அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில்

மூலவர் : ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்
-
பழமை : 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : பஞ்சவடீ
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு


தல சிறப்பு:

இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார் ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.

12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோயில் அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் விநாயகரும், இடதுபக்கத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகன்,பரதன் ஆகியோரும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர கோபுரம். அதன் மீது 5 அடி உயர கலசம். மூலவர் 36 அடி உயரத்தில் நின்ற கோலம். இவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கு பிரமாண்டமான லிப்ட். இவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமானால் குறைந்தது 1008 லிட்டர் பால் தேவை. இங்கு 1200 கிலோ எடையுள்ள மணி உள்ளது. இதனை ஒலிக்கச்செய்தால் குறைந்தது 8 கி.மீ. தூரம் ஒலி கேட்கும். 18 மீட்டர் அகலமும், 40 மீட்டர் ஆழமும் கொண்ட பிரமாண்ட தீர்த்த கிணறு. காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம். இப்படி ஆஞ்சநேயரைப்போலவே அனைத்தும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை

மன அமைதி கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

தலபெருமை:

பஞ்சமுகத்திற்கான காரணம் : ஒரு முறை ராமருக்கும், ராவணனுக்கும் போர் நடந்தது. இதில் ராவணன் நிராயுதபாணியானான். இதனால் ராமர் ராவணனை கொல்ல மனமின்றி,"இன்று போய் நாளை வா' என திருப்பி அனுப்பிவிட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், "மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான். ராமரை அழிப்பதற்காக மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் கூறினான். ராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் ராவணனை அழித்தார். இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக "பஞ்சமுக ஆஞ்சநேயர்' விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் "ஜய மங்களா' என்றும் அழைக்கப்படுகிறார். தல சிறப்பு : இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும், லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல், ஆன்மிக பலமும், வராகரின் அருளால் மனத்துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ராமர் பாதுகை : ராம பாத தரிசனம் என்பது விசேஷமானது. இக்கோயிலில் ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சுமார் 100 ஆண்டு பழமையான சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் போடப்பட்டுள்ளது. ராமாயண கால மிதக்கும் கல் : சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற இரு வானரங்கள் இந்த பாலப்பணியை நடத்தின. இதில் நளன் என்பவன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு,"என்னைப்போலவே உனக்கொரு மகன் பிறப்பான். எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும்,'' என வரம் கொடுத்தார். இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. ராமருக்கு உதவி செய்ய, பாலம் கட்ட பயன்படுத்திய கற்களை மிதக்க செய்து, அசையாமல் பாதுகாத்தான் கடலரசன் சமுத்திரராஜன். இவன் மகாலட்சுமியின் தந்தை ஆவான். எனவே சீதையை மீட்க இந்த உதவியை செய்தான் என கூறப்படுகிறது.இப்படி ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள். லட்டு லிங்கம் : ஆஞ்சநேயர் சிவனின் அம்சம் என்பதற்கேற்ப இக்கோயிலில் "லட்டு லிங்கம்' செய்து பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. 2007 ஜனவரி 1 அன்று, புத்தாண்டை குறிக்கும் வகையில் 2007 கிலோ எடையில் லட்டு லிங்கம் செய்யப்பட்டு செய்து அன்றைய தினம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தல வரலாறு:

:"ரமணி அண்ணா" இவர் தான் இத்தலம் உருவாவதற்கு முழு காரணமானவர். இவர் கூறுகையில்,"பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்த பஞ்சவடீயில் பல சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்துள்ளனர். இங்கிருந்தபடியே பல ரிஷிகள் வேதசாஸ்திரங்களை பலருக்கு உபதேசம் செய்துள்ளதாகவும் தேவபிரசன்னத்தில் தெரிந்தது. இதன் அடிப்படையில் கோயில் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது.ஆஞ்சநேயர் என்றாலே மாபெரும் சக்திபடைத்தவர் என்பதற்கேற்ப, ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் பின் இவருக்கான சிலை அமைக்க 150 டன் எடை கொண்ட கருங்கல், செங்கல்பட்டு அருகே சிறுதாமூர் எனும் ஊரில் கிடைத்தது. இந்த கல்லைக்கொண்டு மகாபலிபுரம் அருகே கேளம்பாக்கத்தில் முத்தையா ஸ்தபதி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கினார்.இந்த சிலை பிரதிஷ்டைக்கு முன்பாக 11 கிலோ எடையுள்ள யந்திரம் தயார் செய்து அதை திருப்பதி, காஞ்சிபுரம், சிருங்கேரி, அஹோபிலம் ஆகிய புண்ணிய தலங்களுக்கு கொண்டு சென்று பூஜை செய்யப்பட்டு, ஆஞ்சநேயரின் சிலைக்கு அடியில் வைத்து ஜுன் 12, 2003 காலை 5.55 மணிக்கு "ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்" சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது,''என்றார்.


திருவிழா:

ஸ்ரீராம நவமி, அனுமன் ஜெயந்தி

திறக்கும் நேரம்:

காலை 7 முதல் இரவு 8 மணி வரை (இடையில் நடை அடைப்பு இல்லை)



ஆன்மீகச் சிந்தனை மலர் :


* மனதுக்கு "டெஸ்ட்' வையுங்கள் - காஞ்சி பெரியவர்.


*பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. மாறாக உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கையில் மன நிறைவோடு இருப்பது தான்.


*குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமூகப்பணிக்கு செல்ல வேண்டியதில்லை. அதையும் விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு சேர்த்துச் செய்ய வேண்டும்

Comments