திருப்பதி கல்வெட்டுக​ள் சொல்லும் சரித்திரம்

திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம்


பிரசாதங்களின் வரலாறு:

திருப்பதியில் கல்வெட்டுகள் சுமார் 650 இருக்கின்றன. இவைகளில் சிற்சில தவிர்த்து ஏனைய அனைத்தும் திருமலைக் கோயிலைப் பற்றியவையே. அதிலும் தமிழ் கல்வெட்டுகள் சுமார் 600 இருக்கின்றன. கல்வெட்டுகளின்படி பார்க்கும்போது இன்றைய திருப்பதியும் திருமலையும் பல்வேறு வகையான ஏற்ற தாழ்வுகளை சந்தித்து இன்று உலகின் இந்துக்கள் அனைவராலும் போற்றப்படும் கோயிலாக உருவாகியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திருப்பதியில் உள்ள மலைமேல் குடிகொண்டிருக்கும் திருவேங்கடமுடையான் கோயிலின் பொற்காலம் என்றால் அது 1350 ஆம் ஆண்டு முதல் 1600 ஆம் ஆண்டு வரைதான் என்று சொல்லவேண்டும். முக்கியமாக விஜயநகர அரசர்கள் ஆண்ட காலம் இது. திருமலை புகழின் உச்சியில் இருந்தது. சதா சர்வ காலமும் விழாக் காலமாக 1440 இலிருந்து 1560 வரை இருந்ததை ஏராளமான கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன. ஆண்டொன்றுக்கு பதினோறு மாதங்கள் பிரம்மோத்சவம் நடைபெற்ற காலம் இவை. மார்கழி தவிர அனைத்து மாதங்களும் திருவேங்கடத்தானுக்கு உற்சாக உற்சவங்கள், மேளதாளங்களால் வீதி ஊர்வலங்கள், விழாக்கால வழக்கமான கொண்டாட்டங்கள் (வெடிச் சத்தம் கூட உண்டு) என மலையே அதிரும்படி கலகலவென இருந்த மலை, அடுத்த இருநூறு ஆண்டுகளில் யாருமே தங்கமுடியாத சூழ்நிலைக்குக் கூட சென்றது என்பது கல்வெட்டுகளின் மூலம் பரிபூர்ணமாகத் தெரியும்.


1800 ஆண்டுகளில் பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்துக்கு வந்தபோது திருமலையில் மலேரிய பரப்பக்கூடிய கொசுக்கள் அதிகம் என மலை மேலே செல்வதற்கே தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலே இருந்த அர்ச்சகக்குடும்பங்கள் (சுமார் 50 பேர்) கூட திருப்பதி அடிவாரத்துக்கு வந்துவிடவேண்டுமென கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 1600 ஆண்டுகளுக்குப் பிறகு, விஜயநகர சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குப் பிறகு சில நாயக்க ராஜாக்கள் திருமலையின் விழாக்கால நிலையை சிறிது காலமே போற்றி வந்தனர். மராத்தியர்கள் தமிழ்நாட்டை ஆண்டு வந்த காலத்தில் திருப்பதி பகுதி ஆற்காடு நவாபின் ஆளுகையிலும், மராத்தியர் ஆளுகையிலும் மாறி மாறி வந்ததால் திருமலைக் கோயில் அரசர்கள் ஆதரவின்றி அர்ச்சகர்கள், மடாதிபதிகள் மற்றும் போஷகர்கள் (பெரும்பாலோர் வைசியர்கள்) மட்டுமே கட்டிக் காக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டது. பிரிட்டிஷார் வந்தபோது இந்த நிலை இன்னமும் மோசமானதுதான்.

கல்வெட்டுகள்தான் என்ன நடந்தது என்பதை நமக்கு ஆதாரமாகக் காண்பிக்கும் தடயங்கள். ஒவ்வொரு கல்வெட்டும் பல நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகிறது. நமக்குத் தேவையான சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் இந்தக் கட்டுரையில் தர இருக்கிறேன்.


முதலில் திருப்பதி வேங்கடவன் என நினைத்தாலே நம் கண், நாசி, நாவையும் நிரப்புவது இந்த ஒரு சொல்தான்.. லட்டுதான்.

திருமலை வேங்கடவன் பிரசாதமாக வழங்கும் லட்டு என்றிலிருந்து ஆரம்பித்தது என்பது கல்வெட்டுகள் படி எங்கும் காணப்படவில்லை. பொதுவாக க்டந்த 200 வருடங்களாக கல்யாண உத்சவம் செய்யும்போது இனிப்பு வகையறாக்களோடு ஒன்றாக லட்டும் சேர்ப்பித்திருக்கலாம் என்று ஊகிக்கலாம்தான். விஜயநகர அரசர் காலங்களில்தான் உற்சவமூர்த்தியான ‘மலைகுனிய நின்ற பெருமாள்’ கல்யாண உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்யாண உற்சவத்தினைப் பற்றிய முதல் கல்வெட்டு கி.பி. 1546 ஆம் ஆண்டு தாலபாக்கம் திருமலை அய்யங்கார் என்பவரால் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது என்ற விவரம் தெரிய வருகிறது. தாலபாக்கம் என்பது அன்னமய்யா பிறந்த ஊர். இவர் அவருக்கு என்ன உறவு எனக் கல்வெட்டில் சொல்லப்படவில்லை.


