பஞ்சாராமத்தில் அருளும் பெருமான்!

சிவபெருமான் கோயில் கொண்டு அருளும் ஐந்து திவ்யத் தலங்களே, ‘பஞ்ச ஆராமங்கள்’ என்று போற்றப்படுகின்றன. ‘ஆராமம்’ என்றால் தோட்டம் அல்லது சோலை எனப் பொருள். பொதுவாக, க்ஷேத் ரங்களை சுயம்பு க்ஷேத்ரம், தேவதைகள் நிர்மாணித் தவை,ரிஷிகள் நிர்மாணித்தவை, மனிதனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை என்று நான்கு வகையாகக் கூறுவர். இந்த பஞ்சாராமங்கள், தேவதைகள் நிர் மாணித்த சுயம்பு க்ஷேத்ரங்கள். ஆதலால், அதிக மகிமை வாய்ந்தவை. அவை: 1.அமராராமம், 2.தக்ஷா ராமம், 3.குமாராராமம், 4.சோமாராமம், 5.க்ஷீராராமம்.
தாரகன் என்ற அசுரனுக்கும் இந்திரனுக்கும் பல ஆண்டுகள் யுத்தம் நிகழ்ந்தது. அதில், பலம் பொருந்தியிருந்த தாரகாசுரனின் கையே ஓங்கியிருந்தது. தேவர்கள் பயந்து, மகா விஷ்ணுவிடம் முறையிட, அவர் தாரகன் சிவ பக்தனாதலால் அவனை வெல்ல யாராலும் இயலாது" எனக் கூறி, தேவர்களோடு கயிலாயம் சென்று, சிவபெருமானிடம் விவரம் கூறினார்.
மகேஸ்வரன், தாரகன் என் பக்தன். ஆயினும், தர்ம ரட்சணையே பிரதானம் ஆதலால், எனது அம்சமாகப் பிறந்த குமார சுவாமியை தேவர்களின் சேனைக்கு அதிபதியாக்கி, தாரகாசுரனுடன் யுத்தம் செய்தால் வெற்றி பெறலாம்" என அபயமளித்தார்.
இந்திராதி தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அவ்விதமே செய்தனர். ஆனால், யுத்தத்தில் தாரகாசுரனின் மீது குமார சுவாமி எத்தனை சக்தியைப் பிரயோகித்தும் பலன் கிடைக்காமல் போனது. தேவர்கள் மீண்டும் ஈசனைப் பிரார்த்திக்க, அவர் தாரகாசுரனின் கழுத்தில் என் பிராணலிங்கம் உள்ளது. அதனை ஆதாரமாகக் கொண்டு அவன் உயிர் இருக்கிறது. அந்தப் பிராணலிங்கத்தை உடைத்தால் அவன் உயிர் பிரிந்து மரணமடைவான். ஆனால், அந்த லிங்கம் உடைந்து எங்கெல்லாம் விழுமோ அவை வளர்ந்து பெருகிவிடும். அந்த சிவலிங்கத் துண்டுகளை பூமியில் பிரதிஷ்டை செய்து, அவை வளராதபடி செய்ய வேண்டும்" எனக் கூறியருளினார்.
இச்செய்தியை முருகப்பெருமானுக்குத் தெரிவிக்க, சுப்பிரமணியர் தாரகாசுரனின் கழுத்தைக் குறிவைத்து அம்பைத் தொடுக்க, பிராண லிங்கம் உடைந்து ஐந்து துண்டுகளாக, ஐந்து இடங்களில் விழுந்தது. அந்த ஐந்து பிரதேசங்களே, ‘பஞ்ச ஆராமங்கள்’ என்ற பெயரில் சிவ க்ஷேத்ரங்களாகப் புகழ் பெற்று விளங்குகின்றன. பிராண லிங்கத்தின் முதல் துண்டு, கிருஷ்ணா நதி தீரத்தில் ஒரு தானியக் கிடங்கில் விழுந்தது. இந்திரன் அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததால் அதற்கு, ‘அமராராமம்’ என்று பெயர். இரண்டாவது துண்டு, சப்த கோதாவரி நதி தீர்த்தத்தில், தக்ஷாரம் என்ற ஊரில், ‘தக்ஷ வாடிகை’ எனும் இடத்தில் விழுந்து, பரமேஸ்வரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது, ‘தக்ஷாராமம்’ என்று பெயர் பெற்றது.
