அங்கயற்கண் நாயகி மதுரை மீனாட்சி.

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக்கை
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே
---- என்னும் திருமுறைப் பாடலாகும்.
சைவ ஆகமங்களில் முதலதாக உள்ள காமிகாமத்தில் நகர் பேதங்களில் ‘சர்வதோபத்ரம் என்ற அமைப்பில் எழுந்த நகரம் மதுரை என்பது பொருத்தமானது. ஆகமங்களில் கூறியபடி சுற்றிலும் நான்கு வீதிகளுடன், சம்சதுர அமைப்புகளுடன் இம்மாநகர் மதுரை அமைதிருக்கிறது.

ஆதிசக்தியின் அங்கயற்கண் அலர்ந்ததால் உயிர்கள் உருக்கொண்டன.மலர்ந்த கண், மூடி மொட்டாகி விட்டால் உலகும் உயிர்களும் உருத்தெரியாமல் அழிந்து விடும் என்பதாலேயே அங்கயற்கண்ணி அன்றலர்ந்த கண்களை ஒருபோதும் இமைக்காமல் இவ்வுலகைக் கட்டிக்காத்து வருகிறாள்.

தான் இட்ட முட்டைகளைத் தன் பார்வையினலே பொரியச் செய்யும் ஆற்றல் பெற்ற மீனைப்போல தான் உருவாக்கிய அண்டத்தைத் தன் கருணை விழிகளால் காத்தருள்பவள் அங்கயற்கண்ணம்மை இம்மையில் இருக்கு மாந்தரை இமைப்பொழுதும் கண் துஞ்சாமல் காத்தருளும் அங்கயற்கண்ணி மீனாட்சி அருளாட்சி புரியும் அற்புதத் தலம்..... மதுரை

அங்கயற்கண்ணி என்பது நல்ல அருந்தமிழ்ச் சொல். மீனாட்சி என்பது தமிழும் வடமொழியும்
நேரடியாகக் கலந்த சொல்.மீன் என்பது தமிழ்ச்சொல். அட்சி என்பது வடசொல்.கண்ணையுடைவள் என்பது அதன் பொருள். மீனைப் போன்ற கண்ணை உடையவள் என்ற பொருளில் மீன்+ ஆட்சி என்பது மீனாட்சி என்றாகியது. அங்கயற்கண்ணி என்பதே தூய தமிழ்ச் சொல்

அன்னை தென் மதுரையைத் தேர்ந்தெடுத்தது எதற்காக?
அரசு என்றால் எப்படி அமைய வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு அறுதியிட்டுக் காட்டுவதற்கு ஆசைப்பட்டாள், உமையவள்.ஆலவாய் என அழைக்கப்படும் அழகிய மதுரையை மேன்மையுடன் ஆண்டு வந்த மலையத்துவச பாண்டியன்.மகப்பேறு வேண்டி தன் மனைவி காஞ்சனனாலையுடன் ஒரு புத்திரகா மேட்டி யாகத்தை நடத்தினான். வேள்வித் தீயிலிருந்து ஒரு குழந்தையின் குரல் ''அம்மா... அப்பா..'' எனக் கூவி அழைத்தது.

குண்டத்து நெருப்பில் குழந்தையா? ஆச்சரிய, அற்புத அனுபங்களைக் கடந்து அரசனைத்திகில்
தீண்டியது.அக்கணமே யாக நெருப்பில் ஊடுருவி, அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து அரசியின் மடியில் கிடத்தினாள்.அது ஒரு பெண் குழந்தை என்பதையும்,அதன் நெஞ்சில் வித்தியாசமாக மூன்று மார்புகள் முகிழ்த்திருந்ததையும் கண்டாள்.

அரசன் குழந்தையை இரு கைகளிலும் ஏந்தி எழுந்து நின்றான்.
''அம்மையே, இது என்ன சோதனை?
பச்சிளம் பாலகிக்கு எதற்காக மூன்று முத்துக்கள்.?''
---- எனக் கதறினான்.

ஆகாய வெளியிலிருந்து அசரீரி ஒலித்தது. ''மலையத்துவசனே, மனம் மயங்காதே. இந்த
அங்கயற்கண்ணி அழகுறத் திகழ்வாள்.கரம் பிடிக்க இருக்கும் கணவனைக் கண்டவுடன் இவள்
நெஞ்சில் கிளைத்திருக்கும் மூன்றாவது மொட்டு,தானாக மாயமாகி விடும்.''

மலையத்துவசன் மனம் தெளிந்தான்.தங்களுக்குக் கிடைத்த அந்தப் பொக்கியஷ்த்துக்கு தடாதகை எனப் பெயரிட்டான்.மீன் போன்ற விழிகளைக் கொண்டிருந்ததால்,அங்கயற்கண்ணி எனவும், மீனாட்சி எனவும் அவள் அழைக்கப்பட்டாள்.உரிய காலத்தில் பாலகி அங்கயற்கண்ணி
பருவம் எய்தினாள்.மலையத்துவசனுக்கு பின் அரசுக்கட்டிலில் அமர்ந்தாள்.அன்றிலிருந்து அவள் மதுரை மீனாட்சி என அழைக்கப்பட்டாள்.

அவளை எதிர்த்த அரசர்கள் அத்தனை பேரும் மண் கவ்வினர்.
அன்னையின் திருவுளப்படி ஆட்சி புரிந்தனர்.செருக்கு எங்கு தலை தூக்கினாலும், அது சடுதியில் ஒழிக்கப்பட்டது. நீள்விழியாளால் நீதி மீட்கப்பட்டது.நெறி பிழைத்தது.மக்கள் மனம் மகிழ்ந்தனர். அங்கயற்கண்ணி கைலாயத்தையும் கைப்பற்ற விழைந்தாள்.கன்னியின் படை கலகலப்புடன் கைலாயத்தை அடைந்தது.கைலாயநாதன் தன் கணங்களோடு கன்னியை எதிர்க்க வெஞ்சமர்க்களம் வந்து சேர்ந்தாள்.

அரையில் யானைத் தோல் அணிந்து, அரவம் ஊர்ந்திடும் உடம்புடன்,சடைமுடி தரித்து சமருக்கு வந்தவனைக் கண்டதும் அங்கயற்கண்ணியின் மூன்று மார்பகங்களில் ஒன்று மாயமாகிப் போனது. தடாதகைப் பிராட்டிக்கு தான் யார் என்று அப்போது தான் புரிந்தது.தன் கைத்தலம் பற்றப் போகிறவன் கைலாயநாதன் தான் என்பதை உணர்ந்த அவள் நாணம் மேலிட தரை பார்த்து தலை சரித்தாள்

Comments