மரமும் நாணலும்!

நங்கைநல்லூர் ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் கோயிலில்,‘திருப்பாவையில் வேத சாரம்’ எனும் தலைப்பில் உருப்பட்டூர் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் நடத்திய உபன்யாசத்திலிருந்து சில துளிகள்:

முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் புயல் வந்து பலத்த மழை பெய்தது; வெள்ளம் சூழ்ந்து நின்றது. 150 வருடங்களாக அக்கிராமத்தின் ஆற்றங்கரையோரம் நின்றிருந்த ஒரு அரச மரம், ‘ நான் இங்கே இந்த இடத்திலே 150 வருடங்களாக நிற்கிறேன், என்னை எந்த புயலும், எந்த பயலும் ஒண்ணும் செய்திட முடியாது’ என இறுமாப்புடன் தலை தூக்கி நின்று கொண்டிருந்தது. பக்கத்திலேயே ஒரு சின்னஞ்சிறு நான்கு அடி வளர்ந்திருந்த நாணல் நின்றிருந்தது. ‘பலமான காற்று வருகிறது, அது என்னை வேரோடு சாய்த்துவிடும்’ என எண்ணிய நாணல், தலைகுனிந்து புயல் காற்றுக்கு முன் பவ்யமாக நின்றது. காற்றின் வேகத்தில், தலை நிமிர்ந்து நின்ற அரசமரம் சாய, தலை வணங்கி நின்ற நாணலுக்கு அதன் பணிவின் பரிசாக வண்டல் மண்ணை கொண்டு வந்து சேர்த்துவிட்டு சென்றது புயல். வாழ்க்கையில் ஒருவர் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால், அதற்கு பணிவு மிக மிக அவசியம். அதைத்தான் ஆண்டாள் தமது முதல் திருப்பாவையிலேயே, ‘படிந்தேலோ ரெம்பாவாய்’ என அழகாகச் சொல்லி அருளி இருக்கிறாள். எவன் ஒருவன் என்றுமே பணிவாக, தன்னை தாழ்த்திக் கொண்டு நிற்கிறானோ அவனே உயர்கிறான்.

***

திருப்பாவையின் முப்பது பாசுரங்களிலுமே, ஆண்டாள் திருமாலை ‘நாராயணன்’ என குறிப்பிடாமல், நாராயணனே என்றே அழைக்கிறாள். இந்த‘னே’ - அதாவது நான்காம் வேற்றுமை உருபு, எங்கு வந்தாலும், அது பலன் பெற்றுக் கொண்டவனைத்தான் குறிக்கும். ஆம்; நாராயணர் நாம் செய்யும் பூஜைகளையும், அவன் மீது நாம் செலுத்தும் பக்தியையும் வாங்கிக் கொள்பவனாகவே அவன் இருக்கிறான் இல்லையா?

‘இறைவா, எனக்கு பொருள் வேண்டாம், பொன் வேண்டாம், நீயேதான் வேண்டும்’ என, அவனையே வேண்டி நிற்பவர்கள் ஞானிகள். அப்படிபட்டவர்களை காண்பது அரிது.

***

நாம் செய்த பாவத்துக்கும், புண்ணியத்துக்குமான பலனை நாம்தான் அனுபவித்தாக வேண்டும். பாவத்தின் பலனையோ, புண்ணியத்தின் பலனையோ தட்டிக் கழித்தல் என்பது இயலாத காரியம். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா‘ ன்னு சொல்வது போல, நாம் செய்த செயல்கள் நம்மைத்தான் பாதிக்கும்.

ஒருவர் காலை விந்தி, விந்தி நடந்து வந்தார். ‘கால்ல என்ன ஆச்சு’ன்னு கேட்டேன். ‘கல்லு இடித்துவிட்டது’ என்றார். கல்லா காலை வந்து இடித்தது? நாம் போய் கல்லில் இடித்துக் கொள்கிறோம். ஆனால், பழியை கல் மீது போடுகிறோம். நாம் செய்த கர்ம வினைகளின் பலனைத்தான் நாம் அனுபவிக்கிறோம். ஆனால், பழியை எது மேலோ போடுகிறோம்.


நம்மை மோட்சம் அடைய விடாமல் தடுப்பது, இந்தப் பாவமும், புண்ணியமும்தான். பாவம் என்பது இரும்பில் போட்ட விலங்கு மாதிரி; புண்ணியம் என்பது தங்கத்தில் போட்ட விலங்கு மாதிரி. தங்கமோ, இரும்போ, விலங்கு விலங்குதானே? இந்த விலங்குகள் நம்மை விட்டு நீங்கினால்தான், நாம் மோட்சத்தை அடைய முடியும். அந்த விலங்கை நீக்க வல்லவன் நாராயணன். அவன் திருவடிகளை என்றென்றும் சரணம் அடைந்து, இம்மைக்கும், மறுமைக்கும் நல்லதை தேடிக் கொள்வோம்.

இதையேதான், ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்கிறாள் ஆண்டாள் நாச்சியார். ‘நமக்கே’ என்றால், ‘அவன் அடியார்களான - அவனிடம் சரணாகதி செய்துவிட்ட பக்தர்கள் அனைவருக்குமே மோட்சத்தைத் தருவான்’ என்றும் பொருள்!

Comments