மூன்றாவது துண்டு, சப்த கோதாவரி நதி தீரத்தில் ‘சாமர்ல கோட்ட’ என்ற இடத்தில் விழுந்தது. இதனை குமார சுவாமி பிரதிஷ்டை செய்ததால் இதற்கு, ‘குமாராராமம்’ என்று பெயர். நான்காவது பாகம், வசிஷ்ட கோதாவரி நதி தீரத்தில், குனுபூடி பீமவரம் என்னும் கிராமத்தில் விழுந்தது. அதனை சந்திரன் பிரதிஷ்டை செய்ததால், இது ‘சோமாராமம்’ என்று அழைக்கப் படுகிறது. ஐந்தாவது துண்டு, வசிஷ்ட
கோதாவரி நதி தீரத்தில் உள்ள, க்ஷீரபுரி என்ற கிராமத்தில் விழுந்தது. இதனை ‘பாலகொல்லு’ என்றும் அழைப்பர். இதனை, ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்ததால் இது, ‘க்ஷீராராமம்’ என்று அழைக்கப்படுகிறது.
ஐந்து க்ஷேத்ரங்களும் ஆந்திரப் பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ளன. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிராண லிங்கங்கள் எல்லாம் ஒன்று போலிருக்காது. ஆலய நிர்மாண முறையை கவனித்தாலும் அமராராமம், தக்ஷாராமம், குமாராராமம் ஆகியவை இரண்டடுக்குகள் கொண்டவையாகவும், சோமாராமமும் க்ஷீராராமமும் ஓரடுக்கு அமைப்பு கொண்டவையாகவும் உள்ளன. பஞ்சாராம க்ஷேத்ரங்கள் பவித்ர நதி தீரங்களில் அமைந்துள்ளதால், இவை தீர்த்த ஸ்தலங்களாகவும் புகழ் பெற்றுள்ளன. இவ்விதம் பஞ்ச தீர்த்தங்களைக் கொண்ட இந்த க்ஷேத்ரங்கள் மகா மகிமை வாய்ந்தவை.
அமராராமம்: குண்டூர் மாவட்டத்தில் அமராவதி எனும் ஊரில் உள்ளது. ஸ்வாமி பெயர் அமரேஸ்வரர். அம்மன் பாலசாமுண்டேஸ்வரி தேவி. சிவலிங்கம் 36 அடி உயரம் கொண்டது. இதில் ஒன்பது அடி உயர அமரேஸ்வரரின் மேல் பாகம் மட்டுமே மாடியில் நமக்கு தரிசனமளிக்கிறது. கீழ் பாகம் கர்பாலய சுவ ரால் மூடப்பட்டிருக்கிறது. உள் பிராகாரத்தில் 23 படிகள் ஏறிச் சென்று ஸ்வாமியை தரிசிக்க வேண்டும். ஒன்பது அடி உயரம் கொண்ட லிங்க வடிவில்
அமரேஸ்வர ஸ்வாமி சுத்த ஸ்படிக வர்ணத்தில் பிரகாசிக்கிறார். இப்பெருமானுக்கு ஒரு பெரிய திண்ணை மேல் ஏறி அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்கிறார்கள்.
நந்தி மண்டபத்தில் வேணுகோபால ஸ்வாமி தரிசனமளிக்கிறார். பாலசாமுண்டேஸ்வரி தேவி தனி சன்னிதியில் நின்ற
கோலத்தில், முகம் முழுவதும் மஞ்சள் பூசி நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். கருவறை சுவரில் தாரகாசுர வதை குறித்த வர்ணச் சித்திரங்கள் தீட்டப் பட்டுள்ளன. ஆலயம் மூன்று பிராகாரங்களோடும், நான்கு திசைகளிலும் நான்கு துவஜஸ்தம்பங்களோடும் திகழ்கிறது. கிழக்கு வாசலுக்கு எதிரில் கிருஷ்ணா நதி பாய்கிறது. சிவ,
கேசவ பேதமற்ற ஆலயமாக இது திகழ்கிறது. அமரா வதி, குண்டூரிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது.
