அறிவு எனும் அங்குசத்தால் துன்ப யானையைத் துரத்துங்கள்; பேரின்பத்தில் எப்போதும் நிலைத்திருப்பீர்கள்

பேருந்தில் பயணம் செய்தவருக்கு, 'உஸ்' எனும் சத்தம் விட்டுவிட்டு கேட்டது. பேருந்தின் டயர் வெடிக்கப் போகும் அபாயம் என்று உணர்ந்து, அருகில் இருந்தவரிடம் சொல்ல... அவர், 'அப்படி சத்தம் எதுவும் கேக்கலையே...' என்றார். பஸ்சில் இருந்த அனைவரும் டி.வி. படத்தில் லயித்திருந்தனர். இவர், கண்டக்டரிடம் விஷயத்தைச் சொல்ல, பதறிப் போன அவர் டயரை சோதிக்க... பிரச்னை இல்லை எனத் தெரிந்ததும் வண்டி புறப்பட்டது. ஆனால் சத்தம் மட்டும் இவருக்கு கேட்டபடி இருந்தது. ஒருவழியாக, இறங்கும் இடம் வர, பஸ்சில் இருந்து இறங்கி நடந்தார். இப்போதும் சத்தம் கேட்க, காதில் ஏதோ பிரச்னை... என்று எண்ணி மருத்துவரிடம் சென்றாராம்!

பிரச்னையை தன்னிடமே வைத்துக் கொண்டு உலகத்தை குறை சொல்வதுதான் பலரது வழக்கம். தன்னுடைய துன்பத்துக்குக் காரணமாக பெற்றோர், மனைவி, குழந்தைகள், பக்கத்து வீட்டுக்காரர், அலுவலகத்தின் எதிர் சீட் ஆசாமி மற்றும் வீடு, வாகனம், பொருளாதார சீர்கேடு, விலைவாசி, பங்குச் சந்தை... என்று பட்டியல் போடுவர்.

ஒருவர், ''என் மகனின் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக உள்ளது. அவன் நல்லவிதமாகப் படிக்க வேண்டும் என ஆசீர்வதியுங்கள், ஸ்வாமி'' என்றார். அப்படியே செய்தேன். அந்தப் பையனும், படித்து பாஸ் செய்தான். பிறகு நல்ல வேலை கிடைக்கவேண்டுமே... என்று தூக்கத்தை இழந்து தவித்தார். நல்ல வேலையும் கிடைத்தது. அடுத்து, நிறுவனத்தில் பலரும் பதவி உயர்வு பெற்று, வெளிநாட்டுக்குச் செல்வது போல், இவனும் போக வேண்டுமே... என்று கவலையில் மூழ்க... அதுவும் நடந்தது. அடுத்து, வேலை பறிபோகுமோ என கவலைப்பட்டார். இப்படி விடாமல் கவலையில் மூழ்கி, வாழ்க்கை மொத்தத்தையும் சோகமாக்கிக் கொண்டார்.



துன்பம் முடிவின்றி வளர்ந்து கொண்டே இருக்கிறது பலருக்கு! துன்பப்பட்டபடியே இருப்பது குறிக்கோள் அல்ல. கவலைக்கான காரணங்கள் மாறினாலும் கவலை மாறுவதே இல்லை.

தானும் துன்பப்பட்டு பிறரையும் துன்பப்படுத்தி, வாழ்வை நரகமாக்கிக் கொள்வது நம்மில் பலருக்கு கைவந்த கலை! ''ஆறு மாசமா நாய் படாத பாடு படுறேன். இப்போ பழகிருச்சு'' என்றார் ஒருவர். இதேபோல் துன்பமானது பலருக்கும் பழகி விடுகிறது.

