மணவாழ்க்கை அருளும் மணவாளப் பெருமாள்!

சோழ நாட்டுத் திருப்பதிகளில் இரண்டாவது இடத்தைப் பெறும் வைணத்தலம் திருச்சிக்கு அருகில் உள்ள உறையூர் ஆகும். இக்கோயிலில் மூலவர் அழகிய மணவாளப் பெருமாள். தாயாரின் நாமம் கமலவல்லி நாச்சியார், உறையூர் வல்லி. இத்தலத்தில் தாயாருக்கு தனிச் சன்னிதி கிடையாது. பெயருக்கேற்றபடி பெருமாள் கண்ணுக்கும் மனதுக்கும் இனியவராகவே காட்சியளிக்கிறார். நின்ற கோலத்தில் சங்கு, சக்கராயுதம் தரித்து இறைவன் தரிசனம் தருகிறார் இறைவனுடன் சேர்ந்தே இறைவியும் அருள் பொங்கும் புன்னகை நிறைந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள்.
சோழ மன்னரின் திருமகளான கமலவல்லிக்கு, அழகிய மணவாளப்பெருமாள் மீது அளவு கடந்த காதல். மணந்தால் பெருமாளைத்தான் மணப்பேன் என்று கூறி கடுமையான விரதம் பூண்டாள். தீவிர விரதம் எல்லை மீறவே இறைவன் இனியும் சோதிக்கக்கூடாது என்றெண்ணி மனம் நெகிழ்ந்து, கமலவல்லியை ஒரு பங்குனி உத்திர திருநாளன்று திருமணம் செய்து கொண்டார் என்கிறது தல புராணம்.
ஒவ்வொரு ஆண்டும், பங்குனி உத்திரத்துக்கு முதல்நாள், ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீரங்கநாத உற்சவ மூர்த்தி வருகை தந்து, மறுநாள் பங்குனி உத்திரத்தன்று அழகிய மணவாளப் பெருமாள் - கமலவல்லி நாச்சியார் கல்யாண உற்சவம் கண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கல்யாணம் பழமையும், வரலாற்றுப் பெருமையும் கொண்டது. இப்பெருமானுக்கு திருமங்கையாழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். கோயில் விமானம், கல்யாண விமானம் எனப்படும். இது தேவர்களுக்கும் அருள் பாலிக்கும் திருத்தலம்.
ஏதேனும் தோஷம் காரணமாக திருமணமாகாமல் இருப்பவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும். இத்தலத்தில் புதன், சனிக் கிழமைகளில் வந்து தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லை என்கிறார்கள். இத்தலத்திற்குச் சென்று திருமண பிராப்தம் கைகூடி அருள் பெறுக!

Comments