ஸ்ரீரங்கம்- திருவரங்கன் திருக்கோயில், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. அங்கே செக்கச்செவேல் என்கிற சிவந்த முகம், கூர்மையான மூக்கு, லேசான தாடி எனப் பார்த்தவுடனே தெரிந்தது, அவர் வெளிநாட்டுக்காரர் என்று!
நெற்றியில் நாமம், தோளில் பூணூல் எனக் காட்சி தந்த அந்த வெளிநாட்டுக்காரரை, வியப்பு மேலிட நெருங்கினோம். தம்பதி சமேதராக நின்றிருந்த அந்த வெளிநாட்டுக்காரர்களோடு பேசிக்கொண்டு இருந்தார், ராமராஜ நரசிம்மாச்சாரியார் எனும் வைஷ்ணவப் பெரியவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
அவரே தொடர்ந்து, ''போன வருஷம் இதே போல அர்ஜென்டினால இருந்து இங்கே வந்து, வைஷ்ணவத்துக்கு மாறினவர் வருதபா ரங்கப்ரியன். அவரோட நண்பர்கள் தான் இவங்க! அவர் மூலமாகத்தான் இவங்க அறிமுகம்.
வைஷ்ணவ சம்பிரதாயங்களையும் வேதங்களையும் கத்துக்கிட்டு, அதன்படி வாழணும்னு ஆசைப்பட்டு, போன வருஷம் வந்தாங்க. என் அப்பா ஸ்ரீஉ.வே.ஸ்ரீதர நரசிம்மாச்சாரியார் சுவாமிகள்கிட்ட வேதங்களையும் வைஷ்ணவ சம்பிரதாயங்களையும் கற்பூரமா கத்துக்கிட்டாங்க. நம்மாலகூட அந்த அளவுக்கு அதையெல்லாம் கிரஹிச்சுக்க முடியுமாங்கிறது சந்தேகம்!'' என்று பிரமிப்புடன் தெரிவித்தார் ராமராஜ நரசிம்மாச்சாரியார்.
வைஷ்ணவ போதனைகள், திருமாலின் பெருமைகள், புராண- இதிகாச விஷயங்கள் எனக் கற்றுக்கொண்ட பிறகு, பஞ்ச சம்ஸ்காரம் எனும் முறைப்படியானவற்றைச் செய்து, அவர்களை வைஷ்ணவர்களாக, திருமாலின் அடியவர்களாக மாற்றும் வைபவமும் சிறப்புற நடைபெற்றதாம்.
''இதோ... இந்த வருஷமும் ஸ்ரீரங்கனை ஸேவிக்க வந்துட்டாங்க. ஸ்ரீரங்கநாதர் அனுக்கிரகத்தால முழுக்க முழுக்க வைஷ்ணவ சம்பிரதாயப்படி இவங்களுக்கு கொங்கிலாச்சான் திருமாளிகையில் விவாகம் நடந்துது'' என்றார்.
பளீர் புன்னகையுடன் திகழும் அவரிடம் பேச்சுக் கொடுத்தால், 'ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ’ என்று ஸ்பஷ்டமாகச் சொல்கிறார். 'ரங்கா... ரங்கா’ என்று நெஞ்சில் கைவைத்தபடி சொல்லிப் பூரிக்கிறார் கள் அந்தத் தம்பதி. கொஞ்சம் தமிழ், அதிகம் ஆங்கிலம், ஸ்பானிஷ் என கலந்துகட்டிப் பேசுகிறார்கள்.
''இந்தியாவும் இந்து மதமும் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு! நாராயணனே எங்களுக்கான கடவுள்ங்கறதுல உறுதியாவும் தெளிவாவும் இருக்கோம் இப்ப என் பெயர்... சுந்தரவரத ராமானுஜ தாசன். மனைவி பேரு விருந்தாவன் தேவி'' என்று சொல்லிவிட்டு அவர் தன் மனைவியைத் திரும்பிப் பார்க்க, அவரின் முகத்தில் அப்படியொரு அக்மார்க் தமிழ்ப் பண்பாட்டு வெட்கம்!
'வைஷ்ணவத்தில் உங்களைக் கவர்ந்த விஷயமாக எதைக் கருதுகிறீர்கள்?’ என்று கேட்டபோது, ''வாழ்க்கை முழுக்க எவ்வளவு தவறுகள் பண்ணினாலும், கடைசி காலத்துல எல்லாருமே சொர்க்கத்துக்குப் போகணும்னுதான் ஆசைப்படுவாங்க. ஆனா, 'சத்தியத்தை மீறினதுக்காக நான் நரகத்துக்குப் போனாலும் பரவாயில்லை; உலக மக்கள் எல்லாரும் சொர்க்கத்துக்கு, வைகுண்டத்துக்குப் போகணும்’னு சொல்லி, எட்டெழுத்து மந்திரத்தை ஜனங்க எல்லாருக்குமா உபதேசிச்சாரே, ராமானுஜர்! எத்தனை பெரிய விஷயம்!'' என்று நெக்குருகிப் பேசுகிறார் அவரின் மனைவி.
''இப்போது எங்கள் நண்பர் வருதபா ரங்கப்ரியனின் மனைவிக்கு வைஷ்ணவ முறைப்படியே அர்ஜென்டினாவில் வளைகாப்பு நடக்கப்போகிறது. அவரை ஆசீர்வதிக்க, அர்ஜென்டினா வருவாங்க ரங்கநாயகியும், ரங்கனும்!'' என்று கண்கள் மூடிப் பிரார்த்தித்தபடியே சொல்கிறார் சுந்தரவரத ராமானுஜதாசன்.
Comments
Post a Comment