சாஸ்திரமா மனச் சாட்சியா?

தெய்வத்தின் குரல்தர்மம் என்பது உலக் க்ஷேமத்துக்காகச் செய்யப்படவேண்டியது. துளி கூட சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல், சமஸ்த பிராணிகளும் க்ஷேமமாக இருக்கவேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு மஹான்கள் தர்ம நூல்களைத் தந்திருக்கிறார்கள். தர்ம சாஸ்த்திரங்கள், இன்னது தர்மம் என்று தீர்மானம் பண்ணுபவை. ரூபத்தை அறிவதற்குப் பிரமாணம் கண். சப்தத்தை அறிவதற்குப் பிரமாணம் காது. தர்மப் பிரமாணம் என்னவெனில் தர்ம சாஸ்த்ரப் பிரகாரம் செய்வதேயாகும். சகல தர்மத்துக்கும் மூலம் வேதம். அதை ’ச்ருதி’ என்ப்பார்கள். (எழுதிப் படிக்காமல் காதால் கேட்டுப் பாடம் பண்ணுவதால் இப்படிப் பேர்.) ச்ருதிக்கு அப்புறம் ஸ்மிருதி. ஸ்மிருதி என்பது வேதத்தின் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவாகக் குறித்த குறிப்பு., (notes) தர்ம சாஸ்த்ரம் என்பது இதுவே.
அந்த ஸ்மிருதிக்கு அப்புறம் பிரமாணமாக இருப்பது பெரியவர்களுடைய நடத்தை. பெரியவர்கள் எப்படி நடந்தார்கள் என்பது புராணங்களால் நமக்குத் தெரியவருகிறது. அதற்கப்புறம் நமக்குத் தெரிந்து சிஷ்டராக இருப்பவர்களின் நடத்தை. சிஷ்டாச்சாரம் என்று அதைச் சொல்வார்கள். எல்லோருடைய நடத்தையும் பிரமாணமாகாது. நம்மிடையே வாழ்பவரில் எவரது நடத்தை தார்மீக விஷயங்களில் பிரமாணமெனில், அவருக்கு சாஸ்த்ர நம்பிக்கை இருக்க வேண்டும். சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட ஆசாரங்களை அவரே வாழ்வில் அநுசரிக்க வேண்டும். காமக் குரோதம் இல்லாதவராக இருக்கவேண்டும். இப்படிப் பட்ட சிஷ்டர்களுடைய ஆசாரம் ஒரு பிரமாணம். அதற்கப்புறம் நம்முடைய மனச் சாட்சி (Conccience) நம்முடைய மனசு நிஷ்களங்கமாக எப்படி ஆலோசிக்கிறதோ அது ஒரு பிரமாணம்.
ஆகவே, ஆத்மீக, தார்மீக மத விஷயங்களில் பிரமாணங்களைக் கொள்ளும் முறையில் முதலில் வேதம் இடம் பெற வேண்டும். அப்புறம் தர்ம சாஸ்த்ரத்தைக் கொள்ளவேண்டும். அப்புறம் பூர்வகால ரிஷிகள் முதலியவர்களின் நடத்தை. பின்பு இபொழுதுள்ள சிஷ்டர்களின் ஆசாரத்தைப் பிரமாணமாகக் கொள்ளவேண்டும். இவைகளுக்கெல்லாம் அப்புறம் கடைசிப் பக்ஷமாகத்தான் சாஸ்த்ர விஷயங்களில் மனச்சாட்சியைப் பிரமாணமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
இபொழுது எல்லாம் தலை கீழாக மாறிவிட்டன. முதலில் மனச்சாட்சியைத் தான் பார்க்கிறார்கள். கடைசியில் தான் வேதத்தைக் கவனிக்கிறார்கள். நியாயப்படி வேறு ஒரு மார்க்கமும் இல்லாதபொதுதான் மனச்சாட்சியை அநுசரிக்கவேண்டும்.. மனச் சாட்சி என்று அதற்கு ஏன் பெயர் வந்தது? அது சாட்சி சொல்லத்தான். யோக்கியதை உடையது. நியாயதிபதியாக (Judge) இருக்க அதற்கு யோகியதை இல்லை. சாட்சியாக வந்தவன் வாயால் போய்யைச் சொல்வான். அதனால் வாய் சாட்சியை நம்புவதற்கில்லை. ஆனால் மனம் பொய் சொல்லாது. மனசுக்கு எல்லாம் நிஜமாகத் தெரியும். ’நெஞ்சையொளித்தொரு வஞ்சகமில்லை’ என்று அவ்வைப் பாட்டி சொன்னாள். ஆகவே அதைச் சாட்சியாக மட்டும் வைக்கலாம். இப்பொழுது மனச் சாட்சியை ஜட்ஜாகவே வைத்துவிடுகிறார்கள். ’இன்னது நடந்தது’ என்பதை நிஜமாகவே அது சொல்லும். இதுதான் நியாயம் என்று அதனால் தீர்மானித்துச் சொல்ல முடியாது. ‘தான் நினைப்பதே சரி’ என்று எப்படியாவது சமாதானம் சொல்லி நிலைநாட்டிக் கொள்வதே, அவரவர் மனசும் செய்கிற முடிவாக இருக்கும். இது எப்படி தர்ம நியாயமாகும்? எனவே,’மனச்சாட்சிக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படிச் செய்கிறேன்’ என்று சொல்வது தப்பு. எடுத்தவுடன் அதற்கு ஜட்ஜின் ஸ்தானம் கொடுத்து விடாக்கூடாது. ஒருவித வழியும் இல்லாமல் போனால்,’நீ தான் சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாயே, இப்பபொழுது உன் அபிப்ராயத்தைச் சொல்’ என்று மனஸிடம் கேட்கலாம். மனசு ஒரு தனி மனிதனைச் சேர்ந்தது. எனவே அது அவ்வளவு தூரம் அவனது சுய நலத்தைவிட்டு விலகிப் பேசும் என்று சொல்ல முடியாது. சொந்த விஷயங்களில் அதற்குத் தருகிற இடத்தைக் கூட சமய விஷயங்களில் தருவதற்கில்லை. ‘தனி மனசு’ என்ற நிலைக்கு மேலே போய் முழுக்க முழுக்க லோக க்ஷேமத்தையே சொன்ன ரிஷிகளின் அபிப்ராயம் தான் தர்ம விஷயங்களில் பிரமாணமாகும்

Comments