மகாபாரத யுத்தம்! நூறு மகன்களை இழந்த திருதராஷ்டிரனை நன்றாக கவனித்துக் கொண்டான் பீமன்; பெரியப்பாவுக்கு பணிவிடைகள் செய்தான். திருதராஷ்டிரனும், கவலையை மறந்து சுகபோகங்களை அனுபவித்தான். அப்போது அவனிடம் ''உங்களுக்கு வந்த துன்பத்தை ஆராய்ந்து பார்க்கத் தோன்றவில்லையா நீங்கள்? வாழ்வில் நிலையான இன்பத்தைத் தருவது எது என அறிய முற்படவில்லையா? உங்களுடைய பிள்ளைகள் அனைவரையும் கொன்றவர்களின் சேவையை ஏற்று வாழ வெட்கமாக இல்லையா?'' என்று கேட்டார் விதுரர். இதையடுத்து மனம் தெளிந்த திருதராஷ்டிரன் பற்றை நீக்கி, வனத்தில் தவம் புரிந்தான்; பிறகு உயிர் நீத்தான் என்கிறது மகாபாரதம்!

'எனக்கு துன்பமே வரக்கூடாது' என்பதே ஒவ்வொருவரின் விருப்பம். அப்படி துன்பம் வந்தால், 'இவர் காரணம், அவர் காரணம்; இது காரணம், அது காரணம்' என்கிறோம். எய்தவன் இருக்க அம்பை நோவானேன்? என்று கேட்டால், 'ஆமாம்... மிகவும் நல்லவனான எனக்கு துன்பத்துக்கு மேல் துன்பம் கொடுக்கும் கடவுள்தான் எத்தனை கொடூரமானவர்' என்று கோபப்படுகின்றனர்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா! துன்பத்துக்குக் காரணம் நாமேதான்! 'இந்தப் பிறவியில் எனக்குத் தெரிந்து ஒரு ஈ எறும்புக்குக் கூட துரோகம் செய்தது இல்லை' என்போம். ஆனால், கடந்த பிறவி, அதற்கும் முந்தைய பிறவி என ஏதோவொரு பிறவியில் செய்ததன் விளைவு இது என உணர வேண்டும்.

பிறந்தது முதல் இன்று வரை என் வாழ்வில் கஷ்டத்தையே அனுபவித்தது கிடையாது என்று எவருமே சொல்ல முடியாது. வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்ததே துன்பம். நாம் முன்பு செய்த முன்வினைப் பயனை அறுவடை செய்யவே பிறந்திருக்கிறோம் என்கின்றன சாஸ்திரங்கள்!

'இங்கே ஒரே துன்பம்' என்று வீட்டை மாற்றுகின்றனர் சிலர். 'ராசியே இல்லை' என்று வாகனத்தை, வேலை செய்யும் இடத்தை மாற்றுகின்றனர். இன்னும் சிலர் கடவுளையே மாற்றுகின்றனர். என்ன மாற்றி என்ன... துன்பம் மட்டும் தொலைந்தபாடில்லை என்பதே உண்மை! துன்பத்தை விசாரித்து அறிந்து, அதிலிருந்து பாடம் கற்க மறந்து விடுகின்றனர். பற்றை நீக்க வேண்டும் என்பதே துன்பத்தில் இருந்து நாம் அறிய வேண்டிய பாடம்! வாழ்வில் பற்றுதலாக உள்ளதை அசைத்துப் பார்க்கிறது துன்பம். அபரிமிதமான பற்றினால் நாம் படும் அவஸ்தை, கொஞ்சமா என்ன? நிலையாமையை அருமையாக உணர்த்தவல்லது துன்பம்! நம் உடல், உறவுகள், செல்வம், வீடு- வாசல்... என அனைத்தும் ஒருநாள் அழியக் கூடியது எனும் பேருண்மையை துன்பம்தான் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. பிணம் ஒன்றைப் பார்த்த புத்தர், பற்றுதலைக் களைந்தார்; வீட்டைத் துறந்தார்; மெய்ப்பொருளைத் தேடிப் புறப்பட்டார்; கண்டு கொண்டார்!

