கடமையை வலியுறுத்திய பரசுராமர்!

'தர்மம் வாட்டமுற்று அதர்மம் தலைதூக்கும்போது நான் தோன்றுவேன்' என்றார் கண்ணன். படைப்புக்குக் காரணமான பரம்பொருள் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்பது தகும். சனாதன தர்மத்தைக் காக்க வேதம் ஓதுபவர்களும் மக்களைக் காக்க மன்னர்களும், மக்களுக்கு நுகர்பொருள் விநியோகிக்க வணிகர்களும், குடிமக்களுக்கு மனமுவந்து உதவி செய்ய சேவகர்களும் வேண்டும். உலக இயக்கம் ஒழுங்குடன் நடைபெற இவர்களைப் படைத்தார் பகவான். ஆம்! உலக இயக்கத்துக்காக பரம்பொருளில் முதலில் தோன்றியது செயல்பாடு. அதாவது கர்மம்! படைத்தல், காத்தல், அடக்குதல் ஆகிய அனைத்தும் கர்மத்தில் அடங்கும். தமது செயல்பாடுகளின் மூலம், அவரவருக்குரிய கர்மங்களை செவ்வனே நிறைவேற்றும்படி நம்மையும் அவர் நிர்பந்திக்கிறார். தனது பத்து அவதாரங்களாலும், 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதைச் சொல்கிறார் பரம்பொருள்.

ஹிரண்யகசிபுவை தண்டிப்பது மட்டுமல்ல; பிரகலாதனைக் காப்பதும் தமது பணியே என்பதை நிரூபித்தார். ராவணனை வதைத்ததுடன், அவனால் துன்பத்துக்கு ஆளானவர்களையும் ரட்சித்தார். மகாபாரதத்தை இயக்கிய அந்தப் பரம்பொருள், தர்மத்தை நிலைநாட்டினார்; அழிப்பதும் அருள்வதும் தாமே என்பதை உலகுக்கு உணர்த்தினார்!

இறைவனின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் நமக்காக மட்டுமே; அவருக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் ஏதும் இல்லை; அவர் எல்லாம் நிறைந்த பரிபூரணர். ஆனால் நமக்கு?! நமது விருப்பத்துக்குத்தான் எல்லையே இல்லையே! அவற்றை நிறைவேற்றவே... ஞானம், இச்சை, கர்மம் ஆகியவற்றை நம் முன் வைத்திருக்கிறார். அதாவது அறிவு, விருப்பம், செயல்பாடு ஆகியவை அவரிடம் இருந்து வெளிப்பட்டன. இந்த மூன்றின் வெளிப்பாடுகளே... அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோர். உலக உயிர்களின் மகிழ்ச்சிக்கு இந்த மூன்றும் வேண்டும் என்பதை உணர்த்தவே, தனது இயல்புகளை இப்படி உருவங்களாக வெளிப்படுத்தினாராம் இறைவன்.

நம் உடலின் இயக்கத்துக்கும் கர்மமே மூலகாரணம். கழுத்துக்கு மேல்- அறிவு புலன்கள் ஐந்து; கழுத்துக்குக் கீழே- செயல் புலன்கள் ஐந்து. நாக்கில் இரண்டு புலன்களும் செயல்படுகின்றன. அறிவு, செயல்பாடு மட்டுமின்றி விருப்பமும் நம்முள் உண்டு. ஆனால், நமது செயல்பாடுகளில் பல, அறியாமையால் விளைவன. ஆனால், கடவுளின் செயல்கள், அடியவர் வேண்டுகோளுக்காகவும், உலகைக் காக்கவும், உயிர்களின் துயரம் போக்கவுமே அமைந்தவை!

