அருள்மிகு தீப்பாச்சியம்மன் திருக்கோயில்








மூலவர் : தீப்பாச்சியம்மன்
பழமை : 500 வருடங்களுக்கு முன்
ஊர் : திருநெல்வேலி
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு




திருவிழா:

சிவராத்திரி, பங்குனி உத்திரம்

தல சிறப்பு:

கண்ணகி அம்சமாக உள்ள கோயில்

திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு தீப்பாச்சியம்மன் திருக்கோயில், வண்ணாரப்பேட்டை. திருநெல்வேலி - 627 003. திருநெல்வேலி மாவட்டம்.

போன்:
+91- 462 - 250 0344, 250 0744.

பொது தகவல்:

ஆடி கடைசி செவ்வாய் மற்றும் கடைசி வெள்ளியில் இவளை வழிபடுவது மிகவும் விசேஷம்.



பிரார்த்தனை

பெண்கள் நல்ல கணவன் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

அம்பிகைக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

இக்கோயிலில் தீப்பாச்சியம்பாளுடன் அவளது கணவனும் அருகில் இருக்கிறார். தோழி லட்சுமியம்பாளுக்கும் சன்னதி இருக்கிறது. லட்சுமியுடன் அவளது கணவன், குழந்தையும் இருக்கின்றனர்.

தீப்பாச்சியம்மனைவணங்குபவர்கள் சிவராத்திரியிலும்,லட்சுமியம்மனை வழிபடுபவர்கள் பங்குனி உத்திரத்திலும் விழா கொண்டாடுகின்றனர்.

முன்மண்டபத்தில் விநாயகர் இருக்கிறார். வாழும்காலம் வரை இணைந்தே வாழ விரும்பும் தம்பதியர் இந்த அம்பிகையை வழிபடுகின்றனர்.



தல வரலாறு:

கண்ணகி போல கற்புக்கரசியாக வாழ்ந்த பெண்கள் இந்த தேசத்தில் பலர் உண்டு. கணவன் உயிர்விட்டதும், துயர் தாளாமல் இறந்தவர்கள் இவர்கள். இவர்களை தெய்வமாகக் கொண்டாடும் வழக்கம் தமிழரிடையே உண்டு. கண்ணகிக்கு தனிக்கோயில் இருப்பது போல, திருநெல்வேலியில் தீப்பாச்சியம்மன் என்ற பெண் தெய்வம் அருள்பாலிக்கிறாள்.

எட்டயபுரம் பகுதியில் வசித்த அக்கம்மாள், இளவயதிலேயே அதீத தெய்வ பக்தியுடையவளாக திகழ்ந்தாள். அவளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கணவரின் மீது உயிரையே வைத்திருந்தாள். இருவரில் யாரில்லாவிட்டாலும் இன்னொருவர் இல்லை என்ற அளவுக்கு அன்பு.

ஒருநாள், அவள் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அருகில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தவர்களிடம், "இப்போது எனக்கு ஒரு செய்தி வரும்' என்றாள். உடனிருந்தவர்களுக்கு அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. தங்கள் பணியை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்நேரத்தில் சில உறவினர்கள் அங்கு வந்தனர். அக்கம்மாவை வீட்டிற்கு அழைத்தனர். அவள் காரணம் கேட்டாள். அவர்கள் ஏதும் சொல்லாமல் உடன் வரும்படி கட்டாயப்படுத்தினர். அப்போது அவள், ""பணிக்காக வெளியூர் சென்றிருந்த என் கணவன் இறந்து விட்டார். அதற்காகத்தானே அழைக்கிறீர்கள்!'' என்றாள்.

நடந்த உண்மையும் அதுதான்.
அவளது சொல்லைக்கேட்ட உறவினர்கள்அதிர்ச்சியடைந்தனர். பின் அக்கம்மா வீட்டிற்குச் சென்றாள். ஆனால் அழவில்லை.

"இப்படி கல்லாய் நிற்கிறாளே. கணவன் மீது சற்றும் பாசமில்லையே' என்பது போல் ஊரார் அவளைப் பார்க்க, "நீங்கள் நினைப்பது எனக்குப்புரிகிறது. நான் எதற்காக அழ வேண்டும். உடல்தானே மடிந்திருக்கிறது. எங்கள் ஆன்மா ஒன்றோடு ஒன்று இணைந்ததல்லவா! நானும் அவரோடு ஒன்றாகக் கலக்கப்போகிறேன்.புரியவில்லையா? உடன்கட்டை ஏறப்போகிறேன்' என்றாள்.

அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும் இதற்கு அனுமதிக்கவில்லை. ஆனாலும், அக்கம்மாள் தனது நிலையில் பிடிவாதமாக இருந்தாள்.

இச்செய்தி எட்டயபுரம் மன்னருக்கு சென்றது. அவரும் அக்கம்மாவிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். ஆனால், அவள் தன் முடிவில் பிடிவாதமாக இருந்தாள். தனது கணவரின் உடலுக்கு புண்ணியநதியாம் தாமிரபரணி கரையில் எரியூட்ட விரும்பினாள்.

தாமிரபரணியில் நீராடினாள். தீயில் பாய்ந்து உயிரை விட்டாள். அவளோடு இளவயது முதல் பழகிய தோழி லட்சுமியும், அவளது பிரிவைத்தாங்காமல் தீயில் பாய்ந்து இறந்தாள். மக்கள் அவளது பத்தினித்தன்மையை உணர்ந்து அவ்விடத்தில் அவளுக்கு கோயில் கட்டினர்.

தீயில் பாய்ந்தவள் என்பதால், "தீப்பாய்ந்த அம்பாள்' என்று பெயர் பெற்றாள். காலப்போக்கில், "தீப்பாச்சியம்மன்' என்று பெயர் மருவியது.

இருப்பிடம் :

திருநெல்வேலி ஜங்ஷன்- பாளையங்கோட்டை ரோட்டில் வண்ணார்பேட்டை பஸ்ஸ்டாப் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. புதிய, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம் :திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை, திருவனந்தபுரம்

தங்கும் வசதி :திருநெல்வேலி

ஓட்டல் ஆர்யாஸ்:போன்:+91-462-2339002

ஓட்டல் ஜானகிராம்:போன்: +91- 462-2331941


ஓட்டல் பரணி போன்: +91- 462-2333235


ஓட்டல் நயினார் போன்; +91- 462-2339312

Comments

  1. பகிர்வுக்குப் பாராட்டுக்கள். கோவில் புராணம் தெளிவாகத் தந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete

Post a Comment