தக்ஷாராமம்: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ‘தக்ஷாரம்’ என்னும் ஊரில் உள்ளது. ஸ்வாமி பீமேஸ்வரர். அம்மன் மாணிக்யாம்பா தேவி. சிவலிங்கத்தின் உயரம் 14 அடி. கீழ்த்தளத்தில் சிவலிங்கத்தைத்
தரிசித்து விட்டு பூஜை, அபிஷேகங்களை மேல் மாடியில் போய்தான் செய்ய வேண்டும். உள் பிராகாரத்தில் பத்து படிகள் ஏறிச் சென்று பீமேஸ்வரரைத்
தரிசிக்க வேண்டும். கீழ்த்தளத்தில் மாணிக்யாம்பா தேவி தனி சன்னிதி கொண்டுள்ளாள். ஆதிசங்கரர் இங்கு விசேஷமாக ஸ்ரீசக்ர பிந்துவின் மேல் அம்பாளை பிரதிஷ்டை செய்துள்ளதால், ஏக காலத்தில் ஸ்ரீ சக்கரத்துக்கும் அம்பாளுக்கும் பூஜை செய்யப்படுகிறது. பஞ்சா ராமங்களுள் தக்ஷா ராமத்துக்கு மட்டும் தனித்துவமான சிறப்பு உண்டு. இங்குள்ள மாணிக்யாம்பா தேவி அஷ்டாதச சக்தி பீடங்களில் 12வது சக்தி பீடமாகவும், பீமேஸ்வர ஸ்வாமி துவாதச ஜோதிர் லிங்கங்களுள் உப லிங்கமாகவும் போற்றப்படுகின்றது.
ஆலயம் உயரமான கற்சுவர்கள், ஐந்து பிராகாரங் கள், நான்கு ராஜகோபுரங்களோடு கூடியதாய் திகழ்கிறது. 70 தூண்களோடு கூடிய சோமவார மண்டபம் உள்ளது. ஒரு கல் தூணின் மேல் வியாச பகவானின் சிலை உள்ளது. இது, ‘தக்ஷிண காசி’ என்று போற்றப் படுகிறது. இத்தலம் போகம், மோக்ஷம் இரண்டுக்கும் ஆதாரமாக உள்ளது. ராஜமுந்திரியிலிருந்து தக்ஷா ராமம் 47 கி.மீ. தொலைவில் உள்ளது.
குமராராமம்: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காகிநாடாவில் உள்ள ‘சாமர்ல கோட்ட’ என்ற ஊரில் பீமவரம் என்ற கிராமத்தில் உள்ளது இத்தலம். ஸ்வாமி குமாரராம பீமேஸ்வரர். அம்மன் பாலாதிரிபுர சுந்தரி தேவி. சிவலிங்கம் 12 அடி உயரம். கீழ்த்தள கருவறையில் உள்ள வெண்ணிற பீமே ஸ்வர லிங்கத்தை மேல் தளம் வரை அண்ணாந்து பார்க்க முடிகிறது. இதனை, ‘யோக லிங்கம்’ என்பர்.
கீழே லிங்க தரி சனம் மட்டுமே. அபிஷேகம், பூஜைகளை மேலே சென்று லிங்கத்தின் ருத்ர பாகத்துக்குச் செய்ய வேண்டும். ஆலயம் அடர்ந்த தோட்டங்களின் நடுவில் உள்ளது. நான்கு பிராகாரங்களும் இரண்டு தளமாடிகளும் கொண்டது. ஆலயத்தின் நான்கு புறங்களிலும் அழகிய கோபுரங்கள் உள்ளன. சிற்பக்கலை அழகும் ஆலய நிர்மாணமும் தக்ஷாராம பீமேஸ்வரர்
கோயிலைப் போன்றே காணப்படுகிறது. சாளுக்கிய அரசன் பீமன் என்பவன் இந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆலயத்தை புனர் நிர்மாணம் செய்துள்ளான். அதனால் இவ்வூர், ‘சாளுக்கிய பீமவரம்’ என்றும் புகழ் பெற்றிருந்தது. இத்தலம் காகிநாடாவிலிருந்து 11 கி.மீ., ராஜமுந்திரியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
சோமாராமம்: மேற்கு கோதாவரி மாவட்டத்தில் குனுபூடி பீமவரம் என்ற ஊரில் உள்ளது இத்தலம். ஸ்வாமி பெயர் உமாசோமேஸ்வரர். அம்மனாக பார்வதி மற்றும் அன்னபூர்ணாதேவி. கருவறையில் சோமேஸ்வர ஸ்வாமி இரண்டு அடி உயர லிங்க வடிவில் ஆவுடையார் மீது திகழ்கிறார். சந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இவர், பௌர்ணமியன்று வெண்ணிறமாகவும் அமாவாசையன்று கோதுமை நிற மாகவும் காட்சியளிக்கிறார். அருகிலேயே பார்வதி தேவி தனி சன்னிதி கொண்டுள்ளாள்.