ராவணனிடம் இருந்து உலகைக் காக்க ராமாவதாரம். இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க- வாமனாவதாரம். அசுரனின் அட்டூழியம் உச்சகட்டத்தை அடைந்தபோது, தூணைப் பிளந்து வெளிவந்தது நரசிம்மம். மந்தார மலை பாற்கடலில் மூழ்கும் நிலையில் கூர்மமாகத் தோன்றி, மலையைத் தாங்கினார் பெருமாள்!

அவதாரங்கள் நிகழ்த்திய போர்கள் அனைத்தும் அறத்தைக் காப்பாற்றவே. உடலில் புகுந்திருக்கும் விஷக் கிருமிகளை அழிப்பதும், உயிரைக் காப்பாற்ற விஷம் தீண்டிய விரலை வெட்டி எடுப்பதும் ஹிம்சை ஆகாது. பரம்பொருள் சிலரை வதைக்க நேரிட்டதும் இப்படித்தான். கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததும் அறத்தை நிலைநிறுத்தவே. சரி, பரசுராம அவதாரம்?!

'பரம்பொருளின் கரங்களில் இருந்து வெளிவந்தது அரச பரம்பரை' என்கிறது வேதம். 'மக்களின் இன்னல்களை அகற்றி, அவர்களை மகிழ்வுடன் வாழ வைப்பது மன்னர்களின் கடமை' என்று அறிவுறுத்து கிறது தர்மசாஸ்திரம். 'க்ஷத்திரியன்' என்ற சொல்லுக்கு துன்பத்தில் இருந்து மீட்பவன் என்றும் பொருள் உண்டு. ஆனால், அரியாசனத்தில் அமரும் க்ஷத்திரியனுக்கு அகங்காரம் பற்றிக் கொண்டால் அட்டூழியங்கள் பெருகி விடும்.

இப்படியரு நிலையில்தான்... அறங்காவலராக இருக்க வேண்டிய அரசர்களே அதர்மத்தில் திளைத்த வேளையில்தான்... பரசுராம அவதாரம் நிகழ்ந்தது. துஷ்ட க்ஷத்திரியர்களை வேருடன் அழித்து அறத்தை நிலைநாட்டினார் பரசுராமன்.



மற்ற அவதாரங்களை விட பரசுராம அவதாரத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. ரக்ஷகர்கள், பக்ஷகராக மாறியதைத் திருத்துவதற்காக ஏற்பட்ட இந்த அவதாரம், உலக சுகங்களில் ஈடுபடவில்லை; லீலா வினோதங்களில் ஈடுபட்டு தனது பெருமையை வெளிப்படுத்தவில்லை. சாதாரண குடிமகனாகத் தோன்றி அறம் காத்த அவதாரம் இது.

மற்ற அவதாரங்கள் கடமை முடிந்ததும் மறைந்து விடும். ஆனால், சிரஞ்ஜீவியாக என்றென்றும் நிலைத்திருக்கும் அற்புத அவதாரம் ஸ்ரீபரசுராமன். இவரை ராமாவதாரத்திலும் தரிசிக்கலாம்; ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திலும் தரிசிக்கலாம். ஸ்ரீராமனுக்கு வைஷ்ணவ தனுசை அளித்தருளினார் ஸ்ரீபரசுராமன். அறம் தவறிய அரசனான ராவணனை அழிக்க ஸ்ரீராமனுக்கு உதவி புரிந்தார்.

ஸ்ரீராமன் அறத்தை நடைமுறைப்படுத்திக் காட்டினார்; ஸ்ரீகிருஷ்ணன் தத்துவ விளக்கம் தந்தான். அதேநேரம்... அறத்தின் இயக்கத்தை இடையூறு இன்றி பாதுகாக்கவும் வேண்டுமே? அப்போதுதானே அறம் தழைத்திருக்க முடியும். அதைத்தான் செய்தார் ஸ்ரீபரசுராமன். அறத்தைப் பாதுகாக்கத் தவறிய க்ஷத்திரியர்களை தண்டித்தார் அவர். மற்ற அவதாரங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் இவருக்கு இல்லையே என்பதுகூட குறை அல்ல; நிறைதான். நிறைபொருள் அங்கீகாரத்தை எதிர்பார்க்காது. பகவானின் அவதாரங்களில் 6-வதான ஸ்ரீபரசுராம அவதாரம்... எவரது தூண்டுதலும் இல்லாமல், கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தும் அவதாரம்!

