பூமிநாதர்

பெங்களூருவில் நாங்கள் சொந்தமாக வசித்து வரும் வீடு சார்ந்து, கடந்த ஆறேழு ஆண்டுகளாகவே சில பிரச்னைகள். சென்ற ஆண்டு இங்கு (மண்ணச்சநல்லூர்) வந்து பிரார்த்தித்துவிட்டுச் சென்றோம். தற்போது அந்தப் பிரச்னைகளிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றுவிட்டோம். பூமி சார்ந்த எங்களது கஷ்டங்களைத் தீர்த்து வைத்தவர் இந்த பூமிநாதர்தான். மக்களுக்குப் புதிதாகவும் பூமி வாங்கித் தருவார். வீடு, காடு, தோட்டம், துரவு என்று நிலம் சார்ந்த விஷயங்களில் ஏதேனும் பிரச்னைகள், வில்லங்கங்கள் என்று ஏற்பட்டாலும் அவற்றையும் தீர்த்து வைப்பார் எங்கள் பூமிநாதர்!" என்றனர் அந்தத் தம்பதியர். அவர்கள் குறிப்பிடும் அந்தத் தலம், திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் அறம் வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலாகும்.
மண்ணச்சநல்லூர் அக்ரகாரம் அருகே அமைந்துள்ளது இத்திருக்கோயில். இது திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானது. இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் வழிகாட்டுதலுடன் இயங்கி வருகிறது. தினசரி நான்கு கால பூஜைகள். கால சந்தி பூஜை இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. உச்சி காலம், சாயரட்சை மற்றும் அர்த்தஜாம பூஜைகள் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்டது.
மூன்று நிலை ராஜகோபுரம். தாமிரக் கவசம் பூட்டிய கொடிமரம். நந்தி, பலிபீடம். கொடிமர மண்டபமே வெளிச்சமாகவும், விசாலமாகவும் அமைந்துள்ளது. இடதுபுறம் விநாயகர், வலதுபுறம் முருகன். கொடிமர மண்டபத்தை அடுத்து மணிமண்டபம். கால பைரவர், சந்திரன், சூரியன் மூவரும் சுவாமியைப் பார்த்த வண்ணம் காட்சி தருகின்றனர். கருவறை மற்றும் மணிமண்டப வெளிப்பிராகாரத்தின் வடபாகத்தில் நால்வர். கருவறையின் வெளிப்புறம் தெற்கு நோக்கிய யோக தட்சிணாமூர்த்தி. கிழக்கு நோக்கிய வெளிப்பிராகார மண்டபத்தில் நிருத்த கணபதி, காசி விசுவநாதர், விசாலாட்சி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, ஆஞ்சநேயர், சரஸ்வதி ஆகியோர்.
கோயிலின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு ஆகிய இரண்டு பகுதிகளிலும் ஸ்தல விருட்சங்களான வில்வம், வன்னி இரண்டும் இருக்கின்றன.
இந்த ஸ்தல விருட்ச மண்ணின் மகிமையும், பூமிநாதேஸ்வரரும்தான் பக்தர்களின் நிலம், வீடு சார்ந்த பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறார்கள்.
கருவறையில் உள்ள பூமிநாதேஸ்வரர் திருமேனி உளி படாத பாணம் எனப்படுகிறது. பங்குனி மாதத்தில் 9,10,11 ஆகிய மூன்று நாட்களிலும் இவர் திருமேனி மீது காலை 6.30 மணிக்கு சூரிய ஒளி படர்கிறது.
மணி மண்டபத்தில் தனிச் சன்னிதியாகத் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறாள் அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தினி. அவளருகே காமதேனு. அன்னையின் பாதங்களுக்கு முன்புறம் மகாமேரு. உள்பிராகாரத்தின் வடகிழக்கு பாகத்தில் உள்ள வில்வமும் வன்னியும்தான் பிரதானம். அதாவது மார்கழி மாதம் முதல் ஞாயிறு, கோயிலில் மணலை நிரப்பி வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. பூஜைக்குப் பின்னர் அந்த மண் வன்னி மரத்தடியில் சேர்ப்பிக்கப்படுகிறது.
நிலம், வயல், வீடு, தோட்டம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள் அந்த இடத்தின் வடகிழக்கு மூலையிலிருந்து, ஒரு பிடி மண்ணை, புதன் ஓரையில் அள்ளி மஞ்சள் துணியில் முடிந்து கொண்டு வர வேண்டும். அதனை சுவாமி மீது வைத்து பூஜை செய்து தருவோம். பிரகார வலம் வந்து அந்த மண்ணை வில்வ மரத்தடியில் போட வேண்டும். பின்னர் வன்னி மரத்தடியிலிருந்து மூன்று பிடி மண்ணை பக்தர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். அதனை பிரச்னைக்குரிய இடத்தின் வடகிழக்கு மூலையில் புதன் ஓரையில் போட வேண்டும். இதுவே பூமிநாதருக்கான வேண்டுதல். மார்கழி முதல் ஞாயிறு கோயிலில் வாஸ்து பூஜை செய்து, அந்த மண்ணை வன்னி மரத்தடியில் சேர்ப்பிப்பது இதற்காகத்தான். இந்த வேண்டுதலைச் செய்துவரும் பக்தர்களுக்கு சொந்த இடம், குத்தகை, வாடகை என எந்தப் பிரச்னையானாலும் அதனைத் தீர்த்து வைப்பார் பூமிநாதர்!" என்கிறார் கிரிதரன் சிவாச்சாரியார். நாங்கள் சென்றிருந்த நேரம், மண்ணச்சநல்லூர் பேட்டைத் தெரு, கேசவன் - கீதா அமிர்தம் தம்பதியினர் மண் எடுத்து வந்து, பூமிநாதரிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.

Comments