இந்தக் கல்யாணோத்சவத்தில் (பெள்ளித் திருநாள் என்று எனத் தெலுங்கிலும், கல்யாணோத்சவம் என தமிழிலும், வைவாகோத்சவம் என சமுஸ்கிருதத்திலும் வடிக்கப்பட்டது) பங்குனி மாதத்தில் ஐந்து நாட்கள் நடந்த இந்தத் திருநாள் உற்சவத்தையும் திருமாமணிமண்டபத்தில் உற்சவமூர்த்தியான மலைகுனிய நின்றபெருமாள் (பின்னால், மலைகுனிய நின்றான், பின் மேலும் மலையப்பனாக சுருக்கப்பட்டது) தம் இரு தேவியருடன், ஐந்து நாட்களும் விழாக்கோலம் எங்கும் காண, கல்யாணம் செய்து கொண்ட காட்சியையும் கொஞ்சம் விவரணையாகவே இந்தக் கல்வெட்டு சொல்கிறது. ஆனால் கல்யாணத்து இனிப்பு வகையறாக்களில் ‘லட்டு’ இல்லை. திருமணத்தில் பிரசாதங்களாக வடைப்பிடி (வடை), மனோகரம் (இது மிகவும் பழைய காலத்திலிருந்தே தொடர்ந்து வருவது) எனும் இனிப்பு, அவல், பொறி இவைகளைத் தந்ததாக இந்தக் கல்வெட்டு சொல்கிறது. மேலும் திருக்கல்யாணத்தில் ஊஞ்சல் உற்சவத்துக்காக ‘பஞ்சவண்ணப்பிடி’ என ஐந்து வர்ணங்களில் செய்யப்பட்ட அன்னமும் தயாரிக்கப்ட்டதாகவும், இந்த ஐந்து நாள் மொத்த செல்வுகளுக்காக திருமலை அய்யங்கார், ஐநூறு கட்டி வராகன் தொகை செலுத்தியதாகவும் கல்வெட்டு சொல்கிறது. அதாவது பொதுமக்களில் முதன் முதலாகக் கோயிலுக்குப் பணம் கட்டி பெருமாளுக்கு இவர்தாம் கல்யாணம் செய்வித்ததாகத் தெரிகிறது.

லட்டு என்பது திருவேங்கடவன் கோயிலில் 20ஆம் நூற்றாண்டில்தான் முறைப்படியாக பிரசாதமாக வந்ததாகவும், கல்யாணம் ஐய்யங்கார் என்பவர்தாம் இப்போதைய ருசிகரமான லட்டுவுக்கு காரணகர்த்தா எனவும் தகவல் உள்ளது. 1932 ஆம் ஆண்டில் சென்னை (மதராஸ்) அரசாங்கத்தாரால் தி.தி.தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு அவர்களின் நிர்வாகத்தின் கீழ் திருமலைக் கோயில் வந்தாலும் மடைப்பள்ளியும் பிரசாதங்கள் செய்யும் உரிமையை மிராசிகள் பெற்று வந்ததும் எல்லோரும் அறிந்ததுதான். இப்படி ஐந்து மிராசிகளின் பிரதிநிதியாக கல்யாணம் ஐயங்கார் உரிமை பெற்று சமையலறை நிர்வாகத்தினைப் பொறுப்பெடுத்துக் கொண்டதாக தகவல் கூட தி.தி.தே அலுவலத்தில் இன்றும் உள்ளது. ‘கொண்டந்தா லட்டு’ (மலையளவு லட்டு) எனும் ஒரு பிரார்த்தனையை ஒரு தெலுங்கர் செய்ய, அதற்கேற்றவாறு கல்யாணம் ஐயங்காரும் ஏராளமான அளவில் செய்து கொடுக்க, அந்த லட்டு பிறகு பிரசாதமாக ஏராளமானவர்கள் எடுத்துச் செல்ல, லட்டு புகழ் வையம் அறியச்செய்யும் விதமாக இந்த நிகழ்ச்சியும் இருந்ததாக சொல்வர். (ராஜாஜி அவர்களே கல்யாணம் ஐயங்கார் செய்த லட்டுவின் பெருமையைப் போற்றியதாகவும் சொல்வர்). ஆனால் லட்டு நிச்சயமாக ஆதியிலிருந்து திருப்பதியில் பிரசாதமாக இருக்கவில்லை. வேறு என்னென்ன இந்தக் கல்வெட்டுகளில் பிரசாதங்களாக சொல்லப்பட்டிருந்தது என்பதையும் பார்ப்போம்.

Comments