தண்ணீரையே எண்ணெய் ஆக்கிய திரு நமிநந்தியடிகள் நாயனார்

விளக்கேற்றுவது இறைவனுக்கு பிரியமான ஒன்று. விளக்கில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பதால் மாலையில் வீடுகளில் திருவிளக்கு ஏற்றுகிறோம். நமிநந்தியடிகள் இறைவனுக்கு விளக்கேற்ற பெரும் பேராட்டமே நடத்தினார். அதில் அற்புதம் செய்து இறைவன் அருள் பெற்றார். நமிநந்தியடிகள் நாயனார் திருவாரூர் அருகிலுள்ள ஏமப்பேறூர் என்ற ஊரில் அவதரித்தார். இவர் திருவாரூர் கோயில் மதில் சுவரை ஒட்டிய அறநெறியப்பர் சன்னதியில் நாள்தோறும் விளக்கேற்றி வழிபடுவார். அறநெறியப்பரின் சன்னதியில் பகல், இரவு எந்நேரமும் விளக்கை அணையாமல் பார்த்துக் கொள்வார். ஒருநாள் தரிசனத்திற்காக வந்த போது, விளக்கு அணையும் நிலையில் இருந்தது. எப்போதும் திரியும், நெய்யும் கொண்டு வரும் நமிநந்தியடிகள் அன்று அவற்றை எடுத்து வர மறந்து விட்டார். அவராக மறக்கவில்லை. அவரது பக்தியின் மேன்மையை உலகுக்கு உணர்த்த இறைவனே இவ்வாறு அவருக்கு மறதியை ஏற்படுத்தினார். நமிநந்தியடிகள் தனது தவறை எண்ணி வருந்தினார். அணைய இருக்கும் விளக்கை கண்டார். காற்றும் விளக்கை ஆடச் செய்து கொண்டிருந்தது. அவர் மனமும் ஆடிப்போய் விட்டது.

ஐயோ! விளக்கில் நெய்யோ, எண்ணெயோ ஊற்றாவிட்டால் அணைந்து விடுமே. அறநெறியப்பர் இருளில் ஆழ்ந்து விடுவாரே. வீட்டிற்கு போய் நெய் எடுத்து வர வேண்டுமானால் வெகுதூரம் போக வேண்டுமே. பரவாயில்லை. அருகிலுள்ள வீடுகளில் கேட்டுப்பார்ப்போம். யாராவது உதவுவார்கள், என தனக்குள் எண்ணியவராய் பதைபதைப்புடன் அருகிலுள்ள வீடுகளுக்கு சென்றார். அங்கிருந்தவர்கள் சமணர்கள். சிவபெருமானை நம்பாதவர்கள். அவர்கள் நமிநந்தியடிகளிடம், உமது சிவன் தான் எரியும் தணலை கைகளில் வைத்துக் கொண்டு ஆடுபவர் ஆயிற்றே. அந்த வெளிச்சம் போதாதா? அவரது நெற்றிக்கண்ணை திறந்தால் ஒளி பிழம்பாய் ஜொலிக்குமாமே! அப்படிப்பட்ட சிவனுக்கு நீர் நெய் தேடி ஏன் அலைகிறீர்?. எங்காவது ஆறு, குளத்தில் தண்ணீர் ஓடும். அதை எடுத்து விளக்கில் ஊற்றும். தீ பிரகாசமாய் எரியும், என்று கேலி செய்தனர். எக்காளச்சிரிப்பு சிரித்தனர். நமிநந்தியடிகள் முன்பை விட வெகுவாகக் கலங்கினார். ஐயனே! இது என்ன சோதனை. இந்தப்பாவிகள் உன்னை பழித்துப் பேசுவதை என் காதுகள் கேட்டு, இன்னும் செவிடாகாமல் இருக்கிறதே. இவர்கள் எண்ணெய் தராவிட்டாலும் பரவாயில்லை. இப்படி உன்னை கேலி செய்கின்றனரே. நான் என் செய்வேன், எனப்புலம்பினார். அப்போது அசரீரி ஒலித்தது. நமிநந்தி! கவலை வேண்டாம். உன்னைக் கேலி செய்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வை. அவர்கள் சொன்னது போலவே, கோயில் அருகிலுள்ள ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து விளக்கில் ஊற்று. விளக்கு பிரகாசமாய் எரியும், என்றது.

நமிநந்தியடிகள் மகிழ்ந்தார். தனது கோரிக்கையை இறைவன் ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி, சமணர்களின் மமதையையும் அடக்க முன்வந்ததை எண்ணி, ஆனந்தத்தில் ஏரிக்கு சென்றார். ஒரு செம்பு நிறைய தண்ணீர் எடுத்து வந்தார். கர்ப்பகிரகத்திற்கு ஓடோடிச் சென்று, தண்ணீரை விளக்கில் ஊற்றினார். விளக்கு முன்பை விட வெகுவாகப் பிரகாசித்தது. அவர் மகிழ்வுடன், கோயிலில் இருந்த எல்லா விளக்குகளிலும் தண்ணீர் ஊற்றி தீபம் ஏற்றினார். கோயிலே பிரகாசித்தது. இதைக் கேள்விப்பட்ட மக்கள் ஓடோடி வந்தனர். தண்ணீரில் எரிந்த விளக்குகளை கண்டு ஆச்சரியப்பட்டு, அறநெறியப்பரின் புகழ்பாடி மகிழ்ந்தனர். நமிநந்தியடிகளின் காலில் விழுந்தனர். சமணர்கள் இதைக் கேள்விப்பட்டு வெட்கத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். சோழமன்னன் இதை அறிந்து, நமிநந்தியடிகளுக்கு கோயில் தலைவர் பதவியை வழங்கினான். நமிநந்தியடிகள் பல்லாண்டுகள் இறைவனுக்கு தண்ணீர் விளக்கேற்றி இறைவன் பாதம் அடைந்தார்.

Comments