தென் காசி ஆலயம் வரலாறு

சிவனருளால் பராக்ரம பாண்டியனாகிய நான், 'வரிசேர் பொழிலணி' தென்காசிக் கோயிலை அமைத்து, பூமி மட்டுமல்லாது வலம்புரி சங்கு சேரும் கடலும் போற்றச் செய்தேன். என்றும் அணையாத
தூண்டாமணி விளக்காக இதனை போற்றிப் பாதுகாப்பவர்களின்
பொற்பாதம் என் சிரத்தின்மீது இருப்பதாக!


பூந்தண் பொழில்புடை சூழுந்தென்காசியைப் பூதலத்தில்
தாம்தம் கிளையுடனே புரப்பார்கள், செந்தாமரையாள்
காந்தன் பராக்ரமக் கைதவன் மானகவசன்கொற்கை
வேந்தன் பணிபவராகி, எந்நாளும் விளங்குவரே!

மலர்கள் நிரம்பிய குளிர்ந்த பொய்கைகளால் புடைசூழப்பெற்றிருக்கும்
தென்காசியை, தாமும் தம் உறவும் வழியினரும்கூடி, ஆதரித்துக்காப்பவர்கள்,
ராஜலெட்சுமியின் மணாளனாகிய மகாவிஷ்ணுவுக்கு நிகரான மானகவசனும்
(மானமே கவசமாகக் கொண்டவன்) கொற்கை வேந்தனும் ஆகிய பராக்ரம
பாண்டியனால் பணியப்படுபவராக எந்நாளும் விளங்குவார்கள்.

மேற்கண்ட பாடல்கள் பராக்ரம பாண்டியர் பாடியதாக விளங்குகின்றன.
கீழேயுள்ளவை வேறு யாரோ பாடியிருக்கிறார்கள்.

மென்காசை மாமலரன்ன மெய்யோற்கும் விரிஞ்சனுக்கும்
வன்காசு தீர்த்திடும் விச்சுவநாதன் மகிழ்ந்திருக்கப்
பொன்காசை மெய்யென்று தேடிப்புதைக்கும் இப்பூதலத்துத்
தென்காசி கண்ட பெருமாள் பராக்ரமத் தென்னனே!

மகாவிஷ்ணுவைக் 'காயாம்பூவண்ணன்' என்று புகழ்வார்கள்.
'காயாம்பூ' என்பது ஒரு மாதிரியான கரும் purple நிறமானது. காயாமரம் என்பதை ironwood tree என்று சொல்வார்கள். சகர யகரப்போலியின் காரணமாகக் 'காயா', 'காசா' வாக மாறி, இந்த இடத்தில் காசையாக மருவி நிற்கிறது.


பொன்காசே 'சதம்' என்று நம்பி அதனைத் தாமும் செலவிடாமல் பிறருக்கும் கொடுக்காமல் பத்திரமாகப் புதைத்து வைக்கும் இந்த உலகத்தில், பெருமாளான பராக்கிரம பாண்டியன் என்ன செய்திருக்கிறான் தெரியுமா!


மென்காசை மாமலர் அன்ன மெய்யொன் = மென்மையான காயாம்பூ போன்ற மேனியையுடைய மகா விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஏற்பட்ட குறைபாட்டைத் தீர்த்து வைத்த விசுவநாதன் மகிழ்ந்து உறையும் வண்ணம் தென்காசியை ஏற்படுத்தினான். (அடிமுடி காணாத படலத்தைக் குறிக்கிறது).

அணிகொண்ட விந்த வணங்குமொன்றேயடியேற்குனக்கு
மணிகொண்ட வாசன் மணியுமொன்றே பகை மன்னரையும்
பிணிகொண்ட காரையும் முந்நீரையும் பெரும்பூதத்தையும்
பணிகொண்ட செண்பகத் தென்னா பராக்கிரம பாண்டியனே.

மேற்கண்ட பாடல் பொதுவாகப் பராக்ரமபாண்டியனைப் புகழ்ந்து பாடியது. இதில் பாண்டிய வம்சத்தினர் சம்பந்தப்பட்ட சில பழங்கதைகள் குறிப்பிடப்பட்டுள்ள.

ஓங்கு நிலை ஒன்பதுற்ற திருக்கோபுரமும்
பாங்குபதினொன்று பயில்தூணும் - தேங்குபுகழ்
மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசி
தன்னிலன்றி உண்டோ தலத்து!

Comments