அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்

மூலவர் : பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்
உற்சவர் : பெரும் புறக்கடல்
அம்மன்/தாயார் : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி)
தல விருட்சம் : மகிழ மரம்
தீர்த்தம் : தர்ஷன புஷ்கரிணி
-
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : லட்சுமி வனம்
ஊர் : திருக்கண்ண மங்கை
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:


மங்களாசாஸனம்


திருமங்கையாழ்வார்


பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கினொளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்களாரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்.


-திருமங்கையாழ்வார்.


தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.

தரிசனம் கண்டவர்கள்: வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள்.

பிரார்த்தனை

இங்குள்ள கருடாழ்வார் நின்ற கோலத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.

தலபெருமை:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,"ஸப்த புண்ய க்ஷேத்ரம்',"ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால்- திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள்.இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை.பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள்பாலிப்பதால், பக்தர் ஆவி என்றாகி, "பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.


தர்ஷன புஷ்கரிணி: மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன (தரிசன)புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி(தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது.இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்த்தால் அபிஷேகம் செய்து, பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.


திருக்கண்ண மங்கையாண்டான்: நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ணமங்கையாண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒருநாள் இவர் வேதபாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி, இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்துவிட்டது.

தல வரலாறு:

பாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது.லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.

திருவிழா:

சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது.

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை :


* இரக்கமின்றி ஆராய்ந்து பார்! - ஸ்ரீ அரவிந்தர்.


மனிதன் வலிமையை விரும்புகிறான். ஆனால் அவன் பலவீனத்திற்கு ஆட்படுகின்றான். மனிதன் சுகத்தை விரும்புகிறான். ஆனால், துன்பம் துயரங்களில் சிக்கி அல்லல்படுகின்றான். பிறர் நலம் பேணுதல், கடமை, இல்லறம், தேசபக்தி, உயிர்களிடத்தில் அன்பு ஆகிய இக்குணங்கள் நம் உயிரோடு கலக்க வேண்டும். உன்னை நீயே இரக்கமின்றி ஆய்ந்து பார்; அப்போது நீ பிறரிடம் பரிவுடனும், இரக்கத்துடனே நடந்து கொள்வாய். உன் கண்களைத் திறப்பாயாக. உண்மையில் உலகம் எத்தகையது என்பதைக் காண். பயனற்ற இன்பக் கற்பனைகளை விட்டொழி. அருகிலுள்ளது, தொலைவிலுள்ளது என்னும் வேறுபாடு இறைவனின் பார்வையில் இல்லை. தற்காலம், கடந்த காலம், எதிர்காலம் என்பதும் இல்லை. இவையெல்லாம் உலக ஓவியத்தைக் காண்பதற்கு வசதியாக நாம் ஏற்படுத்திக் கொண்டவையே. ஒரு எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது என்பது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்த செயல். தெய்வீகத் திருநிலையே மனித இனத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட இலக்காகும். அந்த நல்ல நிலையை வாழ்வில் பெறுவதற்காகவே நமக்கு இந்தப் பிறவியைக் கொடுத்துள்ளார்

Comments

  1. அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்
    சிறப்பாக தரிசனம் செய்வித்திருக்கிறீர்கள். நன்றி

    ReplyDelete

Post a Comment