இரண்டாவது தளத்துக்கு படியேறிச் சென்றால் நான்கு அடி உயர அன்னபூரணி
தேவி அபய ஹஸ்த முத்திரையோடு கோயில் கொண்டுள்ளாள். கீழே கருவறை யின் பின்புறம் குமார ஸ்வாமி, மஹா லக்ஷ்மி சமேத ஜனார்த் தன ஸ்வாமி, ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகி யோர் சன்னிதியை தரிசிக்க முடிகிறது. தீராத நோய்களைத் தீர்க்கிறார் சோமேஸ்வரர். இக்கோயில், ‘ஸ்ரீ உமா சோமேஸ்வர ஜனார்த்தன ஸ்வாமி தேவஸ்தானம்’ என்று பிரசித்தி பெற்றுள்ளது. இரண்டு பிராகாரங்கள் கொண்ட ஆலயம். சந்திரனால் ஏற்படுத்தப்பட்ட சந்திர புஷ்கரிணி திருக்குளமாக உள்ளது.
கீழைச் சாளுக்கியர்களுள், ‘பீமன்’ என்ற பெயர் கொண்ட அரசர்கள் பலர் இருந்தனர். இதனால் இந்த ஊருக்கு, ‘பீமவரம்’ என்று பெயர் நிலைத்து விட்டது என்று சாசனங்கள் மூலம் அறிய முடிகிறது. அவர்கள்
‘சோமா ராமம்’ ஆலயத்துக்கு நிறைய காணிக்கைகள் அளித்துள்ள விவரமும் அறிய முடிகிறது. நர்சாப் பூரிலிருந்து 32 கி.மீ., விஜயவாடாவிலிருந்து 140 கி.மீ. தொலைவில் பீமவரம் உள்ளது.
க்ஷீராராமம்: மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ‘பாலகொல்லு’ என்ற தலத்தில் உள்ளது இக்கோயில். ஸ்வாமி ராமலிங்கேஸ்வரர். அம்பிகை பார்வதி தேவி. சிவலிங்கம் இரண்டரை அடி உயரம். ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கேஸ்வரர், வெண்மையான ஒளியோடு பக்தர்களை ஈர்க்கிறார். லிங்கத்தின் மேல் சில இடங்கள் நசுங்கி உள்ளதைக் காண முடிகிறது. தாரகாசுரனோடு நடந்த யுத்தத்தில் குமார ஸ்வாமி பிராண லிங்கத்தின் மேல் அம்பு விடுத்தபோது பட்ட காயங்கள் இவை என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. இது பிராண லிங்கத்தின் சிரசுப் பகுதி என்று தல புராணம் விவரிக்கிறது. சாசனங்களில் இவர், ‘கொப்பு (கொண்டை) லிங்கேஸ் வரர்’ என்று குறிப் பிடப்படுகிறார்.
பார்வதி தேவி, ஸ்வாமியின் வலப் புறம் தனிச்சன்னிதி கொண்டுள்ளாள். ஆதிசங்கரர் இங்கு ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்துள்ளதாகத் தெரிகிறது. திரி மூர்த்தி ஆலயமாகப் புகழ் பெற்றுள்ள க்ஷீரா ராமம் கோயிலில் கல் மண்டபத்தின் நடுவில் கோயில் கொண்டுள்ள ராமலிங்கேஸ்வரரோடு, ஸ்ரீ லட்சுமி ஜனார்த்தனர், சரஸ்வதி தேவி சமேத பிரம்மாவும் கொலுவிருந்து அருள் விருந்து படைக்கின்றனர்.
இந்த ஆலயத்தை ‘பஞ்ச சிகர ஆலயம்’ என்றும் அழைப்பர். மூலவரைச் சுற்றிலும் ஸ்ரீ ஜனார்த்தனர், விக்னேஸ்வரர், சுப்பிரமணியர், கோகர்ணேஸ்வரர் தனித்தனி விமான சிகரங்களோடு கோயில் கொண்டுள்ளனர்.
இரண்டு பிராகாரங்கள் கொண்ட ஆலயம். ஆலயத்தின் ராஜகோபுர சிகரம் ஊரின் நான்கு புறங்களில் இருந்தும் பார்க்கும்படியாக, 120 அடி உயரத்தில் 9 தளங்களோடு கூடியதாக விளங்குகிறது. கோபுரச்சிகரம் வரை செல்வதற்கு உட்பக்கம் படிகள் உள்ளன. கோபுரத்தின் சிலைகள் அபூர்வமான சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாகக் காட்சி தருகின்றன. ஸ்வாமியை பூஜிப்பவருக்குத் தரித்திரம் தொலைந்து, செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. நர்சாப்பூரிலிருந்து 10 கி.மீ., பீமவரத்தில் இருந்து 20 கி.மீ., ராஜமுந்திரியில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ளது.

Comments