ஜமதக்னி முனிவருக்கு புதல்வனாகத் தோன்றிய ஸ்ரீபரசு ராமனிடம், அந்தணருக்கு உரிய அமைதியும் க்ஷத்திரியர்களுக்கான ஆற்றலும் குடிகொண்டிருந்தன. எனவே, வெற்றி அவரைத் தேடி வந்தது.

ஹைஹய தேசத்து அரசன் கார்த்த வீர்யார்ஜுனன் ஆயிரம் கைகள் கொண்டவன். இவன், ஜமதக்னி முனிவரின் ஆஸ்ரமத்தில் இருந்த பசுவை கவர்ந்து சென்றான். தெய்வப் பசுவை மீட்டு வருமாறு மகனுக்கு உத்தரவிட்டார் ஜமதக்னி. இதை ஏற்று, கார்த்தவீர்யார்ஜுனனை அழித்து பசுவை மீட்டு வந்தார் பரசுராமன்.

மற்றொருமுறை... ஸ்ரீபரசுராமனின் தாயார் ரேணுகை நீர் எடுத்துவரச் சென்றாள். அங்கே, சித்திநாதன் என்பவன் மனைவியருடன் நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு மெய் மறந்தாள். மனைவி நீர் எடுத்து வர காலதாமதமாவது கண்ட ஜமதக்னி முனிவர், அவள் மனம் தடுமாறி நிற்பதை அறிந்தார். அவளை அழிக்கும்படி மகனுக்கு உத்தரவிட்டார். அதன்படி, தாயை வதம் செய்தார் பரசுராமன். இதனால் மகிழ்ந்த முனிவர், 'என்ன வரம் வேண்டும் கேள்?' என்றார். உடனே, 'அன்னையை உயிர்ப்பியுங்கள்' என்று வரம் கேட்டு தாயைக் காப்பாற்றினார்.

இந்த நிலையில், கார்த்த வீர்யார்ஜுனன் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கப் புறப்பட்ட அவனின் புதல்வர்கள், ஜமதக்னி முனிவரை கொன்றனர். இதனால் கோபம் கொண்ட பரசுராமன், அறம் தவறிய க்ஷத்திரியர்களைக் கொன்று குவித்தார். பிறகு தனது பாவங்கள் தீர, தீர்த்தாடனம் சென்று தவத்தில் ஆழ்ந்தார் என்கின்றன புராணங்கள்.

தந்தையின் சொல்லுக்கு அர்த்தம் உண்டு; அதை விமர்சிக்கக்கூடாது என்பதை நடைமுறைப் படுத்தினார் பரசுராமன். மனத் தூய்மை இழந்த ரேணுகையை தூய்மையாக்கும்படி கட்டளையிட்டார் ஜமதக்னி. அதன்படியே செய்தார் பரசுராமன். இதன் பலனால் பரசுராமன் பெற்ற வரம், அவரின் அன்னையை தூய்மை யானவளாக உயிர்ப்பித்தது!

ஆம்... வாழ்க்கையின் குறிக்கோளும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் தெரிந்துவிட்டால் வெற்றி நிச்சயம். இளமையிலேயே இவற்றை அடையாளம் கண்டு மனதில் இருத்துவது சுலபம். இதற்கு உறுதுணையாக இருக்கும் இதிகாசங்களையும் புராணங்களையும் உறுதியாகப் பற்றிக் கொண்டால் நீங்களும் ஜெயிக்கலாம் ஸ்ரீபரசுராமனைப் போல!

Comments