2 பொருளாதாரநிலை சீர்பெறுதவற்கும், வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம்







இரண்டாம் பாவம்

பண் : காந்தாரப்பஞ்சமம் (3--4) ராகம் : கேதாரகௌளை
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவாவடுதுறை

இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே

வாழ்வினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்;
தாழ்இளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே

நனவினும் கனவினும் நம்பா, உன்னை
மனவினும் வழிபடல் மறவேன், அம்மான்
புனல்வரி நறுங் கொன்றைப் போது அணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே

தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடிஅலால், அரற்றாது என் நா;
கைம்மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே

கையது வீழினும் கழிவு உறினும்
செய்கழல் அடிஅலால் சிந்தை செய்யேன்
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மைஅணி மிடறு உடை மறையவனே

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே

வெம்துயர் தோன்றி ஓர் வெருஉறினும்
எந்தாய், உன் அடிஅலால் ஏத்தாது, என் நா;
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்தவெண் பொடிஅணி சங்கரனே

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே

வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
அப்பா உன் அடி அலால் அரற்றாது, என் நா;
ஒப்புடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே

பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்
சீர் உடைக் கழல் அலால், சிந்தை செய்யேன்,
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட, வரை அடர்த்தவனே

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடிலால் உரையாது, என் நா;
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே

பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்
அத்தா உன்அடி அலால் அரற்றாது என்நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேல்படை எம் இறையை
நலம்மிகு ஞானசம் பந்தன் சொன்ன
விலைஉடை அருந்தமிழ் மாலை வல்லார்

வினை ஆயின நீங்கிப்போய் விண்ணவர் வியன் உலகம் நிலையாக முன்ஏறுவர்; நிலைமிசை நிலைஇலரே

திருச்சிற்றம்பலம்

Comments