வாசலில் இறங்கிக் கொள்ளலாம்.

தொடர்புக்கு:
கே. கலியமூர்த்தி,
கீழகரம்- சுக்கிரவாரக்கட்டளை,
ஸ்ரீவாஞ்சியம் அஞ்சல் 610 110,
நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.
போன் : 04366- 345762.
மொபைல் : 99656 74151

Comments