நம்மைச் சுற்றி எத்தனை பேர் இறந்தாலும் சிறிது நேரம் வருந்திவிட்டு, பிறகு சகஜ நிலைக்குத் திரும்பி விடுகிறோம்.

நமக்கு அருள முடிவு செய்துவிட்டால் துன்பத்தையே கொடுப்பார், இறைவன்! துன்பம்தான் மனிதர்களை அடையாளம் காட்டுகிறது; வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கிறது. பெரிதாக ஒருவரைக் கண்டு கொள்ளாத நிலையில், கஷ்ட காலத்தில் அவர்களே நமக்கு உறுதுணையாக இருப்பதும் மலை போல் நம்பியவர்களே சாமர்த்தியமாக நழுவுவதும்... துன்பத்தில் இருந்து பாடம் பயின்றவர்களுக்கே புரியும்!

துன்பத்திலிருந்து எவரும் தப்ப முடியாது; ஓடி ஒளிய முடியாது. மறக்க முயன்றாலும் மனமானது அதை நினைவுபடுத்தியபடியே இருக்கும். துன்பத்தின் தாக்கம் குறையலாம்; ஆனால் அடியோடு நீக்க முடியாது!

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும் என்கிறார் திருவள்ளுவர்.

துன்பத்தில் இருந்து விடுபட விரும்பி, தகுந்த குருவிடம் சரணடந்து, மெய்யறிவைப் பெறுவதன் மூலம், துன்பத்தில் இருந்து விடுபடமுடியும். அர்ஜுனன், தனது துயரத்தில் இருந்து விடுபட, கண்ணனைச் சரணடைந்தான்; கீதை பிறந்தது! இதேபோல், மெய்யறிவாளன் கடல் அலையாக வரும் இன்ப- துன்பங்களை வெறுமனே வேடிக்கை பார்க்கிறான்.

கடவுளிடம் நம்மைப் பேச வைப்பது, கவலை! கடவுள், துன்பத்தைக் கொடுத்து உள்ளத்தை தூய்மைப்படுத்துகிறார் துன்பக் கடலைக் கடக்க வசதியாக அறிவு எனும் தோணியை அன்புடன் வழங்குகிறார்!

ராணுவப் பயிற்சியில், வெகுதூரப் பயணத்தில்... 'நடக்க முடியவில்லையே...' என்று ஒருவர் புலம்பினால், 'இன்னும் அஞ்சு கிலோமீட்டர்தான்... பிறகு ஓய்வெடுத்துக் கொள்ளலாம்' என உத்தரவிடுவார்கள். உடனே இவர்களும் உற்சாகமாக நடப்பார்களாம். நாமும் இப்படித்தான்!

நமக்குள் புதைந்திருக்கும் ஆற்றலை நாம் அறிவதே இல்லை. துன்பமானது, மன உறுதியை வளர்க்கிறது. நமக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணருகிறது. நமக்குள் குடிகொண்டிருக்கும் சக்தியை, அற்புதமான மனிதரை அடையாளம் காட்டுகிறது.

அற்புதமான இந்த வாழ்க்கையை, கவலைப்பட்டு சிதைப்பது முட்டாள்தனம். அடுத்த வேளைக்கு உணவில்லாத நிலையிலும், 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்றே பாடினார் பாரதி!

எனவே, துன்பம் வரும் வேளையில் அழாமல், புலம்பாமல் நிதானத்தை கையாளுங்கள். துன்பம் குறித்து உங்களுக்கு நீங்களே விசாரியுங்கள். இந்தத் துன்பத்தைக் கொடுத்து, கடவுள் என்ன சேதி சொல்ல வருகிறார் என்று பாருங்கள். கவலைப்படுவதால் பிரச்னை தீவிரமாகும் என்பதைத் தவிர, எந்த மாற்றமும் நிகழாது. விசாலமான பார்வையுடன், அக்கறையுடன், முக்கியமாக பற்றை நீக்கி வாழ்தலே பேரின்பம் என உணருங்கள்!

Comments