காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்

கடந்த ஆண்டு தமிழகம் சென்றிருந்த போது தமியேன் சில,பல ஆலயங்கள் சென்று அங்கு
உறையும் இறைவனை தரிசித்து வந்தோம். அந்த வரிசையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர். #1

அனைத்து உயிர்களுக்கும் தன் மடியில் அன்புடன் இடம் தந்து ஆதரவு காட்டும்
'நிலத்தை' அன்னை பூமி என்று ஆன்றோர்கள் அழைப்பர். பஞ்ச பூதங்களில் 'அன்னை' என்ற
அடைமொழியால் பாராட்டப்படும் பெருமை 'பூமிக்கு' மட்டுமே உண்டு.பொறுமையால் பொழிலிதாலும்,தயவு காட்டித் தண்ணருள் புரிவதாலும் தாரணியும் ஒரு thaய்தான்.அகழ்வாரை தாங்கி, அவர்க்கு அமிழ்தம் போன்ற நீரை அளிப்பதும் அவனி மாதாவின் அரிய குணமாகும்.

பஞ்சபூதத் தலங்களில் பூமியைக் குறிப்பது 'கலைவளர் காஞ்சி' என்று காவியங்கள் புகழும்
காஞ்சி மாநகரமாகும்.பிரளயம் ஏற்பட்டாலும் அழியாத நகரம் என்ற பெருமை உடையதால்
காஞ்சி நகருக்கு 'பிரளயசித்து' என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இத்தலத்தில் 'பெரிய
கோயில்'என்று சிறப்புப் பெயர் பெற்றுப் பிரமாண்டமாய் விளங்குவது ஏகாம்பரநாதன்
திருக்கோயிலாகும்.

இக்கோயிலில் ஈசன் ஏகாம்பரநாதன் மண்ணால் ஆன லிங்கவடிவில் எழுந்தருளியுள்ளான்.
தன்னைக் குறித்துத் தவம் இருந்த பார்வதி தேவிக்கு பரிவுடன் ஓப்பற்ற மாமரத்தின்
கீழ் காட்சி தந்து அருள் புரிந்தான்.மண் லிங்கமாய் மகேசன் வடிவெடுத்தது ஏன்?

காஞ்சியில் அன்னை தவம் இயற்றக் காரணம் என்ன? அது விளையாட்டாய் ஆரம்பித்து,இறைவனின் திருவிளையாடலாய் முடிந்த கதை!

ஒருமுறை முக்கண் முதல்வனும்,பார்வதி தேவியும் கயிலையில் இருந்த போது களிப்பு மிகுதியால் அன்னை,கயிலைநாதனின் கண்களை விளையாட்டாகத் தன் கைகளால் மூடினாள். அவை சாதாரணக்கண்களாய் இருந்திருந்தால் எவ்விதப் பிரச்சனையும் இருந்திருக்காது.ஆனால் எங்கும் ஒளிபரப்பும் சூரியனும்,சந்திரனும் ஈசனின் இரு விழிகளாய் இலங்குபவை அன்றோ?

விளையாட்டு வினையாகிப் பின் விபரீதம் விளைந்தது. அத்தனை உலகங்களும் அந்தகாரத்தில் ஆழ்ந்தன.பரவிய இருளால் பதைபதைத்தன உயிரினங்கள்!

நெற்றிக்கண்ணைத் திறந்து இருள் அகற்றினான் ஈசன். உலகில் மானுடப்பிறவி எடுக்குமாறு
உமாதேவியை சபித்தான்.மண்ணுலகில் பிறந்து மாதவம் புரிந்து மகேசனை அடைய மங்கை
நல்லாள் தேர்ந்தெடுத்த மகத்தான் தலம் காஞ்சியாகும்.

கம்பா நதிக்கரையில் மண்ணால் சிவலிங்கம் செய்து மனமுருகப் பூசைகள் பல புரிந்தாள்.
இரவும் பகலும் இறைவனைக் குறித்த தவத்திலேயே தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக்
கொண்டாள்.காஞ்சியில் கடு தவம் செய்யும் காமாட்சி அம்மையைக் காண்டு அருள்
புரிய சிவபெருமான் ஒரு மாமரத்தின் மூலத்திலிருந்து தோன்றினான்.

கையில் உடுக்கை ஏந்தி,கால்களில் தண்டை அணிந்து, 'கொட்டிச்சேதம்' என்ற நடனம்
ஆடினான். ஆனால் அன்னையின் அருந்தவம் கலையவில்லை.கங்காதரன் சிவபெருமான்
தன் தலையில் ஓடும் கங்கையின் நீரால் கம்பா நதியில் வெள்ளப்பெருக்கை உண்டாக்கினான்.
கரை புரண்டு ஓடும் வெள்ளம்,பூசை செய்யும் மண்லிங்கத்தைச் சிதைத்து விடும் என்று அஞ்சிய பார்வதி அந்த லிங்கத்தைத் தன் கைகளால் அணைத்து மார்போடு தழுவிக் கொண்டாள்.

அவள் அணைந்த அடையாளங்கள் லிங்கத்தில் பதியப் பெற்றால்''அணைப்பதற்கு ஆளான ஆண்டவன்'' என்று ஏகாம்பரநாதனனை அழைத்து ஆராதிக்கின்றனர் அடியவர்கள். அப்போது,மகேசன் மாமரத்தின் அடியில் பவளக்கம்பம் போல் காட்சி தந்து அம்மைக்கு அருள்புரிந்தான். கண்ணுதல் பெருமானுக்குத் தங்கை காமாட்சியைத் திருமணம் செய்து கொடுத்தார் திருமால்.


ஈசன் இரண்டு நாழி நெல் கொடுத்து,இறைவியை முப்பத்திரண்டு அறங்கள் இயற்றுமாறு
பணித்தான். அன்னை காமாட்சி காஞ்சி காமக்கோட்டத்தில் இருந்து இவ்வாறே
அறங்கள் செய்து வளர்க்கும் நாயகியாக அகில உலகங்கள் மீதும் அருள் ஆட்சி புரியலானாள்.

சக்தி பீடமாக.சத்திய பீடமாக,சகல கலைகளின் பீடமாகத் திகழ்கிறது கச்சியம்பதி என்னும்
காஞ்சிபுரம்.கம்பா நதி பூமிக்கடியில் கண்களுக்குப் புலப்படாமல் பாய்வதாகக் கூறப்படுகிறது.
அந்நதி கோயிலுக்குள் திருக்குளமாய்த் திகழ்கின்றது என்றும் சிலர் கூறுவர்.ஒரு தனி
மாமரத்தின் கீழ் இருந்ததால் இறைவன்,'ஏகாம்பரநாதன்' என்று அழைக்கப்படுகின்றான்.

சுந்தரத் தெலுங்கில் சுவாமியை, ''மாமிடி செட்டு கிருந்த நிலகொன்னவாடா'' என்று
செப்புவதுண்டு. அவள் 'ஏலவார் குழலி' என்ற எழில் ததும்பும் இனிய தமிழ்ப் பெயர்
ஏற்று ஏகாம்பரநாதர் கோயில் உற்சவராய் இன்னருள் புரிகின்றாள்.

--
எளியெனின் நன்றிகள்,

Comments